யாழ்.கலாசார நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சர் கலாநிதி எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

யாழ்.கலாசார நிலையத்தில் இன்றையதினம் நிகழ்வுகள் இடம்பெற்ற மண்டபத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சரஸ்வதி மஹால் என்று பெயர் சூட்டப்பட்டது. யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட அதேவேளை, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள 5 மாவட்டங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வாகன பேரணியும் இடம்பெற்றது.


யாழ் கலாசார நிலைய நிர்மாணப்பணிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோசடியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னர் அதன் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.


11 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் 600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடம் , நவீன வசதிகளுடனான அரங்கம் மற்றும் நூதனசாலை உள்ளிட்ட விசேட அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை.மாணவர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறவுள்ளதால், அதனை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் சமூக அமைப்பினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டக் களத்தில் பெருமளவு கலகம் அடக்கும் கால்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவிலும் இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் செய்யவேண்டிய தேவை ஏன் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உப தலைவர் இ.தர்சனும் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்றைய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் – இந்திய அமைச்சர் எல்.முருகன்

அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார்.

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (11) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிலையமானது மக்கள் மத்தியில் கலை , கலாசார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கும். எனது இந்த விஜயத்தின் போது இலங்கை மக்கள் மீதான இந்தியாவின் பரந்துபட்ட அர்ப்பணிப்பை மாகாணங்களில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. துரையப்பா மைதானம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய புனர்நிர்மாணம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயல் நாட்டுக்கு முதலிடம்’ கொள்கையின் கீழ் இலங்கை முக்கியத்துவம் பெறுவது இயற்கையானது. ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்ற திருக்குறளுக்கமைய நட்பு நாடாக இந்தியா கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 4 பில்லியன் டொலர் கடன் உள்ளிட்ட ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்து மூலமாக நிதி உத்தரவாதத்தை வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். கொவிட் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளிலும் இந்தியா அதன் உதவிகளை முன்னின்று வழங்கியுள்ளது. இவ்வழியாக இரு நாட்டு தலைமைகளினதும் வழிகாட்டலில் எமது ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று உறுதியளிக்கின்றேன்.

யாழ் – சென்னை நேரடி விமான சேவை இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றங்களை விரைவுபடுத்தும். அது வர்த்தகம் மாத்திரமின்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இது உந்துகோலாக அமையும். அதேபோன்று உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவையை புதுப்பிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம். இது எம்மிரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி பொருளாதார, கலாசார ஈடுபாடுகளை ஆழப்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

அபிவிருத்தி குறிக்கோளுடன் இலங்கையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய அபிவிருத்தி பயணத்தில் இந்தியா தனது நட்பு நாடுகளை குறிப்பாக இலங்கையையும் அரவணைத்து முன்னேற்றிச் செல்லும் என்று உறுதியளிக்கின்றோம். இவ்வளர்ச்சி இரு நாடுகளுக்குமானதாக மாத்திரமின்றி மக்களுக்கானதாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதில், தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இந்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை திருக்கேதீச்சரத்தில் வழிபாடு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை (9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற் கொண்டனர்.

இன்று காலை 11 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.

இதன் போது இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண – இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர் ஆ கலந்து கொண்டார்.

இதன் போது விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு, இந்திய அரசின் நிதி உதவியுடன் முன் னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு, ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை – இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ள குறைபாடுகளை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க இடமளிக்கப்போவதில்லை – அத்துரலிய ரத்ன தேரர்

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த வகையிலும் அவ்வாறான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க நீதிமன்றம் பணிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அண்மையில், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் இந்த தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது” என சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலை தடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதிக்காது நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தாக்கல் செய்த மனுக்களும், உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரால் ஒரு மனுவும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் மற்றைய மனுவும் தாக்கல் செய்யப்பட்டன

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தைரியம் கிடையாது – ஹிருணிகா

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது.

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது இவ்விடயம் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது.

13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது நாட்டில் ஏற்பட்ட கலவரங்களின் போது அமைச்சராகக் காணப்பட்ட இவர் தற்போது இதனைப் பற்றி பேசுவது நகைப்பிற்குரியது.

நாட்டில் தற்போது நிலவும் உண்மையாக பொருளாதார நெருக்கடிகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது 13 குறித்து பேசிக் கொண்டிருக்கின்றார்.

13க்கு எதிராக வீதிக்கிறங்கி போராடியதைப் போன்று நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு கோரியும் போராடுமாறு தலை வணங்களி பௌத்த தேரர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

13 என்பது ஒரு பிரிவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையாகும். எனவே அனைத்து மக்களினதும் பிரச்சினையாகக் காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராடுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

13ஆவது திருத்தம் புதிதாகக் கொண்டு வரப்பட்டதல்ல. அது ஏற்கனவே நடைமுறையிலுள்ள திருத்தமாகும். முதலில் இதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பின்னர் 13 பிளஸ் பற்றி கவனம் செலுத்தலாம் என்றார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஜனதிபதியும் அழிந்துபோவார் – உதய கம்மன்பில

அதிகார பகிர்வு என்ற தற்கொலை அங்கியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அணிந்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஜனதிபதியும் அழிவார், நாடும் அழிவடையும். அதிகார பகிர்வு என்ற தீ பந்தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளார்.

வெகுவிரைவில் பதவி பறிபோகும். நாட்டை இரத்த வெள்ளக்காடாக்கும் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக சர்வகட்சி கூட்டத்தில் கூறியிருந்தார்.

தனது பாராளுமன்ற சிம்மாசன உரையில் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். சர்வக்கட்சி அரசாங்கத்தில் அன்று சிங்கம் போன்று கூறினாலும் சிம்மாசன உரையின் போது சிறிய கொக்கரிப்பு மட்டுமே இருந்தது.

நாங்கள் மேற்கொண்ட எதிர்ப்புகளை அவர் புரிந்துகொண்டுள்ளார் என்று நாங்கள் கருதுகின்றோம். அதன்படி அவர் புரிந்துகொண்டு தொடர்ந்தும் செயற்பாடுவார் என்று எண்ணுகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் காணி விடயத்தில் அது தொடர்பான ஆணைக்குழுவை அமைப்பதே எஞ்சியுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றிணைத்த தனியான மாகாண சபையை அமைத்தல் ஆகியனவும் எஞ்சியுள்ளன.

1987 ஆம் ஆண்டில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தின் ஊடாகவே வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு நடந்தது.

அந்த சட்டம் நிறைவடைந்ததும் அந்த இணைப்பு செல்லுபடியற்றதாகியது. ஆனாலும் அந்த விடயம் அரசியலமைப்பில் இருக்கும் வரையில் அந்த இரண்டு மாகாணங்களும் ஒன்றிணையும் வாய்ப்பு உள்ளது. இதற்கு இணங்குகின்றீர்களா? என்று ரவூப் ஹக்கீம் போன்றோரை கேட்கின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் விடயத்தை ஒப்படைப்பதையும் அனுமதிக்க முடியாது. அது நரியிடம் கோழியை ஒப்படைப்பது போன்றது.

இதேவேளை பொலிஸ் அதிகாரங்கள் விடயத்தில் 7 ஜனாதிபதிகள் பதவி வகித்த காலத்திலும் சில காரணங்களுக்காக அந்த அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை.

ஏற்கனவே நாடு கடந்த தமிழ் ஈழம் இருக்கின்றது. நிலப்பரப்பு இல்லாவிட்டாலும் திபேத் போன்று இதனை வைத்திருப்பதற்கு திட்டமிடுகின்றனர்.

அன்று விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு நாடுகள் திருட்டுத் தனமாக ஆயுதங்களை வழங்கியிருந்தன. இவ்வாறான நிலைமையில் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் மீண்டும் இந்த நாடு இரத்த காடாகும் நிலைமை ஏற்படும்.

எம்மைப் போன்ற சிறிய நாட்டில் 10 பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்தினால் நாட்டில் குற்றங்களை கட்டுப்படுத்தவும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் முடியாது போகும்.

அதேபோன்று அதிகார பகிர்வு தொடர்பாக கதைத்துக்கொண்டு சென்றால் இறுதியில் ஜனாதிபதி பதவிக்கே பாதிப்பாக அமையும். அதேபோன்று 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என்பதனையும் நாங்கள் கூறிக்கொள்கின்றோம்.

நாட்டில் பிரிவினைவாதம் காணப்படும் நிலையில் வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் போராட்டம் தோற்றம் பெறும்.

13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் விக்னேஷ்வரன் போன்ற பிரிவினைவாத கொள்கையுடையவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.

வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் இராணுவத்திற்கும், வடக்கு மாகாண பொலிஸ் தரப்பிற்கும் இடையில் முரண்பாடு தோற்றம் பெறும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்தை முழுமையாக செயற்படுத்த 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த எந்த அரச தலைவர்களும் அவதானம் செலுத்தவில்லை.

பாரதூர தன்மையை விளங்கிக் கொள்ளாமல் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் அவரும் அழிய நேரிடும், அவருடன் சேர்ந்து நாடும் அழிவடையும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் அதிகார பகிர்வு தொடர்பில் அவதானம் செலுத்தினார்.

பெறுபேறு இரண்டரை வருட காலத்திற்குள் பதவி துறந்தார். 2015 ஆம் ஆண்டும் அதே தன்மை தொடர்ந்தது. அதிகார பகிர்வு என்ற விடயத்தை தோளில் சுமந்ததால் பிரதமர் பதவியை முழுமைப்படுத்தாமல் பதவி விலக நேரிட்டது. ஒரு தவறை தொடர்ந்து தொடர்ந்து செய்தால் அந்த நபரை பைத்தியம் என கருத வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்தால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் அதிகார பகிர்வு என்ற தீ பந்தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளார், ஆகவே பதவி விலக நேரிடும். நாட்டை இரத்த வெள்ளக்காடாக்கும் 13 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல எவரும் முழுமையக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.