சவேந்திரவுக்கு எதிராக விமல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு: மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாதுகாப்புத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, அரகலய போராட்டத்தின்போது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

2022ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டமாக, அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தலைவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த நிலையில் கொலை செய்வதாகும் என்று குறிப்பிட்டிருந்த விமல் வீரவன்ச, அந்த நேரத்தில் ஜெனரல் சவேந்திர சில்வா இந்திய விஜயத்தை மேற்கொண்டமை இந்த சந்தேகத்தை எழுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கை!

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகவும் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நியாயமான சமூக வர்த்தக, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு தான் பாடுபட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு வரிகளை குறைத்ததன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கொரோனா தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் ரூபாயின் மதிப்பு கடந்த வருடத்தின் மூன்று மாதங்களுக்குள் 40% குறைந்துள்ளது.

இந்த பின்னணியில் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றதாகவும் இல்லையெனில் இந்த நாடு அழிவை சந்தித்திருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க சரத்வத்தேச நாணய நித்தியத்திற்கு செல்வதைத்தவிர மாற்று வழி கிடையாது என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை) முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலக தமிழ் மக்களுக்கோர் உறவுப்பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு சேவையினை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஆதவன் தொலைக்காட்சி இன்று முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி உள்ளிட்ட லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

மூன்று நேர பிரதான செய்திகளையும், மணித்தியால செய்திகளையும், தமிழர் தாயகத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளையும், புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளையும், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் என 24 மணித்தியாலங்களும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த ஆதவன் தொலைக்காட்சி தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளது.

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம்: ஆயர் இல்லம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

அத்துடன் , அது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் நன்றி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

விமலின் கருத்துக்கு அமெரிக்க தூதுவர் மறுப்பு

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 75 ஆண்டுகால ஜனநாயக மற்றும் இறையான்மை உறுதிப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பகிரப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களை மறுத்துள்ளார்.

‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் , ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.

75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணம் முழுமையாக முடங்கியது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பாரம்பரிய இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடக்கு, கிழக்கில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் வெறிச்சோடி போயுள்ளதாக தெரியவருகிறது

முழுமையாக முடங்கியது மன்னார்

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கர வாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும்,மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25) செவ்வாய் கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பெரும்பான்மைச் சமூகம் தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக் குறியாக்கியே வந்திருக்கிறது – ஜனா எம்.பி

தமிழின அழிப்பினை காலங்காலமாக நிகழ்த்தி வருகின்ற பெரும்பான்மைச் சமூகம் தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியே வந்திருக்கிறது எனவும் அண்மைய காலங்களில் நடைபெற்று வருகின்ற அத்தனை சம்பவங்களும் இதனை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன என றாடாளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நேற்று (24.04.2023) விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்டபட்டுள்ளதாவது,

”பயங்கரவாதத்தடைச் சட்டமே வேண்டாமென்கிற நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தின் மூலமாக தமிழ் பேசும் மக்களின் அத்தனை உரிமைகளையும் பறித்தெடுக்கவே அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இனப்பிரச்சினையின் காலான முரண்பாட்டினால் உருவான யுத்தம் மௌனிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்தும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 4 ஜனாதிபதிகள் 6 பிரதமர்கள் மாறியுள்ளனர். அதே போன்றே அரசாங்கங்களும் மாறிவிட்டன.

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் ஏன் என்பதற்கான கேள்வியே இப்போதைக்கு சாதாரணமானதாகி விட்டது. நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை அரசாங்கம் கணக்கிலெடுப்பதாகவே தெரியவிலலை.

இவ்வாறான நிலையில் நடைபெறுகின்ற அடக்குமுறைகளுக்கெதிராக தமிழ் பேசும் மக்களாகிய நாம் போராடவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக தமிழ் மக்களுக்கெதிரான தொல்பொருள் செயலணி, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும், பௌத்தமயமாக்கல் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், இயற்கை வளங்களை சூறையாடுதல், வன வளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் காணி பகிர்ந்தளிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விடயம், மனித உரிமை மீறல்கள், தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் போர்வையில் சிங்கள மயமாக்கல், மதவழிபாட்டுக்கு தடை விதித்தல், பௌத்த விகாரை அமைத்தல் போன்ற செயற்பாடுகள் திட்டமிட்டவாறு விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறுகின்றன.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனால் உருவான அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டையே புரட்டிப் போட்டன. ஆனாலும் எதுவும் நடைபெறாதது போலும், ஏதும் அறியாதது போலும் அரசாங்கம் மேற்கொள்ளகின்ற ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை இல்லாதொழிக்கவேண்டியது மக்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டமே நாளை நடைபெறவுள்ள நிர்வாக முடக்கலாகும். இத் தினத்தில் சந்தைகளை மூடி, கடைகளை அடைத்து போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஒத்துழையுங்கள்.

அத்தோடு அரச அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புகளை மேற்கொண்டு நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்குங்கள். சிறுபான்மை இனங்கள், அரசாங்கத்திடம் சரணாகதியடைந்து உரிமைகளைத் துறந்து, நடந்தவைகளை மறந்து நடப்பவைகளை காணாது வாழப் பழகிக்கொள்ளல் இந் நாட்டில் சிறப்பானதொரு வாழ்க்கைக்கான வழி என்பதே சிங்கள அரசுகளின் எண்ணமாக இருக்கிறது.

அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக ஒன்றுதிரள்வோம். அரசின் கடும்போக்கை அடக்குவோம். நாட்டைக் குட்டிச்சுவராக்கும் மக்களது உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளைக் களைந்தெறிவோம்‘‘ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

25 ஏப்ரல் 2023 செவ்வாய்கிழமை அன்று சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் பொது வேலைநிறுத்தத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் ஆதரவு

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் 25 ஏப்ரல் 2023 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெறவுள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு (ஹர்த்தாலுக்கு) புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களான நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் கருத்து வேறுபாடுகளைக் களைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க அனைத்து புலம்பெயர் அமைப்புகளையும் அன்புடன் அழைக்கிறோம்.

பொது வேலைநிறுத்தத்தின் நோக்கங்கள்:

•சிறிலங்கா பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது. ஏனெனில் இது தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மோசமானது.
•ஒரு திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை செய்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் பின் வரும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக:
o நில அபகரிப்பு
o தமிழர் தாயகத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதன் மூலம் தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் குடித்தொகையை சிதைத்தல்
o தமிழ் மரபுச் சான்றுகளை அழித்தல்
o வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவில்களை இடித்து, அதற்குப் பதிலாக புத்த விகாரைகள் அமைத்தல்.
இவை யாவும் தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றை திரித்து மறுப்பதை நோக்கமாக கொண்டது.

இந்த பொது வேலைநிறுத்தத்தினை ஆரம்பித்து நடாத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களுக்கு எமது மனமார்ந்த நன்றியையும் நேசத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எதிர்காலத்திலும் இது போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடர ஊக்குவிக்கிறோம்.

இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்த பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு சிங்கள பௌத்த அரசிற்கும் பெரும்பாண்மை சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் எமது ஒற்றுமையின் பலத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

On behalf of:
• Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com
• British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org
• Center for the Protection for the rights of Tamil People (CPTR – France): 0033652100400, Selvan.cptr@gmail.com
• Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com
• Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): padayacheepregasen@gmail.com
• Swiss Tamil Action Group (STAG): +41764450642, swisstamilag@gmail.com
• United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org

பிரித்தானியாவில் முக்கியமான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்புகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் கோரி முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்தை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களுக்கு, பிரித்தானியாவில் முக்கியமான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்புகள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன.

தமிழ் அமைப்புகள் ஆதரவு

பிரித்தானிய தமிழ் கன்சர்வேடிவ் அமைப்பு,லிபரல் ஜனநாயக கட்சியின் தமிழ் நண்பர்கள் அமைப்பு மற்றும் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பு என்பன நாளை(25.04.2023) நடைபெறவுள்ள பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில் நிர்வாக முடக்கல்

அறிக்கை ஒன்றின் ஊடாக குறித்த தமிழ் அமைப்புகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சர்வதேச சமூகத்தினால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்பவற்றிற்கு எதிராக இலங்கை செயற்பட்டு வருகின்றது.

தமிழர்களின் தாயக பூமியில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் கடுமையான இராணுவ பிரசன்னத்தை பேணி வருகின்றது.

இராணுவத் தலையீடு

சிவில் விவகாரங்களில் அடிக்கடி இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்படுவதுடன், தீவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவும், அடி பணியச் செய்யவும் தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கு-கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது முடக்கத்திற்கு பூரண ஆதரவு வழங்குகின்றோம் என்பதுடன் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் இந்த பொது முடக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோருகின்றோம்.

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

Posted in Uncategorized