ரணிலின் தவறான கோரிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது – சுரேஷ் பிரமச்சந்திரன்

IMF இன் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் ரணில் விக்கிரமசிங்க அதற்காக தவறான பொருளாதாரக் கொள்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது ஒரு கோரிக்கை முன்வைத்திருக்கிறார். எல்லோரும் இணைந்து இந்த IMF னுடைய கோரிக்கைகள் பூர்த்தி செய்யவேண்டும், எதிர்க்கட்சிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எல்லோரையும் இணைத்து போவது போன்ற ஒரு பாவனையை ஜனாதிபதி முன் வைத்திருக்கின்றார்.

உண்மையாகவே IMF இனுடைய கோரிக்கைகள் என்று சொன்ன அடிப்படையில் நாட்டு மக்கள் மீது மிகப்பெருமளவிலான வரிச்சுமைகள் சுமத்தப்பட்டிருக்கின்றது. அந்த சுமைகளை தாங்க முடியாத நிலைக்குத்தான் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றது. 3 நேரம் சாப்பிட்டவர்கள் எல்லாம் ஒரு நேர சாப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே பல்வேறு பட்ட பிரச்சினைகள் தோன்றி இருக்கின்றது.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பொருளாதார பிரச்சினையை சந்தித்து கொண்டிருக்கிற ஒரு சூழ் நிலையில் வெறுமனே IMF னுடைய நிபந்தனையை மாத்திரமே செய்கின்ற கோணத்திலிருந்து அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அதாவது அவர்கள் எடுக்க கூடிய தவறான முடிவுகளுக்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது முதலாவது தவறான விடயம்.

இரண்டாவதாக அவர் ஒரு ஜனாதிபதி தேர்தலை முகம் கொடுக்க கூடிய சூழ்நிலையில் அவர் சுமக்க கூடிய சகல பிரச்சினைகளையும் ஏனையோரும் சேர்ந்து சுமக்க வேண்டும் என அவர் எதிர் பார்க்கின்றார். ஆகவேதான் அவர் ஏனைய கட்சிகளை தம்முடன் இணைந்து இந்த பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார்.