உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது என விமர்சிக்கப்படுகின்றது.

மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்களையும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு, பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உத்தேச வரைபின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் இந்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் பகுதியின் பிரிவு 3இ-இற்கு அமைய, எந்தவொரு அத்தியாவசிய சேவை அல்லது விநியோகம் அல்லது ஏதேனும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதி அல்லது அது தொடர்பான போக்குவரத்து வசதிகளை சீர்குலைப்பது பயங்கரவாத குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, குறித்த தரப்பினரது சொத்துகளை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதக் குற்றத்தை செய்வதில் ஈடுபடுத்துதல், தூண்டுதல் அல்லது ஊக்குவிக்கும் நோக்கில் கருத்து வெளியிடுதலும் குற்றம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகம், இணையம், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் ஏனைய பொது விளம்பரங்களும் இந்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தகைய குற்றத்திற்காக, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கை தொடர்பிலும் குறித்த சட்டமூலத்தின் சரத்துக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உத்தேச சட்டமூலத்திற்கமைய, பிடியாணை இன்றி ஒருவரை கைது செய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதுடன், பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, மூன்று மாத காலம் வரை தடுப்புக் காவலில் வைக்கவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புதிய எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குகிறது

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்நிலையம் மேலும் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலநிலை பிரகடனம் ஆகியவற்றின் மூலமான அதிகாரங்களைக் கடந்தகால அரசாங்கங்கள் பயன்படுத்திய விதத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது.

சிறுபான்மையினத்தவர், விமர்சகர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைப்பதற்கும் சித்திரவதைகள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கங்களால் பாதுகாப்புச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், இச்சட்டமூலம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்பதை மீளவலியுறுத்துகின்றோம்.

மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்டமூலமானது பெருமளவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது.

இருப்பினும் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்காத பல்வேறு குற்றங்கள் இப்புதிய சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதுடன், அவற்றில் சில விடயங்கள் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் தொடர்பில் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருக்கின்றன.

இருப்பினும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியொருவரின் முன்னிலையில் வழங்கும் வாக்குமூலம் ஆதாரமாகக் கருதப்படமாட்டாது என்பது மாத்திரமே ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் இப்புதிய சட்டமூலத்திலுள்ள ஒரேயோரு முன்னேற்றகரமான மாற்றமாகும்.

ஆனால் தடுப்புக்காவல் உத்தரவு தொடர்பான தீவிர கரிசனை இன்னமும் தொடர்கின்றது. குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அமைச்சரிடம் காணப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு வழங்கும் அதிகாரம், இப்புதிய சட்டமூலத்தில் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இதனூடாக வரையறுக்கப்பட்டுள்ள தடுப்புக்காவலில் வைப்பதற்கான காலப்பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகளும் கரிசனைக்குரியவையாகவே காணப்படுகின்றன.

அத்தோடு இச்சட்டமூலத்தின் ஊடாக அமைப்புக்களுக்கு எதிராகத் தடையுத்தரவு விதிப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வதிகாரங்கள், நாட்டில் நிலவும் சட்டபூர்வமான கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.

மேலும் இப்புதிய சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக்குற்றங்களுக்கு’ வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகக் காணப்படுவதுடன், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இலங்கையின் நீண்டகால ஒடுக்குமுறை வரலாற்றை நினைவூட்டுகின்றது.

இலங்கையானது மீட்சியையும், அபிவிருத்தியையும் நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடுதல் போன்றவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஏற்றவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும்

சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

இந்த சட்டமூலம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு மிகவும் ஒத்ததாக இருப்பதாக சட்டத்தரணி சுனில் வதகல தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பை மீறுகிறது என்பதோடு மக்கள் அனுபவிக்கும் சிவில் உரிமைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இந்த சட்டமூலத்தினால் பாதுகாக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய சட்டம் உத்தியோகபூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வர்த்தமானியாக வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

சந்தேக நபர்களை தன்னிச்சையாக காவலில் வைப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கடந்த மூன்று தசாப்தங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த சில வருடங்களாக, பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளது.

வலுவான இராஜதந்திர அழுத்தத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கடந்த ஆண்டு மீளாய்வு செய்த அரசாங்கம் பல வருடங்களாக சிறையில் இருந்தவர்களையும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு சட்டமா அதிபர் ஒப்புதல்

பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று (27)  கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பங்கரவாத தடைச்சட்டத்தை மீள் கட்டமைப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய, புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியேற தயாராகும் ஜேர்மனி நிறுவனங்கள்; பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாவிடின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கை இழக்கும் – ஜேர்மன் தூதுவர்

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் (Holger Seubert) இன்று கொழும்பில் ஊடகவியலாளர்கள் குழுவிடம் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருகின்றது இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள், நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என சில எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சில ஜேர்மன் நிறுவனங்கள் இறக்குமதித் தடை குறித்து கவலை தெரிவித்துள்ளன.

மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் அவர் கூறினார். பல ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதுடன் வாகன உதிரி பாகங்கள் உட்பட ஜேர்மன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான Mitsubishi மற்றும் Taisei ஆகியவை இலங்கையில் தனது செயற்பாடுகளை குறைப்பதாக அண்மையில் அறிவித்திருந்தன. இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜேர்மனியும் இலங்கைக்கான கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன் நிலைமை மேம்படும் என்று நம்புகிறோம் என்று ஜேர்மன் தூதுவர் கூறினார். ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கான ஒட்டுமொத்த வணிகச் சூழல் குறித்தும் கவலைகள் இருப்பதாக Seubert கூறினார்.

முதலீட்டுச் சபை உட்பட இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கம் இதற்கு தீர்வை காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமறுஆய்வு இல்லாததாலும் அரசியல் நோக்கங்களிற்காக அதனை பயன்படுத்தலாம் என்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தங்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பல அரசியல்வாதிகள்தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பது குறித்து இலங்கையின் பரந்துபட்ட மக்கள் மத்தியில் கருத்துடன்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப மாற்றுவதாக உறுதியளித்தது கடந்த வருடம் அரசாங்கம் முன்மொழிந்த மாற்றங்களை நாங்கள் வரவேற்றோம் ஆனால் அது போதுமானதல்ல  என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என முன்னைய அரசாங்கம் தீர்மானித்த போதிலும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 31 இனுள் பயங்கரவாதச் சட்டம் இரத்து – விஜயதாஸ ராஜபக்‌ஷ

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தென்கொரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரிக்கு அமைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (டிச. 23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வது காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது என்பதால் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சட்டமாதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே,ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திர திஸ்ஸ ஆகியோரின் இணை தலைமைத்துவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டமூல உருவாக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க  எதிர்பார்த்துள்ளேன்.

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் வகையில் உண்மையை கண்டறியும் நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை போன்று ஒரு விசேட ஆணைக்குழுவை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர்,ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் உறுதியளித்துள்ளார்கள்.ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாடுகளுக்கு அமைய நாட்டில் நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்படும் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்யுமாறு நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் நாளாந்தம் வலுப்பெற்ற நிலையில் உள்ளது என்றார்.

இலங்கையும் தென்னாபிரிக்காவும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்  S.E.Schalk உடன் ஒரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவது மற்றும் நாட்டின் சட்ட அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும், சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தென்னாபிரிக்கா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோதலைத் தொடர்ந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இலங்கை மேற்கொண்ட நல்லிணக்கத் திட்டத்தைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் சட்ட அமைப்பை வலுப்படுத்தும்  சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என நீதி அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றுக்கு – சுசில் பிரேமஜயந்த

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு பதிலளித்தார்

சபாநாயகர் தலைமையில் சனிக்கிழமை (03) நாடாளுமன்ற அமர்வு கூடிய போது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்களின் அபிலாசைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிடுவதை ஏற்க முடியாது.போராட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட்டுள்ளன.நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக நாடாளுமன்ற மட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் தேசிய சபை, துறைசார் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன்,புதிதாக மூன்று விசேட தெரிவுக் குழுக்களை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்புக்காக நடைமுறையில் இருந்த சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.சமூக கட்டமைப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் விசேட தேவையுடையவர்களுக்கான சட்டம்,ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்கள் காலத்தின் தேவைக்கமைய திருத்தம் செய்யப்படவுள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இயற்றுவதற்கான சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.