பண்டா செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது: ஜனா எம்.பி

பண்டா செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் இந்த நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது ஊடகவியலாளர்கள்கூட மரணித்திருக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் கடந்த சனிக்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள மகஜரை நிச்சயமாக நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கையில் பாரப்படுத்துவேன். இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரையில் எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைத்ததாகத் தெரியவில்லை.

மாறி மாறி இந்த நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்களின் காலத்தில் இவ்வாறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக ராஜபக்ஸ சகோதரர்களின் ஆட்சிக்காலத்தில் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் இருக்கின்றார்கள். இந்த நாட்டிலே அடிப்படை மனித உரிமைகளுக்கும், ஜனநாயக அரசியல் உரிமைகளும் இல்லை. இதனைவிட அரசியலமைப்பை மீறிக்கொண்டு செயற்படும் நாடாகவும், அரசாகவும்தான் இந்த நாடு இருந்து வருகின்றது.

வடகிழக்கிலே 2009 மே இல் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டாலும், படையினரிடம் கையளிக்கப்பட்டு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு நாட்டிலேதான் குறிப்பாக நீதியில்லாத நாட்டிலே தமிழ்; மக்களாகிய நாங்கள் நீதியை வேண்டி நிற்கின்றோம்.

இந்த நிலையில்தான் உளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிருணயிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்த்தல்கூட நடைபெறுமா? அல்லது நடைபெறாதா? என்ற நிலமையும் காணப்படுகின்றது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்குரிய தேர்தலை அரசாங்கம் எந்த காரணங்களைக் கூறியாவது குறிப்பாக பொருளாதார நிலமையைக் கூறியாவது தேர்தலை நடத்தாமலிருக்க அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி மாகாணசபை முறைமைக்கு முழு அதிகாரங்களையும் பரவலாக்கி இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13 வது திருத்தச் சட்டத்தை ஓரளவாவது நிறைவேற்றுவதற்காக இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் முன்வந்திருக்கின்றார். ஆனால் புத்த பிக்குகள் 13 திருத்தச் சட்டம் அல்லை தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் கொடுக்கக் கூடாது என போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

1956 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கா, தந்த செல்வநாயகத்துடன் பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஏற்படுத்திய போதும், அப்போது புத்த பிக்குகள் கொழும்பிலிருந்து கண்டிக்கு ஜே.ஆர் அவர்களது தலைமையிலே ஒரு ஊர்வலத்தை நடாத்தியிருந்தார்கள். இதனால் அந்த ஒப்பந்தம் நிலைவேறாமல் சென்றிருந்தது. அந்த ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் இந்த நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது ஊடகவியலாளர்கள்கூட மரணித்திருக்கமாட்டார்கள்.

இந்நிலையில் 13 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு புத்தபிக்குகள் எதிராக இருப்பது இந்த அழிந்த நாட்டை மீண்டும் மீண்டும் அழிப்பதற்கான எடுகோளாகவுள்ளது. எனவே அவ்வப்போது ஊடகவியலார்களின் படுகொலைகளுக்கும், காணாமலாக்கப்பட்டதற்குமாக நீதிவேண்டிப் போராடுகின்றோம், எனவே அற்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.