அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!

கொழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி சில தினங்களுக்கு முன்னர் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இன்று (திங்கட்கிழமை) இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவை சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளர் தாக்கல் செய்துள்ளார்.

Posted in Uncategorized

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின இறுதிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இந்த அஞ்சலி நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனி, காலை 10 மணி முதல் நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடைந்தன.அதேவேளை கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்குக்காவடி எடுத்து தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Posted in Uncategorized

”அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்த முடியாது”

அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதற்கு அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்த முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்தி அதி உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் அணுகுமுறை நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் 2298/53 இலக்க வர்த்தமானியை மீளப் பெறுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

வடக்கில் 40 ஏக்­கர் அரச காணி­கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் முடி­வ­டைந்த பின்­னர் பாது­காப் ­புத்தரப்பின­ருக்கு 40 ஏக்­கர் அரச காணி­கள் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் கையளிக்­கப்­பட்­டுள்­ளன.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தினூடாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, வடக்கு மாகாண காணித் திணைக்­க­ளம் வழங்கிய பதிலிருந்தே இது தெரியவந்துள்ளது.

வடக்கு மாகா­ணத்­தில் 22 ஆயி­ரம் குடும்­பங்­கள் காணி­கள் இல்­லா­மல் இருக்­கும் சூழலில், இந்­தக் காணிகள் 2019, 2020, 2021, 2022ஆம் ஆண்­டு­க­ளில் கையளிக்கப்பட்­டுள்­ளன. கடற்­ப­டை­யி­ன­ருக்கு 22.15 ஏக்கரும், காவல்துறையினருக்கு 9.5 ஏக்­க­ரும், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு 6.25 ஏக்­க­ரும், விமா­னப்­ப­டைக்கு 1.24 ஏக்கரும் வழங்­கப்­பட்­டுள்­ளன. காவல்துறையினருக்கும் 2019 ஆம் ஆண்டு அரச காணி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஒட்டுசுட்டா­னில் 0.4 ஏக்­க­ரும், புதுக்­கு­டி­யி­ருப்­பில் 4.9 ஏக்­க­ரும், கொக்­கி­ளா­யில் 1 ஏக்­ க­ரும், பளை­யில் 2 ஏக்­க­ரும், நயி­னா­தீ­வில் 0.25 ஏக்­க­ரும், வவு­னியா தெற்­கில் 1 ஏக்­க­ரும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

2020ஆம் ஆண்டு கடற்­ப­டை­யி­ன­ருக்கு சங்­கானை பிர­தேச செய­லர் பிரி­வில் அரா­லி­யில் 0.37 ஏக்­க­ரும், யாழ்ப்­பா­ணத்­தில் 0.06 ஏக்­க­ரும், ஊர்­கா­வற்­றுறை மெலிஞ்­சி­மு­னை­யில் 0.3 ஏக்­க­ரும், கொக்­குத்­தொ­டு வா­யில் 3.39 ஏக்­க­ரும், கொக்­கி­ளாய் கிழக்­கில் 1.49 ஏக்­க­ரும், பூந­க­ரி­யில் 7.38 ஏக்­க­ரும், மண்­டை­தீவு தெற்கில் 0.62 ஏக்­க­ரும், அல்­லைப்­பிட்­டி­யில் 0.25 ஏக்­க­ரும், வேலணை கிழக்­கில் 0.25 ஏக்­க­ரும், ஊர்காவற்றுறை சுரு­வி­லில் 0.19 ஏக்­க­ரும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

விமா­னப்­ப­டை­யி­ன­ருக்கு கேப்பாபிலவில் 1.24 ஏக்­கர் வழங்­கப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கரை­து­றைப்­பற்­றில் 1.83 ஏக்­கர் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த ஆண்டு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு முச­லி­யில் 4.42 ஏக்­க­ரும், கடற்­ப­டை­யி­ன­ருக்கு வேல­ணை­யில் 0.31 ஏக்­க­ரும், நெடுந்­தீ­வில் 1.5 ஏக்­க­ரும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த ஆண்டு கடற்­ப­டை­யி­ன­ருக்கு பூந­கரி பொன்­னா­வெ­ளி­யில் 5 ஏக்­க­ரும், வலைப்­பாட்­டில் 0.25 ஏக்கரும், முச­லி­யில் 0.21 ஏக்­க­ரும், காரை­ந­க­ரில் 0.04 ஏக்­க­ரும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த அரச காணி­க­ளுக்­கு­ரிய கோரிக்­கை­க­ளில் சில, பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் வடக்கு மாகாண சபை இயங்­கிய காலத்­தில் முன்­வைக்­கப்­பட்­ட­போது அப்­போ­தைய காணி அமைச்­ச­ராக இருந்த முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கம்– ஜீவன் தொண்டமான்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும். என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் பங்கேற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில்    ஜீவன் தொண்டமான்  கையொப்பம் இட்டார்.

அதன் பின்னர் நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது     கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான்,

அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. இதற்கமையவே சாணக்கியன்   விடுத்த அழைப்பை ஏற்று மனுவில் நானும் கையொப்பம் இட்டேன்.

இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக தீர்வாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் அந்த சட்டம் நீடிக்கின்றது. இதனை ஏற்க முடியாது. உண்மையான ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் முதல்படியாக அச்சட்டத்தை நீக்க வெண்டும்.

இது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை காங்கிரஸ் தற்போது எதிர்க்கவில்லை. முன்னர் இருந்தே எதிர்த்து வருகின்றோம். எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நீதிமன்றம்கூட சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் – பதில் பாதுகாப்பு அமைச்சர்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் காவல்துறையினருக்கு அறிவித்து அனுமதி பெறுவது அவசியம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு பதில் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தினார்.

நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ?

நிலாந்தன்
நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை?

ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் துரோகி என்று கூறும் நிலைமையும் உண்டு.ஒரு இயக்கத்தால் தியாகியாக கொண்டாடப்படுகிறவர் மற்றொரு இயக்கத்தால் கொலைகாரராக பார்க்கப்படுகிறார்.எனவே இயக்கங்களுக்கிடையிலான ஒரு பொதுவான தியாகிகள் நாளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.அதை என்றோ ஒரு நாள் கண்டுபிடிக்கும் பொழுதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயம் அதன் முழுமையான செழிப்பை அடையும்.

தியாகிகள் நாள் மட்டுமல்ல, இனப்படுகொலை நாளில் கூட சர்ச்சைகள் உண்டு.மே 18 எனப்படுவது தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்.எனவே அந்த நாளை இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக தொகையினர் கொல்லப்பட்டதன்மூலம் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாள் என்ற அடிப்படையில் அந்த நாளை இனப்படுகொலை நினைவு நாளாக அனுஷ்டிக்கலாம் என்று கருதுபவர்கள் உண்டு.ஆனால் அங்கேயும் சர்ச்சைகள் உண்டு.அந்த நாளில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகள் பலர் தம் உயிர்களை துறந்தனர் என்ற அடிப்படையில் அதுவும்கூட புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களில் ஒன்றுதான் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத் தரப்புகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை.அவ்வாறு ஒரு பொதுவான நினைவு நாள் இல்லாத ஒரு சமூகத்தில், நினைவு கூர்தலுக்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதும் சாத்தியமில்லை.பதிலாக அவரவர் அவரவருடைய தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது என்ற அடிப்படையில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதுதான் உடனடிக்கு சாத்தியமான ஒன்று.

மேலும்,கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்கள்தான்.விடுதலைப்புலிகள் அல்லாத இயக்கங்களின் நினைவு நாட்கள் பொறுத்து பெரியளவில் சர்ச்சைகள் இல்லை.

இது எதை காட்டுகின்றது என்றால்,புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார் என்ற ஒரு போட்டிதான்.அல்லது அந்த இயக்கத்தின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் யார் உரிமை கோரலாம் என்ற ஒரு போட்டிதான்.இந்தப் போட்டி காரணமாகத்தான் கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக சர்ச்சைகள் எழுகின்றன.

இதில் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கானவைதான்.அவ்வாறான ஒரு பொதுக் கட்டமைப்பு இல்லாத ஒரு பின்னணியில்தான் இப்பொழுது மறுபடியும் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பதனை ஏற்கனவே எதிர்பார்த்த அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் அணுகினார்கள்.குறிப்பாக இந்த சர்ச்சைகளின் மையமாகக் காணப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகளையும் அணுகினார்கள். புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பஷீர் காக்கா இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனோடு உரையாடினார்.தான் மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தமது அமைப்பின் பேச்சாளர் சுகாசுடன் உரையாடும்படியும் கஜேந்திரன் சொன்னார்.எனினும்,இது தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும் திலீபனோடு நேரடியாகப் பழகியவருமான பொன் மாஸ்ரரோடு உரையாடுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று பஷீர் காக்கா கருதினார் போலும். எனவே அவர் பொன் மாஸ்டரிடம் இது தொடர்பாக உரையாடியிருக்கிறார். எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு நினைவு கூர்தலில் பிரதிபலிப்பதை அவரைப் போன்ற செயல்பாட்டாளர்களால் தடுக்க முடியவில்லை.மாறாக அரசியல்வாதிகள் பஷீர் காக்காவை போன்ற மூத்த செயற்பாட்டாளர்களை அவமதிக்கும் ஒரு நிலைமைதான் உருவாகியது.

முரண்பாடு பொதுவெளியில் வந்த பின்னர்தான் மணிவண்ணன் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கினார். முரண்பாட்டின் பின் உருவாக்கப்பட்டபடியால் அது முரண்பாட்டின் ஒரு விளைவாகவே பார்க்கப்படும். மாநகர முதல்வர் என்று அடிப்படையில் மணிவண்ணன் அதனை உருவாக்கிய போதிலும், அப்பொதுக் கட்டமைப்பு சுயாதீனமானது என்று அதைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.அது திலீபன் நினைவு நாட்களை சுயாதீனமாக நினைவுகூரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த பொன் மாஸ்டர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை வைத்துப்பார்த்தால்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களில் பிரதிபலிக்கிறது என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்மக்கள் ஒரு பொதுவான நினைவுகூரும் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதனை நிரூபிப்பதாகவும் அது காணப்படுகிறது.ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமும் அதன் அரசியலும் பண்புருமாற்றம் – transformation – ஒன்றுக்கு போகமுடியாது தியங்குவதையும் அது காட்டுகிறது.

தமிழ்மக்கள் முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள்.ஆயுதப் போராட்டம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும்.ஆயுதம் ஏந்தியவர்கள் மட்டுமல்ல,அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் ஆதரித்தவர்கள் எல்லாருக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.இதில் என்னுடைய கை சுத்தம், உன்னுடைய கையில் இருப்பது ரத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தியாகி – துரோகி என்ற அளவுகோள்கள் ஊடாக அரசியலைத் தொடர்ந்தும் அணுக முடியாது.நான் தியாகி,நீ துரோகி என்று வகிடுபிரிக்க வெளிக்கிட்டால் சமூகம் என்றைக்குமே ஒரு திரட்சியாக இருக்கமுடியாது.அதாவது தமிழ்மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பவே முடியாது.

இதில் தங்களை தியாகிகளாக காட்டிக் கொள்பவர்கள் அல்லது கடந்த காலத் தியாகங்களுக்கும் வீரத்திற்கும் உரித்து கொண்டாடுபவர்கள் முதலில் அந்த வீரத்தின் தொடர்ச்சியும் தியாகத்தின் தொடர்ச்சியும் தாங்களே என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும்.அதை நிரூபிக்கும் இடம் நினைவு கூர்தல் அல்ல. மாறாக கடந்த 13 ஆண்டு கால அரசியலில் தமது சொத்துக்களை இழப்பதற்கும் ரிஸ்க் எடுப்பதற்கும் எத்தனை பேர் தயாராக இருந்தார்கள் என்பதிலிருந்துதான் அதை மதிப்பிடலாம். திலீபனை நினைவு கூர்வது என்பது நல்லூரில் இருக்கும் நினைவுத்தூபியில் சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது மட்டுமல்ல, விளக்குகளை ஏற்றுவது மட்டும் அல்ல,அது அதைவிட ஆழமானது. திலீபனைப்போல தமது அரசியல் இலக்கை அடைவதற்காக உயிரைத் துறக்கத் தயாரான எத்தனை அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஒருவர் முன்வரட்டும் பார்க்கலாம்?

இதுதான் பிரச்சினை.தியாகத்துக்கும் வீரத்துக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள் கடந்த 13ஆண்டுகளாக எத்தனை தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் சட்ட மறுப்பாகப் போராடி சிறை சென்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் சொத்துக்களை துறந்திருக்கிறார்கள்?

கடந்த 13ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் அம்மாக்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களை அரசியல் செயற்பாட்டாளர்கள் சாக விடவில்லை.இவைதவிர அரசியல்வாதிகள் என்று பார்த்தால் யாருமே அந்தளவுக்கு துணியவில்லை.

அதற்காக அரசியல்வாதிகள் சாக வேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை.உயிரைக் கொடுத்தது போதும்.இனி உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய காலம்.எனவே ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு அரசியலுக்குரிய பண்புருமாற்றத்திற்கு தமிழ்மக்கள் தயாராக வேண்டும்.நான் வண்ணாத்து பூச்சி,நீ மசுக்குட்டி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் எல்லா வண்ணாத்துப் பூச்சிகளும் ஒரு காலம் மயிர்க்கொட்டிகளாக இருந்தவைதான்.

இந்த விடயத்தில் தமிழ்மக்கள் தென்னாபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.தென்னாபிரிக்காவில் வெவ்வேறு ஆயுத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஒருவர் மற்றவரை கொன்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் உணர்ச்சியோடு ஒருவர் மற்றவரைத் தண்டிக்க முற்பட்டிருந்திருந்தால் தென்னாபிரிக்கா தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியிருந்திருக்கும்.ஒரு புதிய காலத்துக்கு வந்திருக்கவே முடியாது.இதுவிடயத்தில் தென்னாபிரிக்காவை இறந்த காலத்திலிருந்து புதிய காலத்துக்கு அழைத்து வரத் தேவையான பண்புருமாற்றத்திற்கு மண்டேலா தலைமை தாங்கினார்.

ஈழத்தமிழ் அரசியலிலும் இறந்த காலத்தில் இருந்து ஒரு புதிய காலத்தை நோக்கி செல்வதற்கான பண்புருமாற்றம் தேவை.தனது அரசியல் எதிரியை துரோகி ஆக்குவதால் யாரும் தியாகி ஆகிவிட முடியாது.தியாகம் செய்தால்தான் தியாகியாகலாம்.தனது அரசியல் எதிரியைத் துரோகியாக்குவது என்பது தமிழ்ச் சமூகம் பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்று சொன்னால் கூட்டுக் காயங்களோடும் பிணங்களோடும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியதுதான்.பழிவாங்கும் உணர்ச்சியால் பிளவுண்டு ஒரு தேசமாக திரட்சியுறாமல் சிதறிப் போவதுதான்.

சில மாதங்களுக்கு முன் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரகுமார் சிங்கள பௌத்த அரசியலானது பண்புருமாற்றத்துக்குப் போகதவறியதன் விளைவே அதுவென்று கூறியிருந்தார்.உண்மை. அதுபோல தமிழ் அரசியலும் பண்புருமாற்றத்துக்குப் போக வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளில் ஒரு பொதுவான நினைவு நாளையோ அல்லது நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பையோ ஈழத்தமிழர்களால் உருவாக்க முடியவில்லை என்பது தமிழ் அரசியல் தொடர்ந்து பண்புருமாற்றத்திற்கு தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.இப்பொழுது திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட உடைவைப் பிரதிபதிக்குமா? அல்லது ஒரு புதிய காலத்தை நோக்கிய பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்குமா?

“மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது”

மக்கள்பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது முழுவதும் சட்டவிரோத செயலாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனால் மாகாண சபை முறைமை கொண்டு செல்ல வேண்டுமாயின் பழைய முறையில் அல்லது புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும் என்பதோடு இது பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறும் செயல் எனவும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களும் தடை செய்யப்பட்டுள்ள விடயங்களும்

அரச இரகசிய சட்டத்தின் இரண்டாம் பிரிவில் ஜனாதிபதியினால் கொழும்பில் சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் எவை?

1 – பாராளுமன்ற தொகுதி

பொல்துவ முற்சந்தியில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம், கும்புக்கஹதுவ வீதி, ரஜமல்வத்த வீதி, பாராளுமன்ற மைதானத்தின் கிம்புலாவல சந்தி வரையான பகுதி, மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டடத் தொகுதி, பின்னியர சந்தி முதல் பெத்தகான சந்தி வரையான பகுதி, தியவன்னா நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்குகின்றன.

2 – உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதி , மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதி, கொழும்பு நீதவான் நீதிமன்ற தொகுதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம்

டாம் வீதி , அளுத்கடை வீதி, சாஞ்சி ஆராச்சிவத்த வீதி,பார்சல் சுற்றுவட்டம், புனித செபஸ்டியன் வீதி மற்றும் மிஹிந்து மாவத்தை வரையான பகுதி இதில் உள்ளடங்குகின்றது.

3 – ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம்

இந்த அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் சைத்திய வீதியில் இருந்து பொலிஸ் தலைமையகம் வரையான பகுதி மற்றும் பேரவாவி, மோகன் வீதி, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, சாரணர் மாவத்தை, கடற்கரை பகுதி உள்ளிட்ட காலி முகத்திடல் வரையான பகுதி

4 – அக்குறுகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம்

பாதுகாப்பு அமைச்சு மாவத்தை , தியவன்ன பூங்கா மாவத்தை, பாடசாலை மாவத்தை , D.G.விஜேசிங்க மாவத்தை வரையான பகுதி அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ளடங்குகின்றது.

5 – விமானப்படை தலைமையகம்

பேர வாவி, சித்தம்பலம் A கார்டினார் வீதி , மோகன் வீதி, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை வரையான பகுதிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

6 – பிரதமர் செயலக அலுவலகம்

பிளவர் வீதி, பிளவர் வீதியின் உட்பகுதி , 5 ஆவது ஒழுங்கை , 27 ஆவது ஒழுங்கை வரையான பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்குகின்றன.

7 – அலரி மாளிகை

காலி வீதியின் ரொடுண்டா சந்தியில் இருந்து பெரஹர மாவத்தை அல்விஸ் சந்தியில் இருந்து தர்மபால மாவத்தை வரையான பகுதி, கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தின் கடற்கரை பகுதி, லிபர்ட்டி சுற்றுவட்டம் , காலி வீதியின் ஒரு பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையான பகுதி

8 – பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லம்

பௌத்தாலோக மாவத்தை, தும்முல்லை சந்தி, ஶ்ரீசம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை வரையான பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்குகின்றன.

குறித்த பகுதிகளில் காணப்படும் தூதரகங்களுக்கு சொந்தமான இடங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள் என்ன?

பொலிஸ்மா அதிபர் அல்லது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தியோகபூர்வ கடிதம் இன்றி இந்த பகுதிகளில் பெரஹர, கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுக்க முடியாது என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் நலன்காக்க தி‌மு.க. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி

இலங்கை தமிழர் நலன்காக்க திராவிட முன்னேற்றக் கழக பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 11.90 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, அண்ணா அறிவாலயத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் துணை மேயர் மு. மகேஷ் குமார் ஆகியோர் சந்தித்து, இலங்கை தமிழர் நலன்காக்க திராவிட முன்னேற்றக் கழக பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் சார்பில் முதற்கட்டமாக 11 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், மாமன்ற நிலைக்குழு தலைவர் என். சிற்றரசு, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந. இராமலிங்கம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Posted in Uncategorized