பதில் கிடைக்காவிடின் தூதரகங்களுக்கும், ஜனாதிபதிக்கும் மகஜர் அளிப்போம்

யாழ். மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் எதற்கு இருக்கிறது என கேள்வியெழுப்பிய யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா, சட்டவிரோத கடலட்டை பண்ணை தொடர்பாக திணைக்களத்துக்கு நாங்கள் கடிதம் எழுதியபோது, அதற்கு எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு, நாங்கள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். யாழ்ப்பாணத்தில் உள்ள 118 கடற்றொழில் சங்கங்களின் கருத்தை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்றார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அ.அன்னராசா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழிலாளர்களுக்கு கடலட்டை பண்ணை தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்த நிலையில், அதை பற்றிய முறைப்பாடுகளும் சம்மேளனத்துக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையிலேயே கடலட்டை பண்ணைகளை மட்டுப்படுத்தி, சிறு தொழிலாளர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீன் உற்பத்தியாகும் பிரதேசங்களில் கடலட்டை பண்ணை அமைக்கக் கூடாது என்றும் கோரினோம்.

அனுமதி பெற்று கடலட்டை பண்ணையை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கடலில் சீட் போட்டு கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைப்பதற்கு எந்த அதிகாரமும் யாருக்கும் இல்லை. இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?

குறிப்பாக, கொழும்புத்துறை பகுதியில் ஹோட்டல் போன்று கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரிக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு பதில் அனுப்பாவிட்டால், ஜனாதிபதி உட்பட சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இது தொடர்பாக மகஜர் கொடுப்போம்.

மக்களுக்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு அந்த திணைக்களம் எதற்கு இருக்கின்றது என தெரியவில்லை.

5000 ஏக்கரில் கடலட்டை அமைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார்.

கரையோர சூழலை பாதுகாக்க வேண்டிய குறித்த திணைக்களம் இவ்விடயத்தில் மௌனமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.