மாவீரர் நாள் 2022 உணர்த்துவது? நிலாந்தன்.

நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் கடந்த மாவீரர் நாளிலன்று பின்வருமாறு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார் “இன்று மாவீரர் நிகழ்வுக்குப் போனேன்.கடந்த வருடங்களில் எனது பிள்ளைகள் வந்தனர். இப்போது இல்லை. எனது தம்பிக்கு நான் மட்டும் மலர் தூவி அஞ்சலி செய்தேன்..இதை உங்களுடன் இன்று பகிர நினைத்தேன்…..இப்போது என் தம்பிக்கு நான்..இனி வருங்காலத்தில்…?யார் வருவார்…..என யோசித்தேன்‌.என் பிள்ளைகளின் பிள்ளைகள்….? “

இது மாவீரர் நாளுக்கு மட்டுமல்ல பொதுவாகவே தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைக் குறித்து உரையாடும் எவரும் சுட்டிக்காட்டும் ஒரு விடயம்தான்.என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்..” உன்னுடைய சகோதரன் உனக்கு உதவுவான். ஆனால் அவனுடைய பிள்ளை உன்னுடைய பிள்ளைக்கு உதவுமா?” என்று. இதே கேள்வியை வேறு ஒரு தளத்தில் நின்று இலங்கைக்கான முன்னாள் ஸ்கண்டிநேவியத் தூதுவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.” முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி இறக்கும்பொழுது இரண்டாம் தலைமுறை எந்தளவு தூரம் தாயகத்தை நோக்கி ஈர்க்கப்படும்?” என்று.

உண்மை ஆயுதப்போராட்டம் நடந்த காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பெரும்பாலான கவனம் யுத்த களத்தை நோக்கி குவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் தாம் விட்டுப்பிரிந்த தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு ஊர்வலம் போனார்கள், வீதிகளை மறுத்தார்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். தமது பெற்றோரின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து அடுத்த தலைமுறையும் அதனால் ஈர்க்கப்பட்டது.அக்காலகட்டத்தில் ஒடுக்குமுறை ஒரு கொடிய போராக இருந்தது. அந்த ஒடுக்குமுறையின் விளைவாக தமிழ்மக்கள் உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்தாலும், அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்றாக திரண்டு காணப்பட்டார்கள். ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நிலைமை அவ்வாறு இல்லை.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நிலத்தை கட்டுப்படுத்தியது. ஒரு கடலை கட்டுப்படுத்தியது. ஒரு கருநிலை அரசை நிர்வகித்தது. தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையை கொண்டவர்கள். அக் கடல் வழி ஊடாக தாயகமும் டயஸ்போறாவும் இணைக்கப்பட்டன. அந்தக் கடல் வழியூடாக ஆயுதங்கள் வந்தன, ஆட்கள் வந்தார்கள், மருந்து வந்தது, அறிவு வந்தது. ஆனால் 2009 ஒன்பதுக்குப் பின் தாயகத்தையும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தையும் இறுகப் பிணைக்கும் விதத்திலான இடை ஊடாட்டத் தளங்கள்,வழிகள் எவையும் கட்டி எழுப்பப்படவில்லை. மிகக் குறிப்பாக சட்டரீதியாக ஏற்புடைய ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்புகள் எவையும் கிடையாது. சில புலம்பெயர்ந்த தன்னார்வ அமைப்புகள் தாயகத்தை நோக்கி உதவிகளை வழங்குகின்றன. தனி நபர்களும் வழங்குகிறார்கள். ஆனால் அரசியல் அர்த்தத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஓர் இடையூடாட்டத்தளம் தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கும் இடையே கிடையாது.

ராஜபக்சக்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை ஒருவித அச்சத்தோடு பார்த்தார்கள். ஒரு பகுதி அமைப்புகளையும் தனி நபர்களையும் தடைப்பட்டியலில் சேர்த்தார்கள். அதனால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தோடு நெருங்கி உறவாடுவதில் இடைவெளிகள் அதிகமாக காணப்பட்டன.ஆனால் ரணில் விக்கிரமசிங்க தடைகளை நீக்குகிறார் மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக வைத்து அவர் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை தாயகத்தில் முதலீடு செய்யுமாறு அழைக்கிறார்.

அதாவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலான அழைப்பு அது. மாறாக தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில் ஒரு தேசத்தை கட்டி எழுப்புவதற்கான முதலீடு என்ற அடிப்படையில் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளோடு இடையூடாடக் கூடிய விதத்தில் பொருத்தமான கட்டமைப்புகள் எத்தனை உண்டு? தாயகத்தை நோக்கி உதவிகளைப் புரியும் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு இடையே இடையூடாட்டமும் குறைவு, ஒருங்கிணைந்த செயல்பாடும் குறைவு. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கடந்த 13 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் ஜெனிவாவை எவ்வாறு அணுகுகிறது என்பதுதான்.

இவ்வாறு தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் இடையே தாயகத்தை கட்டியெழுப்புவது என்ற ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில், இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி மறையும் பொழுது தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடிய ஆபத்து உண்டா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவீரர் நாள் அந்த இடைவெளி அப்படி ஒன்றும் பாரதூரமாக இல்லை என்பதை உணர்த்தியது.கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த மாவீரர் நாள் தாயகத்திலும் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பரவலாகவும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மாவீரர் நாள் என்ற உணர்ச்சிப்புள்ளியில் தாயகமும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்பீட்டளவில் ஒன்று திரண்டன.பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூர்வதற்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும்.மேலும்,அரசாங்கம் தமிழ்த்தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கும் ஒரு பின்னணியில்,நல்லெண்ணைச் சூழலை உருவாக்கவேண்டிய ஒரு நிர்பந்தமும் அரசாங்கத்துக்கு உண்டு.எனவே உணர்ச்சிகரமான நினைவு நாளை ரணில் ஒப்பீட்டளவில் தடுக்கவில்லை.அதனால், திட்டமிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பெருமளவுக்கு மக்கள் திரண்டிருக்கிறார்கள்.அது தானாக வந்த கூட்டம். அதை யாரும் வாகனம் விட்டு ஏற்றவில்லை. தண்ணீர் போத்தல்,சாப்பாட்டுப் பார்சல், சிற்றுண்டி கொடுத்து அழைத்துக் கொண்டு வரவில்லை.அது தன்னியல்பாகத் திரண்ட ஒரு கூட்டம்.அவ்வாறு மக்கள் திரள்வதற்குரிய ஏற்பாடுகளை கட்சிகளும் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் செய்து கொடுத்தார்கள்.அரசியல்வாதிகள் நினைவுநாட்களின் துக்கத்தையும் கண்ணீரையும் வாக்குகளாக ரசாயன மாற்றம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு அதைச் செய்யக்கூடும். ஆனாலும் தடைகள் அச்சுறுத்தல்களின் மத்தியில் அவர்கள் முன்வந்து ஒழுங்குபடுத்தும் போது மக்கள் திரள்வார்கள் என்பதே கடந்த 13 ஆண்டு கால அனுபவம் ஆகும்.

13 ஆண்டுகளின் பின்னரும் கண்ணீர் வற்றவில்லை;காயங்கள் ஆறவில்லை; கோபமும் தீரவில்லை என்பதைத்தான் நடந்து முடிந்த மாவீரர் நாள் உணர்த்தியிருக்கிறது. ஆனால் காலம் ஒரு மிகப்பெரிய மருத்துவர். அது எல்லாக் காயங்களையும் குணப்படுத்தக்கூடியது.நினைவுகளின் வீரியத்தை மழுங்கச் செய்யக்கூடியது.தமிழ் மக்கள் தமது கூட்டுத் துக்கத்தையும்,கூட்டுக் காயங்களையும்,கூட்டு மனவடுக்களையும் அரசியல் ஆக்கசக்தியாக மாற்ற வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறார்கள்.நீதிக்கான போராட்டத்தின் பிரதான உந்திவிசையே அதுதான்.நினைவுகூர்தல் என்பது நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒருபகுதி.இந்த அடிப்படையில் சிந்தித்தால்,காலம் துக்கத்தை ஆற்றுவதற்கு இடையில் துக்கத்தையும் கண்ணீரையும் எப்படி அரசியல் ஆக்கசக்தியாக மாற்றலாம் என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளில் காயமும் துக்கமும் ஆறாமல் இருப்பதற்குப் பிரதான காரணம் ஒடுக்குமுறைதான். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுதான்.மாறாக தமிழ்த் தரப்பின் திட்டமிட்ட செயலூக்கமுள்ள அரசியலின் விளைவாக அல்ல.நடந்து முடிந்த மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளர் ஒருவரிடம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..“மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு வழிகாட்ட அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியவில்லை” என்று. ஒப்பீட்டளவில் அதிக தொகை ஜனங்கள் திரண்ட ஒரு துயிலுமில்லத்தில் வைத்து கூறப்பட்ட வார்த்தைகள் அவை.அதுதான் உண்மை. ஒரு கூட்டுத் துக்கத்தை, கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டிய ஒரு மக்கள் கூட்டம், கடந்த 13 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது?

கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் காயத்தையும் பொருத்தமான விதங்களில் பொருத்தமான காலத்தில் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றத் தவறினால்,காலகதியில் காயங்கள் இயல்பாக ஆறக்கூடும், துக்கம்  இயல்பாக வடிந்துவிடும். நினைவு நாட்கள் நாட் காட்டிகளில் மட்டுமே மிஞ்சியிருக்கும் ஒரு நிலை வரக்கூடும்?தமிழ் மக்கள் காலத்தை வீணாக்கக் கூடாது.

பேச்சுக்குத் தயாராகுதல்? நிலாந்தன்.

ரணில் விக்கிரமசிங்க விசுவாசமாக ஒரு பேச்சுவார்த்தைக்குத் தயாரா இல்லையா என்ற சந்தேகம் தமிழ்த் தரப்பிடம் கடைசிவரை இருக்க வேண்டும். அவர் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய தேவை அவருக்கு உண்டு. மேற்கு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தை பிணை எடுப்பதென்றால் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக தெரிகிறது.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளும், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நகர்வுகளும் ஒரே பொதிக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வற்புறுத்துவதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியின் உரையிலும் அது கூறப்பட்டது. அதனால் அரசாங்கம் குறைந்தபட்சம் ஒரு தோற்ற மாயையாகவாவது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஆனால் ஒரு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய தேவை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். அதுபோலவே இந்திய உளவுப் பிரிவின் தலைவர் அண்மையில் இலங்கைக்கு வந்ததாகவும்,இந்தியா சமஸ்ரித் தீர்வுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் அரசாங்கத்திடம் தெரிவித்ததாகவும் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதுவும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். ஆனால் இந்திய உளவுப் பிரிவின் தலைவர் இலங்கை வந்த செய்தி உண்மையல்ல என்றும்,ஒரு ஆங்கில ஊடகம் முதலில் அதைப் பிரசுரித்தது என்றும், அச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கொழும்பு ஊடக வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா கிட்ட எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் பெரியளவிற்கு பலன் அளிக்கவில்லை என்பதும் தெரிகிறது. இந்தியாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உள்ள இடைவெளியும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். எனவே இப்போதிருக்கும் சூழலை வெற்றிகரமாக கையாள வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு. தமிழ் கட்சிகள் அதை எப்படிக் கையாளலாம்?

கடந்த வார கட்டுரையில் கூறப்பட்டது போல தமிழ்க் கட்சிகள் முதலாவதாக தங்களுக்கு இடையே ஓர் உடன்படிக்கைக்கு வந்து ஒப்பீட்டளவில் பொதுவான ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இரண்டாவதாக, பேச்சுவார்த்தைகளில் கட்சிகளை வழிநடத்தவும் ஆலோசனை கூறவும் ஒரு நிபுணர் குழுவை உருவாக்க வேண்டும். அதில் சிவில் சமூகங்களையும் உள்ளடக்க வேண்டும்.அந்நிபுணர் குழு பேச்சுவார்த்தைக்கான ஒரு நிகழ்ச்சி நிரலை கட்சிகளோடு இணைந்து உருவாக்கலாம். முடியுமானால் பேச்சுவார்த்தை மேசையில் கட்சிசாரா நிபுணர்களுக்கும் இடம் கொடுக்கலாம்.

இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்க் கட்சிகள் பெருமளவுக்கு சமஷ்ரித் தீர்வை அல்லது சமஷ்ரிப் பண்புடைய ஒரு தீர்வை வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்களக் கட்சிகள் அதற்குத் தயார் இல்லை.

ரணில் விக்ரமசிங்க தன்னிடம் என்ன தீர்வு உள்ளது என்பதனை வெளிப்படையாக இதுவரை கூறியிருக்கவில்லை. அவர் கூறவும் மாட்டார். ஆனால் நிச்சயமாக சமஷ்டிதான் தீர்வு என்று வெளிப்படையாகச் சொல்ல அவர் தயார் இல்லை என்று தெரிகிறது.

சஜித் பிரேமதாச, பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இந்த விடயத்தில் அவர் மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கட்சிக்குத் தலைமை தாங்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை அவர் அதைத்தான் கூறி வருகிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்புகளின் போதும் அவர் அதைத்தான் வலியுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ச பதிமூன்று பிளஸ் என்று கூறுகிறார். அவரும் பல ஆண்டுகளாக அதைத்தான் கூறி வருகிறார்.

எனவே தொகுத்துப் பார்த்தால், சிங்களத் தரப்பில் 13 ஐத் தாண்டி வரத் தேவையான அரசியல் திடசித்தம் கிடையாது. ஆனால் தமிழ்த் தரப்போ கூட்டாட்சியை கேட்கின்றது. அதாவது தமிழ் தரப்பின் கோரிக்கைகளுக்கும் சிங்களத் தரப்பு தரக்கூடியவற்றிற்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு. அதை கோட்பாட்டு அடிப்படையில் சொன்னால் நாட்டின் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பை மாற்ற சிங்களக் கட்சிகள் தயாரில்லை என்பதுதான்.

அவர்கள் 13ஐப் பற்றிப் பிடிப்பதற்கு காரணம் அதுதான். அதைவிட மேலதிகமாக ஒரு காரணம் உண்டு. ,இந்தியாவையும் இதில் சிங்களத் தரப்பின் பங்காளியாக்குவது. கடந்த பல தசாப்தங்களாக இந்தியா 13-வது திருத்தத்தைத் தான் வலியுறுத்தி வருகிறது. இந்தியா ஏன் 13வது திருத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது? அது தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதாலா? இல்லை. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சியிருக்கும் ஒரே உறுப்பு அதுதான். இந்திய-இலங்கை உடன்படிக்கையின்படி இனப்பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்குரிய வாசல் அதுதான். அதாவது இந்தியா இலங்கை இனப்பிரச்சினையில் தனது பிராந்திய நலன்களின் அடிப்படையில் தலையிடுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக அதைப் பார்க்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு தமிழ்த் தரப்பு எதிராக இல்லை என்ற செய்தியை மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அதை ஏற்கனவே கஜேந்திரகுமார் செய்துவிட்டார். அடுத்த கட்டமாக இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களின் கோரிக்கைகளை 13க்குள் முடக்க கூடாது என்பதையும் தமிழ்த் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

ரணிலுக்கும் புதுடில்லிக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக தெரிகிறது. ரணில் இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த பொழுதும் இந்தியா அவரை இன்றுவரை உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வரும் ஆண்டில் சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு தகவல் உண்டு. அதற்கு முன் இந்தியாவை திருப்திப்படுத்தும் நகர்வுகளை இலங்கை முன்னெடுக்க வேண்டியிருக்கும். பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பது, கலாச்சார மண்டபத்தைத் திறப்பது, காங்கேசன் துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே படகுப்பாதையைத் திறப்பது, சீனாவின் கடலட்டைப் பண்ணைகளைக் கட்டுப்படுத்துவது…. போன்ற பல விடயங்களிலும் இந்தியாவை திருப்திப்படுத்த வேண்டியிருக்கும்.

சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த நாட்டுக்கும் எதிராகவோ சிங்கள ஆட்சியாளர்கள் முதலில் வீரம் காட்டுவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் வெளிநாடுகளோடு தங்களை சுதாகரித்துக் கொள்வார்கள். இந்திய-இலங்கை உடன்படிக்கையில் ஜெயவர்த்தனா அதைத்தான் செய்தார்.இந்தியப் படைகளை வெளியேற்றும் விடயத்தில் பிரேமதாசவும் அதைத்தான் செய்தார். ஆட்சி மாற்றத்தின் போது 2015ல் மஹிந்த அதைத்தான் செய்தார். கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் அதைத்தான் செய்தார்.எனவே அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் வெளி அரசுகளோடு சுதாகரித்துப் போகும் ஒரு ராஜதந்திர பாரம்பரியத்தை கொண்டிருக்கிறார்கள். அரசுகளுக்கு வெட்கமில்லை. மானம் இல்லை. ரோஷம் இல்லை. எனவே ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை சுதாகரித்துக் கொள்ளமாட்டார் என்று கருதத் தேவையில்லை. பலாலி விமான நிலையம் அடுத்த வாரம் திறக்கப்படுமாக இருந்தால் அவர் இந்தியாவைச் சமாளிக்க முற்படுகிறார் என்று பொருள். இதுபோலவே யாழ்.கலாச்சார நிலையத்தை திறப்பதற்குரிய பேச்சு வார்த்தைகளை இந்த வாரம் அரசாங்கம் தொடங்கியிருக்கிறது.

ஆனால் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் ஏற்படக்கூடிய பகைநிலைதான் தமிழ் மக்கள் பெறக்கூடிய தீர்வின் பருமனைத் தீர்மானிக்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பேச்சு வார்த்தைகளில் இந்தியாவை ஒரு மத்தியஸ்த்தர் ஆக தமிழ்த் தரப்பு அழைக்க வேண்டும். மேற்கு நாடுகளோடு இணைந்த ஒரு இணைத் தலைமைக்குள் இந்தியாவுக்கு முதன்மை வழங்க வேண்டும். தமிழ் மக்களாகக் கேட்டு இந்தியா மத்தியஸ்தம் வகிக்குமாக இருந்தால் அது தமிழ் மக்களின் பேரத்தை அதிகப்படுத்தும்.

ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்த்தம் இன்றி இலங்கைத்தீவில் இரண்டு இனங்களும் உடன்பாட்டுக்கு வர முடியாது என்பது கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு. இலங்கைத் தீவில் ஒப்பீட்டளவில் அதிக காலம் நீடித்த இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய இலங்கை- உடன்படிக்கை முதலாவது.இதில் இந்தியப்படையின் பிரசன்னம் இருந்தது.இரண்டாவது, ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை. இதில், ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னம் இருந்தது. மூன்றாவது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். அதில் ஐநா ஒரு மூன்றாவது தரப்பாக இல்லை என்றாலும் ஐநாவின் கண்காணிப்பு அங்கே இருந்தது. அது ஒரு பலமான மத்தியஸ்தம் இல்லை என்பதனால் மூன்று ஆண்டுகளில் அதை மைத்திரி தோற்கடித்தார். இந்த மூன்று உடன்படிக்கைகளின் ஊடாகவும் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல், மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கைத்தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வை எட்ட முடியாது என்பதுதான். எனவே தமிழ்த் தரப்பு ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும். அது பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபந்தனை என்று ரணில் கூறக்கூடும்.அது நிபந்தனை அல்ல.அதுதான் இலங்கை தீவின் யதார்த்தம்.

– நிலாந்தன்.

காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் பணிப்புரை

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அறிவுறுத்தல்.

நகர அபிவிருத்தி அதிகார சபையானது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அதிக சந்தை பெறுமதியுடன் கூடிய சுமார் 1,008 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்களை வைத்துள்ளது.

அதிக சந்தைப் பெறுமதியுடன் கூடிய, இதுவரையில் அதிகபட்ச பாவனைக்கு உட்படுத்தப்படாத இவ்வாறான காணிகள் தேசியத் திட்டத்தின்படி அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுறவில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இப்போதும் நாடளாவிய ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சில காணிகள் பல்வேறு நபர்களினால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், காணி வங்கியொன்றை அமைத்து, காணிகளை உரிய முறையில் பட்டியலிடுவதன் மூலம், காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, அந்த காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் கீழ் காணி அபிவிருத்தியுடன் முதலீட்டு மாதிரிக்கு சில நெகிழ்வுத்தன்மையை வழங்குதல், நெகிழ்வான கொடுப்பனவுகளின் கீழ் முதலீட்டாளருக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்குதல் போன்ற பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட

2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளரான சந்தியாவின் கணவா் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தாா். தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரை போலவே காணாமல் ஆக்கப்பட்ட மற்றவர்கள் சார்பிலும் குரல் கொடுத்து வருகின்றாா்.

உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர ஸ்ரீஷா பண்ட்லா, உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளiமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – யுனிசெவ்

அதிகரிக்கும் உணவுப்பாதுகாப்பின்மை வறுமை உள்நாட்டு வெளிநாட்டு தொழில் புலம்பெயர்வு போன்றவற்றால் இலங்கையில் அனேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் விடுகின்றனர் என யுனிசெவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

2022 இல் சிறுவர் பாதுகாப்பு விவகாரங்கள் அதிகரித்துள்ளன குறிப்பாக கிராம மற்றும் மலையகப்பகுதிகளில் அவை அதிகரித்துள்ளன என யுனிசெவ் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றனர், அதிகரிக்கும் உணவுப்பாதுகாப்பின்மை வறுமை உள்நாட்டு வெளிநாட்டு தொழில் புலம்பெயர்வு போன்றவற்றால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கின்றனர் என யுனிசெவ் தெரிவித்துள்ளது.

இலங்கை 2023 ம் ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் மோசமான பொருளாதார நெருக்கடியின் பிடியில் உள்ளது 2.9 மில்லியன் சிறுவர்கள் உட்பட 6.2 மில்லியன் இலங்கையர்களிற்கு 2023 இல் மனிதாபிமான உதவி அவசரமாக தேவைப்படுகின்றது எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் அதிகரிக்கும் வருமான பாதுகாப்பின்மை அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக குடும்;பங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையி;ல் உள்ளன எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

2002 முழுவதும் தொடர்ச்சியான அடிக்கடி ஏற்பட்ட இயற்கை அழிவுகள் விவசாய துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விளைச்சலை அழித்தன எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களை உணவு உற்பத்தியில் 40 வீத வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் 2022 ஒக்டோபர் முதல்2023 பெப்ரவரி வரை உணவுபாதுகாப்பின்மை மேலும் மோசமடையும் எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

5.3 மில்லியன் மக்கள் ஏற்கனவே உணவுகளை தவிர்க்கின்றனர் இது எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கருவியாக பொதுஜன பெரமுன – பீரிஸ்

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாக மாத்திரமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காணப்படுகிறது.

பஷில் ராஜபக்ஷவைப் போன்று எம்மால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராகவே நாம் வாக்களிப்போம் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர மக்கள் காங்ரஸ் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சுதந்திர மக்கள் காங்கிரஸ் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராகவே வாக்களிக்கும். காரணம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வும் இதில் வழங்கப்படவில்லை.

கடும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டுள்ள போதிலும் கூட , அது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அடுத்த வருடமும் மின்சார கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் தொழிற்சாலைகள் மூடும் நிலையிலும் , ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலையிலும் உள்ளனர்.

ஆனால் இது தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது பாராளுமன்றத்தில் மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பொதுஜன பெரமுனவிற்கோ எவ்வித அக்கறையும் இல்லை.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாகவே உள்ளது.

அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்குமிடையில் காணப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரகசிய ஒப்பந்தத்தின் காரணமாகவே பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறெனில் அவர் ஐக்கிய தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் எம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலின் மூவலமே யார் கூறிய கருத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

ஐந்து நாடுகளின் இராஜ தந்திரிகளுடன் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை கொழும்பில் சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.

புகையிரதங்களின் வேகத்தினை அதிகரிக்க இந்திய கடனுதவி எதிர்பார்ப்பு – பந்துல

புகையிரத அமைப்பை மறுசீரமைப்பதற்காக இந்திய கடன் திட்டத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

10, 20, 30, 40 ஆண்டுகள் பழமையான தடங்கள் உள்ளன, அங்கு வேக வரம்பு 20-30 ஆக அமைக்கப்பட்டுள்ளது. தடங்கள் மேடு பள்ளமாக உள்ளன.

விபத்துகள் ஏற்பட்டு உரிய நேரத்தில் இயக்க முடியாத நிலை உள்ளது. அவர்களை திறம்படச் செய்ய, இந்தியாவிடமிருந்து இந்தியக் கடன் திட்டத்தைப் பெற நாங்கள் நம்புகிறோம்.

அதேபோல், தனியார் முதலீட்டாளர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கு வணிக முறைகளைப் பயன்படுத்துவோம் என்று நம்புகிறோம்.

கடந்த காலத்தில் புகையிரத திணைக்களத்திற்கு வருடத்திற்கு 10 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக ரயில்வே திணைக்களம் இப்போது மாதம் 1 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்க்கிறது. ஆனால், எரிபொருளின் விலையை மட்டுமே அதிலிருந்து எடுக்க முடியும்.- என்றார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கடலட்டை பண்ணைத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்க- சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அத்தகைய சிக்கல்கள் தோன்றாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அமைச்சரின் பொறுப்பாகும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வடக்கு மாகாணத்தில் கடலட்டை பண்ணைகள் மிகப் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடல்தொழில் அமைச்சர், தற்பொழுது ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு கடலட்டை பண்ணைகள் இருப்பதாகவும் இந்தப் பண்ணைகளை ஐயாயிரமாக உயர்த்த வேண்டுமென்றும் அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுப்பதாகவும் ஊடகங்களுடாக செய்திகளை வெளியிட்டுள்ளார். கடலட்டைகள் என்பது மிக விலைமதிப்புள்ள ஏற்றுமதிப்பொருள் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. முன்னரும் பாக்குநீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவிலிருந்து கடலட்டைகள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது கடலட்டை பண்ணைகளை உருவாக்கி, அதன் மூலம் பாரிய அந்நியச் செலாவணியைக் கொண்டுவர முடியுமென்றும் குறுகிய காலத்திற்குள் மீனவர்கள் பெரும் பணம்படைத்தவர்களாக மாறலாம் என்றும் அமைச்சரினால் ஆசைவார்த்தைகள் கூறப்படுகின்றது.

கடலட்டை பண்ணைகள் அமைப்பதெற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. இரண்டு கடலட்டைப் பண்ணைகளுக்கு இடையில் ஏறத்தாழ 1000மீ இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் அத்தகைய இடைவெளியில்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது.

இரண்டாவதாக அப்பிரதேசங்களில் உள்ள மீனவர்களுக்கு பண்ணைகளை வழங்குவதை விடுத்து, அப்பிரதேசங்களைச் சாராதவர்களுக்கும் வெளியாட்களுக்கும் அந்தப் பண்ணைகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மூன்றாவதாக குறுகிய காலத்திற்குள் வருமானம் ஈட்ட முடியுமென்று மீனவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் புத்தளம், சிலாபம் போன்ற இடங்களில் இறால் பண்ணையில் ஏற்பட்ட இழப்புகள் கடலட்டைகள் பண்ணைகளுக்கும் ஏற்படலாம் என்ற அச்சமும் ஐயமும் தோன்றியுள்ளது. கடலட்டைப் பண்ணைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, பாரம்பரியமாக எமது மீன்பிடி, அதனூடாக வடக்கு மாகாணம் பெற்றுவந்த கடலுணவுகள், ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் இவையெல்லாம் அழிந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட இடங்களில் அமைசசரின் பிணாமிகளின் பெயரில் கடலட்டை பண்ணைகளுக்கான நிறுவனங்கள் திறக்கப்படுவதாகவும் அதன் பெயரில் பண்ணைகள் உருவாக்கப்படுவதாகவும் இதனால் அந்த பிரதேசத்து மீனவ மக்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. முன்னர் மீனவர்கள் தொழில் செய்த இடங்களில் பண்ணைகளை உருவாக்குவதன் ஊடாக, அந்த மீனவர்களுக்கான பாரம்பரிய தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இதன் காரணமாகவே பல்வேறு மீனவ சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, 5000 பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளைக் கொடுக்கப்போவது யார் என்று பார்த்தால் அது யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மையம்கொண்டுள்ள சீன நிறுவனம் ஒன்றே இந்த கடலட்டை குஞ்சுகளை வினியோகிக்கப்போகும் ஏக வினியோகஸ்தர்களாக இருக்கப்போகின்றனர். இந்த சீன நிறுவனம், கடலட்டை குஞ்சு பொரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உள்ளுர் மீனவர்களுடன் பரிமாறிக்கொள்வதற்குத் தயாரில்லை. அந்த தொழில்நுட்பம் ஏகபோக உரிமையாக சீனர்களின் வசமே இருக்கப்போகின்றது. இதனூடாக வடக்கில் சீனா நிரந்தரமாகக் காலூண்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் சீன நிறுவனம் தீர்மானிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள் கடலட்டைக் குஞ்சுகளை கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். இந்த குஞ்சுகளின் மூலம் கிடைக்கப்பெறும் கடலட்டைகளை நாளை கொள்வனவு செய்யும் நிறுவனமாகவும் இதே சீனநிறுவனம்தான் திகழப்போகிறது. இதனால் குஞ்சுகளை கொள்ளை இலாபத்திற்கு விற்று, குறைந்த விலையில் கடலட்டைகளைக் கொள்வனவு செய்து சீனா இரட்டிப்பு இலாபத்தினை அடையப்போகிறது. மேலும், இந்தியாவுடன் மிக நீண்ட எல்லைத் தகராறுகளைக் கொண்டுள்ள சீனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலூண்றுவதினூடாக இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது என்பதை எமது அமைச்சரும் மீனவ சகோதரர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது பாரம்பரிய மீன்பிடியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வடக்கு மாகாண மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இங்கிருந்து கிடைக்கக்கூடிய கடலுணவுகள் கிடைக்காமல் போவதற்கான வழிமுறையாக இந்தப் பண்ணைத்திட்டங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோன்று கடலட்டை குஞ்சுகளுக்கான ஏகபோக வினியோகத்தை சீன நிறுவனத்திடம் கையளித்து, முழு மீனவ சமுதாயமும் அவர்களில் தங்கியிருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதும் மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும் என்பதையும் அமைச்சருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலட்டைப் பண்ணை அமைக்கும் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பிலும் ஏராளமான கரிசனைகளை உருவாக்கும். ஆகவே இவை அனைத்தையும் கவனத்திலெடுத்து அமைச்சர் செயற்படுவார் என்றும் செயற்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துக்களை விற்றே அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க வேண்டும் – பந்துல

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஜப்பானுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.

எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலைமையில் எம்மிடமுள்ள ஏதேனும் சொத்துக்களை விற்றேனும் அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க வேண்டியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டு சபையுடன் திங்கட்கிழமை (டிச.05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஜப்பானுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் , ஜப்பான் மறுத்தால் மாத்திரமே ஏனையோருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

அமைச்சரவையில் இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. எவ்வாறிருப்பினும் நாம் எம்வசமுள்ள சொத்துக்களில் ஏதேனுமொன்றை விற்பனை செய்யாவிட்டால் , எமது நாட்டுக்கு உலகலாவிய ரீதியில் அன்றாட கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க முடியாது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில் வரவு – செலவு திட்டத்தில் காணப்பட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரச நிறுவனங்கள் பல தனியார் மயப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது எமது அந்நிய செலாவணி இருப்பை 3 பில்லியன் டொலர் வரை அதிகரிக்காவிட்டால் , எமது வங்கிளால் வழங்கப்படும் கடன் சான்று பத்திரங்கள் உலகலாவிய மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. அவ்வாறு அவை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் எம்மால் எரிபொருள் , எரிவாயு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய முடியாது.

கடந்த வாரம் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தினால் நீண்ட கால கடன் தொடர்பில் இலங்கை மேலும் ஒரு படி தரமிறக்கப்பட்டுள்ளது. யார் ஆட்சி செய்தாலும் யார்த்தமான இந்த நிலைமையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். ஏதேனும் எம்மிடமுள்ள சொத்துக்களை விற்றேனும் இந்த டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால் எம்மால் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது. எனவே துரிதமாகவும் பொறுப்புடன் எவ்வாறேனும் அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.