பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம். பி கோரிக்கை

ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படுவதை தடுக்க ஜனாதிபதி முன்வர வேண்டுமென குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக என்பதால், நிலங்கள் விடுவிக்கப்படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது என அவர் கூறினார்.