“மஹிந்தவுடன் இணைய தமிழர்கள் தயாராக இல்லை” – ரெலோ செயலாளார் நாயகம் ஜனா எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பட்டிருப்பில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.

ஆயுதப்போராட்டம் 2009 இல் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதியாவார். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஓர் உத்தரவாத்தத்தைக் கொடுத்து எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார்.

2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதி நிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களுடன் மீண்டும் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் என அ கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அவருடன் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அதள பாதாளத்திற்குச் சென்ற இலங்கையை மீட்பதாக அவர் கூறிக்கொண்டிருந்தாலும் பொதுஜனப் பெரமுனவை விட்டு அவர் இன்னும் வெளியேறவில்லை. ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. இந்நிலையில் பொதுஜனப் பெரமுனவில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் பக்கமும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவின் பக்கமும் சென்றிருக்கின்றார்கள்.

யாராக இருந்தாலும். இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

இனவாதத்தின் காரணமாகவே மயிலத்தமடு விவகாரத்திலும் அரசு பாராமுகம் – தவிசாளர் நிரோஸ்

மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் தமிழ் பண்னையாளர்களுக்கு எதிரான பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பை அரச இயந்திரம் தடுக்கவில்லை. மாறாக அதற்கு ஒத்துழைப்பாகவே இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்துவதற்கு சகல இடங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர்வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களப் போரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராக நாம் போராடுகின்றோம். வரலாற்று ரீதியில் எமது மக்களின் நிலங்கள் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு உட்பட்டே வருகின்றன. அதற்கு அரச இயந்திரமும் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றது. இலங்கையை இனவாதமற்றதாக அரசாங்கம் வெளியுலகிற்குக் காட்ட எத்தனிக்கும் அதேவேளை ஆரவாரமற்ற வன்முறைகளின் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீகத்தினையும் அவர்களது பொருளாதாரத்தையும் அழித்து வருகின்றது.

மயிலத்தமடு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கால்நடைகள் வன்முறையான மிகக் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன. பண்னையாளர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகார பலத்துடன் பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது.

 கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்பு அல்ல இப்பிரச்சினை. அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத நிகழ்ச்சி நிரலுடனான ஆக்கிரமிப்பு. நாம் வடக்குக் கிழக்கு எமது தாயகம் என்ற வகையில் இன்று யாழில் இவ் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளோம். தொடர்ந்தும் மயிலத்தமடுவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக சகல பிரதேசங்களிலும் வெளியுலகின் கவனத்தினை ஈர்ப்பதற்கான பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) திருகோணமலை மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

தைப்பொங்கல் தினமான இன்றைய தினம்(15) திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகம் சுங்க வீதியிலுள்ள தனது சொந்தக்கட்டிடத்தில் சம்பிரதாய பூர்வமாக கட்சி செயலாளரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கட்சியின் உப தலைவர்களான முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரசன்னா, மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோரால் கட்சி கொடியேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வருகை தந்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் உபதலைவர்களான நி.பிரசன்னா, மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும். ஏனைய மாவட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளைவிட ஒருபடி மேலாக இம்மாவட்ட கட்சியின் செயற்பாடுகள் இருப்பதாகவும். தொடர்ந்து இவ்வாறே ஒற்றுமையாக செயற்படுவீர்களானால் இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல பிரதேச சபைகளையும் பெற்ற நாங்கள் வருகின்ற தேர்தல்களில் எமது மக்கள் பிரநிதிகளை திருகோணமலையிலும் பெறுவதற்கான காலம் கனிந்துள்ளதாகவும். பாராட்டி பேசினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் அ.விஜயகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவுசெய்தார்.

தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும் – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும். அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க தைத்திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற வாக்கிற்கு ஏற்ப இயற்கைக்கு நன்றி செத்தும் நாளாகவும் இத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டமைந்த இயற்கை முறை வாழ்வியலே உலகின் வாழ்வாதாரமாகும். இயற்கையின் ஆதாரமே சூரியனாகும். விவசாயத்திற்குத் தேவையான அனைத்து விடயங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதாகவும், உணவை வழங்கும் உழவர்களுக்கு நன்றி செலுத்துவதாகவும், அவர்களுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் என நன்றி செலுத்தும் ஒன்றாக தைத்திருநாள் அமைந்துவருகிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் பயனாக ஒவ்வொருவரின் வாழ்வும் சிறப்புப் பெறும் பாரம்பரியம் மிக்கது தமிழர்களது பாரம்பரியம்.

பால் பொங்கி வழிவதைப் போல் அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகிப் பிரவாகிக்க வேண்டும் என்பது எமது விருப்பம். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் என பல்வகை இனங்களைக் கொண்ட இந்து , பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை கைக்கொள்ளும் மக்களையுடைய நம்நாட்டில் அமைதியுமு; மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ இந்தத் தைத் திருநாள்ள வழிசெய்ய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமிருந்தாலும் அதற்கான விட்டுக்கொடுப்பு பரஸ்பர புரிந்துணர்வின்மை காரணமாக அமைதியும் ஒற்றுமையும் உருவாவதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த தைத்திருநாள் அதற்கான வாய்ப்பை உருவாக்கித்தரவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

புதிய அரசியலமைப்பு உருவாதல், தமிழர்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் எதிர்பார்த்தே வருடங்களைக் கடத்துபவர்களாக ஒவ்வொரு வருடத்தினையும் நாம் கடந்து வருகிறோம். ஏமாற்றங்களையும் நாம் அனுபவிக்கிறோம்.

பொங்கலில் பால் பொங்கி வழிந்து அதன் கறைகள் வெளியேறி தூய்மையடைவது போன்று நாட்டிலுள்ள ஆதிக்கவாதிகளின் மனதிலுமுள்ள கறைகள் நீங்கி துய்மையடைந்து புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு இவ்வருடத்திலேனும் உருவாகவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

உழவுக்கு உதவும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி, தமிழர் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் வகையிலமைந்த தைத்திருநாளின் பெருமையை உணர்த்தும் இந்நாளில் எல்லோருக்கும் மகிழ்ச்சியுடன் சேர்த்து எல்லா வளங்களும் கிடைக்கவேண்டும் என வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சென்னையில் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மறைந்த மாமனிதன் விஜயகாந்த், அவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (MP ) இன்று சென்னையில் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தமிழ் ஈழ மக்கள் சார்பாக கேப்டனுக்கு அஞ்சலிகளை செலுத்தினர்.

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறியடிக்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறியடிக்க அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என நம்புவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடைந்த இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவிகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெருகல் மக்களுக்கு ரெலோ நிவாரண உதவி

இன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெருகல் வட்டவன் கிராம மக்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், திருகோணமலை குலம் , தம்பலகாமம் ரூபன், திரகோணமலை ரதன் , மற்றும் எமது மாவட்ட அமைப்பாளர், விஜயகுமார், உதவி அமைப்பாளர் பிரபாதரன், உறுப்பினர்கள் மணி , கமலேஸ், சற்பரூபன், சஞ்சீவ், ராம்கி, சஜீவன், ஆகியோரின் நிதி உதவியுடனும் ரஞ்சித், ராஜன், பிரேம், டெனி, பூவா மற்றும் எமது வெருகல் பிரதேச உறுப்பினர்களின் பங்களிப்புடன் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இதற்காக எமக்கு ஏற்பாடுகளை செய்து தந்த எமது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அண்ணன், வட்டவன் பாடசாலை அதிபர் கோணேஸ்வரன் மற்றும் கிராம சேவையாளருக்கும், கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் நன்றிகள்

எமக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கிய எமது உறவுகளான கிராம மக்களுக்கும் எமது வெருகல் அங்கத்தவர்களுக்கும் வெருகல் பிரதேச எமது மூத்த உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

 

மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதற்கான நிதி உதவிகள் கிடைக்கப்பெற்றதும் உங்களையும் உதவிகள் வந்து சேரும்.

“என்றும் நாம் உங்களுடன்”

ரெலோ – TELO
திருகோணமலை மாவட்டம்

ஜனாதிபதியின் வவுனியா வருகை சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே – அதனால் பயன் ஏதும் இல்லை – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

ஜனாதிபதியின் வவுனியா வருகையானது சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

ஜனாதிபதி அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.இதன்போது நிலஅபகரிப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நாம் அவருடன் பேசியிருந்தோம். நாம் கூறும் விடயங்கள் உடனடியாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தோம்.

ஆனால் அது நடைபெறவில்லை. நாங்கள் கேட்ட விடயங்களிற்கான சரியான பதிலை அவர் தரவில்லை. சம்பிர்தாயபூர்வமான ஒரு கூட்டமாகவே இது இடம்பெற்றது.

இதேவேளை ஜனாதிபதி வந்துசென்ற பின்னர் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இராணுவமுகாம்ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அது என்ன தேவைக்காக அமைக்கப்பட்டது என்ற விடயம் தெரியவில்லை.

எமது மக்களை அச்சுறுத்துவதற்கான செயற்பாடே அது. ஏற்கனவே பொலிஸ் சோதனைசாவடி அங்கு இருக்கின்றது.இந்நிலையில்இராணுவத்தின் தேவை என்ன என்று புரியவில்லை. இது தொடர்பாக நாம் நாடாளுமன்றில்பேசுவோம்.

ஜனாதிபதிதேர்தல் தொடர்பாக பல ஊகங்கள் பேசப்படுகின்றது. வடகிழக்கில் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாத சூழலில் இந்த தேர்தலை கையாளும் விதம்தொடர்பாக நாம் சிந்திக்கவேண்டும்.

அனைத்து கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக நாம் பரிசீலிக்கவேண்டும்.

எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை நாம் உருவாக்கவேண்டுமானால் இந்த முயற்சியே பலனளிக்கும் என்று நான் நினைக்கின்றேன். அந்த ஒற்றுமை சாத்தியமா என்ற கேள்வி இருக்கிறது.

தமிழ்தேசியகூட்டமைப்பு சிவில் அமைப்புக்களுடனும் தேசியகட்சிகளுடனும் பேசி ஒரு முடிவிற்கு வருவது சாலச்சிறந்ததாக இருக்கும். தென் இலங்கை வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒரு நிபந்தனைக்குட்படுத்தவேண்டும்.

அத்துடன் அரசால் கொண்டுவரப்படவுள்ள புதியபயங்கரவாத தடைச்சட்டம் மோசமானதாகவே உள்ளது. அதன்மூலம் ஜனநாயக போராட்டங்கள் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பமும் உள்ளது. இதற்கு நாம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பைக்காட்டுவோம். இந்தசட்டம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே ஐநாசபையின் நிலைப்பாடாக உள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் அதனை ஏமாற்றிவருகின்றது. என்றார்.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது – சபா.குகதாஸ் கோரிக்கை.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச பொன்னாவெளி பகுதியை மையமாக கொண்டு சுண்ணாம்புக்கல் அகழ்வதற்கும் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அகழ்வுப் பணி நடைபெற்றது. பின்னர் வனவளத் திணைக்களம் தலையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஐந்து மாதங்களை கடந்து போராடுகின்றனர்.

சுண்ணக்கல் அகழ்வு தொடர்பாக தடுப்பதற்கு அரசியல்வாதிகள் மக்களுடன் நின்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது மட்டும் தான் நடைபெறுகிறது.

ஆனால் இதனை தடுப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மற்றும் புவியியல் சார்பான விளக்கங்கள் உரிய நிபுணர்கள் அல்லது விரிவுரையாளர்கள் போன்ற தரப்பால் இதுவரை அரசாங்கத்தை நோக்கியோ அல்லது பொதுவாகவோ முன் வைக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட புவியியல் சார்பு கல்விமான்கள் மௌனம் காப்பது நல்லதல்ல. புவியியல் ரீதியாக யாழ்ப்பாண பாறை அமைப்பு மயோசின் கால சுண்ணக்கல் வகைக்குரியதாகும்.

அத்துடன் இளமடிப்பு பாறை வகைக்கு உரியதாகவும் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் பாரிய அகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

இதனை மையமாக கொண்டு புவியியல் பேராசிரியர்கள் இவை தொடர்பான கருத்துக்களை வெளியிட வேண்டும் காப்பிரேட் கம்பனிகளினால் உலகில் பல இடங்கள் பாலை வனங்களாகவும் மக்கள் வாழ முடியாத பிரதேசங்களாகவும் மாறி வருவதை போன்று எதிர் காலத்திலும் பொன்னாவெளி பிரதேசம் மாறிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரி பதிவு செய்யாதோரிடம் தண்டப்பணம் அறவிடுவது சட்டவிரோதம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தமது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் தண்ட பணம் அறவிடப்படும் என்பது சட்டவிரோதம்.

ஏனெனில் இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்தைப் பெறுபவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களாக கருத முடியாது.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் வரி செலுத்த முடியாது அவர்களின் வருமானம் அதிகரிக்கும் போது வரி செலுத்த முடியும் பதிவு செய்யவில்லை என தண்டம் அறவிட முடியாது.

அது மட்டுமல்லாது 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்யா விட்டால் 50ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படும் என அறிவித்த அரசாங்கம் இவ்வளவு காலமும் வரி வருமானம் செலுத்தாதவர்களுக்கு என்ன தண்டம் என அறிவிக்கவில்லை.

ஆகவே இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்குவது நல்ல விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் என கூறுவது சட்ட விரோதம் என அவர் மேலும் தெரிவித்தார்.