சீனாவின் மறுசீரமைப்பு உத்தரவாதமின்றி இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து நாணய நிதியம் பரிசீலனை

சர்வதேச நாணய நிதியம் (IMF) சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவின் உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) Bloomberg News தெரிவித்துள்ளது.

அரிதாகப் பயன்படுத்தப்படும் நாணய நிதியத்தின் ஒரு சரத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை அங்கீகரிக்க முடியும், ஏனெனில் சீனாவின் முறையான உத்தரவாதம் மட்டுமே முன்நிபந்தனையைத் தடுக்கிறது என இது தொடர்பில் நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதியளிப்பதற்கான உத்தரவாதங்களைத் தொடர்ந்து கோருகின்றனர், இதன் மூலம் IMF ஏற்பாட்டிற்கான அவர்களின் கோரிக்கையை நிதியத்தின் நிர்வாக வாரியம் பரிசீலிக்க முடியும்” என்று IMF செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பயன்படுத்தக்கூடிய துல்லியமான IMF கொள்கை முறைகளைப் பற்றி இலங்கையுடன் முன்கூட்டியே விவாதங்கள் நடந்து வருகிறது. IMF ஊழியர்கள் இலங்கை அதிகாரிகளுடன் வெளிப்படையான கொள்கை நடவடிக்கைகளை இறுதில் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், டொலர்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் மற்றும் எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை காரணாமாக இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அது கடனைத் திருப்பிச் செலுத்தாது IMF இடமிருந்து கடன் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உத்தரவாதம் இல்லாமல் உதவியை வழங்குவது குறித்து IMF பரிசீலிக்கும் செய்தி, G20 நிதிக் கூட்டங்களுக்கு அடுத்த வாரம் அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெல்லனின் இந்தியா வருகைக்கு முன்னதாக வந்துள்ளது, அங்கு அமெரிக்கா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான கடன் மறுகட்டமைப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்தப் போகிறது.

முன்னதாக பெப்ரவரியில், இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புப் பொதிக்கு நாடு இருதரப்புக் கடன் வழங்குபவர்களிடமிருந்து போதுமான உத்தரவாதங்களைப் பெற்று, மீதமுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்தவுடன், விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று IMF கூறியது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் – நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது.

எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என்றும், அதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு போதிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்தினால் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்திருந்த நிலையில், நிதி அமைச்சின் செயலாளரினால் இன்றைய தினம் இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மீதான முடக்கம் சிவில் சமூகங்களின் சுதந்திரத்தை பாதித்துள்ளது – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும்.

அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அதேவேளை, அவை உரியவாறு பூர்த்திசெய்யப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரத்திற்கான இடைவெளி சுருக்கமடைந்து வருகின்றமைக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துவரும் சர்வதேச மன்னிப்புச்சபை, இவ்விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசாங்கம் பொதுமக்களின் குரலை அடக்கும் வகையில் தொடர்ச்சியாகவும் வலுவாகவும் ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு தற்போது அமைதிப்போராட்டங்களை அடக்குவதற்கும், எதிர்ப்புக்குரல்களை ஒடுக்குவதற்குமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழுமையாக இல்லாதொழிக்கவேண்டியது அவசியமாகும்.

உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும். அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவை பூர்த்திசெய்யப்படவேண்டும்.

இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்தவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக மாத்திரம் அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக் கப்பட்டிருப்பதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்திற்கு அதிருப்தியளிக்கக்கூடியவகையில் தமது பணியை முன்னெடுத்த ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என்போர் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி மாணவ செயற்பாட்டாளர்களும் தொழிற்சங்கவாதிகளும்கூட இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார்கள். கருத்துக்களை வெளியிடல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும், அதனுடன் நெருங்கிய கட்டமைப்புக்களும் அவதூறு பிரசாரங்கள், கடத்தல் பாணியிலான கைதுகள், ஊடக நிறுவனங்களில் தேடுதல் நடவடிக்கைகள், பயணத்தடைகள், இடமாற்றங்கள் மற்றும் தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் போன்ற பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளன.

மேலும் இலங்கை ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களை ‘பயங்கரவாதிகள்’ என்றும், ‘பாசிஸவாதிகள்’ என்றும் அழைத்ததன் மூலம் போராட்ட இயக்கங்களை மிகமோசமானதாகச் சித்தரிக்க முற்பட்டனர்.

அத்தோடு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளடங்கலாகப் போராட்டக்காரர்கள் மூவருக்கு எதிராக அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பிரயோகித்தது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு உள்ளாவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பெரும் எண்ணிக்கையான தன்னிச்சையான தடுத்துவைப்புக்கள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வழிகோலியுள்ளது.

அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதாக அரசாங்கம் பலமுறை வாக்குறுதியளித்துள்ள போதிலும், தற்போதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி ஒருவரைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான ஆயுதமாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத்தயார் – பிரான்ஸ்

கடன்களை மறுசீரமைப்பதற்கான இலங்கையின் முயற்சிக்குத் தாம் ஆதரவு வழங்கத்தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கொய்ஸ் பக்றெற் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகப்பேரவையின் இலங்கை – பிரான்ஸ் வர்த்தகக் கவுன்ஸிலுடனான சந்திப்பின்போதே பிரான்ஸ் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கும் என்று உறுதியளித்துள்ள அவர், நீர்வழங்கல், சக்திவலு, நகர அபிவிருத்தி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு போன்ற துறைகளில் பிரான்ஸின் பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதாரத்தில் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பிரான்ஸ் கம்பனிகள் எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது குறித்தும் அவர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் பிரான்ஸுக்கான இலங்கைத்தூதுவர் மனீஷா குணசேகர, பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரான்ஸ் கம்பனிகளின் இலங்கைப் பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பீர்களா ? – பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அந்நாட்டு அரசாங்கத்திடம் கேள்வி

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தினால் தமிழ்மக்களுக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனப்படுகொலை குறித்தும் அவர் அந்த எழுத்துமூல ஆவணத்தில் உள்ளடக்கியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்ற போதிலும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகப் பின்லாந்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடைகள் விதிக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்கியமைக்காக பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீக்கு நன்றி தெரிவித்திருக்கும் தமிழீழ சர்வதேச இராஜதந்திரப்பேரவை, போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக ஏனைய சர்வதேச நாடுகளும் தடைகளை விதிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரம்

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கூடியிருந்தது.

பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர், வங்கி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

இலங்கையில் மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும்: அர்ஜுன்

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது.

குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பிரதிபலன்னை கருதாமல் பல உதவிகளை செய்துவருகின்றது.

சீனாவும் பல விடயங்களை இங்கே செய்கின்றது, கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தினை அமைத்தார்கள் ஆனால் அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ளனர். ஆனால் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசாரமண்டபத்தின் நிர்வாகத்தை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. இருப்பினும் அதனை யாழ்பாண மாநாகரசபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அத்துடன் வறுமை, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து இலங்கை மக்கள் விடுபடவேண்டும். அதற்குரிய மேம்பாடான திட்டங்களை வகுத்து நல்லவிதமாக செயற்படுவதற்கான பிரார்த்தனைகளை நாம் செய்கிறோம்.

இதேவேளை இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம், தமிழ்மக்களாக இருக்கலாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும். அமைதியான வளமான இலங்கை உருவாக வேண்டும்’ என கூறினார்.

கல்முனை பொது நூலக பெயர் மாற்றம்; இன முரண்பாடு உருவாக வாய்ப்பு

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களில் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

கல்முனை மாநகர சபை இம்மாத அமர்வில் கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரான ஏ.ஆர்.எம் மன்சூர் என்பவரின் பெயரை சூட்டுவதாக தெரிவிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது.கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சராக செயற்பட்ட இவர் இன மத பேதங்களின்றி சேவைகள் செய்தவர்.இருந்த போதிலும் தற்போது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து சிலர் இவ்விடயத்தை அரசியலாக்கி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

எனவே கல்முனை பொது நூலகமானது இரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பொதுச்சொத்து.இந்த நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்படுவதை சிலர் மறைமுகமாக முன்னெடுக்கின்றனர்.இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.சில அரசியல்வாதிகளே தங்களது அபிலாசைகளை நிறைவேற்ற இவ்வாறு செயற்படுகின்றனர்.தேர்தல் காலங்களில் தான் இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.கல்முனை மாநகர கட்டடத்தில இயங்குகின்ற நூலகமானது கல்முனை பொது நூலகம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் ஒரு தனி நபரின் பெயரை இந்த நூலகத்திற்கு ஏன் தற்போது சூட்ட முயற்சிக்கின்றீர்கள் என கேட்கின்றோம்.தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த செயற்பாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம்.ஏனெனில் இனங்கள் இரண்டும் ஒன்றுபட்டது தான் கல்முனை பிரதேசம்.கல்முனை மாநகர சபை இரு சமூகத்திற்கும் சொந்தமானது.எனவே இனியாவது இச்செயற்பாடுகளை தவிர்த்து இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தாதீர்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.என குறிப்பிட்டனர்.

இவ் விசேட செய்தியாளர் சந்திப்பில் கல்முனை மாநகர உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் வடிவுக்கரசு சந்திரன் கதிரமலை செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

இரண்டு இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்கள் அமைச்சரவை, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் என்பன இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

47 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படாத தனியார் விநியோகஸ்தர்களின் மூலம் மருத்துவப் பொருட்களை வாங்குவதில் அமைச்சர்களின் அமைச்சரவையின் பங்கு

பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை வாங்குவதற்குப் பதிவு விலக்கு வழங்குவதில் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குமுறை ஆணையகத்தின் பங்கு

அவசரகால கொள்முதல் செயல்முறை உட்படக் கொள்முதல் வழிகாட்டுதல்களுடன் இணங்காமை

சுகாதார அமைச்சர் மற்றும் மருந்தாக்கல் ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பவற்றைச் சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துக் கொள்வனவு, மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் புறக்கணிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதியை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது.

அத்துடன், குடிமக்களின் அடிப்படை உரிமையான சமத்துவம் மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவை இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய வலுக்கட்டமைப்புக்களை இந்தியாவுடன் இணைப்தால் பாதிப்பில்லை

இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இலங்கையின் தேசிய சக்தி வலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் ஆபத்து எதுவும்எதுவுமில்லை உலகின் ஏனைய நாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் இலங்கை தனது சக்தி வலு கட்டமைப்பை இந்தியாவுடன் இணைப்பதால் என்ன ஆபத்து ஏற்படப்போகின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான மனோநிலையே எங்கள் பொருளாதாரத்தை பல தசாப்தங்களாக வீழ்ச்சியை நோக்கி இட்டுச்சென்றது என குறிப்பிட்டுள்ள அவர் எண்ணெய் குதங்களை நாங்களே வைத்திருக்க விரும்பியதால் பல தசாப்தங்களாக அவற்றை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் பொதுமக்கள் தனியார் கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தால் கடந்த 12 மாதங்ளில் எங்களின் எரிசக்தி பாதுகாப்பு எங்கோ சென்றிருக்கும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் சக்தி வலு பாதுகாப்பு காணப்படுவதைஉறுதி செய்வதே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் முன்னெடுக்கவேண்டிய முதல் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் சக்தி வலு பாதுகாப்பு என்பது உணவு பாதுகாப்பு மருந்து பாதுகாப்பு உட்பட அனைத்துடனும் தொடர்புபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாங்கள் தீர்மானங்களை எடுப்போம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக தெளிவாக உள்ளார் கடந்த 12 மாதங்களில் இந்தியா எங்களிற்கு பெரும் ஆதரவாக காணப்பட்டுள்ளது எனவும் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.