இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு சட்ட மூலம் தயாரிக்கப்படும் – ரணில்

இந்து சமுத்திரத்தில் கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு திட்டத்திற்காக ஆசியாவில் முதலாவது சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மிடம் பாரிய கடற்படையும் , விமானப்படையும் இல்லாமலிருக்கலாம். எனினும் எம்மிடம் தற்போதும் சிறியளவிலான கடற்படை கப்பல்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் சில நவீனமானவையாகும். இந்து சமுத்திர பிராந்தியத்திற்குள் எமக்குள் பலம் உள்ளது என்பதைக் காண்பிப்பதற்கு இவை போதுமானவையாகும். இதனை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் எந்தவொரு தரப்பினரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக எவருடைய இராணுவ முன்னணிகளிலும் நாம் தொடர்புபட வேண்டிய அவசியமில்லை. எவ்வாறிருப்பினும் நாம் ஏனைய தரப்பினருடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

இந்து சமுத்திரத்தின் கடற்படை சுதந்திரத்திற்காக நாம் செயற்பட வேண்டும். இதன் போது ஏனைய நாடுகளை விட அதிகமான செயற்பாடுகளை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இலங்கை விசேடமான நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது.

ஆசியாவில் முதன் முறையாக கடலுக்கடியிலான இணைய கேபள் பாதுகாப்பு திட்டத்திற்காக சட்ட மூலமொன்றை தயாரிப்பதே அந்நடவடிக்கையாகும். 2022 ஆம் ஆண்டைப் பற்றி மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. 2050 ஆம் ஆண்டாகும் போது எவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எனவே தற்போது நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை மீட்டுப்பார்க்க வேண்டும். நாம் பலவீனமான அரசாக முடியாது என்பதை இலங்கை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று பலவீனமான படைகளாகவும், பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் இருக்க முடியாது. அதன் காரணமாகவே 2050 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு தற்போது பல்வேறு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எம்மிடம் பொருளாதார பலம் இல்லாவிட்டால் , அரசியல் பலத்தைப் போன்றே பாதுகாப்பு படை பலத்தையும் ஸ்திரப்படுத்த முடியாது என்றார்.