ரணிலுக்கு வெகுவிரைவில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி அதிகரிப்பு பொருளாதார கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் பாடம் கற்பித்தார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.

ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இனிதும பகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்த மக்கள் தற்போது உண்மையான அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நாட்டுக்கும், தமக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள்.

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளினால் நாட்டை முன்னேற்ற முடியாது,அரசியல்வாதிகள் மாத்திரம் தான் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். இவர் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை,கடன் செலுத்தாமல் அந்த நிதியை கொண்டு எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 12ஆம் திகதி செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை செலுத்த போவதில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

8 சதவீதமாக இருந்த பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால் பொருள் மற்றும் சேவைகளின் கட்டணம் சடுதியாக உயர்வடைந்தது.சமூக பாதுகாப்பு அறவீட்டுதொகை என்ற புதிய வரி அதிகரிக்கப்பட்டு மக்களிடமிருந்த நிதி சூறையாடப்பட்டது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளிறுகிறார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 400 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

நாட்டின் வங்கி கட்டமைப்பின் பிரதான நிலை தரப்பினர்களில் 50 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இதுவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி கொள்கையின் பெறுபேறு.

மறுபுறம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் தக்க பாடம் கற்பித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், டெலிகொம் நிறுவனம் மற்றும் லிட்ரோ நிறுவனம் உட்பட இலாபம் பெறும் நிறுவனங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதுவே ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது.அரச நிதியை கொள்ளை அடிப்பது ராஜபக்ஷர்களின் கொள்கை, அரச வளங்களை விற்பனை செய்வதும், மோசடியாளர்களுடன் டீல் வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்தால் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணைக்கு முரணாக அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். தேர்தலை நடத்தினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு அரச வரபிரசாதம், பாதுகாப்பு வழங்குவதை தவிர்த்துக் கொண்டு அந்த நிதியை கொண்டு தேர்தலை நடத்தலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் அதன் விளைவு எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார் என்றார்.