வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் பங்காளிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் பங்காளிக் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இளைஞர் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது இலக்காகும். அதற்கமைய வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். அந்த கூட்டணி எந்த வகையிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது. காரணம், இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்திலேயே தேர்தலில் போட்டியிடுகின்றன.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யாகும்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியனை வழங்கினால் செலவுகளை கட்டுப்படுத்தி, அந்த தொகைக்குள் தம்மால் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

தற்போது சமூக வலைத்தள ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை முடக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. அது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

நாடு வங்குரோத்து அடைந்தமையால் ஜே.வி.பி.க்கும் பங்குண்டு. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்களில் ஜே.வி.பி. பங்கேற்றிருக்கிறது.

அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஜே.வி.பி.யே அனுமதி பத்திரத்தை வழங்கியது. எனவே தற்போது தம்மை தூய்மையானவர்களாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கும் ஜே.வி.பி.யை பற்றி வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவர்.

நாம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடுவோம். வடக்கிலும் கூட்டணியாகவே களமிறங்குவோம். இது தொடர்பில் தற்போது எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

கரைதுறைப்பற்று தவிசாளரை விசாரணைக்கு அழைத்த முள்ளியவளை பொலிஸார்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்களான ரெலோ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரமான கமலநாதன் விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், திருச்செல்வம் இரவீந்திரன், தவராசா அமலன், சமூக செயற்பாட்டாளர்களான ஞானதாஸ் யூட் பிரசாந், பாஸ்கரன் வனஜன் ஆகியோரிடமே வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குறித்த பணிக்குழு உறுப்பினர்கள் ஆறு பேரையும் இன்று பொலிஸ் நிலையம் வருமாறு பொலிஸார் வீடுகளுக்கு சென்று நேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது குறித்த ஆறு பேரும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில், கடந்த நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்காக முதல் நாள் 26ஆம் திகதி மாங்குளம், முல்லைத்தீவு வீதியில் மாவீரர் துயிலும் இல்ல வாசலில் அமைக்கப்பட்ட வளைவில், தமிழீழ வரைபடம், துப்பாக்கி, மாவீரர்கள் சிலரது புகைப்படங்கள் காணப்பட்டமை தொடர்பிலேயே குறித்த வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பணிக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நாம் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியபோது இதே வளைவே இருந்தது. அது தொடர்பில் எந்த விடயமும் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

ஆகவே, அதே வளைவையே நாம் இம்முறையும் அமைத்தோம்.

குறிப்பாக, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்காக 26ஆம் திகதி மாங்குளம், முல்லைத்தீவு வீதியில் துயிலும் இல்ல வாசலில் அமைக்கப்பட்ட வளைவில் தமிழீழ வரைபடம், துப்பாக்கி, மாவீரர்கள் சிலரது புகைப்படங்கள் முதலான சின்னங்களை காலை 8.30 மணிக்கு முன்னரே நாங்கள் அகற்றுவதற்கு இணக்கம் தெரிவித்து, இரவே அந்த சின்னங்களை தீந்தை பூசி மறைத்திருந்தோம்.

எனினும், அதனை மாற்றம் செய்து மறைக்கும் முன்னர் பொலிஸார், அந்த சின்னங்களை அகற்றி, அவற்றை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். அதுதான் நடந்தது என கூறினர்.

குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ள நிலையிலேயே குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதாகவும், மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு – பழனி திகாம்பரம்

“நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்.” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (08) தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அக்கரப்பத்தனை லக்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

அத்தோடு, கட்சியின் பொது செயலாளர் எஸ்.பிலிப், பிரதி பொது செயலாளர் பா. கல்யாணகுமார், நிதி செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், உப தலைவர்களான ராஜமாணிக்கம், சிவானந்தன், தேசிய அமைப்பாளர் நகுலேஷ்வரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், பிரதி தேசிய அமைப்பாளர் டி.கல்யாணகுமார் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” மலையக மக்களுக்காக உரிமை அரசியலை முன்னெடுப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கம் உருவாக்கப்பட்டது. அந்த கொள்கையின் அடிப்படையிலேயே சங்கம் தற்போதும் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு நான் அமைச்சராக பதவியேற்றேன். குறுகிய காலப்பகுதிக்குள் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையக மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தேன். அமைச்சராக நான் நேர்மையாக செயற்பட்டதால்தான் எனக்கு அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கி மக்கள் நாடாளுமன்றம் அனுப்பிவைத்தனர். மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக செயற்படமாட்டேன்.

நான் மற்றையவர்களைபோல வாயால் வடை சுடும் அரசியல்வாதி கிடையாது. சொல்வதை செய்து காட்டுவதே என் பழக்கம். அரசியலுக்கு வந்து சொத்துகளை இழந்துள்ளேன். மாறாக சேர்த்தது கிடையாது. எமது மக்களை முன்னேற்ற வைப்பதே எனது இலக்கு. மாறாக மக்களை வைத்து பணம் உழைக்க முற்படவில்லை.

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகின்றன. இதனை கொண்டாட முடியாது. ஏனெனில் மக்களின் வாழ்க்கை நிலை முழுமையாக முன்னேறவில்லை. இந்நிலைமையை இந்தியா, பிரிட்டன் மற்றும் இலங்கை அரசுகளுக்கு எடுத்துகூறுவதற்காக நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும். பெப்ரவரி 26 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டாவில் இந்நிகழ்வை நாம் நடத்தவுள்ளோம். ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எமது தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி அவர்களை முதலாளிகளாக்க வேண்டும்.” – என்றார்.

சிறைச்சாலையினுள் சேபால் அமரசிங்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (08)  கொழும்பு விளக்கமறியல்சாலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு  விளக்கமறியல் சிறைச்சாலையில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள  சேபால் அமரசிங்க,  சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளால்   தாக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அவரை  தாக்கியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ஸ்ரீ தலதா மாளிகையை  அவமதித்த சம்பவம் தொடர்பில் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல், வங்கிகளில் அதிகரித்த வட்டியை நிறுத்துதல் , முறையற்ற நியமனத்தை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவைத்தின் பாலைவனத்தில் பணிபுரிந்த 6 இலங்கையர்கள் அந்நாட்டு இராணுவத்தின் உதவியுடன் மீட்பு

குவைத் நாட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 6 இலங்கை இளைஞர்கள் மீட்கப்பட்டு இன்று நாடு திரும்பினர்.

குறித்த இளைஞர்கள் 6 பேரும் கடுமையாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு, தாக்கப்பட்டு உணவும் சம்பளமும் வழங்கப்படாத நிலையிலேயே பெரும் முயற்சியில் மீட்கப்பட்டு இன்று (09) காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் வசிப்பவர்களாவர். இவர்கள் கிண்ணியாவில் உள்ள சட்டவிரோதமான தரகர் ஊடாக குவைத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த இலங்கையர்கள் குவைத்தில் ஷேக் ஒருவரால் நடத்தப்படும் பண்ணையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இந்த இலங்கையர்கள் இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது நிலைமை குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்களை மீட்பதற்காக குவைத்தின் உயர் பாதுகாப்பு பிரிவின் மேஜர் ஜெனரல் ஒருவரின் உதவியுடன் சிறப்பு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இவர்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடன் பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு ஐ.எம்.ஈவ் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை – ஜனாதிபதி

இலங்கை அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதிஉதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதிக்காக இலங்கை அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செலவீனங்களை குறைப்பது குறித்து என சர்வதேச நாணயநிதியம் ஆராய்கின்றது ஆனால் படிப்படியாக அதனை செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி இராணுவத்தில் உள்ளவர்களை வீட்டுக்கு செல்லுங்கள் என தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை வேறு துறைகளிற்கு தொழில்துறைகளிற்கு மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு இதனால் ஏனைய துறைகளில் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

அவர்களை வேறு தொழில்துறைக்கு மாற்றினால் அந்த தொழில்துறையை சேர்ந்தவர்கள் தங்களுடைய வேலையை இராணுவம் கைப்பற்றிவிட்டது என முறைப்பாடு செய்வார்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அரசகட்டிடங்களை நிர்மானிக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளமுடியும்ஆனால் கட்டுமான துறைக்கு அரசாங்கத்தின் ஒப்பந்தம் எதுவும் கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் விதித்துள்ள பல நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம் சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது அது பெரிய பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லசந்த கொல்லப்பட்டு 14 வருடங்களாக கைது செய்யப்படாத குற்றவாளிகள்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  ஜனவரி 8 ஆம் திகதியுடன் 14 வருடங்கள் நிறைவடையும் நிலையில், பொரளை கனத்தையில் அவரை நினைவு கூரும் விஷேட அஞ்சலி வைபவம் இடம்பெற்றது.

லசந்தவின் கல்லறைக்கு அருகே இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது லசந்த குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சட்டத்தரணிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (08)காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த அஞ்சலி  நிகழ்வில், லசந்தவின் சகோதரரான லால் விக்ரமதுங்க, அவரது மகள் ரைஸா உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உட்பட பல உள் நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் பங்கேறிருந்தனர்.

இதன்போது முதலில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு லசந்தவின் சகோதரரான லால் விக்ரமதுங்க கருத்து வெளியிட்டார்.

லால் விக்ரமதுங்க கருத்து தெரிவிக்கையில்,

அத்துடன் லசந்தவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க தனது ட்விட்டரில் தந்தையின் நினைவு நாள் குறித்து கருத்து பதிவு செய்துள்ளார். அதில்,

14 வருடங்களாக நியாயம் கிடைக்காவிட்டாலும், லசந்தவின் கொலைக்கு எதிராக நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக அதில் அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  ‘ கடந்த மக்கள் போராட்டத்தின் போது உங்கள் ஆத்மாவினை உணர்ந்தேன். அவை அனைத்தையும் காண நீங்கள் உயிருடன் இருந்திருக்க வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி செல்லும் போது அடையாளம் தெரியாதோரால் கொல்லப்பட்டார்.

முதலில் அவர் சுட்டுக்கொல்லப்ப்ட்டதாகவே பிரேத பரிசோதனை அறிக்கையும் வழங்கப்பட்டிருந்த நிலையில்,  2015 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற சி.ஐ.டி. விசாரணைகளை அடுத்து 2016 இல் அவரது சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது  லசந்த  கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்தி கொல்லப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்டது.  மிருக வேட்டைக்கு பயன்படுத்தும் ஒருவகை ஆயுதத்தால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக  சி.ஐ.டி.யினர் சந்தேகிக்கின்றனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலையாளைகளை தப்பிக்க வைக்க அவர் கொலை செய்யப்பட்டது முதல் கடந்த 2015 வரை கல்கிசை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிசாரால்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை  சி.ஐ.டி.யினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  லசந்த விவகாரத்தில் சாட்சியாளரான  லசந்தவின் சாரதியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சார்ஜன்ட் மேஜர் உதலாகம என்பவரும், லசந்தவின் குறிப்புப் புத்தகம் உள்ளிட்ட சாட்சிகளை அழித்து  புதிய சாட்சிகளை நிர்மாணித்தமை தொடர்பில் அப்போது கல்கிசை பொலிஸ்  குற்றவியல் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால,  மேல் மாகாணத்தின் தெற்கு முன்னாள் பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் தற்போது பிணையில் உள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படு கொலை செய்யப்பட்டு  14 வருடங்கள் நிறைவடையும் நிலையில், அவரை கொலை செய்தது அப்போது மருதானையில் இயங்கிய திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாம் புலனாய்வாளர்கள் என்பதற்கான சாட்சிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2015 முதல் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.எஸ். திசேராவின் கீழ் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான சிறப்புக் குழு முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையிலான விசாரணைகளின் படியும், லசந்தவின் சகோதரர், மனைவி மற்றும் மகளின் வாக்கு மூலங்களின் பிரகாரமும் குறித்த படுகொலைக்கு மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க அம்பலப்படுத்தியமையே காரணம் என தெரியவந்துள்ளது.

அதன்படி, கொலை இடம்பெற்றுள்ள விதம் அதன் பின்னர் விசாரணை என்ற பெயரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் சான்றுகளை அழித்திருக்கும் விதமும், அனுராதபுரம் அதி விஷேட பாதுகாப்பு வலயத்தில் இரு தமிழ் இளைஞர்களை கொலை செய்துவிட்டு அவர்களது மோட்டார் சைக்கிளை கொழும்புக்கு கடத்தி வந்து லசந்தவின் கொலையை புலிகளுடன் தொடர்படுத்த எடுத்துள்ள முயற்சியும் இக்கொலையின் பின்னணியில் மிகப் பெரும் சக்தி ஒன்று இருந்துள்ளமை புலப்படுத்துவதாக சி.ஐ.டி. தெரிவிக்கின்றது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில்  சாட்சியாளர் ஒருவரை  கடத்தியமை, அச்சுறுத்தியமை மற்றும் கொலை குறித்த சான்றுகளை அழித்தமை உள்ளிட்ட விடயங்கள் குறித்த  விசாரணைகளை சி.ஐ.டி. நிறைவு செய்துள்ளது.

எனினும் பிரதான சம்பவமான, சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த குற்றவாளிகளைக் கண்டறியும் விசாரணைகள் தொடர்கின்றன.

இது தொடர்பில் சி.ஐ.டி.யின் விசாரணையாளர்கள், கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ள நிலையில்,  நிறைவு செய்யப்பட்டுள்ள லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியாளர் ஒருவரை  கடத்தியமை, அச்சுறுத்தியமை மற்றும் கொலை குறித்த சான்றுகளை அழித்தமை உள்ளிட்ட விடயங்கள் குறித்த  விசாரணைகளின் கோவைகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும் எவருக்கு எதிராகவும் இதுவரை குற்றப்பத்திரிகை முன் வைக்கப்படவில்லை.

இந்த கொலை குறித்து விசாரணை செய்த, பிரதான விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில்,  விசாரணைகளை நெறிப்படுத்திய, விசாரணையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். இலங்கைக்கு இதுவரையான காலத்துக்குள் 4 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா விகாரையில் சனிக்கிழமை (7) இரவு மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர், ஜெய ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி ஈதலவென்வாவே நாகதிலக தேரருடன் கலந்துரையாடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும்பாலான வெளிநாட்டு தூதுவர்கள் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கமைய செயற்படுகிறார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மதத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பல்வேறு முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

அரச சார்பற்ற அமைப்புக்களின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல், நாட்டின் நடைமுறையில் உள்ள உண்மைத்தன்மைகளுக்கு மதிப்பளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் செயற்படுவது வரவேற்கத்தக்கது.

நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு நட்பு நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என ஜெய ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி ஈதலவென்வாவே நாகதிலக தேரர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது.

இரு நாட்டு மக்கள் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். பௌத்த மத கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு இரு நாடுகளின் நல்லுறவு பலம் பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா குறுகிய காலத்துக்குள் 4 பில்லியன் டொலரை மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளது.

விசேடமாக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவுக்கு 750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், உணவு, மருந்து மற்றும் உரம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக 1 பில்லியன் டொலர் அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை இந்தியா வழங்கும். இலங்கையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்றார்

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா பயணமாகும் ஜனாதிபதி

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

அண்டைய நாடுகளின் தலைவர்களை தவிர, ஆபிரிக்கா அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள் அமர்வுகள் நிதி, சுற்றுச்சூழல், வெளியுறவு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வர்த்தக நிலைகளில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு நடைபெறவுள்ளது.

நான்கு அமர்வுகள் ஜனவரி 12ஆம் திகதியும், ஆறு அமர்வுகள் ஜனவரி 13ஆம் திகதியும் நடைபெறும். மொத்தத்தில் இந்த மாநாட்டுக்காக 120 நாடுகளுக்கு டில்லி, அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.