பிராந்தியத்தின் பாதுகாப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம் – அமெரிக்கத் தூதுவர்

“தரையிலும் கடலிலும் இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் இடம்பெற்ற பயிற்சியின் வெற்றியானது, 75 ஆண்டுகளாக வலுவான அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவின் ஆழத்திற்கு ஒரு சான்றாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

அத்துடன் “இப்பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்றுவதற்காக இப்பங்காண்மையினை மேலும் அதிகரிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எட்டு நாட்களாக நேரடியாகவும் மற்றும் கடலிலும் நடைபெற்ற, இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவத்தினரிடையே ஒத்துழைபை மேம்படுத்திய Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 பயிற்சியானது ஜனவரி 26ஆம் திகதி கொழும்பில் நிறைவடைந்தது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பிலும், திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலங்கை கடற்படை (SLN) தளங்களிலும், மற்றும் லட்சத்தீவு கடலிலும் ஜனவரி 19-26 வரை CARAT/MAREX Sri Lanka பயிற்சி நடைபெற்றது.

மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரணம் (HADR) மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறன்கள் ஆகிய விடயங்களில் நிபுணத்துவத்தை அதிகரிப்பதில் இப்பயிற்சியானது கவனம் செலுத்தியது.

“எமது செழிப்பிற்காக கடலை நம்பியிருப்பதும், அனைத்து இறையாண்மை கொண்ட அரசுகளும் ஒன்றுக்கொன்று அமைதியான முறையில் தொடர்பு கொள்ளவும், விதிகள் அடிப்படையிலான ஒரு ஒழுங்கினைப் பின்பற்றவும் கூடிய ஒரு உலகத்தைப் பற்றிய எமது பொதுவான தொலைநோக்கும் எமது கடல்சார் வேர்களில் இருந்து வருகிறது” என அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் துணைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜொக்கின் ஜே. மார்டினெஸ் டி பினிலோஸ் கூறினார்.

“இந்தப் பயிற்சியும், அதை நிஜத்தில் மேற்கொள்வதற்கு உதவிய அனைவரின் முயற்சிகளும், எமக்குப் பொதுவான அந்தத் தொலைநோக்கினை அடைவதில் அமெரிக்காவும் இலங்கையும் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கான ஒரு சான்றாக விளங்குகின்றன.”

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பல்களான SLNS கஜபாஹு (P 626) மற்றும் SLNS விஜயபாஹு (P 627) என்பன 13ஆவது Marine Expeditionary Unit (MEU) உடன் நிலம் மற்றும் நீர் இரண்டிலும் இயங்கக்கூடிய போக்குவரத்து கலத்துறை மேடையான USS Anchorage (LPD 23) இனைக் கடலில் சந்தித்தன.

இவ்வருட பயிற்சியில் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் பங்கேற்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இரண்டு USN தரையிறங்கும்கலன்கள் முள்ளிகுளத்தின் ஒரு கடற்கரைப் பகுதிக்கு துருப்புக்கள், பொருட்கள் மற்றும் வாகனங்களை HADR பயிற்சிக்காக கரைக்கு இடம்மாற்றின. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிகள், ஒரு உருவகப்படுத்தப்பட்ட அனர்த்த சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் தொடர்பாடலை மேற்கொள்வதற்குமான பங்காளர்களின் திறனை பரீட்சித்து அதை மேம்படுத்தியது.

“இந்தப் பயிற்சியில் பங்குபற்றிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு நான் நன்றி கூறுவதுடன், எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாக இப்பயிற்சியை நடாத்துவதற்காக கடந்த சில நாட்களாக வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கடின உழைப்பு மற்றும் தொழில்வாண்மைத்துவம் ஆகியவற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என இலங்கை கடற்படையின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

“எம்மனைவருக்கும் பொதுவான நலன்களை திறம்பட கையாளுவதற்காக நாம் பேணிவரும் வலுவான உறவுகளைப் பேணிக்காப்பதற்காக இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையேயான இந்த நல்லுறவானது எதிர்காலத்தில் மென்மேலும் தொடரும் என நான் நம்புகிறேன்.” எனவும் அவர் தெரிவித்தார்.

கடலில் நடத்தப்பட்ட மேலதிக பயிற்சிகளுள் பிரிவு தந்திரோபாயங்கள், பார்வையிடல், ஏறுதல், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS), கடலில் வைத்து மீள்நிரப்புதல் தொடர்பான அணுகுமுறைகள் மற்றும் உளவு மற்றும் துப்பாக்கிப் பயிற்சிகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

VBSS பயிற்சிகள், இப்பயிற்சியின் கடலில் நடைபெற்ற பகுதியில் பங்கெடுத்த SLN கப்பல்களின் தளங்களில் துருப்புகள் மற்றும் பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற பயிற்சிகளை Anchorage மேலிருந்த உலங்குவானூர்திகள் வெற்றிகரமாக மேற்கொண்டன.


கரையில் நடைபெற்ற விடயங்களுள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அவர்களால் நடாத்தப்பட்ட இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவங்களின் உறுப்பினர்களுடனான பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒரு வட்டமேசை மாநாடு, இரு நாட்டு கடற்படை வாத்தியக்குழுக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள், ஒரு விளையாட்டு தினம் மற்றும் ஒரு தொடர்ச்சியான சமூக சேவை நடவடிக்கைகள் என்பன உள்ளடங்கியிருந்தன.

“இந்த ஐந்தாவது CARAT/MAREX Sri Lanka பயிற்சியின்போது, எமது இரு நாடுகளுக்கும் செயன்முறைப் பிரயோகத்துடன் கூடிய அறிவுப் பரிமாற்றங்களை நடாத்த முடிந்தது,” என 13ஆவது MEU இன் படைப்புரிவுகளை தரையிறக்கும் அணி 2/4 இன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்னல் ஜாரெட் ரெட்டிங்கர் கூறினார். “அவ்வாறு செய்வதன் மூலம், நாங்கள் எங்களது திறன்களைக் கூர்மைப்படுத்தினோம், இணைந்து செயற்படும் திறனை மேம்படுத்தினோம், மற்றும் ஒரு சுதந்திர மற்றும் திறந்த இந்தோ- பசிபிக்கிற்கான ஒரு பரஸ்பர தொலைநோக்கிற்காக இணைந்து பணியாற்றினோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கரையில் நடைபெற்ற பயிற்சிகள் சுழியோடுதல் மற்றும் நீருக்கடியிலான கட்டுமானம், மருத்துவ உதவி மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு போன்ற விடயங்கள் தொடர்பான விடய நிபுணத்துவ பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன. மேலதிகமாகப் பங்குபற்றிய அமெரிக்க அலுவலர்கள் மற்றும் கப்பல்களுள் U.S. 7ஆவது கப்பற்படையின் ஒரு P-8A Poseidon கப்பல் மற்றும் அதன் அதிகாரிகள், (CTF) 72, CTF 73, CTF 76/3, DESRON 7 படையணியின் கட்டளைத்தளபதி மற்றும் Amphibious Squadron 7 என்பன உள்ளடங்கியிருந்தன.

CARAT/MAREX Sri Lanka என்பது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்களை வழங்குதல் போன்ற விடயங்களைப் பயிற்சி செய்தல், கடல்சார் புரிதல், பங்காண்மைகள் மற்றும் இணைந்து செயற்படும் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு இருதரப்பு பயிற்சியாகும்.

CARAT தொடரானது அதன் 28ஆவது வருடத்தில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்புச் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவும் அதன் பங்காளர் படைகளும் இணைந்து செயற்படுவதற்கான அவற்றின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பன்னாட்டுப் பயிற்சிகளை கொண்டுள்ளது.

யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் இலங்கை வருகை முக்கியமானது – அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ.சோனெக்

இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி திட்டமானது 2023 ஆம் ஆண்டில் முக்கியமானதாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையிலான 75 வருட கால இராஜதந்திர உறவினை நினைவுக்கூறும் இத்தருணத்தில் இருதரப்பு பல்துறைசார் உறவுகள் மற்றும் பேரிடரின் போது மனிதாபிமான ஒத்துழைப்புகள் போன்ற துறைகளை வலுப்படுத்தும் வகையில் ஆர்வத்துடன் இந்த கூட்டுப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ. சோனெக் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டு பயிற்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே பிரதி தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஒருவாரக்கால கூட்டுப்பயிற்சிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்பகுதிகளிலும் இந்த போர் கப்பல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளது.

CARAT/MAREX என்பது கொழும்பு, திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்படை தளங்களில் முன்னெடுக்க கூடிய இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும். விசேடமாக இம்முறை ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் கூட்டாண்மையின் 75 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த கூட்டுப்பயிற்சி திட்டங்களுக்கு அப்பால் கலை, கலாசார நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் யோசனைகள் மற்றும் தந்திரோபாயங்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும் நவீன உத்திகளில் போர் மூலோபாயங்களை பயிலும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் துணை கட்டளையதிகரி கெப்டன் சீன் லூயிஸ் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலானது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுப்பட கூடியதாகவும் அதனுடன் தொடர்புப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளை ஈடுப்பட கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உட்பட போர் வாகனங்களை தாங்கி செல்ல கூடிய வல்லமை இந்த கப்பலுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் வான் பாதுகாப்பு, சிறிய படகு செயல்பாடுகள் மற்றும் கடல் பாதுகாப்பு அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த ஒருவார கால பயிற்சி திட்டம் அமையும் எனவும் கூறினார்.

ஒவ்வொரு பயிற்சிகளும் படைகளுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது என்றும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், அறிவு, திறன் மற்றும் இலக்குகள், கலாச்சாரங்கள் மற்றும் இலட்சியங்கள் பற்றிய புரிதலை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் இருதரப்பு பங்காளித்துவத்தை வலியுறுத்தும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

இருதரப்பு உறவுகளை வலுவாக்க இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்களன்று கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படை தளபதி நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது , பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியினை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தினை வழிநடத்திச்செல்வதில் இலங்கையின் வகிபாகமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்திய கடற்படைத் தளபதி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்ததோடு , அவருடனான சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளினதும் பாதுகாப்பு படையினரிடையில் தற்போதுள்ள உறவினை மேலும் வலுவாக்குவதற்கான மார்க்கங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

கடற்படை கப்பல் கையளிப்பு நிகழ்வில் அமெரிக்க தூதுவர் பங்கேற்பு

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.

கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

விசேட கடற்படை வாகனத் தொடரணியில் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்படையினரின் விசேட மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந் நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அவர்களும் பங்கேற்றார்.

கப்பலை, அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பத்திரத்தை கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவிடம் ஜனாதிபதி கையளித்தார்.

பின்னர் “விஜயபாகு” என பெயரிடப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். ஜனாதிபதியும், அமெரிக்க தூதுவரும் கப்பலை பார்வையிட்டதுடன், கப்பலின் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் இட்டனர்.

இதன்பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடற்படைத் தளபதி விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். ´Hamilton Class High Endurance Cutter´ வகை கப்பல்களுக்கு சொந்தமான இரண்டாவது கப்பல் என்ற வகையில், இலங்கை கடற்படைக்கு கிடைத்த இந்த கப்பல் 115 மீட்டர் நீளம் கொண்டது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 29 கடல் மைல்கள் ஆகும். இந்தக் கப்பல் ஒரே நேரத்தில் குறைந்தது 14,000 கடல் மைல் தூரம் வரை கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மொத்தம் 187 கப்பல்களுடன் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய கடற்படை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.

மேலும், இந்தக் கப்பல் அமெரிக்காவின் கடலோர காவல்படையின் கீழ் இருந்தபோது, அந்​​நாட்டின் கடற்பகுதியில் நடந்துவந்த சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத கடற்பயணம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக சிறப்பு பங்களிப்பை வழங்கியது.

P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பலைப் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டதில் இருந்து அதன் கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவின் மேற்பார்வையில் கப்பலின் முதல் பணியாளர்கள் 130 பேர் கொண்ட குழுவினருக்கு சுமார் 10 மாதங்கள் கப்பல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கை கடற்படையின் தேவைக்கேற்ப கப்பலின் செயல்பாடுகள் நவீனமயப்படுத்தப்பட்டது.