ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ்த் தரப்புக்கள் சரியான பொறிமுறையை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும்

தற்போது எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்று அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியமானது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் பல்கலைக்கழக சமூகத்தினது பங்களிப்பு புலமைசார் தளத்தில் அத்தியாவசியமானது அதே போன்று சட்டரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள சட்டவாளர்களின் பங்களிப்பு இப்போது போன்று தொடர்ந்து கிடைப்பதுடன் அது அனைத்து பிராந்திய மட்டத்திலும் ஒருங்கிணைத்த நிபுணத்துவத்துடன் இருப்பது மேலும் பலம் சேர்க்கும்.

அத்துடன் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி மாணவர்கள் மேலும் வீச்சாக போராட்டங்களை மக்கள் சார்ந்தாக ஒழுங்கமைக்க வேண்டும்.

அரசியலாளர்கள் தொடர் அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதுடன் பாராளுமன்றை புறக்கணித்தல் உட்பட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தயாராக வேண்டும்.

மேலும் பன்னாட்டு மற்றும் இந்திய அரசின் கவனத்தை மேலும் ஈர்த்து இந்த பாரிய பௌத்த மேலாண்மையை திணிக்கும் பூர்வீக தமிழர்களின் சிவ வழிபாட்டு இடங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக எம்முள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து முன்வருவோம்.

அமைப்புசார் நிலையில் இயங்கும் நாம் அனைவரும் எம் அமைப்புக்ளின் தனித்துவங்களை பேணும் அதே நேரம் எம் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக இருப்பை இத்தீவில் நிலைநிறுத்தவதற்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பாக செயற்பட இந்த தீர்க்கமான தருணத்தில் அழைப்பு விடுகின்றோம்.

அதே நேரம் இந்த பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகி அரசு தீர்க்க தவறின் இந்த தீவில் இனங்களிற்கிடையே சமாதான சகவாழ்வு தொடர்ந்து கேள்விகுறியாகி நாட்டின் எதிர்காலம் அதலபாதாளத்திற்கு செல்லும் என்பதை சுட்டிகாட்டுகின்றோம்

தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அளவிற்கு வந்துள்ள அரசியலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் தமிழரின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக மிக மோசமான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

இருப்பினும் இவற்றை செய்ய தவறின் தமிழர் நாம் தொடர் சாத்வீக போராட்டங்களிற்கும் ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புகளிற்கும் தள்ளப்படுவோம் என இந்த சந்தரப்பத்தில் அரசிற்கு ஆழமாக வலியுறுத்துகின்றோம்.

Posted in Uncategorized

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும், பறாளாய் வர்த்தமானியை மீளப்பெறவும் கோரி ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்ப முடிவு

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தும் படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.

13வது திருத்தம் தொடர்பில் ரெலோ, புளொட் என்பன தனித்தனியாக யோசனைகளை சமர்ப்பிக்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 கட்சிகளுடனும் கலந்துரையாடி, கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை 10 மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியுள்ளதால், அது தொடர்பில் மட்டும் குறிப்பிடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களுடனும் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜனாதிபதி ரணில் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு சம்பவங்களை பட்டியலிட்டும், பறாளாய் முருகன் கோயில் அரச மரத்தை உரிமை கோரும் முறையற்ற வர்த்தமானி உள்ளிட்ட- தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை அபகரிக்கும் வர்த்தமானிகளை மீளப்பெற வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை பொறுத்துக் கொள்ள முடியாது – வேலன் சுவாமிகள்

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தகமானியிலே சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்பொருட் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் காலங் காலமாக வழிபட்டு வந்த ஆதி வழிபாட்டுமுறைப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள தமிழர்களின் வடக்குக் கிழக்குத் தாயகத்திற்கு பௌத்தம் கெண்டுவரப்பட்ட சங்கமித்தை வந்த காலத்தில் சிங்களம் என்ற மொழி, இனம் கிடையாது.

ஆனால் அந்தக் காலத்தில் தமிழர்கள் ஆட்சி புரிந்தும் பாரம்பரியமாக வழிபாடுகளை நடாத்தியும் வந்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது.

தொல்பொருள் என்பது மிகவும் தொன்மையை எடுத்துக் கூறுவது. அந்த வகையில் இங்கு அனைத்து இடங்களிலும் தமிழர்களின் வழிபாட்டிடங்களே காணப்பட்டிருக்கின்றன. மாறாக சி்ங்கள பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் எள்ளளவும் இடங்கிடையாது.

தமிழர் தாயகத்தில் பறாளாய் முருகன் ஆலயம், கீரிமலை, குருந்தூர் மலை, தையிட்டி, வெடுக்குநாறி மற்றும் மயிலத்தனைமடு போன்ற இடங்களைத் தொல்லியற் திணைக்களம் அடாவடியாக வர்த்தகமானி மூலமாகவும் ஏனைய விதங்களூடாகவும் கையகப்படுத்தி எமது நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இவ் வர்த்தகமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். தமிழர் தரப்பிலுள்ள அனைவரும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

சர்வதேசம் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதால் நிச்சயம் நீதி கிடைக்கும். எமக்கென்று ஒரு காலம் வந்து சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமக்குரிய தீர்வை நாமே தீர்மானிக்கின்ற பொழுது பார்த்துக்கொள்ளலாம்.

அறம், நீதி என்றோ ஓர் நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களின் நிரந்தரதீர்வு சர்வதேச கண்காணிப்புடன் பொதுசன வா்கெடுப்பாக நடாத்தப்பட்டு எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் என்றார்

சுழிபுரம் பறாளாய் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை  நாட்டிய மரம் என  வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை காலை பத்து மணியளவில் சுழிபுரம் சந்தி. பகுதியில் காலை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு இன்னும் ஒரு படி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய மேலும் வரலாற்றினை திரிபடைய செய்துள்ளது.

சங்கமித்தா இலங்கைக்கு வருகை தந்ததாக கி.மு 3ஆம் நூற்றாண்டு என வரலாற்று மூலாதாரங்களில் திரிபடைய கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆலய தர்மகர்த்தாவினர் குறித்த ஆலயம் 1768 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் பொழுது எதுவித அரச மர எச்சங்கள் குறித்தும் தமது முன்னையவர்களோ அல்லது ஆதாரங்களோ குறிப்பிடவில்லை எனவும் தற்பொழுது ஆலயத்தில் உள்ள மரம் மிக குறைந்தளவான காலப்பகுதிக்கு உரியது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆலயத்தினரிடம் ஆகக்குறைந்த  கலந்துரையாடலை கூட செய்யாது  எதேச்சதிகாரமான முறையில் இந்த  சிங்கள அரசு திட்டமிட்ட  பெளத்தமயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொடர்ச்சியாக சிங்கள  அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் இதனை வலியுறுத்தி நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

ஆகவே இதனை வலுச்சேர்க்கும் முகமாக பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் இளைஞர் யுவதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கட்சிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

உடவல நீர்த்தேக்கத்தின் நீரைத் திறந்துவிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் தென்பகுதி விவசாயிகளும் தமது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காததால் வடபகுதி விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து, உணவுப்பொருள் உற்பத்தித் தொழிற்சாலையான விவசாயத்தை வாழவிடுங்கள் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்திற்கான சிறுபோக விவசாயத்திற்கு உரிய நீரை காலக்கிரமத்தில் வழங்குவதாக உத்தரவாதமளித்த மகாவலி அதிகாரசபை சிறுபோகத்தின் இறுதிகட்டம் நெறுங்கியுள்ள நிலையில் நீரை வழங்க முடியாதநிலையில் உள்ளது. மகாவலி அதிகாரசபையின் இத்தகைய கையாலாகாத் தனத்தை எச்சரித்தும் வடக்கில் காணி அபகரிப்பின் கருவியாக மகாவலி அதிகாரசபை செயற்படுவதை அம்பலப்படுத்தியும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சப்ரகமுவ மாகாணத்தில் சமநல வாவியின்கீழ் ஆயிரக்கணக்கான ஹெக்டெயர் நெல் வயல்கள் சிறுபோகத்தில் செய்கை செய்யப்படுகிறது. இந்த நெற்பயிருக்கான தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டெயரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அழிந்து நாசமாகிவிடும் என்பதுடன் இந்தியாவிடமிருந்தோ, சீனாவிடமிருந்தோ, வியட்நாமிடமிருந்தோ இலங்கை, அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தமது விவசாயம் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் தமக்குத் தேவையான நீரை உடன் விடுவிக்கும்படியும்கோரி அப்பிரதேச மக்கள் கடந்த பத்துநாட்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னமும் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், உடவலவ அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுமாயின், ஹம்பாந்தோட்டை, காலி உட்பட ஐந்து மாவட்டங்களுக்கான மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என எரிசக்தி வலுசக்தி அமைச்சர் கூறியுள்ளார். ஆகவே நீரைத் திறந்துவிட முடியாது என மின்சார அமைச்சர் கூறுகின்ற அதேசமயம், விவசாயத்திற்கு நீர் கிடைக்காவிட்டால் 1700கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று விவசாய அமைச்சர் கூறுகிறார்.

தென்மாவட்டங்களுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டால் நூறுகோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று மின்சார அமைச்சர் கூறுகின்றார். ஏற்கனவே பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தில் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நீரை கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடிக்கும் அமைச்சரும் நீருக்காகப் போராடும் மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதியும் இந்த நாட்டை பொருளாதார பாதாளத்தில் இருந்து மீட்கப்போகிறோம் என்று சொல்வது நகைப்புக்குரியது.

தமது மாவட்டங்களைச் சார்ந்த சிங்கள விவசாயிகளுக்கே நீரைத்திறந்துவிடாத அமைச்சர்கள், வடக்கு மாகாணத்திற்கு மகாவலியைக் கொண்டுவரப்போகிறோம் என்றுகூறி, ‘எல்’ வலயம், ‘ஜெ’ வலயம், ‘ஐ’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
முறையான நீர்ச்சேகரிப்பு வசதிகளின்றி, மழைநீரை சேமித்து வைத்துள்ள குளங்களை நம்பி, மேற்கொள்ளப்பட்டுவரும் வடக்குமாகாண விவசாயச் செய்கையில் விதை நெல்லு, உரம், கிருமி நாசினிகள், டீசல், உழவுகூலி என அனைத்துமே விலையேறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், வடக்கு மாகாண விவசாயிகள் தமது நெல்லுக்கு ஒரு நீதியான விலைகேட்டுத் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல், தனியார் வியாபாரிகள் கொள்ளை இலாபம் அடையும் நோக்குடன் நெற்சந்தைப் படுத்தும் சபையினரும் அராவிலைக்கு நெல்லை கொள்முதல் செய்ய முயற்சிக்கின்றார்கள். பல ஆயிரம், இலட்சங்களைச் செலவு செய்த விவசாயிகள் இரத்தக்கண்ணீர் வடித்து நிற்கிறார்கள். ஆகவே அரசாங்கம் முதலில் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். வடக்கிலோ, கிழக்கிலோ, தெற்கிலோ மேற்கிலோ விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். இனவாத கண்ணோட்டங்களை விடுத்து, விவசாயிகளை விவசாயிகளாகவே நடத்துங்கள். இந்நாட்டிற்கு உணவளிப்பவர்களை வாழவிடுங்கள்.

ஏற்கனவே, ஹம்பாந்தோட்டையிலிருந்தும் ஏனைய சிங்கள பிரதேசங்களிலிருந்தும் கொண்டுவந்து குடியேற்றப்பட்டவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். இந்த இலட்சணத்தில் நாடு முழுவதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற ஒரே நோக்கில், அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவந்து வடக்கில் குடியேற்றுவதற்கு இலங்கையின் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒருபுறமும் தொல்பொருள் திணைக்களம் இன்னொருபுறமும் இந்த காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இருக்கின்றனர்.
அரசாங்கம், முதலாவதாக வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தென்பகுதி சிங்கள மக்களுக்கு தாமதமின்றி தண்ணீரைத் திறந்துவிடுவது மாத்திரமல்லாமல், குடியேற்றம் என்ற பெயரில் அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவந்து அவர்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவருவதையும் நிறுத்த வேண்டும்.

மகாவலி ஆறு ஓடும் தென்பகுதி சிங்கள மக்களுக்கே தண்ணீர்ப்பற்றாக்குறையும் அவர்களுக்கான செய்கைக்கான நீரும் வழங்க முடியாத நிலை இருந்தால், மகாவலி ஆறு எட்டியும் பார்க்காத வடக்கு மாகாணத்திற்கு மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிப்பதென்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரலே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசம் வெலிஓயா என்ற பெயரில் சிங்கள மயமாக்கப்பட்டு மகாவலி ‘எல்’ வலயம் என்று உருவாக்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அந்த வலயத்திற்கு மகாவலி ஆற்றின் நீர் இன்னமும் எட்டியும் பார்க்கவில்லை. இப்பொழுது மகாவலி ‘ஐ’ வலயம், ‘ஜெ’ வலயம் என்ற பெயர்களில் புதிய வலயங்களை உருவாக்குவதில் மகாவலி அதிகாரசபை ஈடுபட்டு வருகின்றது. வன்னிப் பகுதியில் சிறிய குளங்களை நம்பி, குறைந்தளவான விவசாயிகள் தமது விவசாயத்தைச் செய்து வருகின்றனர்.

நீங்கள் மகாவலி நீரைக் கொண்டுசெல்கிறோம் என்ற பிழையான பெயரில் இப்பொழுது விவசாயம் செய்யும் மக்களையும் விரட்டி, சிங்கள மக்களையும் குடியேற்றி மொத்தத்தில் தற்பொழுதுள்ள விவசாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றீர்கள். தயவு செய்து இத்தகைய தொலைநோக்கற்ற சகல நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள்.

மின்சாரம் இல்லாவிட்டால் மனிதனால் உயிர்வாழ முடியும். ஆனால் வயிற்றுக்கு உணவில்லையேல் மக்கள் செத்து மடிவதைத்தவிர வேறுவழியில்லை. உணவில்லாமல் மருந்தில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் எம்கண்முன்னே செத்து மடிந்ததைப் பார்த்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அந்தத் துன்பம் சிங்கள மக்களுக்கு ஏற்படவேண்டாம்.
அடுத்த ஜனாதிபதியும் நான்தான் என்று கூக்குரல் இடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே இந்த விடயங்களை தயவு செய்து தங்களது கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

குருந்தூர்மலை குறித்த பதில் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

குருந்தூர்மலை வழக்கு இலக்கம் AR/673/2018 வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்து நீதிபதி அவர்கள் குருந்தூர்மலையை நேரில் சென்று பார்வையிட்டு 2023.08.08ம் திகதி தவணை போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருந்தூர்மலை தொடர்பாக வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.

எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயத்தின் போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

WhatsApp Image 2023 07 04 at 8.48.29 PM குருந்தூர்மலை குறித்த பதில் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் களவிஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023அன்றைய தினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை அதனைத் தொடர்ந்து 02.03.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டது.

இந் நிலையில் அவ்வாறு குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு 04.07.2023இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த களவிஜயத்தின் போது குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மே்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிபதியால் ஆராயப்பட்டுள்ளது.

அதேவேளை பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் இது தொடர்பிலான பதில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் 08.08.2023ஆம் திகதிக்கு குறித்த வழக்கினை நீதிபதி திகதியிட்டுள்ளது.

மேலும் நீதிபதி இவ்வாறு குருந்தூர்மலைக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு பாாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தண்ணிமுனிப்பு மக்கள், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களும் அங்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சரத் வீரசேகரவை எச்சரித்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத் வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்து தெரிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாது என்றும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுகிறது என்றும் அங்கிருந்து சரத்வீரசேகரவை விலகிச் செல்லுமாறும் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான 3ம் கட்ட போராட்டம் ஆரம்பம்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமான 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகியுள்ளது.

இன்றையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (02) போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஞாயிறு இரவு போராட்டக்காரர்கள் பாதுகாப்பற்ற புதருக்கு அருகாமையிலேயே உறங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களுக்கு பலாலி பொலிஸார் பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலையும் இடர்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் விகாரைகளின் மேலேயே பழைய சைவக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன – எல்லாவல மேதானந்த தேரர்

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கை தமிழர்களின் பண்டைய தாயகமல்ல. அப்படி யாராவது சொன்னால் அவர்களுக்கு பதிலளிக்க நான் தயார். வடக்கு கிழக்கில் கட்டப்பட்டுள்ள பழைய கோயில்கள், புராதன விகாரைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளது என பெரும் “புரட்டு“ விட்டுள்ளார் எல்லாவல மேதானந்த தேரர்.

தென்னிலங்கை தரப்பினர் அவரை தொல்லியல் சக்ரவர்த்தி என விளிப்பதுண்டு. எனினும், தொல்லியல்துறையில் அவர் ஒரு கல்வியியலாளர் அல்ல. அவர் தமிழர்களின் வரலாறு தொடர்பில் இனவாத அடிப்படையில்- தவறான கருத்துக்களையே முன்வைப்பதுண்டு. அவ்வாறே தற்போதும் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணம் கந்தரோடையில் மட்டும் 50 ஸ்தூபிகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. விகாரை தளத்தில் காணப்படும் கல்வெட்டுகளில், அதனை நாக விகாரை என குறிப்பிடுகிறது.

வடக்கில் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் மூலம், கடந்த காலங்களில் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பொலன்னறு ராஜதானியை ஆண்ட முதலாம் மகா பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறை துறைமுகத்தின் ஊாக இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் சரக்கு வர்த்தகம் நடந்தது கல்வெட்டுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தென்னிந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கை காரணமாக துறைமுக விதிகள் குறித்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டது. அந்த கல்வெட்டு தற்போது நாகபூசணி அம்மன் கோயிலில் உள்ளன. தொல்லியல் திணைக்களத்திற்கு இது பற்றி பல தடவைகள் தெரிவித்தும் பலனில்லை.

கல்வெட்டின் இறுதியில் சமஸ்கிருதத்தில் ‘மஹா பராக்கிரமபாகு சகல சிங்களச் சக்கரவர்த்தி’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் நாங்கள் வியந்து போனோம்.

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கையில் தமிழர் தாயகம் இல்லை. அப்படி நிருபிக்க யாரேனும் இருந்தால் நான் பதில் சொல்ல தயார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பழைய கோயில்கள் பண்டைய பௌத்த தலங்களில் கட்டப்பட்டுள்ளன. வவுனியா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கோயில் கட்டப்பட்டிருந்தால் அது பழமையான பௌத்த விகாரையாகும். இது என் கண்ணால் பார்த்த ஒன்று.

சில பண்டைய பௌத்த புனித ஸ்தலங்களிலிருந்து கலைப்பொருட்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு தாந்தாமலை பௌத்த தளத்தில் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புளுகுணாவ புத்த விகாரையில் இருந்து ஒரு கல் இருக்கை அந்த கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

முல்லைத்தீவு குருந்தூர்மலை பௌத்த விகாரைக்கு ஆறு முறை சென்றிருக்கிறேன். 1964 இல் முதன்முதலில் இந்த இடத்திற்குச் சென்றேன். அந்தப் பகுதியில் ஒரே ஒரு தமிழன் வாழ்ந்தான். குருந்தூர் மலை இடிபாடுகளை நமக்குக் காட்டியவர் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்தவர்.

குருற்தூர்மலை தொல்லியல் தளத்திற்கு முதல்முறை சென்றபோது, ​​ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கல்வெட்டு அழிக்கப்பட்டது. குருந்தூர் மலை விகாரையின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க மூன்றாம் மிஹிந்து மன்னர் வந்ததாக அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கல்வெட்டில் அந்தப் பகுதி குறுங்காமம் என்று அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த கிராமத்தில் ஒரு சிறிய ஏரி உருவாக்கப்பட்டது. கல்வெட்டின் படி ஏரியின் பெயர் குருந்த வாபி. அந்த ஏரி தற்போது தண்ணிமுறுப்பு ஏரி என அழைக்கப்படுகிறது. பின்னர் தமிழ் கிராமங்கள் தோன்றியதன் மூலம் மக்கள் தண்ணிமுறுப்பு ஏரியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பௌத்த புனித தளத்திற்கு உரிமை கோர வரவில்லை. இடிபாடுகள் சேதமடையவில்லை. சமீபகாலமாகத்தான் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். சாதாரண தமிழ் மக்கள் உரிமை கோரவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள். வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தப்படும் அரசியல் நாடகங்கள் அவை என்றார்.

Posted in Uncategorized

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டியில் விகாரைக்கும் நடக்கும் – சிவசேனை அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்ட விரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப் பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மறவன்புலவு சச்சிதானந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாக கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே என்றும் மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் எடுத்துரைத்தார்.

இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளதாகவும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கை வைக்கும்போது காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக் கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கண்ணீர் வடிப்பதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம் என்றும் பௌத்த சமயத்துக்கு கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மைத்திரிபால சிறிசேன, உண்மையில் சைவர் என்றும் உலகதிற்காக பௌத்தராக வாழ்வதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறினார்.