ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை சிங்களவர்களிடம் தாரை வார்க்கப்பட்ட தினம் – சபா குகதாஸ்

பெப்ரவரி 4 திகதி ஈழத் தமிழர்களை பொறுத்த வரை தங்களது சுயநிர்ணய உரிமையை பிரித்தானியர்கள் பறித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்த தினமாகவே பார்க்கின்றனர். அத்துடன் தங்களின் சுதந்திரம் பறிபோன கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானிய காலணிதித்துவம்  இலங்கைக்கு வரும் போது இரண்டு தேசங்களில் சிங்களவரும் தமிழர்களும் தனித்தனியாக தங்களது சுயநிர்ணய உரிமையுடன் தன்னாட்சியை நடாத்தி கௌரவமாக வாழ்ந்தனர். ஆனால் 1815 ஆண்டு கண்டி ராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் பல ராச்சியங்களாக இருந்த நாட்டை ஒற்றையாட்சி அரசியலமைப்பான கோல்புறுக் யாப்பை 1833 இல் நடைமுறைக்கு கொண்டு வந்து ஒற்றையாட்சி நாடாக பிரகடனப்படுத்தினர்.

கோல்புறுக் யாப்பில்  இருந்து சோல்பரி  அரசியலமைப்பு வரை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்திய பிரித்தானியர், சுதந்திரம் என்ற பெயரில் பல இன மக்கள் வாழும் நாட்டை தங்களுடைய பூகோள நலனுக்காக ஒற்றையாட்சி முறைக்குள் ஒரு இனத்திடம் ஆட்சியை ஒப்படைத்தமை ஏனைய இனங்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதற்கு வழி கோலியது. இதனால் தமது இறைமையை இழந்த இனமாக ஈழத் தமிழர்கள் மாறியதுடன் சுதந்திரத்தை பறி கொடுத்தவர்களாகவும் அவலப்படுகின்றனர் இதனால் தமிழர்களுக்கு பெப்ரவரி 4 சுதந்திர தினம் என்பது கரி நாளாகவே அமைந்துவிட்டது.