புத்தூரில் பொருளாதார நலிவுற்ற 32 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்.புத்தூர் ஊறணியில் ஜே/278 கிராம சேவையாளர் பிரிவில் வாழும் 32 பொருளாதார நலிவுற்ற குடும்பங்களுக்குப் பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு புத்தூர் ஊறணி கண்ணகை அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(17.12.2022) நண்பகல்-12 மணியளவில் சனசமூக நிலையத் தலைவர் ந.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) சேர்ந்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை நேரடியாக வழங்கி வைத்தனர்.

இதேவேளை, குடும்பம் ஒன்றிற்குத் தலாஇரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 64 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.