மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும்- இந்திய நிதி அமைச்சர்

மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதென நாம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி  கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய அவர்,

மலையக மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆசிரியர் பயிற்சி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இந்திய நிதியுதவியின் கீழ் 4ஆம் கட்டமாக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இணைப்புப் பாலமாக மலையகத் தமிழர்கள் திகழ்வர்கள் என இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

மிகவும் கஷ்டமான சூழலில் பெரிய பங்களிப்பை மலையக மக்கள் வழங்கியிருக்கிறீர்கள். நாடு நலமாக இருக்க பெரும் தொண்டாற்றியிருக்கிறீர்கள்.

தேயிலை என்றாலே இலங்கை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்  தமிழ் மக்களின் வளர்ச்சியும் நல்வளர்ச்சியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

மலையக மக்களின் கஷ்டத்தையம் கடின உழைப்பையும் புரிந்து கொண்ட  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் 10000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறது.

உங்களுக்குக் கல்வி,சுகாதார,மருத்ததுவ உதவி முக்கியம் என்பதால் இலங்கை அரசுடன் இணைந்து சகல உதவிகளையும் வழங்க  இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

நாம் 200 நிகழ்வில், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.