ஜனவரியில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம்

ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஊழலுக்கு எதிரான சட்டவரைபை நாம் தற்போது தயார் செய்துள்ளோம்.

ஜனவரி மாதமளவில் நாம் இதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக, புதிதாக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவொன்றை இதன் ஊடாக ஸ்தாபிக்கவுள்ளோம்.

அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற் சென்று செயற்படும் அதிகாரத்தை குறித்த சட்டத்தின் ஊடாக இந்த ஆணைக்குழுவுக்கு நாம் வழங்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்காக, 1975 கொண்டுவரப்பட்ட மிகவும் பழைய சட்டத்திருத்தமே தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.

இதனை இல்லாது செய்து, சொத்து விபரங்களை ஒன்-லைன் ஊடாக பதிவு செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு இணங்க சரத்தை உள்ளடக்கவுள்ளோம்.

மேலும் ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாணசபை முதல்வர்கள் மற்றும் உறுப்பினர்களின் சொத்துவிபரங்கள் பழைய சட்டத்திற்கு இணங்க வெளியிடப்படுவதில்லை.

ஆனால், புதிய சட்டத்தில் இவர்களின் சொத்துவிபரங்களையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரையான அனைவருக்கும் இது பொதுவான சட்டமாக அமையும்.

இது இலங்கைக்கு முக்கியமானதொரு புரட்சிமிகு சட்டத்திருத்தமாகும்.

அத்தோடு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் இல்லாது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பிற்கான விசேட சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்கான வரைபை ஜனவரி 31 இற்கு முதல் பெற்றுக் கொள்ள நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.