புதுச்சேரி- யாழ்ப்பாணம் புதிய கப்பல் மார்க்கத்துக்கு புதுவை முதல்வரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை!

யாழ்ப்பாணம்- காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் வழித்தடத்தை மாற்றி புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம், திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா, வணிகத் தொடர்பு மேம்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (4) முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அச்சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்களை உரையாடினர். அச்சந்திப்பில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது அவர் முதல்வர் ரங்கசாமிக்கு அளித்த கடிதத்தில், “இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தங்களின் சார்பில் ஏராளமான உதவிகளை செய்துள்ளீர்கள். குறிப்பாக இலங்கை பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் புதுச்சேரியில் இருந்து மருந்துகளை அனுப்பியது பெரும் உதவியாக இருந்தது.

காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வரையிலான கப்பல் சேவை முயற்சிகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த வழித்தடத்தை மாற்றி புதுச்சேரி-காங்கேசன் துறை மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க அனுமதி வழங்கும் நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்பு மேம்படும்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோணேஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயனாதீவு, கதிர்காமம் முருகன் கோயில், நுவரேலியாவில் உள்ள சீதை கோயில், ரம்பொடவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனங்களை மேற்கொள்ள இலங்கைக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு வைத்தியசாலைகளில் பெரும் ஆளணி பற்றாக்குறை

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலே மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தி தெரிவித்தார்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக காணப்படுகின்றார்கள்.

அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

தற்போதுள்ள நிலையில் புதிதாக உள்வாங்குவதில் தாமதம் காணப்படுகின்ற படியினால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம்-என்றார்

சரத் வீரசேகரவை எச்சரித்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத் வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்து தெரிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாது என்றும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுகிறது என்றும் அங்கிருந்து சரத்வீரசேகரவை விலகிச் செல்லுமாறும் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மக்களுக்காக முதலீட்டை உருவாக்க முயற்சிப்பதாலேயே சீனித்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு – செல்வம் எம்.பி

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் கஷ்டப்பட வேண்டாம். வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – சீனித் தொழிற்சாலை தொடர்பில் 4வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.

நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் அதில் பெரிதும் விருப்பம் தெரிவிக்கவில்லை . சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.

எம்மைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம்.

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்ப்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை.

வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

ஆகவே, தயவு செய்து யாரும் தேவையில்லமால் தலையிட வேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும்.

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாட்டு பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல தெரிவிக்கின்றோம்.

வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.

எங்களைப் பொறுத்த வரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேண்டாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் கவலை பட தேவையில்லை என தெரிவித்தார்.

போர் நடந்த இடங்களில் மனித புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும் – விஜயதாஸ ராஜபக்ச

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின்
கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ஆகியோர் தவிர்த்துள்ளனர்.

அத்துடன் “போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்” என்று நீதி அமைச்சர் அலட்சியமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் கடந்த 29ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன. இது தொடர்பான மேலதிக அகழ்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் – பங்கேற்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் வலியுறுத்தப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரம்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அடுத்தகட்டப் பணிகள் இடம்பெறும். இதைவிட மேலதிகமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.” – என்றார்.

நீதி அமைச்சர் விஜயதாஸ

“போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தோண்டும் போது சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்படும்.

முல்லைத்தீவு புதைகுழியிலிருந்து போரில் ஈடுபட்ட ஒருதரப்பின் சீருடைகள் மீட்கப்பட்டதாக அறிந்தேன். நீதிமன்றம் அந்தப் புதைகுழியை அகழ்வதற்கான உத்தரவையும் விடுத்துள்ளது. அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் இப்போது எல்லாம் பதிலளிக்க முடியாது. அதேவேளை அந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் என்னால் பதில் கூற முடியாது.” – என்றார்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான 3ம் கட்ட போராட்டம் ஆரம்பம்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமான 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகியுள்ளது.

இன்றையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (02) போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஞாயிறு இரவு போராட்டக்காரர்கள் பாதுகாப்பற்ற புதருக்கு அருகாமையிலேயே உறங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களுக்கு பலாலி பொலிஸார் பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலையும் இடர்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized

நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் தற்போதைய ஆட்சியாளர்கள் – கொழும்பு பேராயர் கவலை

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற பொய்யான கருத்தை வெளியிட கூடாது என்றும் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொய்யான வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுக்காதீர்கள், ஜனாதிபதி அவர்களே. இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.

20 வீதமான மக்கள் நாட்டின் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். 80 வீதமான மக்களுக்கு சரியான உணவைப் பெற முடியவில்லை.

கொழும்பு துறைமுகம் டிகோவிட்ட வரை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது அரசாங்கம் துறைமுகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது.

தற்போதுள்ள துறைமுகம் துண்டு துண்டாக விற்கப்படுகிறது. இந்த மனிதன் என்ன கனவு காண்கிறான்? அவருடைய இலக்கு என்ன? இதுதான் இலக்கு.

முத்துராஜவெல முழுவதையும் அழித்துவிட்டு, இவற்றை வெளியூர்களுக்கு விற்று, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாகச் செத்துவிடுவார்கள்.

நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிச்சமாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நடவடிக்கை தொடருமானால் 2048 ஆம் ஆண்டளவில் நாடு அழிந்துவிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவை மீள ஆரம்பம்

இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை சனிக்கிழமை (01) ஆரம்பமாகியுள்ளது என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும், இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறினார்.

12 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 என்ற விமானமே இந்தப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.

ஒரு வழிக்கட்டணமாக ரூ.22 ஆயிரம் ரூபாவும் இருவழிக்கட்டணமாக ரூ.41,500 அறவிடப்படும். இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்மூலம், யாழ்ப்பாணம் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும் எனவும் இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.

ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கம் விரைவில் தோற்றுவிக்கப்படும் – நாமல் உறுதி

பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்கள் தொடர்பில் நல்லதொரு நிலைப்பாடு காணப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே மஹிந்த ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவது குறித்து அவதானம் செலுத்தாம் ராஜபக்ஷர்களை பழிவாங்குவது குறித்து அவதானம் செலுத்தியது.ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.ஆனால் சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.

ராஜபக்ஷர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.வெளிநாடுகளில் சொத்துக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

அரசியல் பிரசாரத்துக்காகவே ராஜபக்ஷர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.2019ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.ஒரு தரப்பினரது தவறான ஆலோனைகளினால் அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைந்தது.

பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியை தோற்றுவித்தது.பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.அரசியல் ரீதியில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் கட்சி என்ற ரீதியில் சிறந்த முறையில் போட்டியிடுவோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என்றார்

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் விகாரைகளின் மேலேயே பழைய சைவக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன – எல்லாவல மேதானந்த தேரர்

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கை தமிழர்களின் பண்டைய தாயகமல்ல. அப்படி யாராவது சொன்னால் அவர்களுக்கு பதிலளிக்க நான் தயார். வடக்கு கிழக்கில் கட்டப்பட்டுள்ள பழைய கோயில்கள், புராதன விகாரைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளது என பெரும் “புரட்டு“ விட்டுள்ளார் எல்லாவல மேதானந்த தேரர்.

தென்னிலங்கை தரப்பினர் அவரை தொல்லியல் சக்ரவர்த்தி என விளிப்பதுண்டு. எனினும், தொல்லியல்துறையில் அவர் ஒரு கல்வியியலாளர் அல்ல. அவர் தமிழர்களின் வரலாறு தொடர்பில் இனவாத அடிப்படையில்- தவறான கருத்துக்களையே முன்வைப்பதுண்டு. அவ்வாறே தற்போதும் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணம் கந்தரோடையில் மட்டும் 50 ஸ்தூபிகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. விகாரை தளத்தில் காணப்படும் கல்வெட்டுகளில், அதனை நாக விகாரை என குறிப்பிடுகிறது.

வடக்கில் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் மூலம், கடந்த காலங்களில் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பொலன்னறு ராஜதானியை ஆண்ட முதலாம் மகா பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறை துறைமுகத்தின் ஊாக இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் சரக்கு வர்த்தகம் நடந்தது கல்வெட்டுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தென்னிந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கை காரணமாக துறைமுக விதிகள் குறித்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டது. அந்த கல்வெட்டு தற்போது நாகபூசணி அம்மன் கோயிலில் உள்ளன. தொல்லியல் திணைக்களத்திற்கு இது பற்றி பல தடவைகள் தெரிவித்தும் பலனில்லை.

கல்வெட்டின் இறுதியில் சமஸ்கிருதத்தில் ‘மஹா பராக்கிரமபாகு சகல சிங்களச் சக்கரவர்த்தி’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் நாங்கள் வியந்து போனோம்.

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கையில் தமிழர் தாயகம் இல்லை. அப்படி நிருபிக்க யாரேனும் இருந்தால் நான் பதில் சொல்ல தயார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பழைய கோயில்கள் பண்டைய பௌத்த தலங்களில் கட்டப்பட்டுள்ளன. வவுனியா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கோயில் கட்டப்பட்டிருந்தால் அது பழமையான பௌத்த விகாரையாகும். இது என் கண்ணால் பார்த்த ஒன்று.

சில பண்டைய பௌத்த புனித ஸ்தலங்களிலிருந்து கலைப்பொருட்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு தாந்தாமலை பௌத்த தளத்தில் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புளுகுணாவ புத்த விகாரையில் இருந்து ஒரு கல் இருக்கை அந்த கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

முல்லைத்தீவு குருந்தூர்மலை பௌத்த விகாரைக்கு ஆறு முறை சென்றிருக்கிறேன். 1964 இல் முதன்முதலில் இந்த இடத்திற்குச் சென்றேன். அந்தப் பகுதியில் ஒரே ஒரு தமிழன் வாழ்ந்தான். குருந்தூர் மலை இடிபாடுகளை நமக்குக் காட்டியவர் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்தவர்.

குருற்தூர்மலை தொல்லியல் தளத்திற்கு முதல்முறை சென்றபோது, ​​ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கல்வெட்டு அழிக்கப்பட்டது. குருந்தூர் மலை விகாரையின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க மூன்றாம் மிஹிந்து மன்னர் வந்ததாக அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கல்வெட்டில் அந்தப் பகுதி குறுங்காமம் என்று அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த கிராமத்தில் ஒரு சிறிய ஏரி உருவாக்கப்பட்டது. கல்வெட்டின் படி ஏரியின் பெயர் குருந்த வாபி. அந்த ஏரி தற்போது தண்ணிமுறுப்பு ஏரி என அழைக்கப்படுகிறது. பின்னர் தமிழ் கிராமங்கள் தோன்றியதன் மூலம் மக்கள் தண்ணிமுறுப்பு ஏரியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பௌத்த புனித தளத்திற்கு உரிமை கோர வரவில்லை. இடிபாடுகள் சேதமடையவில்லை. சமீபகாலமாகத்தான் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். சாதாரண தமிழ் மக்கள் உரிமை கோரவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள். வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தப்படும் அரசியல் நாடகங்கள் அவை என்றார்.