முதுகு தெரிவதால் ஆட்களை உறுதிப்படுத்துவது சிரமமாம்: இராணுவப் பேச்சாளர் சொல்கிறார்

மார்ச் 7 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட இராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களை வைத்திருந்தார்களா என்பதை அறிய இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இரும்புக் கம்பிகள் மற்றும் மரக் கொட்டன்களுடன் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தின் மூலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, இராணுவத்தினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களை சமாளிக்க பொலிஸ் கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை முன் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் கணியில் ஈடுபடவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் முதுகைக் காட்டும் புகைப்படமே இருப்பதால், அன்றைய தினம் கடமையில் இருந்த அராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களுடன் இருந்தார்களா என்பதை சரிபார்க்க முடியாது என்றார்.

புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது பழைய சம்பவத்தில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த நீண்ட காலம் தேவைப்படும் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. எனினும் கூட்டத்ததுக்குத் தேவையான நிறைவெண் இல்லாத காரணத்தால் கூட்டம் 10:30 மணிக்கு ஆரம்பமாகும் என்று உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்கள் சிலர் சபா மண்டபத்தினுள் வராமல், பார்வையாளர் பகுதியில் அமரந்திருந்தனர். ஈ. பி. டி. பி உறுப்பினர்கள் சபா மண்டபத்துக்கு வெளியே உறுப்பினர் அறையில் அமர்ந்திருந்தனர்.

உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தபடி மீண்டும் 10:30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகிய நேரத்தில் 19 உறுப்பினர்கள் மட்டுமே சபா மண்டபத்தினுள் பிரசன்னமாகியிருந்தனர். இந்நிலையில், கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், கடந்த 28 ஆம் திகதி சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிலும் அது பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகப் பதவி இழந்திருந்தார். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் இன்று 10 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஒரு உறுப்பினர் உயிரோடு இல்லாத காரணத்தினால், மீதமுள்ள 44 உறுப்பினர்களில் 22 பேர் கூட்டத்துக்கு வந்தால் மட்டுமே கூட்டத்தை நடாத்தி, புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும்.

புதிய முதல்வர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான சொலமன் சூ. சிறிலை நியமிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பிரேரிக்கவுள்ளதாகக் கடந்த வாரம் கட்சி முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

இன்றைய கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 9 பேரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 3 பேரும், ஐக்கிய தேசியக் கடசியின் உறுப்பினர்கள் 2 பேரும், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஒவ்வொரு உறுப்பினர்களுமாக 19 பேர் கலந்து கொண்டனர்.

போர்க்குற்றவாளியை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு அனுப்பியமை தொடர்பில் விசனம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஒரு உறுப்பினராக தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் ஜீவக குலதுங்க கலந்துகொள்கின்றார்.

மேஜர் ஜெனரல் குலதுங்க, பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சியில், போர் குற்றங்கள் குறித்து இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) மறுக்க முடியாத சாட்சிகளை ஒளிபரப்பிய பின்னரும் இலங்கை இஐராணுவம் போர் குற்றங்கள் ஏதும் செய்யவில்லை என மறுத்த இராணுவ விசாரணை சபையின் ஒரு உறுப்பினராக இருந்தார்.

இலங்கையில் “தொடர்ச்சியாக மிகவும் கொடூரமான சித்திரவதை” செய்யும் ஒரு இராணுவ முகாமை நடத்திய குற்றச்சாட்டில் ஜீவக ருவன் குலதுங்க மற்றும் வேறு நால்வர் விசாரிக்கப்பட வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு, உண்மை மற்றும் நீதிக்கான சரவதேச செயல் திட்டம் (ITJP) கோரியிருந்தது.

குறிப்பிட்ட அந்த முகாம் ஜோசப் முகாம் என்றழைக்கப்பட்ட வவுனியாவிலிருந்த பாதுகாப்பு படை முகாமாகும் (SFHQ/W). மோசமான சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயலுக்காக அறியப்படும் அந்த முகாமிற்கு 2016-17ஆம் ஆண்டுகளில் மேஜர் ஜெனரல் தலைவராக இருந்தார்.

தற்போது ஜெனீவாவில் கூடிய மனித உரிமைகள் குழு 2016ஆம் ஆண்டு தொடர்பில் இலங்கையிடம் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தது.

கீரிமலை சிவன் கோயிலை ஆக்கிரமித்து ஜனாதிபதி மாளிகை

கீரிமலை ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரை வேலன் கோவில்களின் நிலை என்ன என அகில இலங்கை இந்துமா மன்ற உப தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை சைவமக்களின் மிகத் தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கீரிமலை. இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலை போன்ற ஒரு பாறைப்பகுதியில் ஆதிச்சிவன் கோவில் அமைந்திருந்தது.

அச்சிவன் கோவில் தற்போது இல்லை. இல்லை என்று அங்கு போய் வந்த அன்பர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். மேலும் பெருமைமிக்க பெண் சித்தரான சடையம்மா அவர்களின் சமாதி கோவில் மடம் அதற்கருகிலிருந்த சங்கர சுப்பையர் சுவாமிகளின் சமாதி, கதிரை வேலன் கோவில் இவற்றை காணவில்லை என்ற செய்தி சைவ மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.

சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்பு ஆலயத்தை தரிசிக்கலாம் என்று சென்ற மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதிலளிக்க வேண்டும்.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாலயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அழிக்கப்பட்ட கோவில்கள் இருந்த இடத்தை சைவ மக்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

மீண்டும் அந்த இடங்களில் சைவமக்கள் கோவில்களைக் கட்டுவதற்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக உடன் குரல் கொடுக்க வேண்டும்.

வடக்கு மாகாண ஆளுனர் பொதுமக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கும் அங்கு எஞ்சியுள்ள கோவில்களை தரிசிப்பதற்கும் உடன் ஒழுங்கு செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானிய திட்டங்களின் மூலம் இலங்கைக்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தயாராக இருக்க, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரம் போதுமானதாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையைப் பெறுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் காரணமாக இலங்கைக்கு கூடுதலாக 220 பில்லியன் யென் (1.6 பில்லியன் அமெரிக்க டொலர்) நிதி திறக்கப்படும் என்று Bloomberg இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் இந்த 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு திறக்கப்படும் என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கு வழங்கிய அங்கீகாரம் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது என ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள்மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படின் மீண்டுமொரு விடுதலை போராட்டம் உருவாகும் – ரெலோ வினோ எம்.பி

பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறது . அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், இலங்கையில் மீண்டுமொரு விடுதலை போராட்டம் உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனாவிலிருந்து பிரிந்தவர்கள் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுப்பது அவர்களின் சுயநல அரசியலுக்காகவே எனவும் அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய வினோ நோகராதலிங்கம்அரசாங்கத்தின் பலவீனத்தை பயன்படுத்தி பதவி ஆசையை நிறைவேற்ற முயற்சிப்பது பச்சோந்தி தனமான செயல் என்று தெரிவித்தார்.

வருட இறுதியில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 400 ரூபாயை எட்டும் – பிட்ச் மதிப்பீடு

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த வருட இறுதிக்குள் மீண்டும் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கலாம், வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையலாம் என ஃபிட்ச் மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390 ஆக வீழ்ச்சியடையும் என Fitch Ratings கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவின் அனுமதியை இலங்கைக்கு மிக விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையுடன் நம்புவதாக Fitch தரமதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்குழுவின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர், இலங்கையின் பலவீனமான பொருளாதார நிலை மற்றும் நடைபெறவுள்ள தேர்தல்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்குவது இலங்கைக்கு கடினமாக இருக்கலாம் என Fitch தரமதிப்பீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிள்ளையார் திருமணம் போன்றது – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான நேற்றைய போட்டியின் போது திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் இடையேயான வெற்றிகரமான ஆட்டம் குறித்து, மஹிந்த தேஷப்பிரிய தனது முகநூலில் வாழ்த்து தெரிவித்து பதிவொன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு கருத்துக்களை பதிவிட்ட ஒருவர்‘அதிகாலை எழுந்தவுடன் கிரிக்கெட் பற்றிப் பதிவிட வேண்டும், அப்போதுதான் தேர்தலை மக்கள் மறந்து விடுவார்கள்’ எனப் பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்து மஹிந்த தேஷப்பிரிய,“இந்த தேர்தல் பிள்ளையார் திருமணம் போல, நாளைக்கு உன் திருமணம்னு சிவன் சொன்னாராம். பொன் தாளில் எழுதிக் கொடுத்தாராம்.

தினமும் காலையில எழுந்து பார்க்கிறவர், “ஆ நாளைக்கு கல்யாணம்” என்று சொல்லிவிட்டு, தன் காரியத்தில் இறங்குகிறாராம். .” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள்; இணை அனுசரணை நாடுகள் கவலை

இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து கடும் கரிசனை வெளியிட்டுள்ள இணை அனுசரணை நாடுகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான அமைதியான விதத்தில் கருத்து வெளியிடுவதற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான எந்த வன்முறை குறித்தும் பொறுப்புக்கூறல் அவசியம் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள இணைஅனுசரணை நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பத ஊக்குவிப்பதில் சிவில் சமூகம் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்டக்கூடிய எந்த சட்டமூலம் மூலமாகவும் சிவில் சமூகத்தின் செயற்பாட்டிற்கான தளத்தை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுத்துகின்றோத் என தெரிவித்துள்ள இணை அனுசரணை நாடுகள் அனைத்து இனத்தவர்கள் சமயத்தவர்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்த இலங்கையின் சமீபத்தைய வாக்குறுதியை வரவேற்றுள்ளன.

சுயேச்சையான ஸ்தபானங்கள் ஆட்சி மூலம் சட்டத்தி;ன் ஆட்சியை பாதுகாப்பது பிரதிநிதித்துவஜனநாயகத்தை உறுதி செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தையும் இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலரை தற்கொலைக்கு தூண்டுகிறது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பலரை தூக்கிட்டு தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வது முதல் குழந்தைகளுக்குக் குறைவாக உணவளிப்பது வரை, இந்த நெருக்கடியானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து குடும்பங்களையும் பாதித்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர்களும் தங்களின் செலவுகளைச் சமாளிக்க பொருத்தமான வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேற பலர் ஆவலுடன் காத்திருக்கும்போது, தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க நாட்டிலேயே தங்க விரும்புபவர்களும் உள்ளனர்.

இந்தநிலையில், பணத்தை உழைப்பதற்காக, சில குடும்பங்கள் பயன்படுத்தும் சமீபத்திய உயிர்வாழும் முறை பாலியல் தொழிலாகவும் மாற்றம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகமான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடும் அதேவேளையில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்ற தகவலையும் ஆங்கில ஊடகமொன்று ஒன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து கடந்த சில மாதங்களுக்குள், அதிகமான ஆண்கள் ‘ஆண் பாதுகாப்பு’ சேவைகளை வழங்கும் இணையத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து பாலியல் நோக்கங்களுக்காக, ஆண்களை வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்த இணையத்தளங்கள் செயல்படுவதாகவும், ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.