வலி கிழக்கிற்கு விசேட அனுமதியில் 4 புதிய உழவு இயந்திரங்கள் – தவிசாளர் நிரோஷ்

விசேட அனுமதியின் கீழ் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை சபை நிதியில் கொள்வனவு செய்யப்படவுள்ள நான்கு உழவு இயங்திரங்களும் பெட்டிகளும் விரைவில் மக்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துரைத்த அவர், எமது சபை தொடர்ச்சியாக கழிவு அற்றுதல் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற செயற்பாடுகளுக்கு வாகனப் பற்றாக்குறையினை எதிர்கொண்டு வந்தது. யாழ். மாவட்டத்தில் 74 ஆயிரம் மக்களையும் 104 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவினையும் உடைய மிகப்பெரிய சபையில் ஒப்பீட்டளவில் வாகனப்பற்றாக்குறை கருமங்களை மேற்கொள்வதில் கடும் சவாலாகக் காணப்பட்டது. ஏனைய பிரதேச சபைகளில் இருந்து இரவல் பெற்றும் வாடகைக்கு அமர்த்தியுமே வாகன பற்றாக்குறையினை சபை இதுவரை நிவர்த்தித்து வந்திருக்கின்றது. இந் நிலையில் புதிய உழவு இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு அவைத்தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தபோதும் சூழ்நிலை காரணமாக உடனடியாக கொள்வனவு செய்ய முடியவில்லை.

ஆரச கொள்கையில் வாகன கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ள போதும் திறைசேரியின் அனுமதி உழவு இயந்திரக் கொள்வனவுக்கான அனுமதி தற்போது பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை கேள்விக்கோரலையும் மேற்கொண்டு அக் கேள்விக்கோரலில் பெறுகைச்சட்ட நடைமுறையின் பிரகாரம் உழவு இயந்திரங்களை சபைக்கு விற்பனை செய்வதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தற்போது தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளன.

ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசு மக்களை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை புத்தூர் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாத்துக் கொண்டு மக்களின் மீது வரிச்சுமையினை ஏற்றி அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பப் போகின்றது என்று கூறுவது கனவிலும் நடைபெறாதது ஒன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை இரவு (18.03.2023) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்ற உழகை;கும் மக்களின் அரசுக்கு எதிரான தீப்பந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கம் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டுமானால் முதலில் இனவாதத்தினை துடைத்தெரிந்து மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந் நாட்டில் இனவாதம் இன்றும் அரச கொள்கையாக உள்ளது. ஊழல்கள் புரிந்த அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். உழைப்பாளிகள் வரிக்கொள்கை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பினால் சுரண்டப்படுகின்றனர். மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதவாறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

நடைபெறவேண்டிய உள்ளுராட்சித் தேர்தல்களை அரசாங்கம் தனக்குச் சாதகமற்றது என்பதை உணர்ந்து தடைபோட்டுள்ளது. மக்களின் கருத்துச் சுதந்திரம் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும் நசுக்கப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு எதிராக யாழ். புத்தூரில் உழைக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தினை நடத்துகின்றனர்.

இப் போராட்டத்தினை ஏற்பாடு செய்த உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் அரசியல் செயற்பாட்டாளர்களான செந்தில்வேலர் மற்றும் கதிர்காமநாதன் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கே ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, இப் போராட்டம் என்பது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் சார்ந்த போராட்டமாகும். இதில் சகல தரப்புக்களும் இணைய வேண்டும். இப் போராட்டங்களை அரசினால் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. நாடளாவிய ரீதியில் முற்போக்கு சிந்தனையுடன் போராடும் தரப்புக்கள் எமது தமிழ் மக்களின் அரசியல் விடுதலைபற்றி வெகுவாகச் சிந்தித்து இனவாதத்தினைத் துடைத் தெரிந்து ஒட்டுமொத்த விடுதலையினையும் வென்றெடுக்க கடமைப்பட்டுள்ளனர். அதிகரித்த உணவுப் பொருள் விலை உயர்வினால் எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் ஜனாதிபதி தனது இருப்புத் தொடர்பில் சிந்திப்பதை விடுத்து மக்களின் பிரச்சினை பற்றிச் செயற்படவேண்டும் என வலியுறுத்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதிபதிபதிகளை தெரிவுக்குழுவுக்கு அழைத்தமை குறித்து இங்கிலாந்து, வேல்ஸ் சட்டத்தரணிகள் அவதானம்

உயர் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விசாரணை செய்வது மீண்டும் ஆராயப்படுமென எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை

இலங்கை பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு முன்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விசாரணை செய்வதில் உள்ள பாரதூரத்தன்மை தொடர்பில் மீண்டும் ஆராயப்படுமென தாம் எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் தொடர்புடைய நீதிபதிகளை பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்க தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை இன்று அறிக்கை வௌியிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை என்பது 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முறை சட்டத்தரணிகளைக் கொண்ட, பொது உரிமைகள் மற்றும் சட்ட அமுலாக்கத்திற்கான முன்னணி சர்வதேச சட்டத்தரணிகளின் அமைப்புகளில் ஒன்றாகும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுகிறதா என்பது கண்டறியப்படும் வரை, இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எழுப்பிய சிறப்புரிமைப் பிரச்சினையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் BAR கவுன்சில் நினைவுகூர்ந்துள்ளது.

“நீதித்துறை செயற்பாட்டில் தகாத அல்லது தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது” என்பதும் “நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து கடைப்பிடிப்பது அரச மற்றும் பிற நிறுவனங்களின் கடமை” என்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை கோட்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டவாட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியென “இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவையின் தலைவர் Nick Vineall KC-இன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘இனப்படுகொலையாளியே வெளியேறு’: யாழில் விகாரையில் கலசம் திறக்க வந்த சவேந்திர சில்வாவிற்கு எதிர்ப்பு!

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்தில் கட்டப்பட்டுள்ள விகாரையின் கலச திரை நீக்கம் இன்று இடம்பெற்றது.

சமீத்தி சுமன என்ற இந்த விகாரையின் கலச திரை நீக்கத்தில் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றினார். அவருக்கு எதிராக போராட்டமும் இடம்பெற்றது.

இதற்காக தென்பகுதியிலிருந்து பேருந்துகளில் பிக்குகளும், பொதுமக்களும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதன்போது, மக்கள், முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தென்னிந்திய நகை வியாபாரிகள் 92 பேர் கொண்ட குழு இலங்கை வருகை

தென்னிந்திய நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களும் வட  இந்திய முதலீட்டாளர்களும் இன்று (17) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

92 பேர் கொண்ட குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த குழுவினரை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

இலங்கையில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினர் கலந்துரையாடவுள்ளதுடன், அரசியல் பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்குத் தயாரா? என பவ்ரல் ஜனாதிபதியிடம் கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குப் பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்குத் தயாரா என அரசாங்கத்திடம் பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தருணத்தில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முற்போக்கான தேர்தல் சீர்திருத்தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய எல்லை நிர்ணய நடவடிக்கையின் மூலம் தொகுதிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பின்னர் புதிய தேர்தல் முறை எப்படி இருக்கும் என்றும் ரோகண ஹெட்டியாராச்சி பிரதமரிடம் வினவியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கும்போது இளைஞர், பெண் ஒதுக்கீட்டுக்குத் தலா 25 வீதம் ஒதுக்கப்படுமா என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து ஸ்ரீ ரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சதிஸ்குமார் சிறையில் இருந்து விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சதிஸ்குமார் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

சதிஸ்குமாரின் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கடிதம் இன்றைய தினமே(வெள்ளிக்கிழமை) மெகசின் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே அவர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ், கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவருக்கு, பெப்ரவரி – 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய சதீஸ்குமார், ஏற்கனவே உச்ச நீதிமன்றில் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவினை மீளப் பெற்றுக்கொள்வதற்கான தனது ஒப்புறுதியினை பெப்ரவரி-23 அன்று சட்டத்தரணிக்கூடாக மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார்.

அதனையடுத்து, மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உச்ச நீதிமன்றம், குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது.

எனினும், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நீதி நிர்வாகச் செயற்பாடுகள் காலதாமதமானதால், தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் இன்றைய தினமே கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார்.

விவேகானந்த நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட சதீஸ்குமார், நெருக்கடிகள் மிகுந்த யுத்த காலங்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஓட்டுநராக உயிர் காப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வந்திருந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பணியின் நிமித்தம் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, வவுனியா- தேக்கவத்தை சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சதீஸ்குமாருக்கு எதிராக, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியதாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் அவசரகாலச் சட்டவிதியின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு, சதீஸ்குமாருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

அதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை ஆட்சேபித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் எதிராளி மேல் முறையீடு செய்திருந்தார்.

எனினும், வவுனியா மேல் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மீளுறுதிப்படுத்தி வழக்கை முடிவுறுத்தியது.

இறுதியாக, 2017ஆம் ஆண்டு வழக்கின் தீர்மானத்தை மீளவும் உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்த சதீஸ்குமார், நீதி நிவாரணத்தைக் கோரி காத்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சதீஸ்குமாருக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது – அரச அச்சகம்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச அச்சகத் திணைக்களத் தலைவர் கங்கானி லியனகே இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றுக்குத் தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என திறைசேரிக்கு கடந்த இரு வாரங்களில் இரண்டு தடவைகள் எழுத்து மூலமாக முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட அச்சிடல் பணிகளுக்கான நிதி முழுமையாக கிடைக்கவில்லை.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரி ஒரு உத்தியோகபூர்வமாக அறிவிப்பை விடுக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்களத் தலைவர் திறைசேரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிதி கிடைப்பதில் தாமதம் காணப்படுவதால் தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோ பூர்வமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையிலேயே குறித்த திகதிக்கிடையில் தம்மாக் வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில்  திடீர் மரண விசாரணை அதிகாரி   அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக  , கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய  தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது.