புனரமைப்பு பணிகளுக்காக மீண்டும் இடைநிறுத்தப்படும் வடக்கு ரயில் சேவை

வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

அதன்படி கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கேள்வியெழுப்பிய செல்வம் எம்.பி.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப் போகின்றார்களா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

சீனாவைப் பொறுத்தவரையில் நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம். அது தன்னுடைய அதிகாரத்துக்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு.

எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன.

அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது? இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ?

எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும் பொறுப்புண்டு. அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றார்.

உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்தை உருவாக்க அனுமதிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர

‘‘பிக்குகளுக்கு அவதூறு ஏற்படுத்த ஒருசிலர் திட்டமிட்டு செயற்படுகிறார்கள். ஆனால், காவி உடை அணிந்தவர்கள் இருக்கும் வரை எமது இனத்தை அழிக்க முடியாது. துஷ்டர்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது. நாங்கள் உயிருடன் இருக்கும்வரை தனி ஈழத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம். மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்பட்டால் இந்த தமிழ் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கக் கூடாது. அவர்களின் குடும்பங்களுடன் யுத்தம் இடம்பெறும் நாடுகளுக்கு அனுப்ப யோசனை முன்வைப்போம்’’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது, எமது நாடு சுத்தமாக தேரவாத பெளத்தத்தை பாதுகாத்துவரும் நாடாகும். இதனை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். எமது அரசர்கள் ஒவ்வொருவரும் பெளத்த சாசனத்தை பாதுகாக்கவே யுத்தம் செய்தார்கள். சாசனத்தை பாதுகாப்பதற்காகவே இந்த நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விகாரைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே இதனை பாதுகாக்க வேண்டியது சிங்கள மக்களின் முக்கிய பொறுப்பாகும். தற்போதுள்ள இளைய பிக்குகள் பெளத்த தர்மத்தை பரப்புவதற்கு இணையத்தளம், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் மாலைதீவு, ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா போன்ற சகல நாடுகளும் பெளத்த நாடுகளாகும். ஆனால் அந்த நாடுகள் இன்று பெளத்த நாடுகள் இல்லை. அதற்கு காரணம் அவர்கள் சாசனத்தை பாதுகாக்கவில்லை. நாம் சாசனத்தை பாதுகாத்தமையின் காரணமாகவே, 2500 வருடங்கள் கடந்தும் எமது நாடு இன்றும் பெளத்த நாடாக இருக்கின்றது. அந்த சாசனத்தை பாதுகாப்பதற்கான முழு பொறுப்பு இன்று பிக்குகளுக்கும் இருக்கிறது. ஒருசில பிரதேசங்களில் சிங்கள, முஸ்லிம் மக்கள் பிக்குகளை பராமரித்தாலும் அநேகமாக சிங்கள மக்களே அவர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறார்கள். சிங்கள மக்கள் இலங்கையிலேயே வாழ்கிறார்கள். நாடு சிக்கலுக்குள்ளானால் சிங்கள மக்களும் சிக்கலுக்குள்ளாகுவார்கள். சிங்கள மக்கள் சிக்கலுக்குள்ளானால் பிக்குகளின் இருப்பும் கேள்விக்குறியாகிவிடும். அவர்களின் இருப்பு சிக்கலுக்குள்ளான பெளத்த சாசனமே இல்லாமல் போகுமளவுக்கு சிக்கல் நிலை ஏற்படும். அதனால் மொத்த தர்மமும் இல்லாமல் போய்விடும். அதன் காரணமாகவே எமது நாட்டில் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிக்குகள் முன்னிருந்தார்கள்.

மன்னர் காலத்தில் இடம்பெற்ற போர் நிலைமைகளின்போது போருக்கு பிக்குகள் ஆதரவாக இருந்தமைக்கு காரணம் பெளத்த சாசனத்தை பாதுகாப்பதற்காகவாகும். இவ்வாறு எமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பிக்குகள் தவறு செய்துவிட்டால் அல்லது குரலை உயர்த்தி பேசிவிட்டார்கள் என்றால் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். பிக்குகளை எமது தேசத்தின் முன்னோர்களாக கருதுகிறோம். அவ்வாறெனில், இது நாட்டின் உயிர் நாடியின் மீதும் கலாசாரத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். இது திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும். மேற்குலக நாடுகளின் அனுசரணையில், எந்தவொரு சமயத்தையும் மதிக்காத, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் செயற்படும் நபர்களே இவ்வாறு செய்கிறார்கள். ஆனால், காவி உடை அணிந்தவர்கள் இருக்கும் வரை எமது இனத்தை அழிக்க முடியாது. துஷ்டர்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது.

வெளிநாடுகளிலுள்ள பிக்குகளும் பெளத்தத்துக்காக பெரும் பங்காற்றி வருகிறார்கள். தாய்வானிலிருக்கும் போதகம சந்திம தேரர், பிரான்ஸிலுள்ள சந்த ரத்ன தேரர், அமெரிக்காவிலுள்ள வல்பொல பியனந்த தேரர், மலேசியாவிலுள்ள சன்னங்கரதேரர் போன்றோர் பெளத்தத்தை பாதுகாக்க பெரும் பங்காற்றி வருகிறார்கள். எமது சாசனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். தற்போதையளவில் வடக்கு கிழக்கில் இருக்கும் பெளத்த வழிபாட்டுத் தலங்கள், பெளத்த தொல்பொருள் ஆதாரங்கள் பாரியளவில் அழிக்கப்படுகின்றன. குருந்தி விகாரை பிரச்சினையை நான் எனது கண்கூடாக பார்த்துள்ளேன். நெடுங்கேணியிலுள்ள விகாரையை தரைமட்டமாக்கி, அதன் மீது வேறு சமய வழிபாடுகளை முன்னெடுக்கிறார்கள். தற்போதே இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதென்றால் அந்த மாகாணத்தை தனியாக்கினால் அல்லது தனியான அரசொன்று உருவாகினால் எந்தளவு அழிவு ஏற்படும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனாலேயே நாட்டின் ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதாக தெரிவித்து பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு தமிழ் பிரதிநிதிகள் முயற்சித்தார்கள். நாட்டை பிளவடைய செய்யவே பயங்கரவாதிகள் முயற்சித்தார்கள். நாட்டை பிரிப்பதற்கு எதிரான பயங்கரவாத போரில் எமது மக்களை பறிக்கொடுத்துள்ளோம். அநேகமானவர்கள் அங்கவீனமுற்றார்கள். அவ்வாறானவொரு நிலைமைக்கு மீண்டும் இடமளிக்க முடியாது. தமிழ் மக்களே இதனால் பெரும் கஷ்டங்களை அனுபவித்தார்கள். தமிழ் பிரதிநிதிகள் தொடர்பில் நாங்கள் வெட்கப்படுகிறோம். சிறுவர்களுக்கு விடுதலை புலிகளின் சீருடைகளை அணிந்தது மாத்திரமல்லாமல், அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்திருந்தார்கள். தற்போதிருந்தே சிறுவர்களின் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிராக வைராக்கியத்தை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்த ஒற்றுமையை பாதுகாப்போம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு மக்களும் மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்பட்டால் இந்த தமிழ் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளியோம். அவர்களின் குடும்பங்களுடன் யுத்தம் இடம்பெறும் இடங்களுக்கு அனுப்ப யோசனை முன்வைப்போம் என்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது கொடூரமான துஷ்பிரயோகம் என்பதுடன், தொடர்ச்சியாக ஒரு சமூகம்

ஓரங்கட்டப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நல்லிணக்கம் தொடர்பில் பேசுகின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப் பிளவுகளை மேலும் ஆழப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த அரசிற்கு சொந்தமான இடம்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அதற்கான இணக்கத்தை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் 150 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடவிருக்கும் சட்டக்கல்லூரி 3 ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளது எனவும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியொன்றை சட்ட கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சட்டக் கல்லூரியின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் முதற் கட்டமாக 40 பேர்சஸ் காணியை ஒதுக்குமாறும், திட்டத்துக்கு அவசியமான மேலதிக இடப்பரப்பை நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர் பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி. அதுல பதிநாயக்க 150 வருடங்கள் பூர்த்தியாகும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க ஒரு துண்டு காணி கூட கிடைக்கவில்லை என்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமைக்காக நன்றி கூறினார்.

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நாட்டின் வளங்களை மீள கொண்டு வரும் பொறிமுறை அவசியம் – சஜித் பிரேமதாச

நாட்டு வளங்களை திருடி வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர முடியுமான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிலட மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்நாட்களில் தூக்கமில்லாமல் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்நாட்டின் நிதி வளங்களை திருடிய தரப்பினரையும், வளங்களையும் கண்டுபிடித்து அந்த வளங்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் வேலைத்திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தூக்கமில்லாமல் செயற்படுவதே மிகவும் பொருத்தமானது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர் யார் என்பதை இலங்கை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்புக்கு இணங்க நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்களையும் பணத்தையும் திரும்பக் கொண்டுவருவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பேசும் தற்போதைய அரசாங்கம், கொரோனா கால கட்டத்தில் இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தகனமா அடக்கமா என்ற பிரச்சினையைக் கையாண்டது. இப்பிரச்சினையில் தலையிட்டால் சிங்கள பௌத்த வாக்குகள் பறிபோகும் என்று கூறி இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு இவ்வாறான கொள்கை கிடையாது. நாமெல்லோரும் இலங்கையர் என்ற கொள்கையில் முற்போக்கு தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருகிறோம்.

இந்த பிரச்சினையில் நடந்து கொள்ள வேண்டிய முறையை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் கூட சரியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. தேசிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளுக்காக வீதிக்கிறங்கினோம். யார் என்ன சொன்னாலும் கோட்டாபய ராஜபக்ஷ அன்று எடுத்த தீர்மானம் முற்றாக இனவாத தீர்மானமாகும். தற்போது அதனை அனைவரும் உணர்ந்துள்ளனர். பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் மத தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அத்துடன், வெளிநாட்டு பயணங்களுக்கு ஆட்களை அழைத்து செல்வது தொடர்பில் தெரிவிக்கப்படடது. எத்தனை பேரை அழைத்துச்சென்றாலும் அவர்களுக்கு அரசாங்கம் செலவழிக்கிறது. அவ்வாறு செலவழிக்கப்பட்டதன் பெறுபேறு என்ன என்பதை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் தொடர்பில் முடியுமானால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் நிலையில் பிரிவினைவாதம் தோற்றம் பெறாமல் தடுக்க வேண்டும் – அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கமாக செயற்படுகிறோம்.நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுத்து செயற்படவில்லை.

அதேபோல் பிற நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய நாட்டை நிர்வகிக்க போவதில்லை. தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கௌரவமான முறையில் வாழும் சூழல் காணப்படுகிறது.

தமிழர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். எம்மால் இரு முனைகளில் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது.

தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படும் நிலையில் பிரிவினைவாதம் தோற்றம் பெறுவதையும் தடுக்க வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பிளவுப்படாத வெளிவிவகார கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம். சீனா, இந்தியா, அமெரிக்கா,மேற்குலக நாடுகள் உட்பட சகல நாடுளுடனும் இணக்கமாக செயற்படுகிறோம்.எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்கு இலங்கையின் பிரதான நிலை நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.பிளவுபடாத வெளிவிவகார கொள்கையினால் தான் இந்த முன்னேற்றத்தை எம்மால் அடைய முடிந்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா,இந்தியா உட்பட பெரிஸ் கிளப் நாடுகள் ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் சாத்தியம் காணப்படுகிறது.

வெளிவிவகாரத்துறை அமைச்சு,வெளிநாட்டலுவல்கள் அமைச்சு,சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணக்கமாக செயற்படுகிறது. வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் 1.5 பில்லியன் ரூபா முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொருளாதார மீட்சிக்காக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் வெற்றிப்பெற்றுள்ளன.கனடா மாத்திரம் இலங்கையின் விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளது.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு அரச தலைவர்களை நேரில் சந்தித்து தமது கொள்கை திட்டங்களை தெரிவித்துள்ளார்.அதன் பயனாகவே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிப்பெற்றது.வெளிவிவகாரத்துறை யின் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கமாக செயற்படுகிறோம். நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுத்து செயற்படவில்லை. அதேபோல் பிற நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய நாட்டை நிர்வகிக்க போவதில்லை.தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கௌரவமான முறையில் வாழும் சூழல் காணப்படுகிறது.

தமிழர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். எம்மால் இரு முனைகளில் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது.தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படும் நிலையில் மறுபுறம் பிரிவினைவாதம் தோற்றம் பெறுவதையும் தடுக்க வேண்டும்.ஒருமித்த நாட்டுக்குள் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்படும்.

2020 ஆண்டு நான் நீதியமைச்சராக பதவியேற்ற போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 400 பேர் இருந்தார்கள். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் சில்வாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சட்டத்தின் ஊடாக 200 பேரை விடுதலை செய்தோம்.

அதேபோல் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்பில்லாத சம்பவங்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்ய வேண்டாம் என்ற சுற்றறிக்கையை 2020.09.21 ஆம் திகதி வெளியிட்டோம்.பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்தியோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி ரணில் பணிப்பு

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பணித்துள்ளார்.

புலிகளை நினைவுகூரும் வகையில் ஆடைகளை அணிந்தமை ,புலிச் சின்னம், கொடிகளை ஏந்தியமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அது புலிகளின் மீளுருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தென்னிலங்கையில் இருப்பதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி நீதியமைச்சர் விஜயதாசவையும் ,பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் டிரான் அலசையும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் உடனடியாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.அத்துடன் புலிகளின் சின்னங்களுடன் நினைவுகூர்ந்தவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தனது உரையில் தெரிவித்துள்ளதாவது.

மனித உரிமை மீறல்களை சாத்தியமாக்கும் சட்டங்கள் குறித்தும் கரிசனைகள் காணப்படுகின்றன.பயங்கரவாத தடைச்சட்;டம் 1979 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது முதல் அரசியல் கைதிகளைநீண்ட காலம் தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.மிகமோசமான கறுப்புஜூலை கலவரத்தின் பின்னர் நிகழ்;ந்த வெலிக்கொடை படுகொலைகள் என அழைக்கப்படும் சிறைச்சாலை படுகொலையில் கொல்லப்பட்ட 53 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களே.

பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை கைதுசெய்யப்பயன்படுகின்றது அந்த சட்டம் தற்போது நீக்கப்படலாம் என்கின்ற போதிலும் புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மோசமானதாகயிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறை இன்னமும் மாற்றமடையவில்லை.இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஇஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது.

மேலும் இது பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளையோ சர்வதேச தராதரங்களையோ பூர்த்தி செய்யாது.இலங்கையில் நல்லிணக்கம் குறித்து எனக்கு மேலதிக தெளிவுபடுத்தல்களை வழங்கியமைக்காக பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்திற்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.

இலங்கை தூதரகத்தின் ஆவணத்தின் ஒரு பகுதி இவ்வாறு தெரிவிக்கின்றது நவம்பர் 2023 வரை காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் தேடும் பிரிவினர் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்டவர்களில் 16 பேரை உயிருடன் கண்டுபிடித்துள்ளனர் 3 பேர் உயிரிழந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர் என இலங்கை தூதரகம் தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

18000 தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக நம்பபடுகின்றது அப்படியானால் ஏனையவர்களிற்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் அவர்கள் குறித்து தெரிவிப்பதற்கு என்ன ஆவணங்கள் உள்ளன?

ஐக்கியநாடுகளின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் இலங்கையின் சகா என்ற அடிப்படையிலும் பொறுப்புக்கூறல் நீதி மனித உரிமை பாதுகாப்பு போன்றவற்றிற்கான வேண்டுகோள்களிற்கு ஆதரவாக பிரிட்டன் அதிகளவில் செயற்படவேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும்சரியான எண்ணிக்கை தெரியவில்லை ஆனால் ஐக்கிய நாடுகள் குழு 40000 தமிழர்கள் உட்பட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மோதல்களின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான சவேந்திரசில்வா மற்றும் இலங்கையின் ஏனைய குற்றவாளிகளுக்கு எதிராக பிரிட்டன் உட்பட உலக நாடுகள் தடைகளை விதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது. பாரிய அநீதிகளில் ஈடுபட்டவர்கள் பிரிட்டனிற்குள் வரஅனுமதிக்கப்படமாட்டார்கள் என காண்பிப்பதன் மூலம் பிரிட்டன் அமெரிக்கா கனடாவின் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கலாம்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ள முடியும் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால், அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (06) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அன்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எம்மிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டாம் கட்ட கடன் தொகையும் கிடைக்காது, கடன் மறுசீரமைப்பையும் மேற்கொள்ள முடியாது என்று பரவலாகப் பேசப்பட்டது. எனினும் இது பொய்யாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் கிடைக்கும் என்று நம்புகின்றோம். சீனா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்றார்.