நிதி அமைச்சு பதிலளிக்காமையால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்படவில்லை

இதுவரை நிதி கிடைக்காத காரணத்தினால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 07 இலட்சம் தபால் மூல வாக்குச்சீட்டுகளில் 75 வீத வாக்குச்சீட்டுகளே இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை உரிய முறையில் வழங்குமாறு கோரி நிதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிதி உரிய நேரத்தில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர், வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க முடியாது எனவும் அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய நேரத்தில் நிதி கிடைத்தால் 30 நாட்களுக்குள் வாக்குச்சீட்டுகள் முழுவதையும் அச்சடித்து வழங்க முடியும் என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடும் சரியான திகதியை 03 நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கும் பட்சத்திலேயே, பாதுகாப்பினை வழங்க முடியும் என அரச அச்சகத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் 533 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரச அச்சகம் கூறியுள்ளது.

எனினும், 40 மில்லியன் ரூபாவே இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம்: ஸ்ரிவ் ஹங் வலியுறுத்தல்

நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

வளர்ச்சியடையும்  சந்தைகளில் நாணய கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருபவரும், ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) பிரயோக பொருளியல் பேராசிரியருமான ஸ்ரிவ் ஹங் (Steve Hanke) சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள் மாற்றப்படாத பட்சத்தில், அந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக ஒரே நிலையிலேயே காணப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் உயர்மட்ட அதிகாரத்தில் பதவி வகிக்கப்பவர்கள், நீண்ட காலமாக ஒரே நிலையில் இருப்பதால் எந்தவொரு விடயத்திலும் மாற்றம் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்டுள்ள ஸ்ரிவ் ஹங் (Steve Hanke), சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவியாக இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை 1965 ஆம் ஆண்டு முதல் 16  தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுள்ள போதிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தற்காலிக உதவியாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் அவை பயனளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் இலங்கை மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை எனவும் பேராசிரியர்  ஸ்ரிவ் ஹங் (Steve Hanke) குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சிறைத்தண்டனை: மிரட்டும் ஐ.தே.க தேசியப்பட்டியல் உறுப்பினர்

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் (1979 ஆம் ஆண்டு இலக்கம் 61) குற்றமிழைக்கும் ஒவ்வொரு நபரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்து, விசாரணையின் மூலம் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் கடூழிய சிறைத்தண்டனை அல்லது 2000 ரூபாய்க்குக் குறையாத ஐயாயிரம் ரூபாவுக்கு மிகாத அபராதம் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அந்த அபராதம் ஆகிய இரண்டும் விதிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த குற்றத்தை செய்பவர் பணிபுரியும் உரிமையை இழக்க நேரிடும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 7ஐ மேற்கோள் காட்டி வஜிர அபேவர்தன குறிப்பிடுகையில், “இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்காக ஒரு நபருக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கு தொடங்கப்பட்டால், அவர் ஒரு தொழிற்சங்கத்தால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதில் அவர் இணைந்தார் என்பது ஒரு மன்னிப்பிற்கான காரணமாக அமையாது” என்றார்.

தொழிற்சங்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை எதுவாக இருந்தாலும், அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் விதிகளுக்கும் அத்தகைய பிற எழுதப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு அல்லது பிற முரண்பாடுகள் ஏற்பட்டால், அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் விதிகள் மேலோங்கும் என தெரிவித்தார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

வர்த்தமானி அறிவிப்பில் கையொப்பமிட்டு, ஜனாதிபதி பொது போக்குவரத்து சேவைகளை பயணிகள் அல்லது பொருட்கள், இறக்குதல், வண்டி, இறக்குதல், சேமிப்பு, விநியோகம் மற்றும் உணவு மற்றும் குளிர்பான பொருட்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருளை எந்தவொரு துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து அகற்றுவதற்கு பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாறியுள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டார்.

சுங்கச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சாலை, பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் இரயில்கள், வான்வழி போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வஜிர அபேவர்த்தன மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமானதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராகினார்.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளிற்கும் தீர்வு காணப்படும் வரை போராடுவோம்: யாழில் வசந்த முதலிகே

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முன்னிலைபடுத்திய போராட்டம் மற்றும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சின என்பது தனியே எரிவாயு அடுப்பு,மின்சாரம் என்பனவற்றுக்குள் எமது கோரிக்கைகள் உள்ளடங்கவில்லை மாறாக பயங்கரவாத தடைச் சட்டம் என்பதும் எமது தமிழ்மக்களின் பிரச்சினைகளில் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. வசந்த முதலிகே ஆறுமாத காலம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்தான் இது குறித்து ஆழமாக நீங்கள் பார்க்கின்றீர்கள் ஆனால் எமது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் காணாமலாக்கப்பட்டும் சுட்டுபடுகொலையும் செய்யபட்டுள்ளார்கள். ஆக போராட்டம் என்பது எமக்கு புதிதல்ல குட்டிமணி தங்கதுரை பயங்கரவாத தடைச் சட்டம் சிங்களவருக்கும் எதிராக திசைமாறும் போது சிங்களவர்கள் புரிவார்கள் என்று அன்று கூறியது இன்று நிச்சயமாகியுள்ளது.

ஆக எமது பிரச்சினைகளை தெற்கிற்கு கொண்டு சென்று இனி போராட்டங்களின் போது இதனை முன்னிலைபடுத்துகின்ற பொழுது எமது நிலைப்பாடுகள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான உறுவுநிலைகளை ஆரோக்கியமாக்கும் என தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் எமது தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடையே தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கும்சிங்கள நகரங்களில் சிங்கள மக்கள் மத்தியில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அனைத்தா பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்து புரிதலை ஏற்படுத்தவேண்டும் எனவும் இதே நிலையில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு யுத்தமே பொருளாதார நெருக்கடிக்கு காரணமா எனவினவிய பொழுது அது பிரதான காரணியாக தாம் ஆமோதிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த எமது பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையை தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து புரிதலை ஏற்படுத்தும் செயற்திட்டத்தை வரவேற்கின்றோம் இதே நேரம் முறைமையான கலந்துரையாடல் ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக எடுத்து அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை அடிப்படை பிரச்சிகனைகளுக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்கின்ற பொழுது அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று எனவும் மாணவர்களுக்கூடாகவே நாட்டின் பிரச்சினைகளை தீர்கமுடியும் அந்த அடிப்படையில் சிங்கள மாணவர்களின் லெளிவுபடுத்தலுக்காக பின்வரும் விடயமும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு கையளிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடினர். தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை பயங்கரவாதமாக தெற்கில் சிங்கள மக்களிடத்திலும், சர்வதேசத்தின் மத்தியிலும் சித்தரித்த சிறிலங்கா அரசானது இலட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்து, கொடுங்கோல் அடக்குமுறை இராணுவத்தினால் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து உள்ளனர்.

இலங்கைத் தீவு பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த காலம் முதல், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சாத்வீக முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம். இப்போராட்டங்கள் வன்முறையினூடாக அடக்கப்பட்டதினால், ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். தமிழ் மக்களின் தேசிய ஆயுதப் போராட்டம் சிறிலங்கா பேரினவாத அரசினால் கொடுங்கரம் கொண்டு மிகப்பெரும் மனிதப் பேரழிப்பினூடாக முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது. இந்த இறுதியுத்தத்தின் போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார். கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட “பாலியல் வன்முறை முகாங்கள்” பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, தமிழர் தாயகத்தில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள் உள்ளனர். இவ்வாறு நீண்ட நெடிய காலமாக இனவழிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் எமதினதிற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் நிறைவடைந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் வடக்கு-கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. வடக்கு-கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்தும் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இன்று பொருளாதார பிரச்சனையாலும், சிறிலங்கா அரசின் அடக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ள தென்பகுதி சிங்கள தரப்பினர், தற்போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அணுகத்தொடங்கி உள்ளார். அவ்வாறு அணுகும் எந்த தரப்பினரும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவதுடன் பின்வரும் விடயங்களில் தமது உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும்.

1. வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, மதம், கலாச்சார அடையாளங்களை கொண்ட தனித்துவமான தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. ஒன்றிணைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுவழி தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. தமிழினம் தன்னாட்சிக்கு உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணயம், தமிழினமும் உரித்துடையது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், அதன்வழி தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் அவர்களுக்குண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. தமிழினம் தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்க, சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பினுடாக சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6. தமிழினத்தின் மீது காலகாலமாக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, இனப்டுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறையினுடாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழரின் நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

9. சிறிலங்கா அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் அரசியல் வெளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

10. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்படி விடையங்கள் தீர்க்கமான வெளிப்படுத்தலை வெளியிடும் இடத்தேதான் இனப்பிரச்சனைக்கு நிரந்திர தீர்வையும் அதன்வழி பொருளாதார பிரச்சனைக்கு ஓர் தீர்வையும் எட்ட முடியும்.

இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ஜெல்சின் ,திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் றிபாத், தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திலான்,ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அசான்,ஜெயவர்த்தனபுர,கொழும்பு,இணைப்பாளர் பிரசாந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்தள விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான நிலையத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளரிடம் கையளிக்க முன்மொழிவுகள் கோரப்படுவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

விமான நிலையத்தின் நிர்வாக விவகாரங்களை முதலீட்டாளரிடம் எவ்வாறு ஒப்படைப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

மின்சாரசபையை விற்பனை செய்ய முயன்றால் தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் சாக்குப்போக்கில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கவோ அல்லது விற்பனை செய்யவோ நடவடிக்கை எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு பல நிறுவனங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து பல தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவை இந்த செயல்முறைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறினார்.

இதற்கான வழிமுறைகள் மற்றும் காலக்கெடு விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இறுதிச் சட்டத்திற்கு முன்னர் அமுல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 16 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் வந்து, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்து, கடல்வளங்களை நாசப்படுத்திய 16 பேரே கைதாகினர்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினங்களை சேர்ந்த மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

ஜி 20 நாடுகள் இலங்கைக்கு உதவும் வாய்ப்பை தவறவிட்டுள்ளன – சர்வதேச மன்னிப்புச் சபை

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இருப்பினும் இதன்போது கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடொன்றுக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அக்கூட்டத்தின் இறுதி அறிக்கையில் இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே மேம்போக்காக மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வறிக்கையானது உலகளாவிய ரீதியில் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதுடன்,  இலங்கையின் கடன் நிலைவரம் தொடர்பில் உடனடித்தீர்வொன்றைக் கண்டறிவதற்கான அவசியத்தை ஏற்றுக்கொண்டிருப்பினும், அதனை முன்னிறுத்தி செயற்திறன்மிக்க திட்டங்களோ அல்லது நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை.

ஜி-20 அமைப்பானது சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்தரப்புக் கடன்வழங்கல் கட்டமைப்புக்களில் அங்கம்வகிக்கும் ஆதிக்கம் மிகுந்த நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

எனவே இவ்வமைப்பானது செயற்திறன்மிக்கவகையில் ஒருங்கிணையுமேயானால், அதனூடாக இலங்கைக்கு அவசியமான கடன்சலுகையை வழங்கவும், நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்து வலுப்படுத்தவும் முடியும்.

ஏனெனில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது நாட்டுமக்கள்மீது இன்னமும் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றது. உயர்வான பணவீக்கம், மட்டுப்படுத்தப்பட்டளவிலான சமூகப்பாதுகாப்பு, உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் என்பன மக்களின் வாழ்க்கைத்தரத்திலும், அவர்களின் உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையின் கடன்நெருக்கடியானது மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இயலுமையைப் பாதித்துள்ளது.

எனவே 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்படும் தாக்கத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாகவும், பொறுப்புக் கூறத்தக்கவையாகவும் அமைவதென்பது இவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் உருவாவதைத் தவிர்ப்பதற்கு இன்றியமையாததாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை இருபதாம் திகதிக்கு முன்னர் வழங்க முடியாது – அரச அச்சகம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு செலவாகும் பணம் இதுவரை செலுத்தப்படாததால், அதற்கான பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிட 152 மில்லியனும் ஊழியர்களின் கொடுப்பனவிற்காக 52 மில்லியன் ரூபானும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் இதுவரை தம்மால் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 40 மில்லியன் மட்டுமே திறைசேரியில் இருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை –

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு அரச அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தின் அடிப்படையில் அதற்கு தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இலங்கைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 ஆவது திருத்தும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனநாயக ஆட்சி, முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.