கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாவிடின் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களின் கருத்தைச் செவி சாய்க்காது தொடர்ந்தும் 5000 ஏக்கரில் கடலட்டை பண்ணையை மீண்டும் வழங்குவேன் என கூறியுள்ள நிலையில் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம். கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்  என  யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், சிலாபம், கொழும்பு கம்பகா , காலி  மற்றும் அம்பாந்தோட்டை  ஆகிய மாவட்டங்களிலுள்ள   கடற்தொழில் சமாசங்கள் , சங்கங்களின் பிரதிநிதிகளும் சட்ட ஆலோசகர்களும் இணைந்து கலந்துரையாடலொன்றை இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

அதையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களோடு மொத்தமாக 15 கடலோர மாவட்டங்கள் ஒன்றிணைந்து மீனவ பிரச்சினைகள் தொடர்பாகவும்  அவற்றை எவ்வாறு கையாளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நீர்கொழும்பு சட்டத்தரணி நிமாலினி குணரட்ணம் தலைமையிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே வடக்கு சங்கங்களையும் சமாசங்களையும் ஒன்றிணைக்குமாறு நாம் விடுத்த  கோரிக்கையை ஏற்று இன்று சட்டத்தரணி வருகைதந்து எங்களுடன் கலந்துரையாடி எங்களையும் இணைப்பதற்கு இணங்கியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பாதிப்பானது எமது பிரதேசத்திலும் ஏற்பட்டதை கடந்த காலங்களில்  ஊடகங்கள் வெளியிட்டன.  குறித்த பாதிப்பால் கடலாமை, திமிங்கிலம் போன்றன இறந்து கரையொதுங்கிய நிலை காணப்பட்டது என எம் தரப்பு விடயங்களை முன்வைத்தோம்.

வடமாகாணத்தில் பாதிப்பாகவுள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துதல்,  நீதிமன்றத்தை நாடுவது தொடர்பிலும்  இந்தியா இழுவைப் படகுகளை நிறுத்துதல் தொடர்பாகவும் யாழ் மாவட்டத்திலே உள்ள சீன கடலட்டை பண்ணை தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இவற்றை விட கிளிநொச்சி பகுதிகளில் கம்பிப்பாடுகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மீனவர்களின் படகு, வலைகள் சேதமாக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களின் கருத்தைச் செவி சாய்க்காது தொடர்ந்தும் 5000 ஏக்கரில் கடலட்டை பண்ணையை மீண்டும் வழங்குவேன் என கூறியுள்ள நிலையில் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம்.

கடலட்டைப் பண்ணைகள்  கடந்த காலங்களில் கடற்தொழிற் சங்கங்கங்களின் அனுமதி பெற்றே  வழங்கப்பட்டது. ஆயினும் தற்போது நீரியல் வளத் திணைக்களம்,  நெக்ரா, நாரா நிறுவனங்களின் அனுமதியே தேவை எனக் கூறுகின்றது.

இதைவிட பருத்தித்தீவில் சங்கத்தின் அனுமதியின்றி பண்ணை அமைக்கப்பட்ட நிலையில் பல பிரச்சினைகள் எழுந்தும் இதுவரை பண்ணைகள் அகற்றப்படாத நிலையுள்ளது. கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலததில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்.

சட்டங்கள் பல இருந்தாலும் அவை அமுல்படுத்தப்படாமல் உள்ளது அவற்றை அமுல்படுத்த அழுத்தங்களை பிரயோகி்ப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் இல்லை எதுவாயினும் மக்களின் அனுமதியைப் பெற்றே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

பத்து வருடங்களில் யாழ். குடா கடல் சேற்றுக் கடலாக மாறும் – சமூக செயற்பாட்டாளர் எஸ். செல்வின்

யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என சமூக செயற்பாட்டாளர் எஸ். செல்வின் தெரிவித்தார்.

உலக வாங்கியால் வெளியிடப்பட்ட கடல் அட்ட பண்ணை தொடர்பில் கடத்தொழில் சங்கங்களுக்கு விழிப்புணர் கூட்டம் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள ஆழம் குறைந்த கடற்கரைகளில் எவ்வித பரந்துபட்ட  ஆய்வுகளும் திட்ட மிடல்களும் இன்றி கடல் அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடலட்டை பண்ணைகளால் கடல்வாழ் உணவுச் சங்கிலியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில்

இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிர்ப் பல்வகைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வடக்கு மக்கள் மட்டுமின்றி இலங்கையில் வாழும் மக்கள் கடல் அட்டையை உணவு தேவைக்காக பயன்படுத்தாத நிலையில் டொலரைப் பெறப் போகிறோம் எனக்கூறி வெளிநாடுகளுக்கு எமது  பாரம்பரிய கடல் வளத்தை விற்க முடியாது.

அதுமட்டுமல்லாது கடல் மேலாண்மைக்காக கட்டமைக்கப்பட்ட கடற்கரையோர மீனவ மக்களின் வாழ்க்கை முறையை அட்டைப் பண்ணை என்ற பெயரில் பல் தேசியக் கம்பெனிகளை வளர்ப்பதற்காக எமது மக்களையோ கடல் வளத்தையோ அழிக்க முடியாது.

எமக்கு பொருத்தமற்ற கடல் அட்டப் பண்ணைக்கான அட்டைக் குஞ்சுகளை யாரோ ஒரு வெளிநாடு சக்தியின் வழங்கிவரும் நிலையில் அறுவடை செய்யும் போது விலையையும் அவர்களை நிர்ணயம் செய்கிறார்கள்.

சில வேளை குஞ்சுகளை வழங்கியவர்கள் அறுவடை காலத்தில் அதனை ஏற்றுமதி செய்யாவிட்டால் பாதிக்கப்படுவது எமது மீனவர்கள்.

40 நாள் கோழி குஞ்சை வளர்த்து முட்டை பெறமுடியாத எமது அரசாங்கம் சீனாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நிலையில் பிளாஸ்டிக் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக பேசப்பட்டமை   யாவரும் அறிந்ததே.

ஆகவே எமது மக்கள் மரபுகளுக்கு உட்பட்டு அறங்களின்பால் மேற்கொள்ளும் கடற்தொழிலினை வெளிநாட்டு சக்திகளுக்கும் பினாமி நிறுவனங்களின் தேவைக்காக மாற்றம் முயற்சியை கைவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடலட்டை பண்ணைகளுக்காக யாழில் பேரணி

கடற் தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அட்டைப் பண்ணைகள் வேண்டுமென இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டைப் பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது.

தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை காணப்படுகின்றது.

சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடற் தொழில் மேற்கொள்ளாத சிலரும் அட்டப்பண்ணையை விரும்பாத சிலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அட்டை பண்ணைகளை அமைப்பதற்கு சங்கங்களின் விருப்பமும் பெறப்பட்டே உரிய திணைக்களங்கள் ஊடாக அளவீடு செய்யப்பட்டு அனுமதியுடன் பண்ணைகளை அமைத்துள்ளோம்.

அட்டைப் பண்ணைகளை வேண்டாம் என கூறுவோர் ஏன் வேண்டாம் என முதலில் மீனவ சங்கங்களுடன் பேச வரட்டும் அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கட்டும்.

யாழில் அட்டப் பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் துறைசார்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே ஒரு சிலரின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீனவ சமூகம் நன்மை அடைகின்ற அட்டைப் பண்ணைகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர தடுக்கக் கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பதில் கிடைக்காவிடின் தூதரகங்களுக்கும், ஜனாதிபதிக்கும் மகஜர் அளிப்போம்

யாழ். மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் எதற்கு இருக்கிறது என கேள்வியெழுப்பிய யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா, சட்டவிரோத கடலட்டை பண்ணை தொடர்பாக திணைக்களத்துக்கு நாங்கள் கடிதம் எழுதியபோது, அதற்கு எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு, நாங்கள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். யாழ்ப்பாணத்தில் உள்ள 118 கடற்றொழில் சங்கங்களின் கருத்தை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்றார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அ.அன்னராசா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழிலாளர்களுக்கு கடலட்டை பண்ணை தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்த நிலையில், அதை பற்றிய முறைப்பாடுகளும் சம்மேளனத்துக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையிலேயே கடலட்டை பண்ணைகளை மட்டுப்படுத்தி, சிறு தொழிலாளர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீன் உற்பத்தியாகும் பிரதேசங்களில் கடலட்டை பண்ணை அமைக்கக் கூடாது என்றும் கோரினோம்.

அனுமதி பெற்று கடலட்டை பண்ணையை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கடலில் சீட் போட்டு கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைப்பதற்கு எந்த அதிகாரமும் யாருக்கும் இல்லை. இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?

குறிப்பாக, கொழும்புத்துறை பகுதியில் ஹோட்டல் போன்று கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரிக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு பதில் அனுப்பாவிட்டால், ஜனாதிபதி உட்பட சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இது தொடர்பாக மகஜர் கொடுப்போம்.

மக்களுக்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு அந்த திணைக்களம் எதற்கு இருக்கின்றது என தெரியவில்லை.

5000 ஏக்கரில் கடலட்டை அமைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார்.

கரையோர சூழலை பாதுகாக்க வேண்டிய குறித்த திணைக்களம் இவ்விடயத்தில் மௌனமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கடலட்டை பண்ணைத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்க- சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அத்தகைய சிக்கல்கள் தோன்றாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அமைச்சரின் பொறுப்பாகும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வடக்கு மாகாணத்தில் கடலட்டை பண்ணைகள் மிகப் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடல்தொழில் அமைச்சர், தற்பொழுது ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு கடலட்டை பண்ணைகள் இருப்பதாகவும் இந்தப் பண்ணைகளை ஐயாயிரமாக உயர்த்த வேண்டுமென்றும் அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுப்பதாகவும் ஊடகங்களுடாக செய்திகளை வெளியிட்டுள்ளார். கடலட்டைகள் என்பது மிக விலைமதிப்புள்ள ஏற்றுமதிப்பொருள் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. முன்னரும் பாக்குநீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவிலிருந்து கடலட்டைகள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது கடலட்டை பண்ணைகளை உருவாக்கி, அதன் மூலம் பாரிய அந்நியச் செலாவணியைக் கொண்டுவர முடியுமென்றும் குறுகிய காலத்திற்குள் மீனவர்கள் பெரும் பணம்படைத்தவர்களாக மாறலாம் என்றும் அமைச்சரினால் ஆசைவார்த்தைகள் கூறப்படுகின்றது.

கடலட்டை பண்ணைகள் அமைப்பதெற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. இரண்டு கடலட்டைப் பண்ணைகளுக்கு இடையில் ஏறத்தாழ 1000மீ இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் அத்தகைய இடைவெளியில்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது.

இரண்டாவதாக அப்பிரதேசங்களில் உள்ள மீனவர்களுக்கு பண்ணைகளை வழங்குவதை விடுத்து, அப்பிரதேசங்களைச் சாராதவர்களுக்கும் வெளியாட்களுக்கும் அந்தப் பண்ணைகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மூன்றாவதாக குறுகிய காலத்திற்குள் வருமானம் ஈட்ட முடியுமென்று மீனவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் புத்தளம், சிலாபம் போன்ற இடங்களில் இறால் பண்ணையில் ஏற்பட்ட இழப்புகள் கடலட்டைகள் பண்ணைகளுக்கும் ஏற்படலாம் என்ற அச்சமும் ஐயமும் தோன்றியுள்ளது. கடலட்டைப் பண்ணைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, பாரம்பரியமாக எமது மீன்பிடி, அதனூடாக வடக்கு மாகாணம் பெற்றுவந்த கடலுணவுகள், ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் இவையெல்லாம் அழிந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட இடங்களில் அமைசசரின் பிணாமிகளின் பெயரில் கடலட்டை பண்ணைகளுக்கான நிறுவனங்கள் திறக்கப்படுவதாகவும் அதன் பெயரில் பண்ணைகள் உருவாக்கப்படுவதாகவும் இதனால் அந்த பிரதேசத்து மீனவ மக்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. முன்னர் மீனவர்கள் தொழில் செய்த இடங்களில் பண்ணைகளை உருவாக்குவதன் ஊடாக, அந்த மீனவர்களுக்கான பாரம்பரிய தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இதன் காரணமாகவே பல்வேறு மீனவ சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, 5000 பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளைக் கொடுக்கப்போவது யார் என்று பார்த்தால் அது யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மையம்கொண்டுள்ள சீன நிறுவனம் ஒன்றே இந்த கடலட்டை குஞ்சுகளை வினியோகிக்கப்போகும் ஏக வினியோகஸ்தர்களாக இருக்கப்போகின்றனர். இந்த சீன நிறுவனம், கடலட்டை குஞ்சு பொரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உள்ளுர் மீனவர்களுடன் பரிமாறிக்கொள்வதற்குத் தயாரில்லை. அந்த தொழில்நுட்பம் ஏகபோக உரிமையாக சீனர்களின் வசமே இருக்கப்போகின்றது. இதனூடாக வடக்கில் சீனா நிரந்தரமாகக் காலூண்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் சீன நிறுவனம் தீர்மானிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள் கடலட்டைக் குஞ்சுகளை கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். இந்த குஞ்சுகளின் மூலம் கிடைக்கப்பெறும் கடலட்டைகளை நாளை கொள்வனவு செய்யும் நிறுவனமாகவும் இதே சீனநிறுவனம்தான் திகழப்போகிறது. இதனால் குஞ்சுகளை கொள்ளை இலாபத்திற்கு விற்று, குறைந்த விலையில் கடலட்டைகளைக் கொள்வனவு செய்து சீனா இரட்டிப்பு இலாபத்தினை அடையப்போகிறது. மேலும், இந்தியாவுடன் மிக நீண்ட எல்லைத் தகராறுகளைக் கொண்டுள்ள சீனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலூண்றுவதினூடாக இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது என்பதை எமது அமைச்சரும் மீனவ சகோதரர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது பாரம்பரிய மீன்பிடியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வடக்கு மாகாண மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இங்கிருந்து கிடைக்கக்கூடிய கடலுணவுகள் கிடைக்காமல் போவதற்கான வழிமுறையாக இந்தப் பண்ணைத்திட்டங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோன்று கடலட்டை குஞ்சுகளுக்கான ஏகபோக வினியோகத்தை சீன நிறுவனத்திடம் கையளித்து, முழு மீனவ சமுதாயமும் அவர்களில் தங்கியிருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதும் மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும் என்பதையும் அமைச்சருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலட்டைப் பண்ணை அமைக்கும் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பிலும் ஏராளமான கரிசனைகளை உருவாக்கும். ஆகவே இவை அனைத்தையும் கவனத்திலெடுத்து அமைச்சர் செயற்படுவார் என்றும் செயற்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம், அராலி பகுதி கடலில் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் அட்டைப் பண்ணைகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். தற்கால பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

எமது கடலில் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

எங்களது கடல் சிறிய கடல். இந்தக் கடலில் பருவகாலத்திற்கு தான் நாங்கள் சிறப்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மற்றைய வேளைகளில் சாதாரண அளவிலேயே எமது மீன்பிடி நடவடிக்கைகள் அமைகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் அட்டைப் பண்ணைகள் இங்கே அமைத்தால் கடலில் உள்ள வளங்கள் அழியும் சந்தர்ப்பம் உள்ளது.

இறால், நண்டு, மீன் இனங்கள் போன்றன கடற்கரையோரங்களில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிலையில் கரையோரங்களில் அட்டைப் பண்ணைகளை நிறுவுவதால் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்கள் நீரோட்டத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தயவுசெய்து எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள். மீனவர்களை வாழ விடுங்கள்.

தம்பாட்டி, பூநகரி போன்ற கடல்கள் உட்பட பல கடற்பகுதிகளில் அட்டைப் பண்ணைகள் அமைத்ததனால் அப்பகுதி மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் பல நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களது குரல்களுக்கு செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையை எண்ணி வருந்துகின்றோம். அவர்களுக்கு எங்களது ஆதரவுகளை தெரிவிக்கின்றோம்.

எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது. எனவே உரிய தரப்பினர் மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றனர்.

கடலட்டைப் பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் கைது

கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடிக் கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாக தெரிவித்து குறித்த கடல் அட்டை பண்ணைக்கு எதிராக கடந்த 55நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று பி.ப 2.30 மணியளவில் கிராஞ்சி இலவங்குடா மீனவர்கள் இருவர் ஜெயபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தினாதர், மற்றும் மகேந்திரன் எனப்படும் இருவரே அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக செயற்பட்டதாக அரச அதிகாரிகள் முறைப்பாடு செய்தவிடத்து இவ்வாறு குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த போராட்டத்தை முடக்குவதற்காகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

கடலட்டை பண்ணைகளால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு

போரின் பின்னர் வடக்கு பகுதிகளில் அரச அனுசரணையுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றபோதிலும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

விவசாயிகள், மீனவர்கள் உட்பட சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் பற்றியும், அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என்பதே பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அண்மைக்காலமாக வடக்கில் மீனவர்கள் கடலட்டை பண்ணைகளால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரச கட்டமைப்புகளில் முறைப்பாடு அளித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வடக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் உள்ள கடலட்டை பண்ணைகளால் உள்ளூர் மீனவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக, அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அங்குள்ள கடலட்டை பண்ணைகளின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாகவும், அவர்கள் இந்த கடலட்டை பண்ணைகளின் விருத்திக்காக நிதியுதவி செய்வதாகவும் மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த பண்ணைகளில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தாமல், வெளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்தப் பண்ணைகள் வழங்கப்படுகின்றன.

அது மாத்திரமன்றி, கடலட்டை பண்ணைகள் அமைந்துள்ள கடல் பகுதிகளுக்கு பிரதேச மீனவர்களை கூட அனுமதிப்பதில்லை எனவும் அப்பகுதி மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளால் அப்பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நலிவடைந்துள்ள மீனவர்களுக்கு மென்மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்தீவில் அண்ணளவாக 50 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பவளப்பாறைகள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. அப்பிரதேசத்தை விட்டு அங்கு வாழும் மீனவர்களும் வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இப்பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டால், சிறு மீன்பிடி தொழிலாளர்களாகிய நாம் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இப்பிரதேசத்தின் பூர்வீக தொழிலான கடற்றொழிலை மேற்கொண்டு, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உரிமையை எமக்கு பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.