கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாவிடின் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களின் கருத்தைச் செவி சாய்க்காது தொடர்ந்தும் 5000 ஏக்கரில் கடலட்டை பண்ணையை மீண்டும் வழங்குவேன் என கூறியுள்ள நிலையில் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம். கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்  என  யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், சிலாபம், கொழும்பு கம்பகா , காலி  மற்றும் அம்பாந்தோட்டை  ஆகிய மாவட்டங்களிலுள்ள   கடற்தொழில் சமாசங்கள் , சங்கங்களின் பிரதிநிதிகளும் சட்ட ஆலோசகர்களும் இணைந்து கலந்துரையாடலொன்றை இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

அதையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களோடு மொத்தமாக 15 கடலோர மாவட்டங்கள் ஒன்றிணைந்து மீனவ பிரச்சினைகள் தொடர்பாகவும்  அவற்றை எவ்வாறு கையாளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நீர்கொழும்பு சட்டத்தரணி நிமாலினி குணரட்ணம் தலைமையிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே வடக்கு சங்கங்களையும் சமாசங்களையும் ஒன்றிணைக்குமாறு நாம் விடுத்த  கோரிக்கையை ஏற்று இன்று சட்டத்தரணி வருகைதந்து எங்களுடன் கலந்துரையாடி எங்களையும் இணைப்பதற்கு இணங்கியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பாதிப்பானது எமது பிரதேசத்திலும் ஏற்பட்டதை கடந்த காலங்களில்  ஊடகங்கள் வெளியிட்டன.  குறித்த பாதிப்பால் கடலாமை, திமிங்கிலம் போன்றன இறந்து கரையொதுங்கிய நிலை காணப்பட்டது என எம் தரப்பு விடயங்களை முன்வைத்தோம்.

வடமாகாணத்தில் பாதிப்பாகவுள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துதல்,  நீதிமன்றத்தை நாடுவது தொடர்பிலும்  இந்தியா இழுவைப் படகுகளை நிறுத்துதல் தொடர்பாகவும் யாழ் மாவட்டத்திலே உள்ள சீன கடலட்டை பண்ணை தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இவற்றை விட கிளிநொச்சி பகுதிகளில் கம்பிப்பாடுகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மீனவர்களின் படகு, வலைகள் சேதமாக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களின் கருத்தைச் செவி சாய்க்காது தொடர்ந்தும் 5000 ஏக்கரில் கடலட்டை பண்ணையை மீண்டும் வழங்குவேன் என கூறியுள்ள நிலையில் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம்.

கடலட்டைப் பண்ணைகள்  கடந்த காலங்களில் கடற்தொழிற் சங்கங்கங்களின் அனுமதி பெற்றே  வழங்கப்பட்டது. ஆயினும் தற்போது நீரியல் வளத் திணைக்களம்,  நெக்ரா, நாரா நிறுவனங்களின் அனுமதியே தேவை எனக் கூறுகின்றது.

இதைவிட பருத்தித்தீவில் சங்கத்தின் அனுமதியின்றி பண்ணை அமைக்கப்பட்ட நிலையில் பல பிரச்சினைகள் எழுந்தும் இதுவரை பண்ணைகள் அகற்றப்படாத நிலையுள்ளது. கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலததில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்.

சட்டங்கள் பல இருந்தாலும் அவை அமுல்படுத்தப்படாமல் உள்ளது அவற்றை அமுல்படுத்த அழுத்தங்களை பிரயோகி்ப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் இல்லை எதுவாயினும் மக்களின் அனுமதியைப் பெற்றே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.