தமிழ்க் கட்சிகளுக்கு ஆலோசனை சொல்லும் ஹரின் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? – சபா.குகதாஸ் கேள்வி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் எந்த முடிவை எடுக்கக் கூடாது எனவும் ரணிலை ஆதரிக்க வேண்டும் என மொட்டு அரசாங்கத்தை விமர்சித்து அதே அரசாங்கத்தில் தற்போது அமைச்சராக இருக்கும் ஹரீன் பெர்ணான்டோ நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரே நீங்கள் தமிழ்க் கட்சிகளிடம் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக நீங்களும் உங்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கூறமுடியுமா? நல்லாட்சியில் நடாத்திய நாடகத்தை தமிழ் மக்கள் இன்னும் மறந்து விட வில்லை.

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோருவதற்கு முன்பாக ஜனாதிபதி மூலம் தமிழர்கள் எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தால் உங்கள் மீது நாம் கேள்வி கேட்பதற்கான இடைவெளி ஏற்பட்டியிருக்க வாய்ப்பில்லாது இருந்திருக்கும்.

ஆனால் எதிர்மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளையும் தமிழ் மக்களையும் தொடர்ந்தும் ஏமாற்றியே வருகின்றார் .

ஜனாதிபதியின் அதிகாரத்துக்க உட்பட்ட அரச திணைக்களத்தால் நடைபெறும் தமிழர் நில அபகரிப்பைக் கூட தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கின்றார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் தமிழர்களை சிறையில் அடைப்பதை நிறுத்துமாறு கேட்க பயங்கரவாத சட்டம் நடைமுறையில் உள்ளதா என கேட்கிறார் இதனை அமைச்சரே நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்.

அமைச்சர் ஹரீன் அவர்களே இன்னும் சில மாதங்கள் இருக்கின்றது. முடிந்தால் ஜனாதிபதியும் நீங்களும் இணைந்து தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பாராளுமன்றத்தால் மீளப் பெறாத அதிகாரப் பகிர்வை வழங்குங்கள்.

இது உங்களால் முடியும். காரணம் உங்களின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பலமாக உள்ளது. இதனை ஒர் இரு மாதங்களில் உறுதி செய்யுங்கள் நீங்கள் கேட்கும் ஆதரவை பெரும் பாண்மை தமிழ்க கட்சிகள் பரிசீலிக்கும் எனவும் தெரிவித்தார்.