தேர்தலுக்கு திறைசேரி பணம் தராவிட்டால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் – தேர்தல் ஆணைக்குழு

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் உரிய பதில் அளிக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவ தெரிவித்தார்.

அரசாங்க அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்த கோரிக்கைகளுக்கு அமைய அடிப்படை செலவினங்களுக்காக திறைசேரி செயலாளரிடம் 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தலை இடைநிறுத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு தேவையான முன்பணம் பெறாவிட்டால், அறிவிக்கப்பட்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாது என்றும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் அச்சகத் திணைக்களமும் 100 மில்லியன் ரூபாவை முற்பணமாக வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போது 40 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் 60 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சடிக்கும் பணியை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமென திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.