இலங்கையில் டென்மார்க் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை  பரிமாறிக் கொள்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுடில்லியில் வசிக்கும் டென்மார்க் தூதுவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய கோபன்ஹேகனில் உள்ள ஒரு பெரிய டென்மார்க் நிறுவனமான ஜி.பி.வி இன் இலத்திரனியல் உற்பத்தி தொழிற்சாலையை இலங்கையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

டென்மார்க்கில் பல முதலீட்டாளர்கள் எரிசக்தி துறை, ஆழ்கடல் மீன்பிடி, இயந்திர படகு, உற்பத்தி மற்றும் ஏனைய திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பொதியின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து டென்மார்க் தூதரிடம் பிரதமர் தெரிவித்தார்.

முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் டென்மார்க் இலங்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பரிஸ் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையில் வழங்கிய ஆதரவை நினைவு கூர்ந்தார்.

கொள்கலன் ஊக்குவிப்பு மையமாக இலங்கையின் கப்பல் போக்குவரத்தை  விரிவுபடுத்துவதற்கான முயற்சி குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையில் கறுவா மற்றும் ஏனைய வாசனைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வசதிகளை டென்மார்க் வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் டென்மார்க் தூதரக அதிகாரி ருச்சி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரித்தானிய இளவரசி ஜனவரியில் இலங்கை வருகை

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் அங்கத்தவரான அவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஒரேயொரு புதல்வியும், மூன்றாம் சார்ள்ஸ் அரசரின் சகோதரியும் ஆவார்.

அதன்படி இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் பிரதி அட்மிரல் டிம் லோரன்ஸ் ஆகியோர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பாகி 75 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படவிருக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கம் இளவரசி ஆனுக்கு அழைப்புவிடுத்திருக்கும் நிலையிலேயே இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.

அரசியல் சீர்குலைவை சரி செய்வதே முதன்மையானது

உலகத் தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் முயற்சியை பல்வேறு புலம்பெயர் அமைப்புகளும் விமர்சித்திருக்கின்றன.

அவர்கள் புலம் பெயர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றை வெளியிட்டிருப்பதை பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் வரவேற்றதாகத் தெரியவில்லை.

தென்னிலங்கையை பொறுத்தவரையில் புலம் பெயர் சமூகத்தோடு அரசாங்கம் உரையாடி வருவதான ஒரு தோற்றம் ஏற்பட் டிருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவையினர் இலங்கையில் தங்கியிருக்கும் சூழலில் சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க அரசின் விசேட பிரதிநிதியான – டீசிரி கோமியர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியிருகின்றது.

இதேவேளை, தமிழத் தேசிய அரசியல் பரப்பின் பிரதான கூட்டணியான தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ரெலோ, ”தனிநபர்கள் தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களை கையாள முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’, என்று தெரிவித்திருக்கின்றது.

இதிலுள்ள அடிப்படையான பிரச்னை வேறு.

அதாவது, தமிழ் மக்களின் அரசியலை எவர் வேண்டுமனாலும் கையாளலாம் என்னும் நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைகள் இருக்கின்றபோதும் அவர்கள் மத்தியில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் இல்லை – தென்னிலங்கையோடு விடயங்களை கூட்டாகக் கலந்துரையாடும் போக்கு இல்லை.
இந்த இடை வெளியாலேயே உலகத் தமிழர் பேரவை என்னும் பெயரில் புலம்பெயர் சமூக உறுப்பினர்கள் சாதாரணமாக விடயங்களில் தலையீடு செய்ய முடிகின்றது.

இது தொடர்பில் ‘ஈழநாடு’ தொடர்ந்தும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டி வந்திருக்கின்றது.

அதாவது, தாயக அரசியலை வேறு தரப்புகள் கையாள அனுமதிக்கக்கூடாது. புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெற வேண்டும் – அவர்களது ஆதரவு முக்கியமானது. ஆனால், தாயக அரசியலை தீர்மானிக்கும் உரிமையை அவர்கள் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. 2009வரையில் புலம்பெயர் அமைப்புகளும் தனிநபர்களும் வெறுமனே நிதியளிக்கும் கருவிகளாகவே இருந்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர்தான் ஆளுக்கொரு கடை என்னும் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் அரசியலில் தலையீடு செய்ய முற்பட்டனர்.

2009இற்கு பின்னரான தாயக அரசியல் தலைமைகளை மதித்து நடக்கும் போக்கு புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் பெரியளவில் இல்லை.

தாங்கள் கூறுவதை இங்குள்ளவர்கள் கேட்க வேண்டும் என்னும் அடிப்படையிலேயே அவர்களது அணுகுமுறை இருந்தது.

இந்தப் போக்கின் விளைவாக – விடுதலைப் புலிகளுக்கு அதிகம் உரிமை கோருவது யார் என்னும் அரசியல் போக்கொன்றும் உருவாகியது.

அந்த உரிமையை அதிகம் தங்கள் வசப்ப டுத்துவதை ஓர் அரசியல் போக்காகவே கைக்கொண்டிருப்பவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினர்தான்.
அதேவேளை கிளிநொச்சியில் அந்த உரிமையை தன் வசப்படுத்துவதில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னணி வகிக்கின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிலர் இந்த விடயத்தை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்போடு செயல் படுகின்றனர்.

இதற்கு பின்னால் புலம்பெயர் குழுக்களின் நிதி ஆதரவும் உண்டு. இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை செய்யலாம் என்னும் சூழலில்தான உலகத் தமிழர் பேரவையினர் சிங்கள மக்களோடு உரையாடும் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறுகின்றனர். ஜனநாயக அரங்கில் எவரும் தங்களின் கருத்துகளை முன்வைக்கலாம் – அதற்காக அவர்கள் செயல்படலாம்.

ஆனால், அவ்வாறானவர்கள் தமிழ் மக்களின் பெயரால் விடயங்களை முன்னெடுப்பதுதான் சிக்கலானது.
அது ஆபத்தானதும்கூட.

ஏற்கனவே, பல புலம்பெயர் அமைப்புகள் ஒன்றுபட்டு சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி செயல்பட்டு வருகின்றபோது – இதேவேளை, தாயக தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள இந்தியாவின் உதவியை கோரி வரும் சூழலில் தன்னிச்சையாக சிங்கள மக்களோடு உரையாடப் போகின்றோம் என்று சிலர் தென்னிலங்கையில் சந்திப் புகளை மேற்கொள்வதானது அடிப்படையிலேயே தமிழர் அரசியலை பலப்படுத் தும் செயல்பாடுகளாக அமையாது.

இவை அனைத்தும் தமிழ் அரசியலின் சீர்குலைவையே அடையாளப்படுத்தும்.

மற்றவர்களோடு உரையாட செல்வதற்கு முன்னர் தமிழத் தேசிய தரப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் அரசியலிலுள்ள சீர்குலைவை சரிசெய்ய வேண்டும்

சீனாவுக்காக இந்தியாவின் வரலாற்று உறவை முறித்துக்கொள்ள போகின்றீர்களா – கோவிந்தன் கருணாகரன்

இந்திய, சீன உறவில் உண்மையான நண்பன் யார் என்பதை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும். நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை தவிர்க்க வேண்டும்.

இங்கு பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழியும், பௌத்த இலக்கியங்களும் இந்தியாவிலே தோற்றம் பெற்றன. இத்தகைய வரலாற்று தொடர்புகளை சீனாவுக்காக அறுக்கப் போகின்றீர்களா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சீன எக்சிம் வங்கி எமக்கு உதவுகின்றது. சர்வதேச கடன் மறுசீரமைப்பில் கை கொடுக்கின்றது என்று குறிப்பிடப்படுகிறது.

சீன கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் வரையறைகள் என்னவென்பதை இந்த சபையில் சமர்ப்பிக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீக கடமை.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்பு, சீனாவின் கொள்கை தொடர்பாக அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும்.

சீனா தொடர்பாக உரையாற்றும்போது இந்தியா தொடர்பிலும் உரையாற்ற வேண்டியது கட்டாயம். இந்தியா என்று நாங்கள் பேசினால் இங்குள்ள சிலருக்கு அது கசக்கும்.

இந்தியா எனக்கொன்றும் இனிப்பல்ல. ஆனால் யதார்த்தம் புரிய வேண்டியது அவசியம். பொருளாதார சிக்கலில் நாம் மூழ்கியிருந்த போது நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசிய மருந்து, எரிபொருட்களுக்காக எந்தவொரு நிபந்தனையுமின்றி இந்தியா வழங்கியது

ஆனால் அந்த வேளையில் சர்வதேச நாணய நிதியம் கூட.2.9 பில்லியன் டொலர்களை பல்வேறு நிபந்தனைகளுடன்தான் வழங்கியது நான் ஒன்றும் இந்திய ஆதரவாளன் அல்ல.

ஆபத்தில் கை கொடுப்பவனே நண்பன் . ஆபத்து நேரத்தில் உதவுவதுபோல் தனது நலனை நிறைவேற்ற நினைப்பவன் நண்பனல்ல. இந்திய,சீன உறவு தொடர்பாக இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது .நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை நாம் தவிர்க்க வேண்டும்.நமது கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எமக்கு உற்ற நண்பனாக விளங்குவது இந்தியா மாத்திரமே .

அண்மைக்காலமாக எமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்களை அவதானிக்கின்றோம். இது நமது தேசிய கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்மைய நாட்களில் சீன பாதுகாப்புத்துறை தொடர்பான உளவுக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் சஞ்சரிப்பதும் நமது கடலில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வருகை தெரிவதாக கூறுவதும் அதற்கு எமது நாடு செங்கம்பளம் விரித்து வரவேற்பதும் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எமது வெளிநாட்டுக் கொள்கை சீனாவுடன் எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்பதல்ல. எமது சீன சார்பு என்பது இந்து சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கு நமது நாடு காரணமாகிவிடக்கூடாது.

சீனாவை விட இந்தியா எமது நட்பு நாடு. பௌத்த,இந்து மக்களின் ஆணிவேரின் மூலம் இந்தியாவே பாரம்பரிய கலாசார தொடர்புகள் மட்டுமல்ல இங்கு நீங்கள் பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழி இந்தியாவில் தான் தோன்றியது. பௌத்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றதும் இந்தியாவில்தான். இத்தகைய வரலாற்று தொடர்புகளை சீனாவுக்காக அறுக்க கொள்ளப் போகின்றீர்களா ? என்றார்.

Posted in Uncategorized

இமாலய பிரகடனமா? எங்களிற்கு எதுவும் தெரியாது ; எந்த தொடர்பும் இல்லை – பௌத்தசாசன அமைச்சு தெரிவிப்பு

உலகதமிழர் பேரவையும் பௌத்தமதகுருமார்களும இணைந்து தயாரித்துள்ள பன்முகத்தன்மையை வலியுறுத்தும் இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் பன்முகதன்மையை முன்னிலைப்படுத்தும் இமாலய பிரகடனத்தை உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் பௌத்தமதகுருமாரும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இந்நிலையில் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்ட தரப்பினருடன் தங்களிற்கு எந்த தொடர்பும் இல்லை என பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரட்ண விதானபத்திரன மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பிரகடனம் குறித்த முழுமையான விபரங்கள் அமைச்சிற்கு இன்னமும் கிடைக்கவில்லைஎனவும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக இந்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரகடனத்தைமுழுமையாக ஆராய்ந்த பின்னரே அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (13 ) பாராளுமன்றில் இடம்பெற்றது.

இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து தகவல் திரட்டவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை. கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களிடமிருந்து தகவல் பெறும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது.

இதில் ஒட்டுமொத்த மக்களும் உள்ளடங்குகிறார்கள். நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தகவல் தரவு கட்டமைப்பு பேணப்படும். ஆகவே தனிப்பட்ட தகவல் கோரலை நிறுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தகவல் கோரல் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்களை மாத்திரம் இலக்காக கொண்டு தகவல் திரட்டப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொய்யுரைக்கிறார். கடந்த முறையும் இவர் இதே பிரச்சினையை முன்வைத்த போது நான் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தரவுகளை காண்பித்தேன் பதிலளித்தேன்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவு பெற்றுள்ளன. சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இந்த தகவல் பதிவுக்குள் உள்ளடங்குகிறார்கள்.இது தற்போது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை.யுத்த காலத்தில் இருந்து இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்படுகின்றன.பொலிஸ் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஒரு தனிநபர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பான தகவல் தரப்படுத்தலை பேணுவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இதில் தவறொன்றும் இல்லை. பெயர் உள்ளிட்ட தகவல் மாத்திரமே கோரப்படுகிறது. மதம் பற்றி கேட்கவில்லை.இனம் தொடர்பான விபரம் மாத்திரமே கேட்கப்படுகிறது. கடந்த முறையும் இவர் இவ்வாறு பொய்யுரைத்தார்.

நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே தகவல் கோரலை எதற்காகவும் இடைநிறுத்த முடியாது. தகவல் கட்டமைப்பை பேண வேண்டும். சிங்கள மொழியில் மாத்திரம் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். அதை ஆராய்ந்து திருத்திக் கொள்கிறேன் என்றார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க உயர்மட்ட தூதுவர் இலங்கைக்கு விஜயம்

மலையக தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி டிசைரி கோர்மியர் ஸ்மித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் இன்று 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். டிசைரி கோர்மியர் ஸ்மித் தெற்காசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவர் கொழும்பு, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும், கோர்மியர் ஸ்மித், மலையக தமிழர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

நுவரெலியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் ஆங்கில கல்விக்கான உதவித்தொகைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கோர்மியர் ஸ்மித் பங்கேற்கவுள்ளார். இது ஒரு அமெரிக்க அரசாங்க நிதியுதவியுடன் கூடிய உலகளாவிய திட்டமாகும், இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன்களின் அடித்தளத்தை வழங்குகிறது. இந்நிகழ்வில் மூன்று மாத பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 25 மாணவர்களுக்கு அவர் விருதுகளை வழங்குவார். இந்த முயற்சியானது மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த புதிய தொழிற்தகைமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் கிராமசேவகரின் வேலைகளை பார்க்கக்கூடாது – மனோ கணேசன்

பொலிஸார் பொலிஸூற்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதனை விடுத்து கிராம சேகவர் வேலையை பார்க்க கூடாது.

தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. வாழ்த்து தெரிவிப்பதற்காவா மதம், பிறந்த திகதி உள்ளிட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

ஆகவே தமிழர்களை இலக்காகக் கொண்ட தகவல் திரட்டலை உடன் நிறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிருலபனை,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்டிய, தெஹிவளை,பம்பலப்பிட்டி, மட்டக்குளி,முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்காக கொண்டு தகவல் திரட்டும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தகவல் கோருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன. பொலிஸ் கட்டளைச்சட்டம் பற்றி பேசும் இலங்கை பொலிஸூக்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெரியவில்லை.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் நாட்டின் அரசகரும மொழிகளாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே சகல விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.

இது டரான் அலஸின் பொலிஸ் இராச்சியமா, விக்கிரமசிங்கவின் பொலிஸ் இராச்சியமா ? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா? இந்த நாட்டில் யுத்தம் இல்லை,பயங்கரவாதம் இல்லை அவ்வாறான நிலையில் ஏன் ஏன் வீடு வீடாக செல்கின்றீர்கள். தகவல் திரட்டுகின்றீர்கள்.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை வழங்குவதை போன்று பொலிஸார் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார்கள்.பொலிஸார் பொலிஸூக்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதை விடுத்து கிராம சேகவரின் வேலையை பொலிஸ் செய்ய கூடாது.

விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் முழு பெயர்,தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மதம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

மதம் தொடர்பான விபரங்களை ஏன் கேட்கின்றீர்கள்.தீபாவளி,நத்தார் மற்றும் தைப்பொங்கள் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதற்காகவா ? அதேபோல் பிறந்த திகதி கேட்கப்படுகிறது.பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவா ?அத்துடன் தனிப்பட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

பாதாள குழுக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாட்டாளர்களுடன் பொலிஸூக்கு தொடர்புண்டு.நான் ஒட்டுமொத்த பொலிஸாரையும் குறிப்பிடவில்லை.

ஒருசிலர் சிறந்த முறையில் சேவையாற்றுகிறார்கள்.99 சதவீதமான சிறந்தவர்கள் உள்ளார்கள்.தனிப்பட்ட தகவல்களை கோரும் போது பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.

தொலைபேசி இலக்கத்தை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியும்.தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் கோரப்படுகின்றன.ஆகவே இதனை உடன் நிறுத்துங்கள் என்றார்.

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட மூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் விவாதத்திற்கு விடப்படாது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, கூச்சல் .குழப்பங்களுக்கு மத்தியில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கள் மீதான விவாதத்திற்கு இரவு 8 மணிவரை நேரம் சபாநாயகர் அறிவித்த நிலையில் மாலை 4.30 மணிக்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பெறுமதி சேர்வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அதனை சமர்ப்பிக்காது வற் வரி சட்டமூல விவாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு முயற்சித்தது.

என்றாலும் எதிர்க்கட்சிகள் ” கூட்ட நடப்பெண்” கோரிய நிலையில் அதற்கு தேவையான 20 எம்.பி. க்கள் சபையில் இல்லாத நிலையில் பிரதி சபாநாயகர் சபையை ஒத்திவைத்ததால் பெறுதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் (வற்)மீதான விவாதம் இடை நடுவில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த விவாதத்தை திங்கட்கிழமை (11) நடத்தி அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் சபைமுதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான திங்கட்கிழமை தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள் நிறைவுற்றதை தொடர்ந்து ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து திங்கட்கிழமையே நிறைவேற்றுவதற்கான பிரேரணையை சபை முதல்வர் முன்வைத்தார். அத்துடன், குறைநிரப்புத் தொகை செலவீனத் தலைப்பையும் திங்கட்கிழமையே அங்கீகரிப்பதற்கும் அவர் முன்மொழிந்தார்.

அதற்கமைய, இந்தப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகோரிக்கை விடுத்தது. இதற்கமைய நேற்று காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம்மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து திங்கட்கிழமையே நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்ததுடன்,அதற்கமைய ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 51 மேலதிக வாக்குகளால்நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை (11) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் அதனுடன் இணைந்ததாக இந்த பிரேரணை மீதான விவாதத்தையும் முன்னெடுக்க சபாநாயகர் முயற்சித்தார்.

எனினும் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தவே ”சரி அப்படியானால் வரவு செலவுத்திட்ட திங்கட்கிழமை (11) விவாதம் முடிந்தவுடன் தனியாக விவாதத்திற்கு எடுப்போம். விவாதம் 8 மணியானாலும் விவாதத்தை தொடர்வோம் ”எனக்கூறிய சபாநாயகர் அதற்கு சபையின் அனுமதியும் கோரினார். இதற்கு சபையும் அனுமதி வழங்கியது. எனினும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் அரசு தரப்பினரின் நேரத்தை மட்டுப்படுத்தி எதிர்கட்சியினருக்கான நேரம் வழங்கப்பட்ட நிலையில் இவ்விவாதம் மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றது.

இதனையடுத்து உடனடியாகவே சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உரையாற்றினார்.அவரின் உரை முடிந்தவுடன் அரசு பிரேரணையை நிறைவேற்ற முற்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் தமது உரைகளுக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தின .ஆனால் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் எதிரிக்கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்ததால் திங்கட்கிழமை (11) விவாதம் தேவையில்லையென சபாநாயகர் கூறியதனால் சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுந்து, சபைமுதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த விவாதத்தை நடத்த போதுமான காலத்தை வழங்குவதாக காலையில் சபையில் தெரிவித்தார். அதனாலே நாங்கள் அதற்கு இணங்கினோம். ஆனால் தற்போது விவாதத்துக்கு இடமளிக்காமல் வாக்களிப்புக்கு செல்வது ஜனநாயக விராேத செயலாகும் என்றார்.

இருந்தபோது வாக்களிப்புக்கு செல்ல கோரம் மணியை ஒலிக்கவிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பிரகாரம் வாக்களிப்பு மாலை 4,45 மணியளவில் இலத்திரணியல் முறையில் இடம்பெற்றது.

அதன் பிரகாரம் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு வாக்களிப்புக்கு விடப்பட்ட நிலையில் ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 57 மேலதிக வாக்குகளினால் நிரைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், மூன்றாம் மதிப்பீடும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

வாக்களிப்பில் ஆளும் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரோஷான் ரணசிங்க சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் இதேவேளை நிதிச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.