விவசாயத்துறை நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படாவிடில் நாடு மோசமான விளைவுகளை எதிர் நோக்கும் – மைத்திரி

விவசாயத்துறையில் எடுத்த தீர்மானங்களின் விளைவை முழு ,நாட்டு மக்களும் தற்போது நன்கு எதிர்கொண்டுள்ளார்கள். விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் விவசாயம், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விவசாய நடவடிக்கைகளுக்கான பயிர் விதை விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு காணப்படுகிறது. காலநிலை மற்றும் மண்வளத்திற்கு உகந்த வகையிர் பயிர் விதைகள் சந்தையில் விநியோகிக்கப்படுவதில்லை.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்கள் தற்போது முழுமையாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்பட்டுள்ளது.

நாட்டின் உணவு பாதுகாப்பு எந்நிலையில் காணப்படுகிறது என்பதை பற்றி புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது.

உணவு பாதுகாப்பிற்கு உரிய சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. உணவு பாதுகாப்புக்கு விரைவான தீர்வு எடுக்காவிட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விலங்குகளினால் பயிர்செய்iகைக்கு ஏற்படும் விளைகள் தொடர்பில் தொழினுட்ப ரீதியில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

நா நாட்டில் உரம் தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.சந்தையில் உரம் ஒவ்வொரு விலையில் காணப்படுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நெற்பயிர்ச்செய்கை உற்பத்திக்கான செலவுக்கும், நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணயிக்கும் விலைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு காணப்படுகிறது. ஆகவே விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயத்துறையில் எடுத்த தீர்மானங்களின் விளைவை முழு நாட்டு மக்களும் தற்போது நன்கு எதிர்கொண்டுள்ளார்கள்.

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் தரம் குறித்து பாரிய பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. சேதன பசளை உற்பத்திகள் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அரிசிக்காக அயல் நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைமைக்கு யார் காரணம்? – ஜனா எம்.பி

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. அதே போல ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றைச் செய்தால் அதனை எடுத்துரைக்காதவர்களும் அல்ல. இதுவே எமது நிலைப்பாடு. அதே போலவே விவசாய அமைச்சை விமர்சித்தது மாத்திரமல்ல, இன்றைய சூழலில் அவரைத் தட்டிக் கொடுத்து நிலைமையினை சீராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் எங்களுக்குள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாம் கமத்தொழில் அமைச்சு, நீர்பாசன அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். ஒன்றோடொன்று தொடர்புடைய மிக முக்கியமான அமைச்சுகள் இவைகளாகும்.

எனது உரையினை ஜனாதிபதி அவர்களின் வரவு செலவுத்திட்ட உரையின் வாசகங்கள் சிலவற்றுடன் இணைத்து ஆரம்பிப்பது பொருத்தம் என நினைக்கிறேன். சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது நாடு குறித்து எம்மால் திருப்திப்படுத்த முடியுமா? நாம் எங்கே தவறுவிட்டோம். தவறிய இடம் எது என்று அவர், வினவினார்.

அது மாத்திரமல்ல அப்போது ஆசியாவில் யப்பானுக்கு அடுத்த படியாக தனிநபர் வருமானத்தில் இரண்டாம் இடத்தில் நமது நாடு இருந்ததாகவும் கூறினார்.

அதே போன்று ‘இரந்து பெற்று விருந்து உண்ணும்’ போக்கே எமது போக்காக இதுவரை இருந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார். இது உண்மையை உணர்த்துகின்ற உரையாகவே பார்க்கிறேன். ஆனால் இவற்றிற்கு யார் பொறுப்பு. மக்களா, இல்லை சுதந்திரம் பெற்ற காலம் முதல் மாறிமாறி வந்த அரசாங்கங்களா என்பதை எமது ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் கூற மறந்துவிட்டாரா, இல்லை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டாரா என்பது எனக்குத் தெரியாது.

எமது நாடு நான்கு புறமும் கடலால் சூழப்பட்டது. அதனால், மீன்பிடித்துறையும் கமத்தொழிலும் எமது மக்களது பிரதான வருமான மார்க்கமாகும். ஆனால், நாம் எமது விவசாயம், மீன்பிடி ஆகியவற்றில் எமது முழு இயலளவையும் பயன்படுத்தியிருக்கின்றோமா? அல்லது பயன்படுத்துகிறோமா என்றால், கிடைக்கும் பதில் இல்லை என்பதே ஆகும்.
சின்னஞ்சிறிய தீவுக் கூட்டங்களைக் கொண்ட மாலை தீவு தனது கடல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்துகின்றது. நாம் நாற்புறமும் கடல் சூழ்ந்திருந்தும் பற்றாக்குறையான அன்னியச் செலாவணியைச் செலவழித்து வேறு நாடுகளிலிருந்து ரின் மீன், மாசி, கருவாடு என்பவற்றை இறக்குமதி செய்கிறோம். இதே போலவே விவசாயத்துறைக்கும் போதுமான நிலவளம், நீர்வளம்;, அதற்கு உகந்த காலநிலை இருந்தும் நாம் அரிசிக்காக அயல்நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றோம். இந்நிலைமைக்கு யார் காரணம்.

பராக்கிரமபாகு மன்னன் எமது நாட்டு நீர்வளம் குறித்து கூறிய கூற்று ஒன்று எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ‘எமது நாட்டின் நதிகளினது நீரில் ஒரு சொட்டு நீர் தானும் கடலுக்குச் செல்வதைத் தடுத்து கமத்தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று சூழுரைத்தார். அதனைச் செயல்படுத்தியும் காட்டினார். குளம் கட்டி வளம் பெருக்கி எமது நாட்டின் விவசாயத் துறையை தன்னிறைவடைந்த நாடாக மாற்றினார்.

அன்று பராக்கிரமபாகு மன்னனால் முடியுமாக இருந்தது இன்று ஏன், எம்மால் முடியவில்லை என்று ஆட்சியாளர்கள் உங்களது மனச்சாட்சியிடம் வினாவியுள்ளீர்களா? பராக்கிரமபாகு மன்னன் நாட்டையும், தன் நாட்டு மக்களையும் உளமார நேசித்தார். அதன் விளைவுதான் அவரது செயலில் இருந்தது. உங்களைப் போன்று போலித் தேசியவாதியாக பராக்கிரமபாகு மன்னன் இருக்கவில்லை. பராக்கிரமபாகு மன்னன் மாத்திரமல்ல நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களும் நாட்டின் நீர்வளத்தை சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்து விவசாயத் துறையில் பூரண வெற்றி கண்டனர். வடக்கு, கிழக்கு வடமத்தி, வட மேற்கு என்று அனைத்த மாகாணங்களிலும் இருக்கும் குளங்கள் யாவும் மன்னர்கள் காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்ட குளங்களே ஆகும். அப்போது ஊழல், இலஞ்சம், கொள்ளை என்பன இருக்கவில்லை. அதனால் செயற்றிட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால், அவர்களால் முறையாகப் பேணப்பட்ட நீர் முகாமைத்துவத்தைக் கூட எம்மால் முறையாகச் செய்ய முடியவில்லை. மழைக்காலத்தில் குளங்களின் வான் கதவுகளைத் திறக்கின்றோம். நீர் வடிந்தோடியதும் வான்கதவுகளைப் பூட்டுகின்றோம். இறுதியில் பாசனத்துக்கு நீரில்லை. மழை வந்தால் வான் கதவைத் திறந்து மழை நின்றவுடன் வான் கதவைப் பூட்டுவதற்கு ஒரு அமைச்சு, ஒரு அரசாங்கம் தேவையா?

எம்மால் முறையாக நீர் முகாமைத்துவம் செய்ய முடிந்திருக்குமானால் தென்னாசியாவின் தானியக் களஞ்சியமாக நமது நாடு மிளிர்ந்திருக்கும்.

ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால், குறிப்பாக இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையானது நலிவுற்று, நோயாளி நிலையில் இருந்த விவசாயத்துறையினை சமாதி கட்டிய துறையாக மாற்றிவிட்டது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சுமையை புழுவுயு புழு ர்ழுஆநு எனும் அறகலயவிற்கு ஆதார சுருதியாகியது. இதனால் கோட்டா ஜனாதிபதி பதவியை இழந்தது மாத்திரமல்ல, பிரதமர் தனது பதவியை இழக்க வேண்டியும், நிதி அமைச்சர் நாடு கடக்கவும் காரணமாகியது.

எமது விவசாயத்துறையை, மீன்பிடித்துறையை, நீர்ப்பாசனத் துறையை இன்றைய சரிவிலிருந்து மீட்டு கடந்த மன்னராட்சிக் காலங்கள் போல தன்னிறைவு அடையக்கூடிய வாய்ப்பு இன்னமும் குறைந்துவிடவில்லை. ஆனால், அதற்கு உங்களுக்கு உண்மையான அர்ப்பணிப்பும் உண்மையான தேசாபிமானமும் வேண்டும். கமிசன், தரகுப்பணம், இலஞ்சம் என்பவற்றையே இலக்கு வைத்துள்ள உங்களால், மக்களை உசுப்பேற்றுவதற்கு மாத்திரம் போலித் தேசியவாதம் பேசும் உங்களால் இதனை ஏற்படுத்த முடியாது என்பதை இந்த உயரியசபையில் மிகுந்த கவலையுடன், பதிவு செய்கின்றேன்.

நாட்டில் இவ்வளவு அக்கப்போர் நடைபெறும் இன்றைய சூழ் நிலையிலும் கூட பல துறைகளில் கமிசன்களும், தரகுப் பணங்களும் இடம்பெறுவதாக இந்த உயரிய சபையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதனை வெறுமனே புறந்தள்ளி ஒதுக்கிவிடாதீர்கள் இன்னமும் இவை இப்படிய நடைபெற்றால் எப்படி நாம் இத்துறைகளில் தன்னிறைவடைய முடியும்.

எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் கமத்தொழில் துறையில் பாவனையிலுள்ளது. இதில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் இரு போகப் பயிர்ச்செய்கைக்கு உரிய நிலங்களாகும். கடந்த கால இரசாயன உரக் கொள்கையினால் எமது விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். தமது தங்க ஆபரணங்களை தனியாரிடமோ, வங்கிகளிடமோ, அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ அடகு வைத்து விவசாயத்துறையில் முதலிட்டு அறுவடையின் போது அவற்றை மீட்டெடுத்து மீணடும் முதலீட்டுக்காக அவற்றைப் பயன்படுத்துவதே வழக்கமாகும்.

ஆனால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தாம் பெற்ற கடனையோ, தாம் அடகு வைத்த தம்முடைய தங்க நகைகளையோ மீளப் பெற முடியாது உள்ளனர். நமது நாட்டின் நிலைதான் நமது நாட்டு மக்களுக்கும். நமது நாடு தாம் பெற்ற கடனை எவ்வாறு மீளச் செலுத்த முடியாதுள்ளதோ அவ்வாறே தாம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாது, தாம் அடகு வைத்த நகைகளை மீளப் பெறமுடியாது. அனைத்தையும் இழந்து பொருளாதார நிலையில் அநாதையாகியுள்ளனர் நம் மக்கள்.

எனினும் தற்போது உரக் கொள்கைளில் தளர்வு ஏற்பட்டு இரசாயன உர விநியோகம் நடைபெறுகின்றது. ஒரு அந்தர் இரசாயன உரத்தினைக் கொள்வனவு செய்வதற்கு விவசாயி பத்தாயிரம் ரூபாவுக்கும் சற்றுக் கூடுதலாக செலவு செய்யவேண்டியுள்ளது. இந்த உர விநியோகத்தில் ஆங்காங்கே ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டாலும் இந்த உர விநியோகக் கொள்கையை செயற்படுத்திய அமைச்சரையும், அரசையும் நான் பாராட்டாவிட்டாலும் தட்டிக் கொடுக்கின்றேன். இன்னமும் திறம்படச் செயற்படுங்கள் உங்களைப் பாராட்டுகிறேன்.

இதிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. அதே போல ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றைச் செய்தால் அதனை எடுத்துரைக்காதவர்களும் அல்ல. இதுவே எமது நிலைப்பாடு. அதே போலவே விவசாய அமைச்சை விமர்சித்தது மாத்திரமல்ல, இன்றைய சூழலில் அவரைத் தட்டிக் கொடுத்து நிலைமையினை சீராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் எங்களுக்குள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்கள், சிறிய குளங்கள் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். நான் முன்பு கூறியது போல நீர்ப்பாசன அமைச்சில் முறையான நீர் முகாமைத்துவக் கொள்கைக்கான திட்டமிடல் செயற்பாடுகள் அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும். எமது நாட்டில், பொங்கிப் பிரவாகித்து ஆர்ப்பரித்துவரும் நதிகளின் நீர் அனைத்தும் பாசனத் துறைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

வெறுமனே நதிகள் கடலில் கலப்பதுதான் நியதி என்ற பத்தாம் பசிலித்தனமான, கதைகளை உதறி எறிந்து நீர்ப்பாசன முகாமைத்துவத்தை சிறப்பான முறையில் கடைப்பிடிப்பீர்களாக இருந்தால் நிச்சயம் நாம் தென்னாசியாவின் நெற் களஞ்சியமாகத் திகழ்வோம். காலம் இன்னும் கடந்து விடவில்லை. பாசனக் குளங்கள் முறையாகப் பேணப்பட வேண்டும். தூர்வாரப்படவேண்டும். என குறிப்பிட்டார்.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் தொழில்நுட்ப உதவி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

அது தொடர்பில், இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையும் (NDDB) இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து இந்நாட்டில் திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் உள்ளுர் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், நீண்டகால திட்டத்தினூடாக இலங்கையை பாலில் தன்னிறைவடையச் செய்வதே இதன் நோக்கம் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளர் கலாநிதி நிமல் சமரநாயக்க, தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் மற்றும் அமைச்சுக்களின் உயரதிகாரிகளும் இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ராஜேஷ் ஓங்கர்நாத் குப்தா(Rajesh Onkarnath Gupta), பொது முகாமையாளர் சுனில் சிவபிரசாத் சின்ஹா(Sunil Shivprasad Sinha), சிரேஷ்ட முகாமையாளர் ராஜேஷ் குமார் சர்மா (Rajesh Kumar Sharma) உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி கருகல்

யாழ். மாவட்டத்தில் காலபோக நெற் பயிர் செய்கையில் பயிர்களில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார்.

யாழ். மாவட்டதில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணத்தில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நெற்பயிர்கள் பொட்டாசிய குறைவால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, தைகடி, நவாலி, கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் போன்ற பல பிரதேசங்களிலும் நெற் பயிர்களில் பொட்டாசியக் குறைபாடு அவதானிக்கப்பட்டுள்ளது.

இக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக முதிர்ச்சி அடைந்த இலைகள் கடும் மஞ்சள் நிறமாவதோடு பொட்டாசிய பற்றாக்குறை அதிகமாகும் போது இலைகள் நுனியில் இருந்து அடிவரை செம் மஞ்சள் நிறத்திலிருந்து மஞ்சள், கபில நிறமாக மாறும்.

அதாவது இலையின் நுனிப்பகுதியில் தலை கீழ் “வி” (V) வடிவில் எரிவுகள் ஆரம்பிக்கும். இலை நுனியில் இருந்து இறக்கத் தொடங்கும்.

இதன் காரணமாக மட்டம் பெயர்தல் பாதிக்கப்படுவதுடன் தாவர வளர்ச்சி குன்றி பயிர்கள் கட்டையாக காணப்படும் நிலையில் நெல் மணிகள் பதர் ஆகும். இதனால் பாரியளவு உற்பத்தியிழப்பு ஏற்படும்.

விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நெற் செய்கையில் போசணை முகாமைத்துவத்தை அதிகரிக்க முடியும்.

பொட்டாசியம் அடங்கிய இரசாயனப் பசளைகளை சிபாரிசுக்கு அமைய இடல் , பொட்டாசியம் அடங்கிய திரவ பசளையினை சிபாரிசுக்கமைய விசிறல், மேலும் வைக்கோலில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதனால் அடுத்த போகத்தில் வைக்கோலினை இட்டு உழவு செய்தல், நெல் அடிக்கட்டைகளை (ஒட்டுக்கள்) அறுவடையின் பின்னர் உழுதுவிடல் கிளிசிரியா இலைகளை வயலில் தூவிவிடல் வேண்டும் இதன் மூலம் நைதரசன் மற்றும் பொட்டாசியம் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

செயற்கை உரம் இன்மையால் மந்த நிலையில் விவசாயம் : விவசாயிகள் கவலை

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம் மற்றும் களை நாசினிகள் உரிய அளவு வழங்கப்படாமையினால் பயிர்களின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

எங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம், களை நாசினி மற்றும் மண்ணெண்ணெய் என்பன சீராக வழங்காமையினால் எமது விவசாயத்தினை திருப்திகரமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை. செயற்கை உரங்கள் மற்றும் களை நாசினிகளின் விலைகள் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான அளவு மேற்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை.

செயற்கை உரம் உரிய காலப்பகுதியிலும், உரிய அளவுத்திட்டத்திலும் கிடைக்கப்பெறாததால் பயிரின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. தற்போது அடை மழை பொழிகின்ற காலம். திடீரென அடைமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் மந்த நிலை வளர்ச்சியில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் அழிந்துவிடும்.

களை நாசினிகளின் விலை அதிகமாக காணப்படுவதுடன் அதற்கு தட்டுப்பாடும் நிலவுவதால் வயலில் வளர்ந்துள்ள களைகளை அழிக்க முடியவில்லை. களைகள் பயிருக்கு மேலாக வளர்ந்து காணப்படுவதால் பயிரின் வளர்ச்சியில் ஆரோக்கியம் குன்றியுள்ளது. மண்ணெண்ணெய் எமக்கு சீராக விநியோகிக்காததால் தண்ணீர் பாய்ச்சவேண்டிய வயல் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை காணப்படுகிறது.

விவசாயிகள் அனைத்து பக்கத்திலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்று கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு தேவையானவற்றை வழங்காமல் இருந்தால் அவர்கள் எப்படி விவசாயம் செய்வது? விவசாயிகளின் விவசாயத்தை ஊக்குவித்தால் தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்ற அரிசியையோ அல்லதே வேறு உணவுப் பொருட்களையோ இறக்குமதி செய்யாமல் நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டி விவசாயிகளது தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்றனர்.

கிளைபோசேட் தடை நீக்கம்

ஏழு வருடங்களின் பின்னர் கிளைபோசெட் தடையை நீக்குவது தொடர்பான வர்த்தமானி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடன் அரசாங்க அச்சகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விவசாயப் பிரதிநிதிகள், விவசாய நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் இந்தத் தடையை நீக்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

நெற் பயிர்களை அரச அதிகாரிகள் அழிக்க முற்பட்டமையால் கிளிநொச்சியில் அமைதியின்மை

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான ஒதுக்கீட்டு பிரதேசங்களை ஆக்கிரமித்து பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வியாழக்கிழமை (17) குறித்த செய்கைகளை அழிப்பதற்காக பொலிஸாருடன் சென்ற வேளை நீர்ப்பாசன திணைக்களத்தினருக்கும் நெற் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஒதுக்கீட்டு பிரதேசங்களில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் இவ்வாறு பயிர்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலை காணப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான அறிக்கைகள் எதுவும் மாவட்ட உயர்நிலை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அறிய முடிந்துள்ளது.

 

இது ஒருபுறமிருக்க கிளிநொச்சி கிழக்கு நீர்பாசன பொறியிலாளர் பிரிவின் கீழுள்ள கல்மடுக்குளததின் கீழ் அரச அதிகாரிகள் உள்ளடங்கிய சிலர் சட்ட விரோதமாக மேற்கொண்ட பயிர் செய்கைகளுக்கு குளத்து நீர் திறந்து வழங்கியது தெடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையால் 9,300 மெட்ரிக் தொன் யூரியா விநியோகம்

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் சில பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அமெரிக்க-யுஎஸ்எய்ட் (USAID), நிதியுதவியுடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடும் சிறுபோக நெல் விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள கமநல சேவை நிலையங்களில் தகுதியான விவசாயிகளின் விநியோக பட்டியல் வெளியிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விநியோக பட்டியல்கள் 18, நவம்பர் 2022 வரை காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.