மன்னாரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல முயற்சித்த தொழிற்பயிற்சி உபகரணங்கள் ரெலோ தலைவர் செல்வம் எம்.பியால் தடுத்து நிறுத்தம்

மடு கல்வி வலயத்தில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த தொழிற் பயிற்சி உபகரணங்கள் குறித்த தொழிற்பயிற்சி கூடத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் முயற்சியால் வியாழக்கிழமை வியாழக்கிழமை (12) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற் பயிற்சி அலுவலகத்திலிருந்து அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற் பயிற்சி உபகரணங்கள் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தமாகிய நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

மன்னார் மாவட்டத்திற்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இளையோர்களின் தொழிற்பயிற்சிக்கு என பல லட்சம் பெறுமதியான அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் வருகை குறித்த நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

எனினும் அவற்றை இங்குள்ள இளையோர்களின் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தாமல் அஹம்பாந்தோட்டைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வியாழக்கிழமை (12) வாகனமும் வந்தது.

அப்பகுதி இளைஞர் யுவதிகள் மூலம் சம்பவத்தை கேள்விப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு வடக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் குறித்த பொருட்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த முயற்சி கைவிடப்பட்டது.

மேலும் குறித்த தொழிற்பயிற்சியை மன்னார் மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.