கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? : ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கேள்வி

வட மாகாண ஆளுநரால் அவரின் செயலகத்தில் நேற்று (15.11.2022) நடந்த கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயம் தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முப்படைகளையும் தனியாக அழைத்து கூட்டம் நடத்துவது நன்றாக இருக்காது. இராணுவத்தினுடைய பிரச்சினையை மாத்திரமே தீர்ப்பதற்காக இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது போல் தெரிகின்றது. நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கூட்டம் என்றால் அதை நாம் பரிசீலிக்க முடியும்.

ஆனால், இந்தக் கூட்டம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் கூட்டமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஆளுநர் இந்தக் கூட்டத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டியிருந்தால் அது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் முப்படைகளுக்கு காணிகளை வழங்கும் கூட்டமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் இந்த கூட்டம் நடந்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.