போதைப்பொருளை தடுப்புக்கு பூரண அதிகாரம் கொண்ட செயலகம் : ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் அது தொடர்பான அதிகாரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும், விற்பனையாளர்களை சிக்க வைப்பதற்கும் தனியான பாதுகாப்புப் பிரிவொன்றை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள பிக்குகள் – கவலை தெரிவித்த பந்துல

பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது.

நாட்டுக்குள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மஹரக பகுதியில் சனிக்கிழமை (டிச 24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை சடுதியாக தீவிரமடைந்துள்ளது.இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் முழுமையாக கேள்விக்குள்ளாகும்.

ஒரு நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் போது அந்த நாட்டில் சட்டம் மற்றும் அடிப்படை ஒழுக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் தலைதூக்கும்.இலங்கையிலும் தற்போது அவ்வாறான தன்மை காணப்படுகிறது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது.பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உணர்வுபூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திட்டமிட்ட வகையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை  வியாபித்துள்ளது.போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை இல்லாதொழிக்க 09 மாகாணங்களிலும் விசேட போதைப்பொருள் செயலணியை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார்.

போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கண்டறிய புதிய உபகரணம் இறக்குமதி

போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது – எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

தகவல் தொழிநுட்பம்,தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக,பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும்,போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை இன்று (20) கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து,பெற்றோருக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில்,பாடசாலை பைகளை பரிசோதிப்பதை விடுத்து,அவர்களுக்கு சரியான போஷாக்கை அளிக்கும் திட்டத்தை தயாரிப்பதே அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பாடசாலை காலத்தில் போஷாக்கான உணவுவேளையொன்று வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ​​ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டபோது,அந்நகரங்களில் பெரும் அழிவுகள் நிகழ்ந்த போதிலும்,நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஜப்பான் மீண்டும் தலை தூக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாறியதாகவும்,பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னோக்கிய கல்வித் திட்டங்களை உருவாக்கி மேம்பட்ட கல்வி பயணத்தை செயல்படுத்தி வருவதாகவும்,கல்வியை வலுப்படுத்தியதன் மூலம் வியட்நாம் போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காலங்காலமாக,நம் நாட்டில் ஒரு மனப்பாட கல்வி முறையே உள்ளதாகவும்,நம் நாட்டிற்கு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் கல்வி முறையொன்றே தேவைப்படுவதாகவும், தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போஷாக்கில்லாத ஒரு சமூகமாக இந்த பாடசாலை மாணவர்கள் உருவெடுத்துள்ளதாகவும்,அவர்களுடைய சாப்பாட்டு பெட்டிகளை பரிசோதனை செய்வதை விட்டு அவர்களுக்கு எவ்வாறான திட்டங்களை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்த நாட்டினுடைய அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு,இலவச சீறுடை திட்டங்களை வழங்கிய ஒரு ஜனாதிபதி எனவும், இந்நாட்டில் இருக்கக்கூடிய நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களுக்கும் அவ்வாறான திட்டங்களை தான் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களாக சகோதரத்துவத்தோடு, நட்புறவோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மனோபாவத்துடன் நாமனைவரும் செயற்பட வேண்டும் எனவும், இலங்கை பெஸ்ட் என்பது எங்களுடைய ஒரு வேலைத்திட்டமாக இருப்பதாகவும், இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாட்டை உலகில் முதலிடத்திற்கு ஸ்தானப்படுத்துவதே தங்களுடைய கருத்திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் என  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் விநியோகம் மற்றும் பாவனை அதிகரிப்பை கட்டுப்படுத்த உறுதியான இறுதியான வழி கிராமங்கள் தோறும் சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதே ஆகும்.

வடக்கு மாகாணத்தில் இளையோரை குறி வைத்து ஐஸ் போதை மற்றும் ஹெரோயின் போன்ற சட்டவிரோத போதைப் பொருட்கள் ஆரம்பத்தில் இலவசமாகவும் பின்னர் பணத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றது இதனால் பல இளையோர் பாதிக்கப்பட்டு சீரழிந்து வருகின்றனர் என்பதை வெளிவரும் செய்திகளும் வெளிவராத புள்ளி விபரங்களும் ஆதாரப்படுத்துகின்றன.

இவ்வாறான போதைப் பொருட் பாவனையை தடுப்பதற்கு முழுமையான செயல் நடவடிக்கைகளை அதிகாரத் தரப்பான காவல் துறை கட்டுப்படுத்த தவறுகின்றமையே சட்டவிரோத போதைப் பாவனை தீவிரம் பெறுவதற்கு காரணமாகின்றது.

சில கிராமங்கள் தாங்களாக உணர்ந்து சில விழிப்புக் குழுக்களை தங்கள் கிராமத்திற்கு உருவாக்கி கட்டுப்படுத்தி வருகின்றனர் ஆனால் பெரும்பான்மையான கிராமங்களுக்கு இவ்வாறான குழுக்கள் அமைக்கப்படவில்லை.

எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள பிரதேச செயலாளர்களுக்கு தீர்மானம் ஒன்றை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு கிராமங்களுக்கும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடக்கி சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதன் மூலமே சட்டவிரோத போதைப் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

மாவட்டச் செயலாளர்கள் விரைவாக இவ்வாறான விழிப்புக் குழுக்களை அமைப்பதை நடைமுறை செய்ய வேண்டும். இதுவே யுத்தத்தால் அழிந்து போன எம் தேசத்தை போதையால் மீண்டும் அழிந்து போக விடாமல் பாதுகாக்கலாம்.