யாழ்ப்பாணத்தில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம், கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தலில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சபா.குகதாஸ், விந்தன் கனகரட்ணம், பிரசன்னா இந்திரகுமார் வலிகிழக்கு முன்னாள் தவிசாளர் தி.நிரோஷ் உள்ளிட்ட ரெலோவின் உறுப்பினர்கள், மூத்த போராளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.05.2023) மட்டக்களப்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நினைவுநாள் நிகழ்வுகள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர், மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்களுக்கான தீர்வினை வலியுறுத்தவேண்டிய காலம் என்பதனால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றுபடுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது பாதுகாப்பினையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

சிறிசபாரட்னம் ஒற்றுமையாக நாங்கள் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப்பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாரோ அதேநோக்கத்துடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒற்றுமையினை முன்னிறுத்திவருகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலமிருந்து இன்று வரையுள்ள கட்சியாக ஒரு இயக்கமாக தமிழீழ விடுதலை இயக்கம் இருக்கின்றது. நாங்கள் எங்கள் தலைவரை இழந்தாலும் கூட தமிழீழ விடுதலைப்புலிகளுடன் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்காக நாங்கள் ஒன்றாக செயற்படுவோம் என்று உறுதியாக செயற்பட்டுவருகின்றோம்.

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் எந்த பலமும் இல்லாத நிர்க்கதியாக நிற்கும் இந்தவேளையில் நாங்கள் பலமாக ஒற்றுமையாக இருக்கவேண்டிய நேரத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் காணப்படுகின்றது.

 

இன்று வடகிழக்கில் ஆயுதப்பலம் இல்லாத காரணத்தினால் இலங்கை அரசாங்கத்தினால் எமது நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவருகின்றது. 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் இன்று அதிகாரங்கள் இல்லாமல் ஆளுனர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றது.

ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக இருக்கும் ஆளுனர்கள் தாங்கள் நினைத்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நேற்று முன்தினம் கூட நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கின் தையிட்டி பகுதியிலேயே விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கமானது 13வது திருத்ததின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாணசபையின் முழு அதிகாரத்தினையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை நடாத்தவேண்டும் என்ற அழுத்ததினை வழங்கவேண்டும்.


சரத்வீரசேகர,விமல்வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்த சட்டமும்வேண்டாம் அதன்ஊடாக வந்த மாகாணசபையும் வேண்டாம் என்கிறார்கள்.வடகிழக்கில் அதேகொள்கையுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செயற்படுகின்றது.

ஆனால் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டுமானால் மாகாணசபையின் முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு மாகாணசபை தேர்தல் மிக விரைவாக நடாத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாகயிருக்கின்றோம்.

நாங்கள் இன்று ஒன்றாகயிருக்கவேண்டிய காலம், ஒற்றுமையாகயிருக்கவேண்டிய காலம். தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட இன்று பிரிந்துகிடக்கின்றது.

தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாகி நாங்கள் எமது உரிமைகளை பெறுவதற்காக போராடவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை அனைத்துதமிழ் தரப்பினரும் உணரவேண்டும்.

மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சியை வளர்ப்பதற்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துவிதமான அட்டூழியங்களையும் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும்.

வடக்கில் காலை வைத்துவிட்டார்கள். இந்தியா தனது பாதுகாப்பினையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும்மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

பொருளாதார ரீதியாக மீட்சிபெறுவதற்கு உதவிய இந்தியா,தமிழ் மக்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு முழு அதிகாரத்தினையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை மிக விரைவாக நடாத்துதற்கு உறுதிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.

தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தீர்வை வலியுறுத்தவேண்டிய தருணம் இது; இணைந்து பயணிக்க அழைக்கிறார் ஜனா எம்.பி.

தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தவேண்டிய காலம் என்பதனால் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா).

இந்தியா தனது பாதுகாப்பையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும் மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 37ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று மட்டக் களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிறிசபாரத்தினம் ஒற்றுமையாக நாங்கள் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாரோ அதே நோக்கத்துடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒற்றுமையை முன்னிறுத்தி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலமிருந்து இன்று வரையுள்ள கட்சியாக ஓர் இயக்கமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இருக்கின்றது. நாங்கள் எங்கள் தலைவரை இழந்தாலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்காக நாங்கள் ஒன்றாகச் செயல்படுவோம் என்று உறுதியாக செயற்பட்டு வருகின்றோம். 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் எந்தப் பலமும் இல்லாத நிர்க்கதியாக நிற்கும் இந்தவேளையில் நாங்கள் பலமாக ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் காணப்படுகின்றன. இன்று வடக்கு-கிழக்கில் ஆயுத பலம் இல்லாத காரணத்தினால் இலங்கை அரசாங்கத்தினால் எமது நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் வடக்கு-கிழக்கு பகுதிகளில் சிங்கள பௌத்தமயமாக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையின் நேற்று அதிகாரங்கள் இல்லாமல் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றது. ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர்கள் தாங்கள் நினைத்தவற்றைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கின் தையிட்டி பகுதியிலேயே விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று எமது கிழக்கு மாகாணத்தில் உள்ள புராதன இடங்களான கிண்னியா, திருக்கோணேஸ்வரம், குசனார்மலை போன்ற பகுதிகளிலும் வடக்கில் வெடுக்குநாறி, குருந்தூர் மலை, நாவற்குழி போன்ற இடங்களில் பௌத்த மதம் என்று கூறிக்கொண்டு கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இந்திய அரசாங்கமானது 13ஆவது திருத்ததின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபையின் முழு அதிகாரத்தையும் பரவலாக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்ற அழுத்தத்தை வழங்கவேண்டும். ஆனால், எங்களுக்குள் ஒற்றுமையில்லை. சரத் வீரசேகர, விமல் வீரவன்ஸ போன்ற இனவாதிகள் 13ஆவது திருத்த சட்டமும் வேண்டாம் அதன் ஊடாக வந்த மாகாண சபையும் வேண்டாம் என்கிறார்கள். வடக்கு-கிழக்கில் அதே கொள்கையுடன் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் செயற்படுகின்றது. ஆனால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மாகாண சபையின் முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாகயிருக்கின்றோம்.

நாங்கள் இன்று ஒன்றாகயிருக்க வேண்டிய காலம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட இன்று பிரிந்து கிடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாகி நாங்கள் எமது உரிமைகளை பெறுவதற்காக போராடவேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை அனைத்து தமிழ்த் தரப்பினரும் உணர வேண்டும். மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சியை வளர்ப்பதற்காக மக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து விதமான அட்டூழியங்களையும் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும். சிறிசபாரத்தினம் 1984ஆம் ஆண்டு ஜேர்மனியில் வைத்து கூறியிருந்தார், தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது என்று. ஆனால் இன்று தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டம் அற்ற நிலையிலிருக்கின்றோம். அரசியல் ரீதியாக பலமற்ற நிலையில் உள்ளோம். நாங்கள் இந்தியாவை நம்பியிருக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொறுத்தவரை கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதை இந்தியா கூட உணராமல் இருக்கின்றதா?அல்லது உணர்ந்துகொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் இன்று சீனா அகலக்கால் பதித்து வருகின்றது. அம்பாந்தோட்டை,கொழும்பு போன்ற பகுதிகளிலும் காலூன்றிய நிலையில் வடக்கு-கிழக்கிலும் காலூன்ற எத்தனிக்கின்றனர். வடக்கில் காலை வைத்துவிட்டார்கள். இந்தியா தனது பாதுகாப்பையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும்மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக மீட்சி பெறுவதற்கு உதவிய இந்தியா, தமிழ் மக்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு முழு அதிகாரத்தையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை மிக விரைவாக நடத்துதற்கு உறுதி செய்யவேண்டும்- என்றார்.

வருமுன் காக்கும் பொறிமுறைகளை தமிழ்த் தரப்பினர் ஒருமித்துக் கையாள வேண்டும்; ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க இதுவே வழி – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

தமிழ் மக்கள் மீதான நில, மொழி மற்றும் கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகள், அழித்தொழிப்புகளை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகளை கொண்ட பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். அல்லது இருப்பவற்றை பொறிமுறைகளாக் கையாள வேண்டும்.

நடந்து முடிந்தவைகளுக்காக போராடும் நடைமுறை ஒருபுறம் இருக்க, நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தக் கூடிய கட்டமைப்பை தமிழர்கள் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிலொன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் சுரேந்திரன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

தமிழ் மக்கள் மீதான நில, மொழி மற்றும் கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகள், அழித்தொழிப்புகளை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகளை கொண்ட பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். அல்லது இருப்பவற்றை பொறிமுறைகளாக் கையாள வேண்டும்.

நடந்து முடிந்தவைகளுக்காக போராடும் நடைமுறை ஒருபுறம் இருக்க, நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தக் கூடிய கட்டமைப்பை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.

தையிட்டி விகாரை கட்டி எழுப்பப்பட்டுள்ள விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். மாகாண சபை முறைமை முடிவுக்கு வந்த பின்னர் இதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. தனியார் ஒரு சிலருக்கு சொந்தமான காணி நிலங்களிலேயே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. ஒரு சில உரிமையாளர்கள் வழக்கு தொடுப்பதற்கு ஆர்வமாக முயற்சி செய்த பொழுதிலும் சரியான தரப்பினரிடம் அவர்கள் செல்லவில்லை. அதேபோன்று அரசியல் தரப்பிலும் வழக்கு தொடுப்பதற்கு முயற்சி செய்து சில காணி உரிமையாளர்களை சந்தித்த பொழுது அந்த காணி உரிமையாளர்கள் வழக்கு தொடுப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. வழக்கு தொடுப்பதற்கு அக்கறை கொண்ட தனியார் காணி உரிமையாளரும் அரசியல் தரப்பினரும் ஒருவரை ஒருவர் இறுதிவரை சந்திக்கவில்லை. அதனால் விகாரை கட்டப்படும் வரைக்கும் தனியாரால் நடவடிக்கை எடுக்க முடியாத அல்லது அரசியல் தரப்பை நாட முடியாத சூழ்நிலையில் இருந்திருப்பது துரதிஷ்டமே. இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒரு பொறிமுறை மிக அவசியமாகிறது.

மாகாண சபைக்கான காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி பலமான கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்ற எமது கோரிக்கையின் பிரதான நோக்கம், அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் இப்படியான ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும், அதை எம்மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பொறிமுறையாக கையாள வேண்டும் என்பதே. அதை ஒருபோதும் அரசியல் தீர்வாக நாம் கோரவில்லை.

அரசியல் முதிர்ச்சியற்ற, தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள அபாயத்தை உணராத சில தரப்புக்கள் அதை நாங்கள் அரசியல் தீர்வாக கோருகிறோம் என்று மக்களை தவறாக திசை திருப்பி தெரிந்தோ தெரியாமலோ அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போயிருக்கிறார்கள்.

இனியாவது நிலைமையை புரிந்து கொண்டு நமக்கான பொறிமுறைகளை வகுக்கவும், இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி அதைப் பொறிமுறையாகக் கையாளவும் தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும்.

ஒவ்வொரு விடயத்திற்கும் விளக்க உரைகளை வழங்குவதும் கட்சி நலன்கள் மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக தமிழ் மக்களை தவறாக திசை திருப்பி வழிநடத்த முற்படுவதும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உரம் சேர்க்குமே தவிர தமிழ் மக்களை காப்பதற்கு உதவாது. இனியாவது தமிழ் மக்கள் ஒன்றிணைந்து நம்மை காக்கும் பொறிமுறைகளை வகுத்துக் கொள்ளவும் இருப்பவற்றை சரியாகக் கையாயவும் முன் வர வேண்டும் என கோரி நிற்கிறோம். அதுவே நிலையான அரசியல் தீர்வு வரும் வரை எமது இனத்தின் இருப்பைத் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளார்.

வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 11 ,12,13 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச உள்ளதாகவும் அதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடக்கின் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அதற்கு தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்படும் கூட்டமாக அமைந்துள்ளது.

எங்களைப்பொருத்தவகையில் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது, வடக்கு கிழக்கு எமது தாயக பூமி.

எங்களுடைய தமிழ் மக்கள் ஒரு இனப்பிரச்சினை சார்ந்து நாங்கள் வடக்கு கிழக்கு சார்ந்து இந்த மண்ணை காப்பதற்காகவே எத்தனையோ போராளிகளும் பொது மக்களும் மரணித்தார்கள்.

எனவே வடக்கில் மட்டும் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு எடுப்பதற்கான விடையங்கள் குறித்து எடுக்கப்படுகின்ற முயற்சிகள் காலத்தை கடத்துகின்ற ஏமாற்றுகின்ற செயல்பாட்டை கையால் வதாகவும் அமைந்துள்ளது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு சார்ந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல், வடக்கு கிழக்கில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம்.

கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை நாங்கள் முடிவெடுக்க கூடும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு இவ் விடையம் குறித்து ஆராய உள்ளது.

எனவே வடக்கு கிழக்கு இணைந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல் தொடர்பாக, பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டும்.என்பது எமது கோரிக்கை.எனவே கிழக்கை விடுத்து எவ்வித நல்லெண்ண முயற்சிகள் எடுத்தாலும்இஅந்த முயற்சி தோல்வியடையும்.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கு, கிழக்கு பிரதான மூச்சாக உள்ளது. எனவே கிழக்கை விடுத்து வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

வடக்கு கிழக்கு இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலை நடத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் உரிய காலத்திற்கு முன் தனது கருத்தை மாற்ற வேண்டும். இல்லை என்றால் எதிர்வரும் 11,12,13 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ள கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் பொருளாளருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடகங்களை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை இராணுவத்தினருடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறான பல்வேறு அத்துமீறல்களை அரச படைகளும், அரசும் தொடர்ந்து வண்ணமே உள்ளன.

இந்த லட்சணத்திலே இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்க அண்மையிலே வவுனியாவில் தமிழ் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைகளை தீர்ப்போம் என்றார்.

இந்த சூழ்நிலையிலே நாங்கள் ஜனாதிபதியினை நோக்கி தமிழ் மக்கள் சார்பிலே சொல்லக்கூடியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் என்பவற்றை உடனடியாக உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.

அதனை செய்யாது, எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து, எங்களை அழித்து கொண்டு எங்கள் கலாசாரத்தை, எங்கள் இருப்புக்களை இல்லாமல் செய்து கொண்டு மறுபுறமே இவ்வாறான கோரிக்கைகளை விடுகின்றீர்கள்.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு இன பிரச்சனை தொடர்பில் பேச அழையுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை – சபா குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம். எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில் போராடி வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 29.04.2023 அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள ஆட்சியாளர்களின் நிலையற்ற பொருளாதார கொள்கையினால் தொழிலாளர்களின் உரிமைகள் பெயரளவில் வரையறை செய்யப்பட்டாலும் பாதிக்கப்படும் போது தொழிலாளர்களுக்கான நியாயங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதுடன், அரசின் அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் சுரண்டல்களும், ஊழல்களும் தொழிலாளர் வர்க்கத்தை மீண்டெழ விடாது தொடர்ந்து ஒடுக்குமுறையில் வைத்துள்ளது.

தமிழர்களின் மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை கிடைக்கும் வரை தமிழர் தேசத்தின் தொழிலாளர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவார்கள். எனவே தமிழின விடுதலையே தொழிலாளர்களின் விடுதலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மைச் சமூகம் தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக் குறியாக்கியே வந்திருக்கிறது – ஜனா எம்.பி

தமிழின அழிப்பினை காலங்காலமாக நிகழ்த்தி வருகின்ற பெரும்பான்மைச் சமூகம் தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியே வந்திருக்கிறது எனவும் அண்மைய காலங்களில் நடைபெற்று வருகின்ற அத்தனை சம்பவங்களும் இதனை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன என றாடாளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நேற்று (24.04.2023) விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்டபட்டுள்ளதாவது,

”பயங்கரவாதத்தடைச் சட்டமே வேண்டாமென்கிற நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தின் மூலமாக தமிழ் பேசும் மக்களின் அத்தனை உரிமைகளையும் பறித்தெடுக்கவே அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இனப்பிரச்சினையின் காலான முரண்பாட்டினால் உருவான யுத்தம் மௌனிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்தும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 4 ஜனாதிபதிகள் 6 பிரதமர்கள் மாறியுள்ளனர். அதே போன்றே அரசாங்கங்களும் மாறிவிட்டன.

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் ஏன் என்பதற்கான கேள்வியே இப்போதைக்கு சாதாரணமானதாகி விட்டது. நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை அரசாங்கம் கணக்கிலெடுப்பதாகவே தெரியவிலலை.

இவ்வாறான நிலையில் நடைபெறுகின்ற அடக்குமுறைகளுக்கெதிராக தமிழ் பேசும் மக்களாகிய நாம் போராடவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக தமிழ் மக்களுக்கெதிரான தொல்பொருள் செயலணி, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும், பௌத்தமயமாக்கல் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், இயற்கை வளங்களை சூறையாடுதல், வன வளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் காணி பகிர்ந்தளிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விடயம், மனித உரிமை மீறல்கள், தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் போர்வையில் சிங்கள மயமாக்கல், மதவழிபாட்டுக்கு தடை விதித்தல், பௌத்த விகாரை அமைத்தல் போன்ற செயற்பாடுகள் திட்டமிட்டவாறு விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறுகின்றன.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனால் உருவான அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டையே புரட்டிப் போட்டன. ஆனாலும் எதுவும் நடைபெறாதது போலும், ஏதும் அறியாதது போலும் அரசாங்கம் மேற்கொள்ளகின்ற ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை இல்லாதொழிக்கவேண்டியது மக்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டமே நாளை நடைபெறவுள்ள நிர்வாக முடக்கலாகும். இத் தினத்தில் சந்தைகளை மூடி, கடைகளை அடைத்து போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஒத்துழையுங்கள்.

அத்தோடு அரச அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புகளை மேற்கொண்டு நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்குங்கள். சிறுபான்மை இனங்கள், அரசாங்கத்திடம் சரணாகதியடைந்து உரிமைகளைத் துறந்து, நடந்தவைகளை மறந்து நடப்பவைகளை காணாது வாழப் பழகிக்கொள்ளல் இந் நாட்டில் சிறப்பானதொரு வாழ்க்கைக்கான வழி என்பதே சிங்கள அரசுகளின் எண்ணமாக இருக்கிறது.

அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக ஒன்றுதிரள்வோம். அரசின் கடும்போக்கை அடக்குவோம். நாட்டைக் குட்டிச்சுவராக்கும் மக்களது உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளைக் களைந்தெறிவோம்‘‘ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சந்திதி ஆலய சூழலில் தேவலயம் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் தவிசாளர் நிரோஷ் மறுப்பு

சந்நிதி ஆலயத்திற்கு அருகில் தேவாலயம் அமைப்பதற்கு நான் அனுமதி வழங்கியதாக வெளியாகிய செய்திகளில் உண்மை கிடையாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். முறைப்படியாக வீடு ஒன்றிற்கே அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவ் அனுமதியின் பிரகாரம் அமைக்கும் வீட்டை தேவாலயமாக மாற்றினால் உரிய சட்ட நடவடிக்கையினை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபற்றி முழுமையான விபரம் வருமாறு, அச்சுவேலி ஊடாக சந்நிதி செல்லும் வீதியில் பிரதேச சபையில் விண்ணப்பித்து வீட்டிற்கான கட்டிட அனுமதி ஒருவரினால் பெறப்பட்டுள்ளது. அவ்வாறாக அனுமதி பெற்றவர் கட்டம் ஒன்றை அமைக்க முயற்சித்த போது, சந்நிதி ஆலய நலன்விரும்பிகள் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தேவாலயம் அமைக்கப்படுவதாக என்னிடம் முறையிட்டனர். அம் முறைப்பாடுகளில் ஒன்று தனது நெருங்கிய உறவினர் காணியில் மோசடியாக கட்டிடம் அமைக்கப்படுவதாகவும் அமைந்திருந்தது.

முறைப்பாடுகளின் பிரகாரம் எமது உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க சென்றபோது கட்டிடம் அமைப்பவர் முறைப்படி வீடு அமைப்பதற்கான அனுமதி பெற்றிருந்தமை தெரியவந்தது. ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்ட அனுமதியை முறைப்பாட்டின் பிரகாரம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியபோது, விண்ணப்பதாரி காணியை முறைப்படி பெற்றுள்ளமைக்கான ஆவணங்கள் எமக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கும் மேலதிகமாக, வீடு என்ற போர்வையில் தேவாலயம் அமைகின்றதா என ஆராயுமுகமாக, விண்ணப்பதாரியை நான் நேரில் அழைத்து சபையில் விளக்கம் கேட்டபோது – தான் ஒரு இந்து மதத்தினைச் சேர்ந்த முன்னாள் போராளி எனவும் தான் வாழ்வதற்காக பலரிடம் உதவி பெற்று தனக்கான வதிவிடம் ஒன்றை அமைப்பதாகவும் அவர் என்னிடம் உறுதியளித்திருந்தார்.

அனைத்து மதங்களின் உரிமைகளையும் மதிப்பவனாக கடமையாற்றும் நான் மேற்படி விண்ணப்பதாரியிடம், செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு அண்மையான பகுதி ஆலய திருவிழா காலங்களில் ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுத்தப்படும் முழுமையாக இந்துக்களைக் கொண்ட சமய சம்பிரதாயங்களுடனும் ஆலய நடவடிக்கைகளுடனும் தொடர்பான பகுதி என்பதன் அடிப்படையில் எனக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரமும் தாங்கள் அப்பகுதியில் தேவாலயம் அமைத்தால் அது சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்பதை தெரிவித்திருந்தேன். எனவே அவ்வாறாக எச் சந்தர்ப்பத்திலும் தாங்கள் செயற்பட முடியாது எனவும் அறிவுறுத்தியிருந்தேன். அதற்கு விண்ணப்பதாரி முழுமையாக தான் இணங்குவதாகவும் சட்டப்படி தான் குடியிருப்பதற்கான இல்லத்தினையே அமைப்பதாகத் தெரிவித்திருந்தார்.

தேவாலயம் அமைக்கப்படுவதாக சந்தேகித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதனால் விண்ணப்பதாரி சபையின் அனுமதிக்கு முரணாக எதாவது கட்டிட வேலைகளைச் செய்கின்றாரா என்பது பற்றி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பல தடவைகள் எனது அறிவுறுத்தலின் பிரகாரம் சோதனையிட்டுள்ளனர் என்பதுடன் எனது பதவி முடிவுற்றதன் பின்னர் சபையின் செயலாளரிடம் அப் பொறுப்பினை கையளித்துள்ளேன்.

எல்லோருடைய மத சுதந்திரங்களையும் நான் மதிக்கும் அதேவேளை சமயம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்க்கின்றேன். ஆகவே சில வேளை எவராவது வீடு ஒன்றிற்கு சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளியைப் பயன்படுத்தி அனுமதி பெற்றுவிட்டு அதனை தேவாலயமாகவோ அல்லது வேறு எந்த நோக்கம் கருதியதாகவே பிரதேச சபைச்சட்டத்தில் பயன்படுத்த முடியாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கின்றேன். அவ்வாறான நிலையில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க பொறுப்புடையது.

இந்த மேற்படி விண்ணப்பதாரி தேவாலயம் அமைக்கின்றார் என முறைப்பாடு கிடைக்கப்படுகின்றன என்பதை வைத்துக்கொண்டு, நாம் அவர் எதிர்காலத்தில் அக் கட்டிடத்தை தேவாலயமாகப் பயன்படுத்துவார் என்ற சந்தேகங்களின் அல்லது எதிர்வுகூறலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் முடியாது. தவறு இடம்பெற்றாலே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.
இந் நிலையில் தவிசாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தவிசாளரினாலேயே அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறப்படுவது அரசியல் நோக்கம் கொண்ட உண்மைக்குப் புறம்பான ஊடக தர்மத்திற்கும் அப்பாற்பட்ட முயற்சி என்பதையும் கேடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

உள்ளுராட்சி மன்றம் ஒன்று பிரஜை ஒருவர் வதிவிடத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்து சட்ட ரீதியிலான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த நிலையில் அனுமதிக்க முடியாது என கட்டிட அனுமதியை மறுக்க முடியாது. அது சட்ட மீறலும் மனித உரிமை மீறலுமாகும். அதேவேளை வதிவிடத்திற்கான அனுமதியைப் பெற்றவர் அதனை துஸ்பிரயோகம் செய்து வேறு ஒரு தேவைக்கு கட்டிடத்தினைப் பயன்படுத்துவாராக இருப்பின் அது சட்டரீதியில் தடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் அமைப்பதாயின் மத அலுவல்கள் அமைச்சின் பரிந்துரை கட்டிட அனுமதிக்கு அவசியமாகும் எனவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized