கில்மிஷாவை நேரில் சந்தித்து வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பாடகி உதயசீலன் கில்மிஷாவையும் அவர்களது உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதில் அமைச்சர்களான கடற்றொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்றும் பணிகள் அடுத்த வருடத்தினுள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி ரணில்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

அதன்படி இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வட மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன் ஜெனரல் (ஓய்வு) ஹமூத் உஸ் சமான் கான் (Lt Gen (Retired) Hamood uz Zaman Khan) இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற மூன்றாவது இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சிநேகபூர்வமாக வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு – ஆட்கொலை என நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு கட்டளைக்காக நேற்று (2) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும், இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார். மேலும் இரண்டாவது சாட்சி, ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில், மேலதிக சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் குறித்த குற்றத்தில் பொலிசார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறு மன்று கட்டளையிட்டது. இது சித்திரவதைக்கு உள்ளான மனித ஆட்கொலை வழக்கு என்பதால் மேல் நீதிமன்றத்திலேயே இறுதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமாஅதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை மாணவர் படுகொலை – நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்

திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய்கிழமையுடன் (2) ‘திருகோணமலை 5 மாணவர் படுகொலை’ இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அதுகுறித்து உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதையும், இழப்பீடு வழங்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி முக்கிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், அது மூடிமறைக்கப்பட்டிருப்பதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

வருமான வரி பதிவு செய்யாதோரிடம் தண்டப்பணம் அறவிடுவது சட்டவிரோதம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தமது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் தண்ட பணம் அறவிடப்படும் என்பது சட்டவிரோதம்.

ஏனெனில் இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்தைப் பெறுபவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களாக கருத முடியாது.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் வரி செலுத்த முடியாது அவர்களின் வருமானம் அதிகரிக்கும் போது வரி செலுத்த முடியும் பதிவு செய்யவில்லை என தண்டம் அறவிட முடியாது.

அது மட்டுமல்லாது 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்யா விட்டால் 50ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படும் என அறிவித்த அரசாங்கம் இவ்வளவு காலமும் வரி வருமானம் செலுத்தாதவர்களுக்கு என்ன தண்டம் என அறிவிக்கவில்லை.

ஆகவே இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்குவது நல்ல விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் என கூறுவது சட்ட விரோதம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிர்வாக கட்டமைப்பு விஸ்தரிப்பு

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிர்வாக கட்டமைப்பை மாவட்ட ரீதியாக விஸ்தரிக்கும் முதற்கட்ட செயற்பாடாக ஜந்து கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது நேற்றைய தினம் (02) யாழ்,இணுவிலில் நடைபெற்றது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் (D.T.N.A) அங்கம் வகிக்கும் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் கட்சித் தலைவர்கள், கூட்டணியின் இணைத் தலைவர்களாகவும், கட்சிக்கு ஓர் செயலாளரும், பேச்சாளரும், பொருளாளரும்,தேசிய அமைப்பாளரும், துணைத் தேசிய அமைப்பாளரும் நியமிக்கப்பட்டு பதினைந்து பேர்கள் கொண்ட கட்சிக்கான உயர் பீடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை விஸ்தரிக்கும் பொருட்டே இந் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின், இணைத் தலைவர்களின் ஒருவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் ஆர்.ராகவன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொருளாளர் துளசி ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

அந்த வகையில் சி.சிவகுமார்,கே.என். கமலாகரன் (குகன்), பா.கஜதீபன், என்.விந்தன் கனகரட்ணம்,சபா குகதாஸ், தி.நிரோஷ், சு.நிஷாந்தன், ரா.இரட்ணலிங்கம், இ.பகீதரன், செ.மயூரன், கி.மரியறோசறி, கி.கணைச்செல்வன்,ஆ.சுரேஷ்குமார், ஜெ.ஜனார்த்தனன்,த.கோகுலன் போன்றோர் ஐந்து கட்சி சார்ந்த மாவட்ட இணைப்பாளர்களாகவும் குறித்த இணைப்பாளர்களுக்கு தலைமை தாங்கும் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான என்.விந்தன் கனகரட்ணம் நியமிக்கப்பட்டார்.

மேலும் கூட்டத்தில் தீர்மானங்களாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை மாவட்ட ரீதியில், அரசியல்,பொருளாதார,நிர்வாக ரீதியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

கட்சியின் வேலை திட்டங்கள்

,அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட நிகழ்வுகளை, இணைந்து முனனெடுப்பதென்றும், குறிப்பாக சிங்களக் குடியேற்றம், பௌத்த மயமாக்கல், ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு எதிராக இணைந்து போராடுவது என்றும், மாவட்டத்திற்கு ஓர் அரசியல் பணிமனை திறக்கப்பட வேண்டும்.

நலிவுற்ற மக்களுக்கு உதவி திட்டங்களை முன்னெடுப்பது என்றும், கல்வி, கலாசார கட்டமைப்புகளை ஊக்குவிப்பதற்கு உழைப்பதென்றும்,மாவட்டத்தில் தொகுதி கிளை,கிராம மட்டத்திலான கட்சியின் கிளைகளை கட்டமைப்பது என்றும்,மகளிர் அணியை உருவாக்குவதென்றும் முதல் கட்டமாக இணைப்பாளர்களால் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பான ஊடகத் தொடர்புகளையும் சமூக வலைத்தளங்களின் கட்டமைப்புகளையும் இயக்குபவராக, இணைப்பாளரும் சட்ட பீட மாணவருமான ஜெ.ஜனார்த்தனன் மேற்கொள்வார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சிகளின் இணைப்பாளர்கள் அனைவரும் கட்சியின் செயலாளர், கட்சியின் தேசிய அமைப்பாளர்,கட்சியின் துணை தேசிய அமைப்பாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து கட்சியின் நிர்வாக, அரசியல்,பொருளாதார மற்றும் கல்வி கலாசார புனரமைப்பு உதவி திட்ட,செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Posted in Uncategorized

‘ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவார்’

“ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதாக யார் தெரிவித்தாலும், தற்போதுள்ள செயற்பாடடு அரசியலில் அதற்கு

தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது” என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“நாடு வங்குரோத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பெற்க யாரும் முன்வரவில்லை. பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் இருந்து நலுவிச்சென்றவர்கள் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவித்து வருகின்றனர்.

“ஆனால் நாடு வங்குராேத்து அடைந்தபோது, தனி நபராக இருந்துகொண்டு அந்த பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

“அதேபோன்று நாட்டை கட்டியெழுப்ப சில கஷ்டமான தீர்மானங்களை தைரியமாக முன்னெடுத்தார். அதன் காரணமாகவே நாட்டை வங்குராேத்து நிலைமையில் இருந்து மீட்டு, மக்கள் ஓரளவேனும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமாகி இருக்கிறது.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் அவருக்கும் இருக்கும் நீண்டகால தொடர்புகள் காரணமாகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாகி இருக்கிறது.

“இவ்வாறான நிலையி்ல் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தற்போதுள்ள அரசியல்வாதிகளில் ரணில் விக்ரமசிங்கவை தவிர தகுதியான வேறு யார் இருக்கிறார் என கேட்கிறோம்.

“அத்துடன் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை பெற்றால், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும் என அந்த கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

“என்றாலும் இதற்கு முன்னர் பொது வேட்பாளராக பலர் களமிறங்கி இருக்கின்றனர். அப்போது நாங்கள் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கிறோம்.

“அதேபோன்று அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவது நிச்சயமாகும். அது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் அவர்களின் இணக்கப்பாட்டை எமக்கு பெற்றுக்கொள்ள முயும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது” என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, “நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்” என்றார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவிப்பவர்களால் நாட்டில் என்ன செய்ய முடியும் என கேட்கிறோம். அத்துடன் யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷ் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகொள்ளவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

“அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தற்போது பலரும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு தெரிவிப்பவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்ன செய்ய முடியும்?. இவர்களின் ஏமாற்று பேச்சுக்களுக்கு மக்கள் மீண்டும் ஏமாந்துவிடக்கூடாது.

“அதேநேரம் போராட்ட காலத்தில் மொட்டு கட்சி மக்களுக்கு அடிபணிந்து செயற்பட்டபோதும் சர்வதேசத்தின் கோரிக்கைக்கைக்கு அடிபணியாமல் எடுத்த தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.

அநுரகுமாரவின் போர்ப் பிரகடனம்

நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள், இலங்கை அரசியல் அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு உக்கிரமான போரை உருவாக்கும் என

அநுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், தற்போது உருவாகியுள்ள அரசியல் முகாம்களும், அரசியல் பிளவுகளும் சாதாரணமானவை அல்ல. இம்முறை அரசியல் போரில் மக்கள் விடுதலை முன்னணி தோல்வியுற்றால், அது நாட்டையும் மக்களையும் மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வெற்றி நாட்டை புதிய அபிலாஷைகளுடன் ஒரு பாதையில் வழிநடத்தும் என்றும் அவர் கூறினார்.

நீண்டகாலமாக அரசாங்கங்கள் கடைப்பிடித்து வரும் தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக புதிய பொருளாதாரப் பயணத்தை உருவாக்கும் சித்தாந்தத்தை மக்கள் விடுதலை முன்னணி விவாதிக்கும் அதேவேளை, அரச சொத்துக்களை விற்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சமூகக் குற்றங்களை எதிர்த்துப் போராடவும், ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மாற்றவும், அதன் மூலம் நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் திட்டங்களை வகுப்பது குறித்தும்மக்கள் விடுதலை முன்னணிஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

திருமலை 61 எண்ணெய்த் தாங்கிகளை அபிவிருத்திசெய்ய அனுமதி

திருகோணமலை சீனன்குடா துறைமுகத்தின் மேற்புற தாங்கி திடலானது 99 தாங்கிகளைக் கொண்டமைந்துள்ளதுடன், 2022.01.03ஆம் திகதி

இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, அவற்றில் 61 தாங்கிகளை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் கம்பனிக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 61 எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியவளக் கற்கை உள்ளிட்ட அடிப்படை படிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சாத்தியவளக் கற்கை மூலம் இக்கருத்திட்டம் 16 ஆண்டுகளில் 07 கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாகப் பயனுறு வாய்ந்த 09 தாங்கிகளை மறுசீரமைப்புச் செய்வதற்கும், கிட்டத்தட்ட 1.75 கிலோமீற்றர் தூர வீதியைப் புனரமைப்பதற்கும், ஏற்புடைய ஏனைய வசதிகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிர்மாணித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) எனும் வணிக மாதிரியைப் பின்பற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலாவது கட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு உத்தேச அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக, குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized