தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் – விஜயதாஸ ராஜபக்‌ஷ

தேர்தல் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு செலவு செய்யும் நிதி தொகையை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்படவுள்ளது.

தேர்தலில் போட்டியிடுபவர் தேர்தல் காலத்தில் அதிக நிதியை செலவு செய்வதை மட்டுப்படுத்துவதல் மற்றும் தேர்தல் காலத்தில் அவர் வர்த்தகர்களுடன் முன்னெடுக்கும் கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலத்தில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிடுபவர் தேர்தல் நடவடிக்கைகளுக்கு செலவு செய்யும் நிதி தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களை ஆணைக்குழுவிற்கு அழைத்து தேர்தல் தொடர்பான செலவுகளையும்,நிதி கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் ஊடாக அரச சொத்து, அரச நிதி அல்லது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேட்பாளருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தேர்தல் இடம்பெற்று மூன்று வார காலத்திற்குள் உரிய வேட்பாளர் தேர்தலுக்கு தான் செலவு செய்த நிதி, அந்த நிதியை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சத்திய கடதாசி ஊடாக அறிவிக்க வேண்டும்.

இந்த சட்டத்திற்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர்கள் வகிக்கும் அரசியல் உறுப்பாண்மை பதவிகளை இரத்து செய்யவும் புதிய விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.