வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நாட்டைத் துறந்து அகதிலிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

இனப்படுகொலை நாடான இலங்கையில் அந்நாட்டு ஆட்சியாளர்களின் தமிழர்கள் மீதான இனவெறி மிகுந்த தவறான ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாட்டு மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். சொந்த மண்ணில் வாழ வழியற்ற நிலையில் வேறுவழியின்றி அங்குள்ள தமிழ் மக்கள் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஏதிலிகளாக அவ்வப்போது புலம்பெயர்ந்தும் வருகின்றனர்.

அப்படி நிம்மதியாக வாழ இந்தப் பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், ஊரையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஆழ்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட தொப்புள்கொடி உறவுகளான 300க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் கனடா நாடு நோக்கிச் செல்லும் வழியில் கடந்த நவம்பர் 8 ஆம் நாளன்று புயலால் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். விரைந்து செயல்பட்ட சிங்கப்பூர் அரசு மனிதநேய அடிப்படையில் தமிழர்களை மீட்டு, அருகிலிருந்த வியட்நாம் நாட்டில் ஒப்படைத்த நிலையில், தற்போது அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வியட்நாம் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

வறுமையின் காரணமாக இருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு பெரும் பொருட்செலவில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும், பொருளாதாரம் முற்றாகச் சீரழிந்துள்ள இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி, வறுமையிலும், பசியிலும் வாடி சிறுக சிறுக அவர்கள் உயிரிழக்கவே வழிவகுக்கும்.

 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏகாதிபத்திய பேரரசுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தீரத்துடன் போராடி அடிமைத்தளையை அறுத்தெறிந்து, விடுதலையை வென்றெடுத்த புரட்சிகர வியட்நாமிய நாடு, கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தாயக விடுதலைக்காகப் போராடி வரும் தமிழர்கள், அடிமைத்தன அடக்குமுறைகளால் அனுபவித்த துன்ப துயரங்களையும், மன வலிகளையும் எளிதில் உணரும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் முழுமையாக நம்புகின்றனர். எனவே ஈழத்தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக வியட்நாமிய அரசு கைவிட வேண்டுமென்று கோருகிறேன்.

வியட்நாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களும் தாங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், தங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாதென்றும், ஐநாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உடனடியாக வியட்நாம் அரசுடன் பேசி, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிடச் செய்வதோடு, அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்குத் தமது சொந்த பொறுப்பிலேயே பாதுகாப்பாக அனுப்பி வைப்பதோடு, வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள் எங்கே என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடையவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள் அனைவரும, கிட்டதட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதை தான் உச்சநீதிமன்றம் பேரறிவளான் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

அரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய்ய வேண்டும். – செல்வம் எம்.பி

அண்மையில்விடுதலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட எட்டுப்பேரில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நான்கு பேரினதும் விடுதலையில் உள்ள தடங்கல்களை நீக்கி விரைந்து விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கையினை முன் வைத்தார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இன்று (10) வியாழக்கிழமை இடம்பெற்ற பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் அவர்களுக்கு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது வரவேற்கத்தக்கது. இனப்பிரச்சினையைத் தீர்ப்தற்காக அனைத்து கட்சிகளையும் அழைத்து அதற்குரிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

தந்தை செல்வாவினுடைய காலம் முதல் வடகிழக்கிலுள்ள அனைத்து கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலானதீர்வினையே வலியுறுத்தி வந்ததை இங்கே குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.அண்மையிலே வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 100 நாள் போராட்டத்தை நடாத்தி முடித்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்றாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன் வைத்துள்ளார்கள். 13 ஆவது திருத்தச்சட்டத்திலே உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

நல்லிணக்க அடிப்படையில் அரசியல் கைதிகள் எட்டு பேரை விடுதலை செய்துள்ளீர்கள். அவர்களில் நான்கு பேரே விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்துள்ளார்கள்.அவர்கள் விடுதலை செய்யப்பட்டு பத்து நாட்கள் கடந்துள்ளன. ஏனைய நான்கு பேரில் இருவரை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த இருவருக்குமான புனர்வாழ்வினை நீதியமைச்சர் என்ற வகையில் அதனை ரத்து செய்து அவ்விருவரையும் விரைந்து விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன். ஏனைய இருவரையும் நீதிமன்றில் உள்ள வழக்குகள் மீள்ப்பெறப்பட்ட பின் விடுதலை செய்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே எட்டுப்பேரில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நான்கு பேரினதும் விடுதலையில் உள்ள தடங்கல்களை நீக்கி விரைந்து விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

கிறிஸ்மஸ் பண்டிகை வரவுள்ளது. அதற்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். அதன்மூலம் அரசாங்கம் நல்லிணத்திற்காக வெளிபடுத்தும் நல்லெண்ண சமிக்ஞையாக பார்க்கக் கூடியதாக இருக்கும்.
அரசியல்கைதிகள் விடயத்தில் நீங்கள் நல்ல முடிவினை எட்டியுள்ளீர்கள். அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என தெரிவித்துக்குக் கொண்டு நன்றிகளையும் கூறிக் கொண்டு ஏனையவர்களையும் வெகுவிரைவிலே விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மையிலே ஜனாதிபதி, சிறு தானிய பயிர்ச் செய்கைகள் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்காக வன இலாகா வசம் உள்ள விவசாய நிலங்களை விடுவிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் வன்னி மாவட்டத்திலே குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலே மக்கள் உழுது பண்படுத்திய நிலங்களை விதைப்பதற்கு முன்னராக வன இலாகாவினர் அங்கு சென்று அந்த நிலங்களிலே பெரு மரங்களினை நடுவதற்கு முயற்சிக்கின்றார்கள். அமைச்சர் மகிந்தானந்த அளுத்த்கமமே அண்மையில் வவுனியா சென்ற போது வன இலாக வசம் இருக்கும் விவசாய நிலங்களை விடுவித்து பயிர்ச் செய்கை செய்வதன் ஊடாக பெருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் குடும்பங்களை மேலும் முன்னேற்ற முடியும் என வாக்குறுதியும் வழங்கியிருந்தார் எனவே அமைச்சர்யும், ஜனாதிபதியும்அவர்கள் இதனை கருத்தில் எடுத்து விரைந்து ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். விவசாயிகள் விவசாயம் செய்ய மிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் வன இலாகா போன்ற திணைக்களங்கள் அவர்களுக்கு தொடர்ச்சியாக தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே விவசாய உற்பத்தித்துறையினூடாக பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

குடிவரவு,குடியகல்வு திணைக்களங்கள் வடக்கிலே கிளைகளைத் திறந்து கடவுச் சீட்டு வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். இணைய வழி ஊடாக விண்ணப்பிப்பவர்களுக்கு மூன்று நான்கு மாதங்கள் கழித்து அவர்களுக்கு திகதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சில இடைத்தரகர்கள் மக்களிடம் ஒரு கடவுச்சீட்டுக்கு இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம் வாங்கிக் கொண்டு கடவுச்சீட்டினை உடனடியாக பெற்றுக் கொடுக்கிறார்கள். பணம் இருப்பவர்கள் இலஞ்சம் வழங்கி அதனை இடைத்தரகர்கள் மூலமாக பெற்றுக் கொள்கின்றார்கள். வெளிநாட்டிலுள்ள மக்கள் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக தூதரங்களூடாக கடவுச்சீட்டை அனுப்பி வைக்கும் போது தூதரகங்கள் ஆவணங்களை சரி பார்த்தே விண்ணப்பங்களை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இங்கே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இருப்பவர்கள் விண்ணப்பத்தில், ஆவணங்களில் பிரச்சினை இருப்பதாக புலம்பெயர் மக்களிடம் கூறி ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரை இலஞ்சமாகப் பெற்று குறித்த கடவுச் சீட்டினை விடுவிக்கிறார்கள். ஒரு சில அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் . என்றார்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் – விஜயதாஸ

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான சட்டமூலம் மூன்று மாத காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் புதிய லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

2015ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டு, அதற்கான சட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு துரதிஸ்டவசமாக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. எக்காரணிகளுக்காகவும் தேசிய பாதுகாப்பை மலினப்படுத்த முடியாது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் 2016 ஆம் ஆண்டு குறிப்பிட்ட விடயத்தை தொடர்ந்து நான் இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன்.

ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு உரிய தரப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதுடன், தகவல் குறிப்பிட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது, எக்காரணிகளுக்காவும் தேசிய பாதுகாப்பையும், பொது மக்கள் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்த முடியாது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்யும் நோக்கம் கிடையாது. தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி புதிய சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது, குழுவினர் அறிக்கை சமர்ப்பித்ததும் மூன்று மாத காலத்திற்குள் தேசிய பாதுகாப்பிற்கான சட்டத்தை உருவாக்கும் சட்டமூல வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தடுப்பிலுள்ள தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயம் வழங்க பயங்கரவாத தடைச்சட்டதில் திருத்தம் செய்யவும் – ரிஷாத்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் நியாயம் வழங்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இயற்றப்படும் சட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்களும், எதிர்ப்புக்களும் வெளிப்பட்ட வண்ணம் உள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நான் சிறையில் இருந்த போது நேரடியாக உணர்ந்தேன்.

அதேபோல் முஸ்லிம் இளைஞர்கள் கடந்த மூன்று ஆண்டு காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் காலத்தின் தேவைக்கேற்ப திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஆங்கில மொழியில் மாத்திரம் தான் சட்டக் கல்லூரி பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துகிறோம். இவ்விடயம் தொடர்பில் பலர் எம்மிடம் வலியுறுத்ததியுள்ளோம்.

போதைப்பொருள் நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது, போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகியுள்ளார்கள்.

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்கு கல்வி அமைச்சு சிறந்த செயற்திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

இயற்றப்பட்ட சட்டங்களை செயற்படுத்தாத காரணத்தினால் நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் பல பிரச்சினைகளை தோற்றுவித்தது.

ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சுயாதீன ஆணைக்குழுக்களின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்

இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்

இலங்கை குறித்து பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிராக மக்னட்ஸ்கி  பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும், சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பான தனது அர்ப்பணிப்புகளை நிறைவேற்றவேண்டும்,தனது இராணுவத்திற்கான மிகவும் அதிகரித்த செலவீனங்களை குறைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழுவின் தலைவரும் கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எலியட் கோல்பேர்ன் பிரிட்டன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அப்பால் செல்லவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை பேரவையின் புதிய தீர்மானம் இலங்கை விவகாரத்தில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்துவதை நோக்கிய பாதையில் சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர்முன்னரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,மனித உரிமை பேரவை தொடர்பிலான சர்வதேச நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றங்களை விசாரணை செய்து குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான பொறிமுறை என்ற விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் போதுமானதல்ல  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கொல்பேர்ன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிரான ஆதாரங்களை வலுப்படுத்தி அவர்களிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு விசேட வளங்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் குற்றவியல் பொறுப்புக்கூறலிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்,யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை வழக்குவிசாரணைக்கு உட்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசாங்கம் தயாரில்லை என்பதற்காக அவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுபாட்டுரிமையை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் எலியட் கோல்பேர்னின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் ஏன் சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தொடர்பில் மக்னட்ஸ்கி பாணியிலான தடைகள் குறித்து அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டன்  ஆதரவளித்த சமீபத்தைய தீர்மானம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம்  குற்றவியல் பொறுப்புக்கூறலிற்கு முயலவேண்டும் என்ற பரிந்துரையை ஏன் கொண்டிருக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள அவர் பாதுகாப்பு சபையின் போதிய ஆதரவின்மையே அதற்கு காரணம் என பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவி;த்திருந்ததை என்னால் நம்பமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உரத்த செய்தியை சர்வதேச அரங்கில் தெரிவிப்பதே எங்கள் நோக்கமாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள்மற்றும் ஊழல்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக  ஏன் பிரிட்டன் மக்னஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம்: மூவருக்கு பிணை

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் 02.03.2023 ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிக்கப்பட்டன.

பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து இதனை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.

​பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், 10.11.2022இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிஸாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ், நியூயோர்க்கில் நடைபெற்ற 77 ஆவது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பித்தார்.

2022 செப்டெம்பர் 12 முதல் ஒக்டோபர் 7 வரை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களில் இலங்கை தொடர்பான தீர்மானமும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த தீர்மானம் 20 க்கு 7 என்ற வாக்கு விகிதத்தில் நிறை வேற்றப்பட்டது.

இதேவேளை இலங்கை மீதான தீர்மானத்தை நடை முறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கவேண்டியேற்படும்.

இந்தநிலையில் அண்மைய ஆண்டுகளில், மனித உரிமைகள் பேரவை, தமது அதிகரித்து வரும் பணிகளின் காரணமாக நிதிச்சவால்களை எதிர்கொள்கிறது என்று மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் தெரிவித்துள்ளார். எனவே இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை, நிதியளிக்கவேண்டும் என்று ஃபெடரிகோ வில்லேகாஸ் கோரிக்கை விடுத்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது- ஜனாதிபதி ரணில்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையை நிகழ்த்திய அவர், இனப்பிரச்சினை தீர்வு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்தல், காணாமல் போனோர் விடயம் என்பன தொடர்பாக தீர்வு காணப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலர் அண்மையில் விடுவிக்கப்பட்டார்கள், எதிர்காலத்திலும் எஞ்சியவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அடுத்த வாரத்தில் தாம் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, எகிப்தில் இடம்பெற்ற கொப் 27 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடர்பாகவும், ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டார். இந்த மாநாட்டில் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளர்முக நாடுகள் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை, இது அந்த மாநாட்டில் பின்னடைவாகவே கருதப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டில் காலநிலை தொடர்பான எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உணவு பற்றாக்குறையை பொருத்த வரையில் ஆபிரிக்க நாடுகளே அதிகமாக அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் பாதிக்கப்படும் அபாயத்தை கொண்டுள்ளன.

இதனை மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் எச்சரிக்கை செய்தியாக அறிவித்ததாகவும் ஜனாதிபதி கூறினார். இதற்கிடையில், எகிப்து மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக தாம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் டிசம்பர் அளவில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிடும் போது குறுக்கீட்டு கேள்வியை எழுப்பிய, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியயெல்ல, எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கை குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, ஏனைய கடன்வழங்குனர்களின் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்த விடயத்தை வெளிப்படுத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன், இணங்கப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

இதில் இணக்கப்பாடு காணப்பட்டதுடன் அதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாடுகளின் படி மறைமுக வரிகளை விதிப்பதன் மூலம் பாரத்தை சுமத்துவதா, நேரடி வரிகளை விதிப்பதா, அல்லது அரச செலவீனங்களை குறைப்பதா, என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புக்கு கடன்வழங்குநர்களில் ஏதாவது ஒரு தரப்பு இணக்கம் வெளியிடாவிட்டால் அது குறித்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார். கடன்களை இரத்துச் செய்வதா அல்லது கடன் செலுத்தும் தவணைகளை நீடிப்பதா என்பது குறித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டவேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – ஐனாதிபதி

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.