ஜெனிவா தீர்மானங்களை பலவீனப்படுத்த கூட்டுச் சதி நடக்கிறது – சபா குகதாஸ் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத் தொடர்களில் புதிதாக வர இருக்கும் தீர்மானங்களை பலவீனப்படுத்து இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச சக்திகளும் இணைந்து பெரும் கூட்டுச் சதி ஒன்றை மேற் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமானசபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் உள் நாட்டில் பல போலியான செயற்பாடுகளை பாதிப்புக்களுடன் தொடர்பற்ற தரப்புக்களை வைத்து அரங்கேற்றுகின்றனர். அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாஸ வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து இன நல்லிணக்கம் பற்றிய பேச்சை சிறு குழுக்களை வைத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலந்துரையாடியுள்ளார் உண்மையில் உள்ள நாட்டில் இன நல்லிணக்கத்திற்கு யார் தடை என்றால் ஆளும் அரசாங்கம் மட்டுமே தான் ஏனைய தரப்புக்கள் யாரும் தடை இல்லை.

கடந்த காலங்களில் ஆபிரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு நாடுகள் தான் ஐெனிவா தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கினர் இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிப்பு அதிகம் இதனை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற் கூறிய நாடுகளின் பிரதி நிதிகளுடன் இராஐதந்திர உரையாடலை ஆரம்பித்துள்ளார் இதற்கு சர்வதேச சக்திகளும் மறைமுகமாக ஆதரவை வழங்குகின்றன இதனால் எதிர் காலத்தில் தீர்மானங்கள் வருகிற போது இலங்கைக்கு எதிரான தீர்மானமாக இருந்தாலும் வலுக் குறைந்த விடையங்களை உள்ளடக்கியதாக மாறும் அபாயம் உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொடர்ந்து பயன்படுத்தி தங்கள் பூகோள அதிகாரங்களை நிலைப்படுத்த நினைக்கும் சர்வதேச சக்திகள் தமிழர் தரப்பின் நீதியை பலவீனப்படுத்தி இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க கூட்டுச் சதியில் இறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.