வடக்கில் 7 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராது விலகியுள்ளனர் – வடமாகாண பிரதம செயலர்

வடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர் என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.

அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது, சாதாரண தர சித்தி, உயர்தர சித்தி பெற்று பல்கலைக்கழகம் போக முடியாவிட்டாலும் அந்த கனவினை நீங்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் ஊடாக பெற்று கொள்ளலாம்.

தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25000 வழங்கப்படும். இது குறித்த வடமாகாண பிரதம செயலகத்தின் இணையத்தளத்தினூடாக மேலதிக தரவுகளை பெற்று கொள்ளலாம்.

தேசிய தொழில் தகைமையினை அதன் நான்காம் தரத்துடன் (NVQ level – 4) நிறுத்திவிடாது அதன் ஏழாம் தரம் (NVQ level – 7) வரை செல்வதுடன் ஊடாக நீங்கள் பட்டம் ஒன்றினை பெற்று கொள்ளலாம் .

அவ்வாறு தேசிய தொழில் தகைமையின் 7 ஆம் தரத்தினை பெற்றால் நீங்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்கலாம்.

உண்மையிலேயே எத்தனையோ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றார்கள் .அவர்களுக்கு கல்வி தகைமை இருக்கின்றது. ஆனால் தொழில் தகைமை இருப்பதில்லை.ஆனால் உங்களுக்கு இப்பொழுது உங்களுக்கு சான்றிதழுடன் தொழில் தகைமையும் உள்ளது என தெரிவித்தார்.

வடக்கைச் சேர்ந்த 12 பேருக்கு இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பு

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் மாணவர்களை சந்தித்து இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சந்தித்து கலந்துரையாடினார்.

600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையே கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தொழில் ரீதியான சிக்கல்கள் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி ஏற்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளத்தின் தலைவர் பரண ஜயவர்தன கூறுகையில்,

கடந்த இறுதி 6 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிருந்து விலகி  நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சில பீடங்களை நடத்தி செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். 600க்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன.

வரிக்கொள்ளை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். போராசிரியர்கள் இவ்வாறு விலகி செல்வதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் வரிக்கொள்ளை தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என நாம் கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்தோம். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதமளவில் எமக்கு ஏதேனும் நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. இருப்பினும், இதற்கு அரசாங்கம் தயார் இல்லை என தெளிவாகிறது. நாம் இது தொடர்பில் கவலையடைகிறோம்.

எனவே, எதிர்காலத்தில் கடுமையான தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.

மலையக மக்களின் உயர்கல்வி வளர்ச்சிக்கு இந்தியா உதவ வேண்டும் – மனோ எம்.பி கோரிக்கை

மலையகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (14) விடுத்துள்ள அறிக்கையில்,

“கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை தொடர்பில், இந்திய மத்திய அரசு, உதவிட உத்தரவாதம் தர வேண்டும்.

மலையகம் – 200 நினைவுறுத்தல் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு இந்த அடிப்படைகளில் அமைய வேண்டும். இவ்வருட ஆரம்பத்திலேயே நாம் இந்திய தூதுவர் கோபால் பாகலேயிடம், மலையகம் – 200 நினைவுறுத்தல் நிகழ்வுகள் உரையாடி தொடர்பில் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளோம். இலங்கை வந்து சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடமும் உரையாடியுள்ளோம். இந்நிலையில், அடுத்தவாரம், இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகின்றோம்.

கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில், இந்திய மத்திய அரசை நாம் நம்பி உள்ளோம். குறிப்பாக, நாடெங்கும் பரந்து வாழும், இந்திய வம்சாவளி மலையக தமிழர் பிள்ளைகளின் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.

இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க, விசேட வேலைத்திட்டம் தேவை. அதேபோல், தேயிலை, இறப்பர் மலைகளில் அல்லலுறும் எங்கள் பெண்களின் வெளிநாட்டு, உள்நாட்டு வேலை வாய்ப்ப்புகளை உறுதிப்படுத்த தாதியர் பயிற்சி கல்லூரி அவசியம். உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாகக்  கொண்டு ஒரு முதற்கட்ட பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கான விசேட சமூக அபிவிருத்தி திட்டங்களாக முன்னேடுக்கப்பட வேண்டும். மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென் மாகாணங்களில் வாழும்  நமது மக்கள்  தொடர்பில் தமக்குள்ள தார்மீகக் கடப்பாட்டை இந்திய மத்திய அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகின்றோம்.

அதேவேளை, இலங்கையில் மலையக தமிழரது தேசிய அரசியல் அபிலாஷை கோரிக்கைகள் தொடர்பில் நாம் உள்நாட்டில் இலங்கை அரசுடன் பேசுவோம். அதிகாரபூர்வ அரசு தரப்பு பேச்சு குழுவை முறைப்படி அமைத்து, அத்தகைய பேச்சுகளை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஒத்துழைப்பில் கொத்மலையில் காலநிலை மாற்றம் தொடர்பில் சர்வதேச பல்கலைக் கழகம்

காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை கொத்மலை பிரதேசத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட வரைபை தயாரித்துள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த சர்வதேச பல்கலைக்கழத்தை அமைப்பதற்காக 400 ஏக்கர் நிலப்பரப்பு கொத்மலை பிரதேசத்தில்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு விஜயம் செய்த காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழத்தை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் முன்வந்துள்ளது

மேலும், அமெரிக்க பல்கலைக்கழங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவிடம் உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே  அடையாளப்படுத்தப்பட்டுள்ள 400 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக மேலும் 200 ஏக்கர் காணியை பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கபட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் ஸ்தாபிக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழத்தின் வதிவிட வசிதகள் உட்பட அனைத்து வளங்களையும் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ்

வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை (21) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்நிர்மாணம் என ஆரம்பிக்கப்பட்ட தொடர்பணி ஆரம்பித்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தையும் புனர்நிர்மாணம் செய்தபோது இந்த பாடசாலையின் முதலாவது கட்டிடமும் என்னுடைய முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டது.

கல்வி என்பது ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியை அதனுடைய அபிவிருத்தியை, ஆளுமையை , பல் திறன்களை சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம். எங்கு போனாலும் புலம்பெயர்ந்த சமூகம் மூன்று விடயங்களில் ஆர்வமாக இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். அதாவது தங்களுடைய பல்கலைக்கழக நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றார்கள், பாடசாலை நிகழ்வுகளிற்கு பாடசாலை புனர்நிர்மாணங்களுக்கு இணைந்து கொள்கின்றார்கள், தமது கிராமங்களில் உள்ள ஆலயங்களின் புனர்நிர்மாணங்களுக்கு இணைந்து கொள்கின்றார்கள்

வடக்கு கிழக்கிலே புலம்பெயர்ந்த சமூகத்தின் ஆதரவும் அவர்களின் அளப்பெரிய சேவையும் பல இடங்களிலே நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்தவகையிலே கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு கிடைத்திருக்கின்ற ஆதரவென்பது பார்க்கும் போது மிக அளப்பெரியதாக இருக்கின்றது.

வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194 பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். அதாவது பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகரபுறங்களை நோக்கி செல்கின்றார்கள், இரண்டாவது காரணம் பிறப்பு விகிதம் குறைவு, இதே விடயம் நான் மட்டக்களப்பில் அரசாங்க அதிபராக ஏழு வருடங்கள் இருந்தபோது கிராமபுறங்களிலே பாடசாலைகளை மூடியிருந்தோம்.

அதற்கு பிரதேச செயலாளர்கள் கூறிய காரணம் பிறப்பு விகிதங்கள் குறைவடைந்து செல்கின்றது என முதலாம் வகுப்பிலே மாணவர்களை அனுமானிப்பது சில பாடசாலைகளில் பூச்சியம் லெவலுக்கு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.

பாடசாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்க இந்தியா நிதியுதவி

காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளில் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை (19) இத்திட்டம் தொடர்பான இராஜதந்திர குறிப்புக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன , துணை உயர் ஸ்தானிகர், வினோத் கே. ஜேக்கப் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் மானிய உதவியின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், வசதி குறைந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் கல்வித் துறையில் இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல மானியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கைக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த உதவி தற்போது சுமார் 5 பில்லியன் டொலர்களாகவுள்ளது.

அதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாகும். நாட்டின் 25 மாவட்டங்களில் 65க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 20க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் 1990 சுவசேரிய ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை இலங்கையில் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட முதன்மையான மானியத் திட்டங்களாகும்.

மாகாண கல்வி அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் இருந்து மீட்டெடுக்கும் போராட்டம் தொடரும் – கலாநிதி சர்வேஸ்வரன்

மாகாண பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் எண்ணத்திலிருந்து அரசாங்கம் சற்று பின்வாங்கியுள்ள நிலையில் முழுமையாக அத்திட்டத்தினை கைவிடும் வரை நீதிமன்ற சட்டப் போராட்டம் தொடரும் என முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (12.03.2023) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட கல்வி அதிகாரங்களைச் சட்ட விரோதமான முறையில் மத்திய அரசாங்கம் பறித்ததுக்கு எதிராக நான் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தொடுத்தேன்.

இலங்கை அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் சட்ட விரோதமான முறையில் பறித்துள்ளது. கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகள் சார்ந்து மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மாகாண நியதி சட்டங்களையும் மீறும் வகையில் பல விடயங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக மாகாண கல்வி அமைச்சை எடுத்துக் கொண்டால் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசிய பாடசாலைகள் ஆயுதப் படைகளின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக வரையறுக்கப்பட்டது.

வடக்கு கல்வி அமைச்சில் 19 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக இருந்த நிலையில் மாகாண கல்வி அமைச்சின் கீழே இருந்த மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு 22 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டது.

கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்தின் கீழ் வடக்கில் 51 பாடசாலைகளைத் தேசிய பாடசாலையாக்கும் முயற்சிகள் இடம்பெற்றது.

மாகாண பாடசாலைகளைப் பறிக்கும் முயற்சிக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தின்பால் பயணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உரிய அக்கறை காட்டாத நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தேன்.

கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரச தரப்பு சார்ந்து 16 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டது . வழகானது கடந்த 8 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சகலருக்கும் நீதிமன்றம் ஆணை அனுப்பியது.

இந்த சூழ்நிலையில், அரசாங்கம் தேசிய பாடசாலைகளாக்கும் வேலைத் திட்டத்தினை சற்று பின்வாங்கியதாக தெரியவரும் நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் அதனை ஒப்புக் கொள்ளும் வரை சட்டப் போராட்டம் தொடரும்.

ஆகவே, வழக்கின் முடிவுகள் ஏதுவாக இருந்தாலும் மாகாண அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பறித்தல் ,தமக்கு ஏற்ற வகையில் வியாக்கியானம் செய்தல், சில நிர்வாக நடைமுறைகள் ஊடாக பறித்தல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் தகுந்த பதிலை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது

கல்வி அமைச்சிற்குள் நுழைந்த ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டளர்கள் இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததுடன், சற்று நேரத்தில் கல்வி அமைச்சிற்குள் நுழைந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னரே பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் கல்வி அமைச்சிற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டக்காரர்களை வௌியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட பிக்கு மாணவர் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 பிக்கு மாணவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனாவால் பூர்த்தி

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி வந்துள்ளது என கூறியுள்ளார்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் கல்வியின் தரமும் மேம்பட வேண்டும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கான நடைமுறை திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை புகுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.