சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் ‘தோற்றுப்போன’ தரப்பு ஒன்று மேற்கொள்ளும் சதுரங்க ஆட்டமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான நீதிமன்ற வழக்குத் தாக்கல்கள் அமைந்துள்ளன.

கடந்த ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, செல்லுபடியற்றது. எனவே, குறித்த இரண்டு பொதுச்சபைக் கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதுமென தெரிவித்து திருகோணமலையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக யாழ்.

மாவட்ட நீதிமன்றில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரினால் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தாக்கல்களின் பின்னணியில்தான் ‘தோற்றுப்போன தரப்பின்’ சட்ட விளையாட்டுகள் இருப்பதாக உள் ‘வீட்டு’த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு, அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகப் பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து தகுதிகளையும் கொண்டவன் என்ற தலைக் கனத்துடனும் களமிறங்கியவர் அடைந்த எதிர்பாராத தோல்வி மற்றும் கடந்த ஜனவரி 27ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவின்போது, தலைவர் பதவி நனவாகாத நிலையில், பொதுச் செயலாளர் பதவியையாவது அடைந்து விட வேண்டுமெனத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் மீண்டும் ஆசைப்பட்டு அதுவும் கிடைக்காத நிலையில், தனது விசுவாசியான திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டுமென மேற்கொண்ட சதிகள், குழிபறிப்புக்கள் கட்சியைப் பிளவு படுத்தும் காய் நகர்த்தல்கள் மத்தியில் குகதாசன் தெரிவு செய்யப்பட்டபபோதும், அதற்குக் கிளம்பிய கடும் எதிர்ப்புக்களினால் இன்று வரை அவர் அந்த பதவியை ஏற்க முடியாத நிலை ஆகிய இரு காரணங்களின் பின்னணியிலேயே தற்போது இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது ஒன்றும் ரகசியமானதல்ல.

‘தோற்றுப்போன’ தரப்பின் விசுவாசிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள் ‘வீட்டு’தரப்புக்களினால் கூறப்படும் இவ்வழக்கைத் தாக்கல் செய்தவர்கள், ‘இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜனவரி 27இல் தெரிவான குகதாசனையே நியமிக்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவிக்கு மீள் தெரிவு இடம்பெறக்கூடாது. அத்துடன், பொதுச் செயலாளர் பதவி பங்கிடவும் படக்கூடாது. இதற்கு கட்சியின் புதிய தலைமை இணங்கினால் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

இல்லையேல் இன்னும் இன்னும் வழக்குகள் தாக்கல் செய்வோம்’ என்ற முடிவில் இருப்பதாக தெரியவருகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்று, கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச் சபையில் பலர் இடம் பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கைத் தாக்கல் செய்தவரும் அதனைத் தெரிந்து கொண்டே வாக்களித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்போது தனது விருப்பத்துக்குரிய தலைவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளார்.

ஆனால், அவர் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்ததாலேயே இப்போது வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். தான் விரும்பிய தலைவர் வெற்றி பெற்றிருந்தால் கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச்சபையில் பலர் இடம்பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டை இவர் முன்வைத்திருக்க மாட்டார்.

இதனால்தான் இந்த வழக்குத் தாக்கல் சூழ்ச்சிகளின் பின்னணியில் ‘தோற்றுப்போனவர்’ இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும் தரப்பு பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றது. அதாவது இலங்கை தமிழரசுக் கட்சியை உடைக்கும், புதிய தலைமையைச் செயற்படவிடாது தடுக்கும், கட்சியின் ​பொதுச் செயலாளராகத் தனது விசுவாசியையே நியமிக்க வேண்டும் என விடாப்பிடியாக நிற்கும் தோற்றுப்போனவரின் நடிப்பில் உருவாக்கப்பட்டதே இந்த வழக்குகள் என்பதே தமிழ்த் தேசிய விசுவாசிகளின் குற்றச்சாட்டு.

வழக்கு தாக்கல் செய்தவர்களின் இந்த நோக்கம் அல்லது நிபந்தனை இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்குக் காற்றுவாக்கில் தெரிவிக்கப்பட்ட போதும், ‘தமிழரசுக் கட்சிக்கு எதிரான ‘உள் வீட்டு’ சூழ்ச்சிகளை முறியடிப்போம். வழக்குகளைச் சந்திக்கத் தயார்’ என கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனும் புதிய தலைவர் சிவஞானம் ஸ்ரீதரனும் உறுதியாக இருப்பதனால். தமது நிபந்தனைகளை ஏற்காது விட்டால் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவும் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தப்படும் என்ற மறைமுக மிரட்டல்களிலும் ‘தோற்றுப்போன’ தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் ‘உள் வீட்டு’ தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றிப் புரிதல்களும் எமக்குத் தெளிவாக உள்ளன. 75 வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாகக் கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். விசேடமாகக் கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்மானத்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன். விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, அனைத்து தடைகளையும் முறையாகக் கையாண்டு அவற்றைக் கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் எடுத்த வரலாற்றுத் தவறான முடிவினால் அவர் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் பற்ற வைத்த தீ இன்று தான் பற்றி எரிய அண்மையில் இரா.சம்பந்தன் எம். பி. பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கோரியது. தற்போது சம்பந்தன் விதைத்த வினையின் விளைவாக அவரின் கட்சியையே அறுக்கத் தொடங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

இதேவேளை, கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது ‘தமிழ் கட்சிகளின் பிளவு ஆபத்தானது.

பிளவுகள் சரி செய்யப்பட்டு அரசியல் பயணங்கள் தொடர வேண்டும். தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது. இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். தமிழ் கட்சிகள் பிளவடைந்து முடிந்து தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுத்தப்படுவதை அவர் அறியவில்லை போலும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முச்சந்தியில் நிற்கும் நிலையில், இவ்வாறானதொரு நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கும் வறட்டு கௌரவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது விட்டிருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று ஸ்ரீதரன் தலைமையில் தலை நிமிர்ந்து நின்றிருக்கும். இந்தப் பிரச்சினையைச் சுமுக தீர்வு காணாது கௌரவப் பிரச்சினையாக, இரு அணிகளின் பிரச்சினையாக மாற்றினால் தந்தை செல்வா சொன்னதைச் சற்று மாற்றி, ‘இலங்கை தமிழரசுக் கட்சியை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறவே நேரிடும்.

-முருகாநந்தன் தவம்

இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம்

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை நீதிமன்றம் இலங்கை வெளிக்கடை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள 151 விசைப்படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

மீனவர்களின் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக தங்கச்சிமடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் மீனவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என நேற்று இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பகிர்வு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

அதிகார பகிர்வு அனைவரையும் உள்வாங்கும் அபிவிருத்தி ஆகியவை இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய பெரும்பான்மைவாதம் குறித்தும் எச்சரித்துள்ளார்

இந்தியாவின் 2022 ரைசினா டயலொக் 2024 நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இலங்கை 1980களின் நடுப்பகுதியில் இனமோதலை எதிர்கொண்டது என்பது உங்களிற்கு தெரியும்- இனமோதலிற்கு முன்னர் நாங்கள் பாதுகாப்பு செலவீனங்களிற்காக மிகவும்குறைவாகவே 0.5செலவிட்டோம்.

இது 1985 இல் மூன்று வீதமாக அதிகரித்தது பின்னர் பத்து வருடங்களின் 1995 இல் 5.9 வீதமாக அதிகரித்தது.

1985 இல் எங்களின் பாதுகாப்பு செலவீனம் 188 மில்லியன் டொலர் 2008 இல் இது 1.5 மில்லியன் டொலராக மாறியது.

1980-90களில் எங்களின் சமூகஅபிவிருத்தி சுட்டிகள் ஏனைய தென்னாசிய நாடுகளை மிகவும் சிறப்பானவையாக காணப்பட்டன.

நாங்கள் அபிவிருத்தி;க்காக செலவிட்டிருக்ககூடியவற்றை பாதுகாப்பிற்காக செலவிட்டோம்,

இலங்கையை பொறுத்தவரை நாங்கள்அனைவரும் ஜனநாயகம் குறித்து நம்பிக்கை கொண்டுள்ள போதிலும் நாங்கள் பெரும்பான்மைவாதம் குறித்து அவதானமாகயிருக்கவேண்டும்.

1970களில் இலங்கையில் கல்விசீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டபோது அது சில சமூகத்தினர் பாரபட்சத்திற்குள்ளாக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது. இது அந்த சமூகத்தினர் ஆயுதங்களை ஏந்தும் நிலையை ஏற்படுத்தியது.

ஆகவே நாங்கள் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பதை நாங்கள் நம்புகின்ற போதிலும் அபிவிருத்தி என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியாக காணப்படவேண்டும்,சமூகத்தின் ஒரு பகுதியினருக்கான அபிவிருத்தியாக மாத்திரம் அது காணப்படமுடியாது.

ஒருநாடாகவும் முன்னோக்கி செல்வதற்கும் நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும், நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளாவிட்டால் அரசியல்வாதிகள் பெரும்பான்மைவாதம் என்ற துரும்புச்சீட்டை பயன்படுத்துவார்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை மாத்திரம் கவரும் நோக்கத்துடன் செயற்படுவார்கள்.

வடக்கு-கிழக்கு அரசியல்வாதிகளை இணைத்து புதிய கூட்டணி அமைத்து ரசியல், பொருளாதார புரட்சி ஏற்படுத்துவோம்

தென்னிலங்கை அரசியல்வாதிகள் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு புதிய அரசியல் கூட்டணி முன்னோக்கி பயணிக்கும். இப்புதிய கூட்டணியின் ஊடாக அரசியல் புரட்சியையும், பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

புதிய அரசியல் கூட்டணியின் கொழும்பு மாவட்ட முதலாவது பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (24) ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் யாருடன் இணையப் போகின்றோம் என்று கேட்கின்றனர். நாம் யாருடனும் தனித்து இணையப் போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானாலும், பொதுஜன பெரமுனவானாலும் சகலரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதன் காரணமாகவே பல திசைகளிலும் காணப்பட்ட நாம் அனைவரும் இன்று ஒன்றிணைந்து கூட்டணியை அமைத்துள்ளோம்.

75 ஆண்டுகள் வாக்குறுதி அரசியலால் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த கலாசாரத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் பிரிவினைவாதங்களால் நாடு பல கலவரங்களை எதிர்கொண்டது. 30 வருட கொடூர யுத்தத்தையும் எதிர்கொண்டது. இனியொருபோதும் அவ்வாறான யுத்தங்களுக்கும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது.

பிரபாகரனின் யுத்தத்தை வெற்றி கொண்டாலும் எம்மால் பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாமலுள்ளது. எனவே, அதற்கு நாம் தயாராக வேண்டும். அதற்காக சிறந்த வேலைத்திட்டத்துடன் எவ்வித இன, மத பேதமும் இன்றி இணைந்து பயணிக்க வேண்டும். தற்போதுள்ள இந்த நிலைமைகளின் அடிப்படையில் எம்மால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்க முடியாது. எனவே தான் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

வியத்மக அமைப்பை கட்டியெழுப்பி புதிய ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி அவரை வெற்றி பெறச் செய்தோம். எனினும் அது தோல்வியிலேயே முடிவடைந்தது. எனவே இனி நாம் அவதானத்துடன் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். தென்னிலங்கை அரசியல்வாதிகள் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் முன்னோக்கி பயணிப்போம். அதற்கு எடுத்துக்காட்டாகவே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இன்று எம்முடன் இணைந்துள்ளார். புதிய கூட்டணியின் ஊடாக புதிய அரசியல் புரட்சியையும், பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்துவோம் என்றார்.

Posted in Uncategorized

மார்ச் முதல் வாரத்தில் ரணில் – பசில் சந்திப்பு; ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இறுதித் தீர்மானம்

உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறனதொரு நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் (2023) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். ஜனவரி மாதம் இறுதியில் நாடு திரும்புவதாக இருந்த போதிலும் இதுவரையில் பஷில் ராஜபக்ஷ நாட்டுக்கு வரவில்லை. இவ்வாறானதொரு நிலையில் இவ்வாரம் இறுதியில் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல் வழங்கியது.

ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமநிலைப்படுத்தவே பஷில் ராஜபக்ஷ அவசரமாக நாடு திரும்புவதாக அந்த தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஒருதரப்பு முன்வைத்துள்ள நிலையில், மற்றுமொரு தரப்பு அதனை எதிர்த்து வருகிறது. இதனால் கட்சிக்குள் நாளுக்கு நாள் முரண்பாடுகளும் பிளவுகளும் தீவிரமடைந்து வருகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோரை தொடர்ந்தும் தொலைப்பேசி ஊடாக தொடர்புகொண்டு நாட்டின் அரசியல் நிலைமைகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் பஷில் ராஜபக்ஷ கருத்தில் கொண்டிருந்தார்.

அதே போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிராமிய மட்டத்தில் உள்ள மக்கள் ஆதரவுகள் குறித்தும் பல்வேறு வகையில் கணிப்புகளை அவர் முன்னெடுத்திருந்தார். இதன் பிரகாரம், 20 வீதம் தொடக்கம் 25 வீதம் வரையிலான மக்கள் ஆதரவு கிராமிய மட்டத்தில் இன்னும் உள்ளதாக பஷில் ராஜபக்ஷவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் ஆதரவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் அரசியல் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதே பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனையாக உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இதன்போது பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்று அரசியல் கட்சியுடன் இணைந்து கட்சியின் சின்னத்தை புதுப்பித்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் இறுதியில் நாடு திரும்புகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் மார்ச் 3ஆம் திகதி கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்கள் வேறுபட்டாலும் இந்த சந்திப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி நவீன கடலோர காவற்படைக் கப்பலை இலங்கைக்கு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் வர்மா உறுதி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதென அமெரிக்க இராஜாங்க முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்தார்.

இரு தினங்கள் (பெப்ரவரி 23 – 24 ) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா அரசாங்க, சிவில் சமூகம் மற்றும் பொருளாதாரத் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்ட நிலையில், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்தித்த செயலாளர் வர்மா இலங்கையினை நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்தும் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்படும் சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினார்.

மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதிச் செயலாளர் வர்மா வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும் ஒரு அதிக ஸ்திரத்தன்மையுடைய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை கடற்படையின் திறன்களை பலப்படுத்துவது உட்பட, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலானபாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

பெப்ரவரி 23 ஆம் திகதி, அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று முன்னாள் அமெரிக்க கடலோரக் காவல்படை கப்பல்களில் ஒன்றான SLNS விஜயபாகு கப்பலுக்குச் சென்ற பிரதிச் செயலாளர் வர்மா பின்வருமாறு கூறினார். “நடுத்தர தாங்குதிறன் கொண்ட ஒரு நான்காவது கப்பலையும் இலங்கைக்கு வழங்குவதற்கான தனது நோக்கத்தை இராஜாங்கத் திணைக்களம் காங்கிரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளதென்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த முயற்சிக்கு நிதியளிப்பதற்காக வெளிநாட்டு இராணுவ நிதியளிப்பாக 9 மில்லியன் டொலர்களை திணைக்களம் ஒதுக்கியது. காங்கிரஸின் அறிவிப்புக் காலம் நிறைவடைந்த பின்னர், கப்பலை இலங்கைக்கு வழங்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தப் பரிமாற்றம் நிறைவடைந்தால், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அது மேலும் பலப்படுத்தும்.

இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் ரோந்து செல்வதற்கும், அதன் தேடுதல் மற்றும் மீட்புப் பகுதியைக் கண்காணிப்பதற்கும், இந்து சமுத்திரத்தின் பரபரப்பான கடல் வழித்தடங்களைக் கடந்து செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் மேலதிக பாதுகாப்பை வழங்குவதற்குமான இலங்கையின் திறனை இந்தக் கப்பல் அதிகரிக்கும்.

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டபோது அங்கு இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித்த பண்டார தென்னகோன், இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

“அமெரிக்கா முன்னர் இலங்கை கடற்படைக்கு மூன்று கப்பல்பளை வழங்கியுள்ளது. கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமுலாக்க பணிகள், மனித கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் ஆகிய பணிகளுக்காக இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் கால பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கும் அவை உதவி செய்கின்றன. நான்காவது கப்பலின் இந்தப் பரிமாற்றமானது, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப்பாதுகாப்பதற்காக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பின் ஒரு நீண்ட வரலாற்றில் மற்றுமொரு முக்கிய புள்ளியாகும்.” என தூதுவர் சங் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்திலுள்ள ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையமான மேற்கு கொள்கலன் முனையத்திற்கும் (WCT) பிரதிச் செயலாளர் வர்மா விஜயம் செய்தார். அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் 553 மில்லியன் டொலர் நிதியளிப்புடன், கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் (CWIT) பிரைவட் லிமிடட் இனால் தற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மேற்கு கொள்கலன் முனையமானது தெற்காசியப் பிராந்தியத்திற்கு இன்றியமையாத ஒரு உட்கட்டமைப்பை வழங்கும்.

2021 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட தனது முழு கொள்ளளவுடன் இயங்கும், கொழும்பு துறைமுகத்தின் இப்புதிய இணைப்பானது துறைமுகத்தின் மிகவும் ஆழமான முனையமாக அமைவதுடன், இலங்கையின் இறையாண்மைக் கடன்களை அதிகரிக்காமல், கொழும்பு துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்துக் கொள்ளளவை அதிகரிப்பதையும், பிரதானமான கப்பல் வழித்தடங்கள் மற்றும் சந்தைகளை இணைக்கும் முதன்மை ஏற்பாட்டியல் மையமாக அது வகிக்கும் பங்கை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மா முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் பதவியில், அவர் திணைக்களத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாகச் செயற்பட்டு, நவீனமயமாக்கல், வெளிநாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பட்ட பணியாளர்கள் தொடர்பான விடயங்களிலும் மூலோபாயம் தொடர்பான விடயங்களிலும் திணைக்களத்தின் முயற்சிகளை வழிநடத்துகிறார். பிரதிச் செயலாளர் வர்மா முன்னர் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றி, மிகப்பெரிய அமெரிக்கத் தூதரகங்களில் ஒன்றான இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை வழிநடத்தியதுடன் இருதரப்பு உறவுகளில் வரலாற்று ரீதியான முன்னேற்றங்களை அடைவதற்கும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – இலங்கை கடற்படை

இந்திய கடற்றொழிலாளர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய கடற்றொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய கடற்றொழிலாளர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். என தெரிவித்தார்.

செங்கடல் பகுதிக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கைக் கடற்படைக் கப்பல்

செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி செய்துள்ளதுடன்,

எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து நடவடிக்கையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்புகின்றது என தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கை கடற்படை முன்னெடுத்த ஆபத்தான இந்த நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக கடற்படை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என தெரியவருகின்றது.

மீண்டும் எப்போது இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்பும் என்பது குறித்து இலங்கை கடற்படை எதனையும் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இடம்பெறும் – சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நிச்சயமாக முன்வைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் நேற்று ) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைத்துள்ள நிலையில், யார் வேட்பாளர் என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.

யாரை வேட்பாளராக தெரிவு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

ஆனால், கட்சியின் செயலாளர் என்ற வகையில், எமது கட்சியின் கீழ், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வாக்குச்சீட்டில் பொஹட்டுவ சின்னம் இடம்பெறும் என்பதை என்னால் மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும் என்றார்.

சீனாவுடனான உறவு குறித்து இந்தியா கவலைப்படவேண்டியதில்லை – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இலங்கை இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக கருதுவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூர்ய 2048ம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் உள்ள இலங்கை இந்தியாவின் முன்மாதிரியை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்படவிரும்புகின்றது என ஏன்ஐக்கு தெரிவித்துள்ள அவர் இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் நாங்கள் உதவிகளை எதிர்பார்க்கவில்லை இணைந்த செயற்பாடுகளையே எதிர்பார்க்கின்றோம் நாங்கள் இந்தியாவை ஒரு சகாவாக பார்க்கின்றோம் நாங்கள் இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக பார்க்கின்றோம் அதன் வெற்றிகதையை பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு அபிவிருத்தியடைந்த நாடு என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்தியா அதனை எவ்வாறு சாதித்தது என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றோம் எனவும் தாரகபாலசூர்ய தெரிவித்துள்ளார்.

நாங்கள.2048 ம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாகமாற விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அதிகளவான பொருளாதார வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனாவின் செல்வாக்கிற்கு உட்படுகின்றதா என்ற கேள்விக்கு நாங்கள் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடதயார் ,ஆனால் இந்தியாவை பொறுத்தவரை நாங்கள் விசேட உறவுகளை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்

இந்தியாவுடன் எங்களுக்குள்ளது நாகரீக தொடர்பு ஆகவே இந்தியா சீனாவுடனான எங்களின் உறவுகள் குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை எனவும் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் மாத்திரமல்ல நாங்கள் மேற்குலகத்துடனும் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உதாரணத்திற்கு நாங்கள் ரஸ்யாவுடன் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் மத்திய கிழக்குடன் நாங்கள் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு சிறிய நாடு எங்களிற்கு பாரிய அரசியல் அபிலாசைகள் இல்லை நாங்கள் எந்த நாட்டின்மீதும் படையெடுக்கப்போவதில்லை இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதையும் இலங்கை மக்களினது வாழ்க்கை தரம் உயர்வதையும் உறுதி செய்ய விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியின் பின்னர் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தாரகபாலசூர்ய நீங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் அரகலய தருணத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவித்தீர்கள் நீங்கள் மிகப்பெரும் வரிசையில் மக்களை பார்த்திருப்பீர்கள் – நாலுகிலோமீற்றர்தூரத்திற்கு எரிபொருள் மருந்து உணவிற்காக மக்கள் வரிசையில் காத்து நின்றனர் இந்த நிலையை நாங்கள் வேகமாக மாற்றிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக எங்கள் நண்பர்களின் உதவியுடன் இதனை மாற்றினோம் குறிப்பாக பிரதமர் மோடியின் அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாக எனவும் குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அந்த நெருக்கடியான தருணத்தில் உதவியமைக்காக இந்திய மக்களிற்கும் பிரதமர் மோடிக்கும் மிகவும் நன்றி உடையவர்களாக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.