வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டமை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜீவன் தொண்டமான் கோரிக்கை

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளன.

அதேபோன்று விக்கிரகங்களும் மாயமாகியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் தானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கில் பெளத்த மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் விசேட கூட்டம்

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று(புதன்கிழமை) விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில், கொழும்பு – 07 இல் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது – சுனில் ஹந்துனெத்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர்.

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது.

பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா?

நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார்.

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“: நெடுந்தீவில் போராட்டம்

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் மக்கள் இன்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெரும்பான்மை சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் – தொல்.திருமாவளவன்

கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவியமைக்கு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.

தற்போது வரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது.

கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு உண்மையை கண்டறியும் குழுவை நியமிப்பது கேலிக்குரிய செயல் – முன்னாள் ஆணையாளர்

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உண்மையை கண்டறிய மேலும் ஒரு குழுவை நியமிப்பதானது கேலிக்குரிய செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சர்வதேச மன்னிப்பு சபையின் வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில், அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் இதுவரை அமுல்படுத்தப்படாத நிலையில், புதிய ஆணைக்குழு ஒன்றினை அமைப்பதற்கும், அந்த விடயங்கள் தொடர்பில் கற்றாராய்வதற்கும் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச மற்றும் அலி சப்ரி ஆகியோர் முயற்சிக்கின்றனர்.

அமைச்சர்களின் இந்த செயலை கேலிக்குரிய செயலாகவே அவதானிக்க முடியும் என முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் சிதைக்கப்பட்டமை வன்முறைக்கு இட்டு செல்லும் – அருட்தந்தை சத்திவேல்

வெடுக்குநாறி மலை சைவ ஆலயம் சிதைக்கப்பட்டமை சைவ மக்களை பலவந்தமாக வன்முறைக்கு இட்டு செல்லும் திட்டமிட்ட இனவாத அரசியலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (28.03.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கினை சிங்கள பௌத்த மயமாக்கும் அடவாடி பயங்கரவாத தொல்பொருள் திணைக்களத்தோடு வேரும் பயங்கரவாத இன அழிப்பு அரசியல் சக்திகள் தமிழர்களின் தேசியத்தை சிதைக்க களமிறக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர்ச்சியாக சைவர்களின் வழிபாட்டுத் தலங்களை சிதைப்பதும் பக்தி சின்னங்களை உடைத்தடிப்பதும் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே வவுனியா வெடுக்குநாறி மலை சைவ ஆலயம் சிதைக்கப்பட்டுள்ளது. இது சைவ மக்களை பலவந்தமாக வன்முறைக்கு இட்டு செல்லும் திட்டமிட்ட இனவாத அரசியலாகும். இதனை வன்மையாக கண்டிப்போடு இதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும், அரசியல் சக்திகளையும் தமிழ் அரசியல் தலைமைகளும், சமய தலைமைகளும் வெளிப்படுத்தாவிடின் இன்னும் ஒரு பயங்கர அரசியல் முள்ளிவாய்க்கால் அழிவை சந்திக்க வேண்டி ஏற்படும்.

ஏற்கனவே மன்னர் பிரதேசத்தில் நீண்ட காலமாக சைவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் பிரச்சனை நிலவுகின்றது. இதனை சரியான வகையில் கையாள்வதற்கும் தீர்பதற்கும் சமய தலைமைகள் தவறியுள்ளனர். அரசியல் தலைமைகளும் பாராமுகமாக உள்ளனர். நீறு பூத்த நெருப்பாக காணப்படும் இப் பிரச்சினையை தொடர்ந்து நீடிப்பதற்கு சமய தலைமைகள் இடம் கொடுக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

வடகிழக்கினை சிவ பூமியாக சித்தரிக்கும் வேலை திட்டத்தின் ஓர் அங்கமாக ஆனையிறவில் நடமாடும் சிவன் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அன்று ஆனையிறவை விடுதலைப் புலிகள் உயிர் தியாகத்தோடு கைப்பற்றிய போது இருந்த மகிழ்ச்சி நடமாடும் சிலை வைக்கப்பட்ட போது ஏற்படவில்லை. வடகிழக்கில் எந்தவொரு பாரிய சலசலப்பையும் ஏற்படுத்தவுமில்லை. இதற்கு மத்தியில் திருவள்ளுவர் இந்துவா? இல்லையா? எனும் பட்டிமன்றமும் நீண்டு செல்கின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் யுத்த வெற்றியை மீண்டும் அடையாளப்படுத்தும் முகமாக முப்படைகளின் தளபதி சவேந்திர செல்வா தாது கோபுர திரை நீக்கத்திற்கு சிங்கள நடனத்தோடு அழைத்து வரப்படுகின்றார். இதன் தொடர்ச்சியாகவே கச்சைதீவில் களவாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இது சைவர்களை தனியாகவும், கிறிஸ்தவர்களை தனியாகவும், தமிழர்களின் தேசியம் காக்கும் அரசியல் கதைப்போரை தனியாகவும் பிரித்துவிட்டு அரசியல் குளிர்காயும் தந்திரமும் ஆகும்.

இன்னொரு பக்கம் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் தமது பாதுகாப்புக்காக இந்தியாவை அரவணைப்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் மனநிலையை தூண்டுவதோடு இந்தியாவின் தலையிட்டால் 13 ஏற்றுக்கொள்ள வைக்கும் அரசியல் சதியும் இதன் மூலம் அரங்கேறலாம்.

இதேவேளை இன மற்றும் மதவாத காவலர்களாக செயல்படும் நாடளுமன்ற உறுப்பினர்கள் தமது தீ நாக்கை நீட்டி உள்ளனர். சரத்வீரசேகரா”சமய பயங்கரவாதம் வடகிழக்கில் தலை தூக்கி உள்ளது”என்று கூறியுள்ளதோடு விமல் வீரவம்ச

” நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமாகும். தமிழர்களுக்கும் இந்த நாட்டில் ஒரு அங்குல நிலமும் இல்லை”என கூறியுள்ளார்.

இது தமிழர்களுக்கு எதிரான அரசியல் சதித்திட்டமாகும். தமிழர்கள் தமிழ் தமது பாதுகாப்புக்காக இந்தியாவையும் 13 யும் நாட அதற்கு எதிராக தெற்கை தூண்டிவிடும் நரி தந்திரமாகும்.

ஆதலால் வடகிழக்கு மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் அரசியல் தெளிவோடு சமய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு அரசியல் பயணம் மேற்கொள்ளல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தை கூட்டாக பற்றிக் கொள்ளவில்லையெனில் தமிழர்கள் இன்னும் ஒரு அழிவையே சந்திப்பார். இதற்கு அரசியல் மற்றும் சமய தலைவர்கள் இடம் கொடுக்கக் கூடாது என்பதே எமது வேண்டுகோள்.

இலங்கையர்கள் எண்மர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

ஆண் ஒருவரும் 5 பெண்களும் 2 சிறார்களுமே இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் சென்றுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இவர்கள் 8 பேரும் மன்னாரில் இருந்து நேற்றிரவு படகு மூலம் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

தமிழக கடலோர காவற்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு தனுஷ்கோடிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, விசாரணைகளையடுத்து மண்டபம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

பசுமை பொருளாதாரக் கொள்கை விரைவில் அறிமுகம் – ஜனாதிபதி

பசுமை பொருளாதாரத்திற்குள் நுழையும் வலயத்தின் முதலாவது நாடாக இலங்கை விளங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பசுமைப் பொருளாதாரக் கொள்கை எதிர்வரும் இரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் இயற்கை சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த முதலீட்டாளர்களுடன் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பூரில் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனத்துக்கு சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனமொன்றுக்கு திருகோணமலை – சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சம்பூர் நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்ட இடத்திலேயே, 135 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தவிர 23.6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சம்பூரில் இருந்து கப்பல்துறை வரையிலான 40 கிலோமீட்டர் தூரம் கொண்ட 220 கிலோவாட் மின்மாற்றுவழியை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், 85 மெகாவாட்டுன் கூடிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரையில் 220 கிலோவாட் இயலளவுடன் கூடிய 76 கிலோமீட்டர் தூரம் கொண்ட மின்மாற்றுவழியை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை 2024 முதல் 2025 வரையிலான இரு ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் மீள்புதுப்பிக்கத்தக்க துறையின் ஒத்துழைப்பிற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை தனியார் மற்றும் அரச துறையின் தொழில்முயற்சியாளர்கள் ஒருங்கிணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டு ஏனைய பகுதிகளிலும் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்னுற்பத்தி, கடலோர காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்த்திணிவு சார் மின்னுற்பத்தி கருத்திட்டங்கள் என்பன இந்த இணக்கப்பாட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.