ஜனாதிபதியுடன் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு ; பெளத்த உறவுகளை மேம்படுத்தும் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர்  ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினர்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்ப பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இச் சந்திப்பு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழ்கிழமை (2) இரவு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விற்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமனுக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பௌத்த  உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் டொலர் அன்பளிப்புடன்  முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

அமைச்சரவை மாற்றத்தில் மகிழ்ச்சியில்லை‌ : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

03 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தீர்மானம் ஜனாதிபதி எடுத்த தவறான முடிவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் பலத்தை பாராளுமன்றத்தின் தலைவருக்கு வழங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை, அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் ஜனாதிபதி நியமித்தார்.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் – ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் சாத்தியமாகுமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

சீன ஜனாதிபதி – இலங்கை ஜனாதிபதி இடையே விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க  கடந்த 16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப்  பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 14ஆம் திகதி சீனா செல்லவுள்ளார்.

இதன்போது சீன அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளது

மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; வடக்கிற்கு இரு நாள் விஜயம்

பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் வரவேற்றதோடு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக்கும் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த அவர், பொருளாதா மீட்சிக்கான பதையில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்புக்கான முனைப்புக்கள், உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் இந்து சமுத்திரத்தில் வர்த்தகம், சக்திப் பரிமாற்றத்துக்கான திறந்த மற்றும் சுயாதீனத் தன்மையை பேணுதல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புக்கள், உலக வங்கியின் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக பரந்துபட்ட அளவில் கலந்துரையாடியதாக அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியனின் இந்த விஜயமானது, பிரித்தானியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இன்று ஆரம்பமாகும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தவுள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றம், சுற்றுசூழல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வகிபாகத்தினை வலியுறுத்தவுள்ளதோடு, இலங்கையின் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுக்கு, குறிப்பாக பல்லுயிர் நோக்கங்கள் மற்றும் கிளாஸ்கோ ஒப்பந்தம் தொடர்பான விடயங்களில் பிரித்தானியாவின் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கூட்டு காலநிலை இலக்குகள் அடைவதற்கான பகிரப்பட்ட நோக்கங்களை முன்னேற்றுவதில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பங்களிப்பினையும் வலியுறுத்தவுள்ளார்.

அமைச்சர் ட்ரெவெலியன் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் காலநிலைமாற்றத்துக்கான நிதி, பசுமை வளர்ச்சி, இருதரப்பு வர்த்தகம், மனித உரிமைகள், நீதி சீர்திருத்தம் மற்றும் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. அத்துடன் வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை நடத்துவார்.

அதனைத்தொடர்ந்து நாளை 11ஆம் திகதி வடக்குக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் அவர் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் வர்த்தகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். வடக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை ஒன்றாக அழைத்துள்ள அவர் தனியார் விடுதியில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

மேலும், பிரித்தானியாவின் மோதல், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிதியத்தின் ஆதரவுடன் முகமாலையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் தளத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதோடு அந்த விஜயமானது, இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளுக்கும் பிரித்தானியாவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரம் இன்றிய மாகாண சபையுடன் அடுத்த வருடம் தீர்வு; மனித உரிமை மீறல்களுக்கு நாட்டினுள்ளேயே தீர்வு – ஜனாதிபதி ரணில்

“இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன்நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

அதனையடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டன.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ‘‘தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல் களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டது. அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. நான் அனைத்து தலைவர்களுடனும் பேச்சு நடத்தவே எதிர்பார்க்கின்றேன். இன மத பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

பொலிஸ் அதிகாரங்களை ஒருபுறம் வைத்துவிட்டு விடயங்களைப் பார்ப்போம். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது நாட்டில் ஒன்பதாயிரம் பாடசாலைகள் காணப்பட்டன. அவற்றை ஒரு போது என்னால் நிர்வாகம் செய்ய முடியாமல் போனது. ஒன்பதாயிரம் பாடசாலைகளையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. மாகாண சபைகளையும், ஒழுக்கத்தையும் பேணுவது மத்திய ஆட்சியின் செயற்பாடாகும்.

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை நாம் நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம். வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. சர்வதேசத்திற்கு சென்று அதனை தீர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்

நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற. அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை.” – என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியின் அதிபர் எண்டன் பெனடிக் உட்பட பாடசாலையின் ஆசிரியர் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட னர்.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகளுக்காக இனவாத வழியில் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க – வினோ எம்.பி

சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இனித் தேவையில்லை என்பதையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ராஜபக்ஷர்கள் பயணித்த இனவாத வழியில் ஜனாதிபதி பயணிக்கத் தொடங்கியுள்ளார் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

22 மில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில் ஒரு அரசாங்கம் சீரான அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என்றால் அது மிகவும் பரிதாபத்துக்கு, அவ்வாறான நாட்டை கேவலத்துக்குரிய நாடாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது,

அருகிலுள்ள தமிழ்நாட்டை பாருங்கள் சுமார் 76 மில்லியன் மக்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒரு நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையில் அது முடியாது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். அந்த நேர்காணலில் அவரின் தொனி எமக்கு பல விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் குண்டு வெடிப்புக்கள் மூலம் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கைப்பற்றியதாக சொல்லப்படுகின்றது.

இவ்வளவு காலமும் ரணில் விக்கிரமசிங்கவை சிறுபான்மையின மக்கள் ஒரு வேறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்த்த நிலைமை இருந்தது.

ஆனால் ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் ஒட்டு மொத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, ஆட்சியை பிடிப்பதற்காக பொதுஜன பெரமுனவினர் எப்படி முயன்றார்களோ அதேபோன்று சிறுபான்மையினத்தை விடுத்து,சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தேவையில்லை ,அவர்கள் தேவையில்லை என்ற நோக்கத்தில் தான் கருத்துக்களை ஆவேசமாக முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நேர்காணலை சிங்கள ஊடகங்கள் வரவேற்றுள்ளன,சிங்கள மக்கள் ஆதரிக்கின்றார்கள். வரவேற்கின்றார்கள்.

கடந்த காலங்களில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் ஜனாதிபாதியாக தற்போதிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவைப்பட்டது.

ஆனால் தற்போது தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவருக்கு தேர்தல் வெற்றியே ஒரே குறிக்கோளாகவுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்று சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர அவர் வழங்கியுள்ள இந்த நேர்காணல் மூலம் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தனக்கு தேவையில்லை என்பதனை வெளிப்படுத்த்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபை,மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜபக்ஷர்களும் கடந்த காலங்களில் இவ்வாறான வழியில் தான் ஆட்சிக்கு வந்தார்கள்.இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேட அவர் முயற்சிக்கின்றார்.

இலங்கையின் குரங்குகளை சீனா மட்டுமின்றி வேறு நாடுகளும் கோருவதாக விவசாய அமைச்சர் கூறியிருந்தார். ஆகையால் முதலில் இங்குள்ள மனிதக் குரங்குகளை, அரசியல் குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் வெளிநாடுகளுக்கு அப்புறப்படுத்த வேண்டும் அப்படி செய்தால்தான் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காணமுடியும் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்களின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ரணில் அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான கோரிக்கை அதனை ஜனாதிபதி ரணில் அரசாங்கம் நிராகரிக்க முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது

சர்வதேச விசாரணை நடாத்த முடியாது. ஐ.நா மனித உரிமைத் தீர்மானங்களை தான் நிராகரிப்பதாகவும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்து அழகு பார்க்கும் தரப்பு மேற்குலகம் இல்லை என்று மக்களை ஏமாற்றும் வகையிலும் மிகவும் கடும் தொனியில் பதில் வழங்கினார் .

ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசில் பிரதமராக பதவி வகித்த போது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைத் தீர்மானத்தை ஏற்று கால நீடிப்பு பெற்றத்தை மறந்து விட்டாரா? அல்லது ராஐபக்ச அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருப்பதால் நிராகரிப்தாக கூறுகிறாரா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

நாட்டை முன்னேற்றுவதாக வெளிநாடுகளிலும் உள் நாட்டிலும் வார்த்தை ஜாலங்களால் கதை அளக்கும் ஐனாதிபதி ரணில் விக்கரமசிங்க ராஐபக்சாக்கள் தமது ஆட்சியில் நடந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு அஞ்சி தொடர்ந்து நிராகரித்த சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா மனிதவுரிமைத் தீர்மானங்களை ரணில் விக்கிரமசிங்காவும் ஏற்றுக் கொள்கிறார் என்றால் ஐனாதிபதி நாட்டை முன்னேற்ற வில்லை ராஜபக்சக்களை காப்பாற்றுகிறார் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.

இலங்கைத் தீவு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான நிலையான வளர்ச்சியை அடைய வேண்டுமாயின் பூகோள நாடுகளின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் சுயாதீன சர்வதேச விசாரணை பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடாத்தப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும் இதனை மேற்கொள்ளாமல் ரணில் அல்ல எவர் ஜனாதிபதிக் கதிரைக்கு வந்தாலும் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது.

சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான கோரிக்கை அதனை ஜனாதிபதி ரணில் அரசாங்கம் நிராகரிக்க முடியாது காரணம் மக்கள் ஆணை இழந்த பாராளுமன்றத்தை வழிநடத்தும் மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் ? – இலங்கை ஜனாதிபதி கேள்வி

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

DW NEWS உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்ஃ

நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் ஏன் அதனை புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர் நான் அவ்வாறு செயற்படவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து பிரிட்டனில் பலர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் ஏன் நீங்கள் சனல் 4னை மாத்திரம் கருத்தில் கொள்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர்உறுதியான வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என தெரிவித்தமைக்கு ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன என்பதற்காக நான் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்- சிஐடியின் முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஏன் அது பற்றி கேள்வி எழுப்பகூடாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்புகின்றது உங்களுடன் பணிபுரிந்த முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் அதனை முதலில் என்னிடம் கேட்கவில்லை நான் கேள்வி எழுப்பிய பின்னரே கேட்கின்றீர்கள் நீங்கள் சனல் 4 அறிக்கை முற்றிலும் உண்மையான விடயம் என்பது போல என்னிடம் கேள்வி எழுப்பினீர்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.