13 இலிருந்து கீழிறங்கும் ரணில்-அகிலன்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கும் பின்னணியில் தென்னிலங்கை மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது. பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பிக்குகளின் அமைப்புக்களே இப்போது வீதிக்கு இறங்கியிருக்கின்றன. பின்னணியில் பிரதான கட்சிகள், குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இருக்கலாம்.

கடந்த வருடத்தில் முழுமையாக நாட்டை முடக்கிவைத்த பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணிகளில் ஒன்று இனநெருக்கடி. இது உணா்த்தப்பட்டிருக்கும் நிலையில்தான் அதற்கு நிரந்தரமான ஒரு தீா்வு காணப்பட வேண்டும் என சா்வதேசம் அழுத்தம் கொடுத்தது. இந்தியாவையும் இவ்விடயத்தில் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை ரணில் எடுத்திருந்தாா். ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் தவறு. ஆனால் இங்கு நடைமுறைப்படுத்த முற்படுவதற்கு எதிரான போராட்டங்களை காணமுடிகின்றது.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக தீா்வு காணப்படும் என டிசெம்பா் மாதத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தாா். பின்னா் சுதந்திரதினத்துக்கு முன்னதாக தீா்வு குறித்து அறிவிப்பதாகத் தெரிவித்தாா். இப்போது, புதன்கிழமை பாராளுமன்றத்தில் அவா் நிகழ்த்திய உரையில் தன்னுடைய பாதை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றாா். ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று இதன்போது தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் அதிகாரம் பகிரப்படாது என்றும் கூறியுள்ளார்.

ஆக, பிக்குகளும், இனவாதிகளும் கொடுத்த மிரட்டலுக்கு அஞ்சி தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து ரணில் கீழிறங்குவதற்குத் தயாராகிவிட்டாா் என்பதன் அறிகுறிதான் பொலிஸ் அதிகாரம் குறித்த அவரது அறிவிப்பு. பிக்குகளின் போராட்டம் தொடா்ந்தால் ஏனையவற்றிலிருந்தும் அவா் கீழிறங்கலாம்!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பொலிஸ், காணி அதிகாரங்கள்தான் முக்கியமானவை. திட்டமிட்ட வகையிலான காணி அபகரிப்புத்தான் தமிழ் மக்கள் எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் இதனால் பறிபோவதுடன், இவை சிங்கள மயமாவதற்கும் காணி அதிகாரங்கள் எம்மிடம் இல்லாமலிருப்பதுதான் காரணம். அதனால்தான், காணி அதிகாரம் மாகாண சபைகளுக்குத் தேவை என்பதற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அதேபோல, தமிழ்ப் பகுதிகளில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகள் அனைவருமே சிங்களத்தில்தான் கதைப்பாா்க்கள். போக்குவரத்துப் பொலிஸாா்கூட, தமிழ் மக்களுடன் சிங்களத்தில் பேசுவதையும், தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைவிட, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பல்வேறு குழப்பங்களுக்கும் சிங்களப் பொலிஸாரின் அத்துமீறல்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றது. பொலிஸ் அதிகாரம் எம்மிடம் இருக்க வேண்டும் என தமிழ்த் தரப்பினா் வலியுறுத்துவதற்கு இவைதான் காரணம்.

ஆனால், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்பதற்கு முற்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சிங்களவா்களின் சீற்றத்துக்கு உள்ளாகாமல், தமிழ் மக்களையும் சமாளிப்பதற்கு முற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதனால்தான், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என தமிழ்த் தரப்புக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கும் வாக்களித்த ஜனாதிபதி இப்போது பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு பின்னடிக்கின்றாா்.

13 குறித்து ஜனாதிபதி அறிவித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆறு இணைந்து இந்தியப் பிரதமருக்கு கடந்த வருடத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. அதில் முக்கியமாக 13 முழுமையாக நடைமுறைப்படுததப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவும் இது தொடா்பான அழுத்தங்களை ரணிலுக்குக் கொடுத்திருந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்கிய இந்தியாவிடமிருந்து தொடா்ந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. 13 தொடா்பாக ரணில் வெளியிட்ட அறிவிப்புக்களுக்கு இவைதான் காரணம்.

கோட்டா கோ ஹோம் போராட்டத்துக்குப் பின்னா் வீடுகளுக்குள் தலைமறைவாக இருந்த விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்ற சிங்கள மக்களின் மீட்பா்களாக தம்மைக் காட்டிக்கொள்பவா்கள் மீண்டும் களத்தில் இறங்குவதற்கு ரணிலின் 13 குறித்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்கின்றாா்கள். அறிக்கைகளை வெளியிடுவதற்கு மேலாக வீதிகளில் இறங்குவதற்கு இன்னும் அவா்கள் துணியவில்லை என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

அதேவேளையில் பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் ரணிலின் இந்த 13 குறித்த நகா்வுக்கு எதிராக போா்க்கொடி துாக்குவதற்குத் தயாராகவில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 13 க்கு உட்பட்டதாக தீா்வொன்றைக் கொண்டுவருவதற்கு தாம் தயாராகவில்லை என்ற நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தியிருந்தாா்கள். அதேபோல பாராளுமன்றத்தில் பலம்வாய்ந்த கட்சியாக இருக்கும் பொதுஜன பெரமுன இதற்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என ஏற்கனவே உறுதியளித்திருக்கின்றது. அதன் தலைவா் மகிந்த ராஜபக்ஷ இதனை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தாா்.

இதனைவிட மற்றொரு திருப்பமாக, இவ்வளவு காலமும் மாகாண சபை முறையையும், 13 ஆவது திருத்தத்தையும் எதிா்த்துவந்த ஜே.வி.பி. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கலை தாம் எதிா்க்கப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. தமிழ் மக்கள் இதன்மூலமாக தமது பிரச்சினைகளுக்குத் தீா்வு கிடைக்கும் எனக் கருதுவதால் அதனை தாம் எதிா்க்கப்போவதில்லை என அதன் தலைவா் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றாா்.

ஆக, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் எதிா்ப்புக்கள் இருக்கப்போவதில்லை என்பதை கட்சிகளின் இந்த நிலைப்பாடு உணா்த்துகின்றது.

உதிரிகளாகவுள்ள சிங்கள அரசியல்வாதிகள் சிலரும், பிக்குகளும்தான் இப்போது 13 க்கு எதிராக போா்க்கொடி துாக்கியிருக்கின்றாா்கள். ஆனால், இவ்விடயத்திலும் பிக்குகள் மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிக்குகளின் குழு ஒன்று, அங்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், சா்வ மதங்களின் தலைவா்களையும் சந்தித்தாா்கள். இதன்போதும் 13 குறித்துதான் முக்கியமாகப் பேசப்பட்டது. அதிகபட்சமான அதிகாரப்பரவலாக்கல் மூலமாக இனநெருக்கடிக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை அவா்கள் இந்த சந்திப்புக்களின் பின்னா் ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்கள்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட பிக்குகள் 13 பிளஸ் என்பதை யாழ்ப்பாணத்தில் வந்து சொல்கின்றாா்களே தவிர, அதனை கண்டிக்குச் சென்று மகாநாயக்கா்களிடம் சொல்வதற்குத் துணிவதாகத் தெரியவில்லை. அதேபோல தென்னிலங்கையிலும் இதற்கான போராட்டம் ஒன்றை நடத்துவதற்கும் அஞ்சும் நிலையில்தான் அவா்கள் இருக்கின்றாா்கள். யாழ்ப்பாணத்தில் அவா்கள் மேற்கொண்ட சந்திப்புக்கள், அதன்பின்னா் அவா்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனவே தவிர, சிங்கள ஆங்கில ஊடகங்கள் அவை தொடா்பாக அலட்டிக்கொள்ளவே இல்லை.

பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருந்தாலும் பிக்குகள் மூலமாக 13 க்கு எதிரான உணா்வுகள் சிங்களவா்கள் மத்தியில் பரப்பப்படுவதை உணர முடிகின்றது. 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதும், இது போன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. ஜே.ஆா்.ஜெயவா்த்தன அதனை இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கினாா். அதன்மூலமாகவே பின்னா் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

பண்டா – செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதுகூட இதேபோன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. பிக்குகள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவா்களாக மாற்றமடைந்தது அதன்போதுதான். இந்த எதிா்ப்புக்களுக்கு முகங்கொடுக்க முடியாத பண்டாரநாயக்க பின்னா் அந்த உடன்படிக்கையை கிளித்தெறிந்தாா் என்பது வரலாறு. ஆனால், அதேகாரணத்துக்காக பின்னா் பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரால் பின்னா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

பண்டா – செல்வா உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இனநெருக்கடிக்கான தீா்வு அப்போதே காணப்பட்டிருக்கும். பாரிய உயிரிழப்புக்களுக்கும், பொருளாதாரச் சீரழிவுகளுக்கும் காரணமாக இருந்த போரும் இடம்பெற்றிருக்காது. சிங்களத் தலைவா்கள் பிக்குகளின் இனவாதப்போராட்டங்களுக்கு அடிபணிந்ததன் விளைகளை நாடு அனுபவித்துவிட்டது. இதே வரலாறு மீண்டும் திரும்பப்போகின்றதா? என்பதுதான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பாா்க்கும் போது எமக்கு எழும்கேள்வி!

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

தபால் மூல வாக்களிப்பிற்கு தேவையான வாக்குச் சீட்டுகள் இந்த வார இறுதிக்குள் கிடைக்கப்பெறாவிட்டால், தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

​​தபால் மூல வாக்களிக்கும் திகதியை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் தபால் மூலமாக வாக்களிக்கும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு அரச அச்சகம் இதுவரை பணம் தருமாறு கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளுக்கு அரச அச்சகத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்திற்கு தேவையான பாதுகாப்பு இல்லை என அவர் இதன்போது கூறினார்.

நேற்றைய தினம்(15), 03 பொலிஸ் அதிகாரிகளே வழங்கப்பட்டதாக அரச அச்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் 60 பொலிஸ் அதிகாரிகள் வரை தேவைப்படுவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி இதன்போது வலியுறுத்தியுள்ளார்

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு மின்சார விநியோகத் திட்டம்

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு மின்சார விநியோகத் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட Reuters செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மின் கட்டமைப்பை உருவாக்கி, தீவில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவிற்கு விற்க முடியும் என இலங்கை நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் முக்கியப் பகுதியானது, தீவின் வடக்கில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதில் தங்கியுள்ளது. இங்கிருந்து, எல்லை தாண்டிய மின்சார பரிமாற்ற கேபிள் மூலம் மின்சாரத்தை தென்னிந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும் என நம்பப்படுகிறது.

மின் வெட்டு இல்லை ; மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கு இதுவரை அறவிடப்பட்ட 680 ரூபா மின் கட்டணம், 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றிற்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம், 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

இது 261 வீத அதிகரிப்பாகும்.

90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையை கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு சீனா ஆதரவு

வறிய நாடுகளிற்கு கடன்வழங்கியவர்களின்  மாநாட்டிற்கு முன்னதாக இலங்கைக்கு சீனா  ஆதரவை வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள வறிய நாடுகளிற்கு கடன்வழங்கியவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக இலங்கைக்கு சீனா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

எனினும் இலங்கையை பெரும் பொருளாதார அரசியல் நிதி நெருக்கடிக்குள் தள்ளியுள்ள பலமில்லியன் கடன்தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது குறித்து சீனா எதனையும் தெரிவிக்கவில்லை.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சாதகமான பங்களிப்பை வழங்குவதற்காக சீனா உரிய நாடுகள் மற்றும் நிதியமைப்புகளுடன் இணைந்து செயற்படும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் கடனிற்கு இலங்கை விண்ணப்பித்துள்ளமைக்கு சீனா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கருணா துப்பாக்கியை காட்டி அச்சுறுத்துகிறார் – பொது மக்கள் குற்றச்சாட்டு

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் பொதுமக்கள் மீது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சையடி தடான எனும் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன் நிலையில் கருணாவால் போடப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி வயல் காவலாளி ஒருவர் பலியான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சையடி தடான பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கருணா என்கிற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் தனது வயல் பாதுகாப்புக்காக சட்ட விரோத மின்சார வேலிகளை அமைத்துள்ளார்.

அதோடு குறித்த மின்சார வேலியால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் அது குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களை தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியும் உள்ளார்.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வந்த நிலையில் கருணாவின் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இரு வாரங்களுக்கு முன்பு பெறுமதியான பசுமாடு ஒன்று உயிரிழந்த போது கருணாவுக்கு பயந்து அப்பகுதி மக்கள் பொலீசில் முறைப்பாடு செய்யாத நிலையில் தற்போது அதே மின்சார வேலியில் சிக்கி வயல் காவலாளி ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கருணா மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். வாகன போக்குவரத்து அற்ற மேற்படி பிரதேசத்தில் உள்ள மக்களின் சுமார் 80 ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து கருணா விவசாயம் செய்துவருகின்றார்.

தனது விவசாய நடவடிக்கைகளுக்காக பாதைகளை மறித்து சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளதால். அப்பகுதியில் விவசாயம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிர் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கருணாவின் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த பொது மகனின் பிரேதத்தை கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாத நிலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உயிரிழந்தவரின் உடலை இளைஞர்கள் சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி அடங்கிய குழுவினர் இலங்கைக்கு

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி உட்பட 20 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் நேற்று மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்க தூதுக்குழுவின் வருகையையொட்டி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையின் கட்டத்தில் இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரக விசா பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் நேற்று இரவு பதிவான பாதுகாப்பு சம்பவம் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் விசா பிரிவுடனான உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விஷயத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேற்றிரவு இந்த வளாகம் உடைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.