இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடையவில்லை என்கிறது இராணுவம்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது.

இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது.

“யுத்த பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

எம்மிடம் வந்தவர்களை பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த முகாம்களில் சேர்த்தோம்.

அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.” எனவும் இராணுவம் சாட்சியம் வழங்கியது.

ஆனால், ஊடகவியலாளர் நிரோஸ் சார்பாக ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா இதனை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார்.

மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என, புனர்வாழ்வு பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, “அரசாங்கமே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புகளுக்கு பல்வேறு முறை வழங்கி இருக்கிறது.

எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை.” என இராணுவத்துக்கு அறிவித்தது.

புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு ஊடகவியலாளர் நிரோஸ் வழங்க வேண்டும்.

அதுபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது.

ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்பட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted in Uncategorized

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு

யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3,000க்கும் மேற்பட்ட நீரிழிவு  நோயாளர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

நீரிழிவு நோயின்  தாக்கம் தொடர்பில் மிக அண்மைய  தரவுகளின் படி கொழும்பு மாகாணத்தில் குறிப்பாக மேல் மாகாணத்தில்  30% மானோருக்கு நீரிழிவு நோயின்  தாக்கம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15% சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோயின்  தாக்கம் காணப்படுகின்றது.

நீரிழிவு நோய் தொடர்பிலான ஆய்வுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

யாழ்.  போதனா  வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பிரிவை எடுத்துக் கொண்டால் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும் போது இந்த வருடம் சுமார்  3,000-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் புதிதாக பதிந்திருக்கின்றார்கள்.

அதாவது நீரிழிவு நோயின் தாக்கமானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்வதனை   காணக்கூடியதாக உள்ளது.

உலகளாவிய ரீதியில் அதிகரிப்பது போல  வளர்முக நாடுகளில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில்  எமது வடபகுதியில் இந்த நீரழிவு நோயின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகின்றது

நவம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக இந்த உலக நீரிழிவு விழிப்புணர்வு வாரத்தில்  யாழ். மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.

மிக முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நீரிழிவு தாக்கமானது வடபகுதியில் அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது.

வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகள் மத்தியில் நீரிழிவின் தாக்கமானது அதிகரித்து செல்வதை காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்வதற்கு மிக முக்கியமான காரணமாக அமைவது எமது வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்.

குறிப்பாக சொல்லப் போனால் தவறான உணவு பழக்க வழக்கங்கள் அப்பியாசம் அற்ற வாழ்க்கை முறை என்பன மிக முக்கியமான காரணங்களாக உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் இந்த மேலைத்தேய உணவுகள் துரித உணவுகளில்  நாட்டம் அதிகரித்து செல்வதனால் நீரிழிவின் தாக்கமானது அதிகரித்துச் செல்வதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. அதேபோல உடல் அப்பியாசம் உடற்பயிற்சி செய்வது குறைவடைவது ஒரு மிக முக்கியமான காரணமாகும்.

அதேபோல்  மன அழுத்தம், நித்திரை குறைவு போன்ற பல காரணங்களும் இதற்கு ஏதுவாக  அமைகின்றன.

ஆகவே, நீரிழிவு விழிப்புணர்வு மாதத்தில் மக்களுக்கு நீரிழிவு நோய் என்றால் என்ன என்பது  தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகும்.

நீரிழிவு நோய்  ஏற்படும்போது சில அறிகுறிகள் ஏற்படும். அந்த அறிகுறிகளை நாங்கள் அடையாளம் கண்டு உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது குறித்த நோயிலிருந்து  தப்பித்துக் கொள்ள முடியும்.

இல்லாவிட்டால் அந்த நீரழிவு நோயானது ஒரு பாரிய நோயாகும் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோயாகும்

எனவே வட பகுதியில் உள்ள மக்கள் இந்த நீரிழிவு நோய் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

புதிய அரசியலமைப்பினால் எம்மை மெளனிக்க செய்ய முயல்கின்றனர் – பேராயர்

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே இன்று கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாத இந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களித்து விட வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மேலும் , இலங்கை அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் குறைகளை முன்வைப்பவர்களின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு நீகுவதற்கான ஏற்பாது புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பேராயர் , இதனால் தாம் முழுமையான மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மை ஆட்சி செய்கின்ற, எமது வாக்குகளால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் ஏன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காண்பிக்காமலுள்ளனர்? இதற்கான காரணம் என்பது தொடர்பில் எம்மால் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. தாம் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த வாக்குகளை வழங்கிய மக்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

தற்போது தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் காணப்பட்ட தேர்தல் முறைமையில் தொகுதி முறைமை காணப்பட்டது. இந்த முறைமையின் கீழ் நாம் தெரிவு செய்யும் எந்தவொரு உறுப்பினரானாலும் , அவர் அவரது தொகுதியிலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துவார். ஆனால் தற்போது அவ்வாறொன்று இல்லை. வாக்குகளைப் பெறுவதற்காக முழு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறு வாக்குகளைப் பெறுவதற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவிட வேண்டும் என்பதால் , அவர்கள் மோசடியாளர்களுடன் இணைந்து அதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார்கள். இறுதியில் வாக்களித்த மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் குரலெழுப்பும் போது அவர்களை துரத்தியடிப்பார்கள். 1978 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய அழிவு இதுவேயாகும்.

எமது நாட்டின் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளனர். பல வருடங்களாக எமது நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே தற்போது ஏனைய நாடுகளிடம் கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று எமது நாட்டில் வீடுகள் இன்றி எத்தனை குடும்பங்கள் உள்ளன? கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே தற்போது இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சாகவும் உள்ளார். டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மூன்றை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவா நகர அபிவிருத்தி அமைச்சு என்ற ஒன்று காணப்படுகிறது? சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து , அவர்கள் முன் தலை குனிந்து இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமை என்ன? மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும். மீண்டும் இவர்களுக்கு வாக்களித்து விட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மாறாக இவர்களுக்கு வாக்களித்து விட்டு , பின்னர் என்னிடம் வந்து வீடமைத்து தருமாறு கோர வேண்டாம். ஜனாதிபதியினால் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும் அந்தக் குழு அரசியலமைப்பின் உள்ளடக்கம் தொடர்பில் யாரிடமும் சென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் பெறவில்லை. மாறாக அவர்களுக்குள்ளேயே கலந்துரையாடி பிரதியொன்றை தயாரித்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அதன் பிரதியொன்று எனக்கும் கிடைக்கப் பெற்றது. அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்தினால் அது நாட்டுக்கு சாபக்கேடாகும். ஒழுக்கமற்றவொரு அரசியமைப்பினையே தயாரித்துள்ளனர்.

எவரேனும் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரச நிறுவனத்திற்கு எதிராகவோ , ஐக்கிய நாடுகள் சபை , வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு தலைவர்களிடம் குறைகளைக் கூறினால், குறித்த நபரின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியலமைப்பில் உள்ளடக்கியுள்ளனர். கல்வி கற்றவர்கள் என்று கூறப்படுபவர்கள் இதனையே செய்துள்ளனர். எம்மை முழுமையாக மௌனிக்கச் செய்துள்ளனர். இதுவே எமது நாட்டுக்கு இடம்பெற்றுள்ள நிலைமையாகும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான 2வது அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான இரண்டாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (04) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாண பிரதம செயலார் ஆர்.எம்.பீ.எஸ். ரத்னாயக ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன உரத்தினை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இதன்போது கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பு பிரதானிகள், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் மோசடியில் ஈடுபட்டவர்களை கூட தெரிவு செய்வார்கள் – தேர்தல் ஆணையாளர்

அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் திலினிபிரியமாலியை கூடதெரிவு செய்வார்கள் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள்; மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

பிரியமாலி நாளை தேர்தலில் போட்டியிட்டால் என்ன நடக்கும் ஆம் அவர் வெற்றி பெறுவார் நாட்டின் நிலைமை அவ்வளவு மோசமானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அறிவு அல்லது விழிப்புணபுர்வு என்பது மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது,இதனை உயர்த்துவதற்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதற்கான பொருத்தமான நபர்களை மக்கள் தெரிவு செய்வதற்கு மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கவேண்டும்,இதனை மாற்றாமல் எங்களால் ஊழல்மோசடி நிறைந்த அரசியல் முறைமையையோ அல்லது சமூகத்தையோ தெரிவு செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மொடல்கள் நடிகர் நடிகைகள் பாடகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் அவர்களிற்கு அதிக வாக்குகளை வழங்குகின்றனர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான நபர் ஒருவர் விடுதலையான பின்னர் தேர்தலில் போட்டியிட்டால் அவர் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை நோய் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவுரை

நாட்டில் முதன் முறையாக குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

தோலில் பழுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்பட்டமையால் , சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த இளைஞன் தேசிய பாலியல் நோய் சிகிச்சை பிரிவிற்குச் சென்றுள்ளார். இதன் போது இளைஞனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் , அவரது மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைகளில் இளைஞன் குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சைகளுக்காக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முதலாவது குரங்கம்மை நோயாளர் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவிக்கையில்,

‘குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ள ஒருவருடன் நேரடியாக ஸ்பரிச தொடர்பினை பேணுவதால் மாத்திரமே , இந்நோய் ஏனையோருக்கு பரவும். நோய்க்கு உள்ளானவரின் தோல் பகுதியில் ஏற்படும் பழுக்களிலிருந்து வெளியேறும் திரவம் நோய் பரவுவதற்கு ஏதுவாக அமையும் காரணியாகும். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சலுடன் உடலில் பழுக்கள் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் துரிதமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துகின்றோம்.

குறிப்பாக தமது இனப்பெருக்க உறுப்புக்களை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான பழுக்கள் ஏற்பட்டால் , விரைவில் சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். இந்நோய்க்கு உள்ளாகுபவர்கள் நோயிலிருந்து முற்றாக குணமடையும் வரை பாலியல் உறவுகளை தவிர்ப்பது அவசியம். எவ்வாறிருப்பினும் இந்நோய் குணப்படுத்தக் கூடியதாகும். இந்நோய் தொடர்பில் நாடு என்ற ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தொழிநுட்பரீதியில் தீர்மானங்களை எடுக்கப்படும் வரை அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை.’ என்றார்.

குரங்கம்மை நோய் அறிகுறிகளாக ஆரம்பகட்டத்தில் காய்ச்சலும் , பின்னர் உடற் தோல் பகுதியில் படர் தடிப்புக்கள் என்பன ஏற்படும். இவை இலகுவில் இனங்காணப்படக் கூடிய அறிகுறிகளாகும். இரு பிரதான பிறழ்வுகள் மூலம் இந்த நோய் பரவுகின்றது. குறித்த பிறழ்வுகள் 10 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றை பி.சி.ஆர். பரிசோதனை ஊடாக இனங்காண முடியும். அதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய ஆய்வு கூடங்களிலும் காணப்படுகின்றன.

கொவிட் வைரசுடன் ஒப்பிடும் போது , குரங்கு அம்மை வைரஸ் 50 ஆண்டுகள் பழமையானதாகும். எனினும் இது கொவிட் தொற்றை விட குறைவான வேகத்திலேயே பரவக்கூடியது. இதற்கான மருந்துகள் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சின்னம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் தடுப்பூசியானது, குரங்கு அம்மை நோய்க்கு எதிராக 85 சதவீதம் சாதகமாக பலன் தரக்கூடியது.

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளமையின் காரணமாகவே, ஏனைய நாடுகளை பாதுகாப்பு முன்னாயத்தங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர சுகாதார நிலைமை கடந்த ஜூலை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலட்டை பண்ணைகளால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு

போரின் பின்னர் வடக்கு பகுதிகளில் அரச அனுசரணையுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றபோதிலும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

விவசாயிகள், மீனவர்கள் உட்பட சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் பற்றியும், அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என்பதே பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அண்மைக்காலமாக வடக்கில் மீனவர்கள் கடலட்டை பண்ணைகளால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரச கட்டமைப்புகளில் முறைப்பாடு அளித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வடக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் உள்ள கடலட்டை பண்ணைகளால் உள்ளூர் மீனவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக, அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அங்குள்ள கடலட்டை பண்ணைகளின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாகவும், அவர்கள் இந்த கடலட்டை பண்ணைகளின் விருத்திக்காக நிதியுதவி செய்வதாகவும் மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த பண்ணைகளில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தாமல், வெளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்தப் பண்ணைகள் வழங்கப்படுகின்றன.

அது மாத்திரமன்றி, கடலட்டை பண்ணைகள் அமைந்துள்ள கடல் பகுதிகளுக்கு பிரதேச மீனவர்களை கூட அனுமதிப்பதில்லை எனவும் அப்பகுதி மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளால் அப்பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நலிவடைந்துள்ள மீனவர்களுக்கு மென்மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்தீவில் அண்ணளவாக 50 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பவளப்பாறைகள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. அப்பிரதேசத்தை விட்டு அங்கு வாழும் மீனவர்களும் வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இப்பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டால், சிறு மீன்பிடி தொழிலாளர்களாகிய நாம் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இப்பிரதேசத்தின் பூர்வீக தொழிலான கடற்றொழிலை மேற்கொண்டு, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உரிமையை எமக்கு பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2023 இற்கு முன்னர் காணாமல்போனோர் விசாரணைகள் நிறைவடையும் – நீதியமைச்சர்

அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனை தெரவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும், சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தூதுவர் பாராட்டினார்.

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அமெரிக்க தூதுவர் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், இலங்கையில் புதிய அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காகவும், இது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காகவும் அமைச்சருக்கு தூதுவர் தனது நன்றியை தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவைகள் உள்ளிட்ட நலன்புரி திட்டங்களுக்கும் தூதுவர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதன்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்று நீதியமைச்சர் அமைச்சர், அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மைத் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள நபர் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்களை அடுத்த சில நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன வெளியிடுவார்

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்,குறிப்பிட்ட பகுதியில் சோதனையை மேற்கொண்டவேளை இது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட முயற்சிக்கும் ரணில் – திஸ்ஸ விதாரண

மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிடின் நீதிமன்றம் செல்வோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளமை அவதானத்திற்குரியது. மாகாண சபைகள் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 139 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தப்பா அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, அவரும் அறிக்கைக்கு எதிராகவே வாக்களித்தார். இதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய மீளாய்வு குழுவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமித்தார்.

3 மாத காலத்திற்குள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்க நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சூழ்ச்சி வெற்றிப்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கத்திற்கமைய மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது.எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இவரது கருத்திற்கமைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறைமை சிறந்தது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது,தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது,பிரதமர் தினேஷ் குணவர்தன