வாக்குச் சீட்டுகளை அச்சிட தேவையான பணத்தை வழங்க கோரி நிதி அமைச்சுக்கு கடிதம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை அல்லது கூடுதல் தொகையை வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு விடுவிக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்காரணமாக உடனடியாக வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாக கங்கானி லியனகே தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் காலத்தில் பகலில் 35 பொலிஸ் அதிகாரிகளும் இரவில் 28 பொலிஸ் அதிகாரிகளும் தேவைப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சேவையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரச அச்சக அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்து தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றய கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்த்க்கது.

வாக்குச்சீட்டு அச்சடிக்கும் வாய்ப்புள்ளது: அரச அச்சகர்!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (7) காலை இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ள திறைசேரிக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக, அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தெரிவித்தார்.

மேலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது அச்சிடப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை மீள்பரிசீலனை செய்து அவற்றை வழங்குமாறும், பொலிஸ் பாதுகாப்புக்காக பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்குமாறும் ஆணைக்குழு குறிப்பிட்டதாக கங்கானி லியனகே தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி – தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது.

இதன்போது திறைசேரி செயலாளர், அரச அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் திறைசேரி செயலாளர் அதில் கலந்துகொள்ளவில்லை.

இம்மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை – ஜனாதிபதி ரணில்

“இந்த ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்றமே முடிவெடுக்கும்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தலுக்காக ஒதுக்கிய நிதியை விடுவிக்கப்படுவதற்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்தும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் பிரதிநிதிகள் உள்ள அதியுயர் சபையே நாடாளுமன்றம். எனவே, நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது எனவும், நாடாளுமன்றத்துக்குச் சவால் விடுத்து எவரும் செயற்பட முடியாது எனவும் மீளவும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். அதில் உள்ளவர்கள் இருவேறு திசைகளில் பயணிக்கின்றனர். அவர்களுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை.

இந்த வருடம் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில்கொண்டு தேர்தலை எப்போது நடத்துவது என்று நாடாளுமன்றம் முடிவெடுக்கும்” – என்றார்.

புதுவருடத்தின் முன் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை – புதுவருடத்தின் முன் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி திறைசேரியின் கைகளிலேயே உள்ளது என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, ஏப்ரல் நடுப்பகுதியில் வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவ இதனை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் திறைசேரி தேர்தலுக்கான நிதியை உடனடியாக விடுவித்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். எனவே, 2023 ஏப்ரல் இரண்டாம் பாதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தேர்தல்களை நடத்துவதற்கு போதிய நிதியை வழங்குவதாக உறுதியளித்தால், நாளை காலை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தேர்தலுக்கான குறுகிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக புஞ்சிஹேவ தெரிவித்தார்.

“தேர்தல் ஆணைக்குழுவால் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியுமா இல்லையா என, என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு போதுமான நிதி கிடைப்பதைப் பொறுத்தது. நாளைய கலந்துரையாடலில் போதிய நிதியை வெளியிடுவதற்கு திறைசேரி பொறுப்பேற்றால், உள்ளூராட்சித் தேர்தலை அருகில் உள்ள நாளில் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். பந்து திறைசேரியின் கைகளில் உள்ளது” என்று புஞ்சிஹேவ வலியுறுத்தினார்.

“இருப்பினும், தேர்தலுக்கு நிதியை விடுவிப்பதில் தாமும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் தற்போது அவ்வாறு செய்வதற்கு போதுமான பணம் இல்லையென திறைசேரி கூறலாம். அவர்களால் சில மாதங்களில் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என கூறலாம். ஆனால், விவாதத்தில் நாளை இந்த மாதிரியான சூழல் உருவாகும் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை உடனடியாக பெறாவிட்டால், தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்ட சிக்கலை எதிர்கொள்ளும்.

தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தக்கவைக்க வேண்டாம் என்று திறைசேரிச் செயலாளருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, திறைசேரி அதிகாரப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதியை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது. இல்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை.

திறைசேரி உடனடியாக நிதியை விடுவிப்பதாக உறுதியளித்தால், தேர்தல் நடைபெறும் நாளைக் குறிக்கும் வர்த்தமானி அறிவிப்பை 25 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் புதன்கிழமை (8) மற்றும் வியாழனில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு முயற்சி செய்யும்.

தீர்க்கமான முடிவின் பின்னரே தேர்தல் குறித்த அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொறுத்தமான தினம் குறித்து பல தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் , எதிர்வரும் இரு தினங்களுக்குள் இடம்பெறவுள்ள பல்தரப்பு தீர்க்கமான கலந்துரையாடலின் பின்னரே உத்தியோகபூர்வமாக தினம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தமிழ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் தேர்தல் நடத்தப்படாமல் , அதற்கான புதிய தினம் அறிவிக்கப்பட வேண்டுமெனில் பழைய தினத்திலிருந்து 21 நாட்களின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கமைய ஏப்ரல் முதலாம் வாரத்தில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஏப்ரல் இரண்டாம் வாரம் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை என்பதால் குறித்த காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாதெனக் கூறி தேர்தல் ஆணைக்குழு , அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

இவ்வாறு பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழுவின் தலைவரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் குறித்து ஆணைக்குழு இன்னும் தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இவ்விடயம் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. எனவே தான் அடுத்த வாரம் மீண்டும் கூடி இது தொடர்பில் அறிவிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அடுத்த கூட்டத்தில் எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவல்களுடனும் கலந்துரையாடப்பட்ட பின்னரே தினம் உறுதி செய்யப்படும் என்றார்.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படத் தயார்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடையின்றி விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு மதிப்பளித்து செயற்பட நிதி அமைச்சு தயாராகவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கித்துல்கல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.

எந்த தரப்பினராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் நிதியமைச்சு என்ற வகையிலும், அதனை மதித்து செயற்படுவதாகவும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன், நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செலவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் சார்பில்  சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் வெளியாகும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று (03) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி இன்று தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திகதி தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை ரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Posted in Uncategorized

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட கோரிக்கை

நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.தேர்தலை நடத்த மகா சங்க சபையை கூட்டி சங்க பிரகடனத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி அஸ்கிரி, மல்வத்து, ஆகிய பீடங்களிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தேசிய பிக்கு முன்னணியினர் வியாழக்கிழமை (02) அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பு தொடர்பில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித தேரர் குறிப்பிட்டதாவது,

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசியலமைப்புக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுத்த போது ‘நாட்டில் தேர்தல் இல்லை, தேர்தலுக்கான அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக இல்லை’ என குறிப்பிட்டு நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் போது நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

வரலாற்றில் பல சம்பவங்கள் அவ்வாறு பதிவாகியுள்ளன. வாக்குரிமையை கோரி மக்கள் வீதிக்கு இறங்கும் போது அரசாங்கம் மிலேட்சத்தனமான தாக்குதலை மேற்கொள்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நாட்டு மக்கள் வாக்குரிமை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும். ஆகவே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.

இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஏற்கெனவே ஒரு வருடம் பிற்போடப்பட்டது. இந்த தேர்தலை மீண்டும் பிற்போட இடமளிக்க முடியாது.

உள்ளுராட்சின்றத் தேர்தலை விரைவாக நடத்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தி மகாநாயக்க தேரர்களிடம் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சகல பௌத்த மத பீடங்களையும் ஒன்றிணைத்து மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும், இரண்டாவது மாகாண மற்றும் உள்ளுராட்சிமன்ற அடிப்படையில் பௌத்த தேரர்களை ஒன்றிணைத்து விசேட கூட்டத்தை நடத்த வேண்டும் மூன்றாவது, செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தை சங்க பிரகடனமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

உள்ளுராட்சிமனற்த் தேர்தலை நடத்துமாறு ஆட்சியாளர்களுக்கு வழங்கும் யோசனைகள் செயற்படுத்தப்படாவிடின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு மகாநாயக்க தேரர்கள் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.