வருமான வரி பதிவு செய்யாதோரிடம் தண்டப்பணம் அறவிடுவது சட்டவிரோதம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தமது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் தண்ட பணம் அறவிடப்படும் என்பது சட்டவிரோதம்.

ஏனெனில் இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்தைப் பெறுபவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களாக கருத முடியாது.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் வரி செலுத்த முடியாது அவர்களின் வருமானம் அதிகரிக்கும் போது வரி செலுத்த முடியும் பதிவு செய்யவில்லை என தண்டம் அறவிட முடியாது.

அது மட்டுமல்லாது 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்யா விட்டால் 50ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படும் என அறிவித்த அரசாங்கம் இவ்வளவு காலமும் வரி வருமானம் செலுத்தாதவர்களுக்கு என்ன தண்டம் என அறிவிக்கவில்லை.

ஆகவே இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்குவது நல்ல விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் என கூறுவது சட்ட விரோதம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாவின் வாக்குமூலம் : தமிழ் இளைஞர்கள் அனைவரும் படித்து அறிய வேண்டிய வராலாற்று ஆவணம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

இன்று அக்டோபர் மாதம் முதலாம் தேதி தனது அகவை அறுபதை எட்டும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பா.உ தனது அனுபவத் தொகுப்பான ஜனாவின் வாக்கமூலம் என்ற நூலை வெளியிடுகிறார்.

இந்நூல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது பிறந்த நாளிலே பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் மத்தியில் வெளியிடப் படுகிறது.

தனது பதின்ம வயதிலே, இனத்தின் விடுதலைக்காக சகலவற்றையும் துறந்து உயிரைத் துச்சமாக எண்ணி ஆயுதப் போராட்டத்தை வரித்துக் கொண்டு ஒரு இளைஞன் புறப்படுகிறான். களத்திலே விழுப் புண்களை சுமக்கிறான். தனது கனவிலும் கொள்கையிலும் மாறாத நம்பிக்கையோடு போராட்டத்தில் ஈடுபடுகிறான்.

வீரமும் தீரமும் அர்ப்பணிப்பும் ஆயுத பலமும் இருந்தால் விடுதலையை காணலாம் என்ற கனவு நனவாகியதா? தன் வாழ்நாளில் சந்தித்த மாற்றங்கள் என்ன? பயணித்த பாதை சரியானதா? இலக்கை எட்ட முடிந்ததா? எதிர்கொண்ட சிக்கல்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள் என்ன?
மாற்றங்களை ஏற்றுக் கொண்டாரா? அடைந்த பயன்கள் பெற்றெடுத்த வெற்றிகள் என்ன?

தேசம், தேசியம், போராட்டம், அதன் வடிவம், மாற்றம், தொடர்ச்சி என்ன பல விடயங்களை தொகுத்து இந்த நூலின் வடிவத்தில் ஜனா தந்திருக்கிறார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால போராளியாக பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக ஒரு அரசியல் தலைவனாக அரசியல் வாழ்க்கையிலே இவ்வளவு காலமும் அவர் கடந்து வந்த பாதைகள் என்பவற்றின் அனுபவப் பகிர்வை வடித்து தந்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் பயணித்த பலருக்கு எழுதுவதற்கு ஆக்கபூர்வமான வரலாறுகள் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பயணிக்காத பலர் இன்று விடுதலை பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனாக தேசிய பயணத்தில் போராளியாக ஆரம்பித்து இன்று ஒரு அரசியல் தலைவனாக அகவை 60 தொடுகின்ற ஒருவரின் அனுபவப் பதிவில் அனைத்து தற்கால மற்றும் எதிர்கால தமிழ் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் புதைந்துள்ளன.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அதில் பங்கு பற்றிய ஒருவருடைய நேரடி வாக்குமூலம் தரப்பட்டுள்ளது. செவி வழி கதைகளை கேட்டு போராளிகளையும் போராட்டத்தையும் விமர்சிக்கின்ற பலருக்கு இந்த வாக்குமூலம் தக்க பதிலாக அமையும் என்று கருதப்படுகிறது.

ஒரு போராட்டத்தின் இலக்கு, அதை அடைவதற்கு படுகின்ற துன்பங்கள், அதில் செல்வாக்குச் செலுத்துகின்ற உள்ளக வெளியக காரணிகள், அவற்றை கையாளும் திறமை, அத்திறமை இல்லாவிட்டால் இனம் படுகின்ற துன்பம் என்ற பல விடயங்களை இந்த வாக்குமூலம் புட்டுக்காட்டி உள்ளது.

வாழும் போராளியாக துணிச்சலோடு இந்த வாக்குமூலத்தை ஜனா பதிவு செய்துள்ளது தன்னுடைய சொந்த வாழ்க்கையை மாத்திரமல்ல தமிழ் இளைஞர்களின் குறிப்பாகப் போராளிகளின் வாழ்க்கையை படம் போல எடுத்துக் காட்டியுள்ளது.

இதை தனிப்பட்ட ஒரு ஜனாவின் வாக்குமூலமாக கருதாமல் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று ஆவணமாக படித்துப் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

குருசுவாமி சுரேந்திரன்
பேச்சாளர்- ரெலோ-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அறகலய போராட்டக்காரர்களை ஏமாற்றவே இனவாத, மதவாதம் தூண்டப்படுகிறது – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

ஆட்சியாளர்களுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை ஏமாற்றவே தற்போது நாட்டில் இனவாத, மதவாத சக்திகள் முளைவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன.

இனவாத மதவாத சக்திகள் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா?

இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அறகலய போராட்டக்காரர்களுக்கு முறைமை மாற்றம் ஒன்றை செய்வோம் என்று உறுதிமொழி வழங்கியவர்கள் இன்று இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் தங்கள் உறுதிமொழிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்களா?

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி ஆட்சி பீடம் ஏறியவர்களை நாட்டு மக்களே தவறை உணர்ந்து கொண்டு அறகலயப் போராட்டத்தை முன்னெடுத்து துரத்தினார்கள். போராட்டக்காரர்கள் முன்வைத்த முறைமை மாற்றம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்திற்குள் அதை செய்து முடிப்பதாக உறுதிமொழி வழங்கிவிட்டு இன்னும் அது பற்றி எதுவுமே செய்யாது உள்ளனர்.

மாறாக மீண்டும் இனவாத மதவாத கோஷங்களை எழுப்பிக் கொண்டு தாங்கள் போராட்டக்காரருக்கு வழங்கிய உறுதிமொழிகளை மடைமாற்றம் செய்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக சரத் வீரசேகர, உதய கம்மாம்பிள்ள, விமல் வீரவன்ச மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள புத்த பிக்குகள் உட்பட பலர் அறகலய போராட்ட காலத்திலும் பின்னரும் தலைமறைவாக அஞ்சி வாழ்ந்தனர். போராட்டக் காரர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர். இன, மத பேதங்களை கட்டவிழ்த்து ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடித்தனர் என்பதே போராட்டக் கார்கள் முன்வைத்த வாதம். அதற்கு பரிகாரமாக முறைமை மாற்றத்தை கோரினர். புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி அக்கோரிக்கையை நிறைவேற்ற உறுதிமொழி வழங்கி மூச்சு விட்டவர்கள் அதை நிறைவேற்றாமல் இனவாத மதவாத கருத்துக்களை எழுச்சி பெற வைத்து நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முயலுகிறார்கள்.

பொருளாதார சிக்கல்களில் இருந்து நாடு சுமுகநிலையை அடைந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாலும் முறைமை மாற்றம் சம்பந்தமாக எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை கைக் கொள்ளவில்லை. இந்த காலக்கெடு முடிந்து போராட்டக்காரர்கள் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு தங்கள் உறுதி மொழிகளில் இருந்து தப்பிப்பதற்கும் போராட்டக்காரர்களை ஏமாற்றுவதற்கும் முயற்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் உறுதியாகி வருகிறது.

சிங்கள மக்கள் குறிப்பாக போராட்டக் காரர்களை இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனவாத மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சி பீடம் ஏற இடமளிக்கக் கூடாது. இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆய்வு ஐ.நா பிரதிநிதிகள் முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள்

கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறையின் அடிப்படையில் அதன் பிரதிநிதிகள் முன்பாக இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழிகள் அகழ்வு ஊடாக பல மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த காலத்தில் குற்றச்சாட்டப்பட்ட வகையிலே யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பல விடயங்களிற்கு சாட்சியமாக விளங்குகின்றது.

மனித உரிமை பேரவையில், மனித உரிமை உயர்தானிகராலும் இந்த யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களிற்கான சாட்சியங்களை பதிவு செய்கின்ற ஒரு பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த அகழ்வாராய்ச்சி என்பது மனித உரிமை உயர்தானிகர் அல்லது ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதிகள் முன்பாகவும் இந்த சாட்சியங்களிற்கான அலுவலகம் திறக்கப்பட்டு இதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய நிதி ஒதுக்கீட்டினையும் ஐ.நா செய்துள்ளது.

ஆகவே அவர்களையும் வைத்துக்கொண்டு இந்த அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் தோண்டியெடுக்கப்படும் மனித புதைகுழிகளின் விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய முடியும்.

குறிப்பாக கொக்குத் தொடுவாய் என்பது தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த இடம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்பது மட்டுமன்றி யுத்தத்திற்கு முன்னரே அங்குள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், கிராமங்கள் அழைக்கப்பட்டதும் என்று பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த விடயங்களை சர்வதேச பிரதிநிதிகள் மாத்திரமன்றி குறிப்பாக ஐ.நாவினுடைய மனித உரிமை உயர்தானிகருடைய அல்லது மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் அல்லது அலுவலர்கள் முன்னாலே இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மாகாணசபைக்கான ஆலோசனைக்குழு அமைக்கும் ஏற்பாடு மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் எனும் கோரிக்கையை நலிவுறச் செய்யும் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு அல்லது முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது, ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும், மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

அரசியல் யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை பகிர்ந்து, மாகாண சபை தேர்தல் சட்டத்தில் அதற்கான திருத்தங்களை மேற்கொண்டு பாராளுமன்ற அனுமதியை பெற்று மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு எமது கோரிக்கை அமைந்திருந்தது. அதை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு, அந்த மாகாண சபையில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நிலை நிறுத்துவதற்கான சட்ட வரைபுகளை தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த சட்ட வரைபுகளோடு தேர்தல் திருத்த சட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது அனுமதி பெற்று மாகாண சபைகளில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நிறுத்தி, மாகாண சபை தேர்தலை நடாத்தலாம் என உறுதிமொழி வழங்கியிருந்தார். ஆனால் இதுவரைக்கும் அந்த விடயங்கள் தொடர்பான தெளிவான கருத்துக்கள் எதுவும் ஜனாதிபதியால் கூறப்படவில்லை.

இந்த நிலையிலே ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்து மாகாண சபையை வழி நடத்துவதற்காக ஜனாதிபதி எடுக்கின்ற முயற்சியும், அதை எமது தமிழர் தரப்பினரே அரசியல் கோரிக்கையாக முன்வைத்திருப்பதும் கவலையளிக்கிறது.

ஜனாதிபதியுடைய மாகாண சபை வழிநடத்தல் குழு என்பது அவரால் அமைக்கப்பட வேண்டிய ஒன்று, அதனை நாங்கள் வலிந்து கேட்பது அவசியமற்றது. அது ஏற்கனவே ஒரு நிர்வாகம் சம்பந்தப்பட விடயம். நாங்கள் கேட்பது அரசியல் நிலைப்பாடு. அதாவது மாகாண சபை தேர்தல்களை நடாத்த வேண்டும், பறிக்கப்பட்ட அதிகாரங்களோடு ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒரு அரசியல் கோரிக்கை.

ஆகவே, நாங்கள் இந்த அரசியல் கோரிக்கைக்கு புறம்பான ஒரு நிர்வாக ரீதியான ஆலோசனை சபையை அமைக்கும் விடயத்தை கோரிக்கையாக, அதாவது அரசியல் கோரிக்கையாக முன்வைப்பது அபத்தமானது ஆகும். அது ஜனாதிபதி அவருடைய தேவை கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கை. ஆகவே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் இருக்க இருக்க வேண்டியதில் அனைத்து தமிழ் தரப்பும் உறுதியாக இருக்க வேண்டும்.

மாறாக தனித்து செயற்பட முற்படுகின்றபோது, எமது பிரதான கோரிக்கையான அதிகாரப் பகிர்வு, மாகாண சபை தேர்தலை விரைந்து நடாத்துதல் என்ற விடயங்களுக்கு இவை குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இதைப் பயன்படுத்துகின்ற அபாய சூழ்நிலை இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மக்களை முன்னணியினர் இனியும் ஏமாற்ற முடியாது; கட்டி முடிக்கப்பட்ட விகாரைக்கு முன்பாக ஏமாற்று நாடகம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

யாழ்ப்பாண தமிழ் மக்களை இனியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏமாற்ற முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37 வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் மிகப்பெரிய ஒரு கதவடைப்பு போராட்டத்தினை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்தினோம். பாரிய போராட்டமாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு முதற்தடவையாக இங்கு நடாத்திக் காட்டி இருந்தோம்.

எதற்காக அதனை செய்திருந்தோம் என்பதை அறியாத ஒரு தரப்பு- நான் நேரடியாகவே கூறுகின்றேன்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த கர்த்தாலை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நடாத்திய கர்த்தாலை எள்ளி நகையாடினார்கள்.

தமிழ் மக்களின் உணர்வினை எள்ளி நகையாடினார்கள். அதனுடைய விளைவு இன்று தெரிகிறது.

தமிழ் மக்களின் உணர்வுகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று தையிட்டியில் விகாரை கட்டி முடிந்து கலசம் வைத்த பின் விகாரையினை இடித்து விட போகின்றோம் என தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஏன் இந்த கர்த்தாலை நடாத்தினோம் என்றால் அண்மையில் நாவற்குழி ஜம்புகோள பட்டினம், குருந்தூர் மலையில் விகாரைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அத்தோடு கலாச்சார சின்னங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் இருப்பு அழித்தொழிக்கப்படுவதற்கு எதிராக எமது கண்டனத்தினை தென்னிலங்கைக்கு பதிவு செய்வதற்குமாக சர்வதேச அரங்கிற்கும் வெளிப்படுத்துவதற்குமாக ஆரம்ப கட்டமாக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அது பரிபூரண வெற்றியாக அமைந்திருந்தது.

அதனை எள்ளி நகையாடி அந்த கர்த்தாலுக்கு அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தவர்கள் இன்று தையிட்டியிலே கட்டி முடித்து கலசம் வைக்கப்பட்டிருக்கும் விகாரையினை அகற்றுவற்கு நாங்கள் போராடுகின்றோம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாளை சாவகச்சேரியில், நெடுங்கேணியில் விகாரை வரும். எல்லா இடங்களிலும் வரும். இவ்வாறு தனித்தனியே போராட போகின்றோமா அல்லது மக்களை ஒரு தேசமாக ஒருங்கிணைத்து இவற்றைத் தடுத்து நிறுத்த போகின்றோமா என்பதுதான் எமது கேள்வி.

அதற்காகத்தான் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் போராட்டத்தினை தையிட்டியில் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்பவர்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும்.

சரியான தலைமையினை தெரிவு செய்யவேண்டும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும்.

மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபடுவோருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

வருமுன் காக்கும் பொறிமுறைகளை தமிழ்த் தரப்பினர் ஒருமித்துக் கையாள வேண்டும்; ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க இதுவே வழி – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

தமிழ் மக்கள் மீதான நில, மொழி மற்றும் கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகள், அழித்தொழிப்புகளை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகளை கொண்ட பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். அல்லது இருப்பவற்றை பொறிமுறைகளாக் கையாள வேண்டும்.

நடந்து முடிந்தவைகளுக்காக போராடும் நடைமுறை ஒருபுறம் இருக்க, நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தக் கூடிய கட்டமைப்பை தமிழர்கள் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிலொன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் சுரேந்திரன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

தமிழ் மக்கள் மீதான நில, மொழி மற்றும் கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகள், அழித்தொழிப்புகளை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகளை கொண்ட பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். அல்லது இருப்பவற்றை பொறிமுறைகளாக் கையாள வேண்டும்.

நடந்து முடிந்தவைகளுக்காக போராடும் நடைமுறை ஒருபுறம் இருக்க, நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தக் கூடிய கட்டமைப்பை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.

தையிட்டி விகாரை கட்டி எழுப்பப்பட்டுள்ள விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். மாகாண சபை முறைமை முடிவுக்கு வந்த பின்னர் இதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. தனியார் ஒரு சிலருக்கு சொந்தமான காணி நிலங்களிலேயே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. ஒரு சில உரிமையாளர்கள் வழக்கு தொடுப்பதற்கு ஆர்வமாக முயற்சி செய்த பொழுதிலும் சரியான தரப்பினரிடம் அவர்கள் செல்லவில்லை. அதேபோன்று அரசியல் தரப்பிலும் வழக்கு தொடுப்பதற்கு முயற்சி செய்து சில காணி உரிமையாளர்களை சந்தித்த பொழுது அந்த காணி உரிமையாளர்கள் வழக்கு தொடுப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. வழக்கு தொடுப்பதற்கு அக்கறை கொண்ட தனியார் காணி உரிமையாளரும் அரசியல் தரப்பினரும் ஒருவரை ஒருவர் இறுதிவரை சந்திக்கவில்லை. அதனால் விகாரை கட்டப்படும் வரைக்கும் தனியாரால் நடவடிக்கை எடுக்க முடியாத அல்லது அரசியல் தரப்பை நாட முடியாத சூழ்நிலையில் இருந்திருப்பது துரதிஷ்டமே. இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒரு பொறிமுறை மிக அவசியமாகிறது.

மாகாண சபைக்கான காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி பலமான கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்ற எமது கோரிக்கையின் பிரதான நோக்கம், அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் இப்படியான ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும், அதை எம்மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பொறிமுறையாக கையாள வேண்டும் என்பதே. அதை ஒருபோதும் அரசியல் தீர்வாக நாம் கோரவில்லை.

அரசியல் முதிர்ச்சியற்ற, தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள அபாயத்தை உணராத சில தரப்புக்கள் அதை நாங்கள் அரசியல் தீர்வாக கோருகிறோம் என்று மக்களை தவறாக திசை திருப்பி தெரிந்தோ தெரியாமலோ அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போயிருக்கிறார்கள்.

இனியாவது நிலைமையை புரிந்து கொண்டு நமக்கான பொறிமுறைகளை வகுக்கவும், இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி அதைப் பொறிமுறையாகக் கையாளவும் தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும்.

ஒவ்வொரு விடயத்திற்கும் விளக்க உரைகளை வழங்குவதும் கட்சி நலன்கள் மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக தமிழ் மக்களை தவறாக திசை திருப்பி வழிநடத்த முற்படுவதும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உரம் சேர்க்குமே தவிர தமிழ் மக்களை காப்பதற்கு உதவாது. இனியாவது தமிழ் மக்கள் ஒன்றிணைந்து நம்மை காக்கும் பொறிமுறைகளை வகுத்துக் கொள்ளவும் இருப்பவற்றை சரியாகக் கையாயவும் முன் வர வேண்டும் என கோரி நிற்கிறோம். அதுவே நிலையான அரசியல் தீர்வு வரும் வரை எமது இனத்தின் இருப்பைத் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்களை பாதுகாக்க மாகாணத்திற்கு உரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சுரேந்திரன்

வடக்கு மாகாணத்திற்கு உரித்தான மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை உதாசீனம் செய்யாது பாதுகாக்க மாகாணத்திற்குரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற 13திருத்தத்தின் சாதக பாதங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண மக்களின் பூர்வீக நிலங்கள் தொல்லியல் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவில் மாவட்ட நீதிமன்றம் விகாரையின் கட்டுமானங்கள் நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ள நிலையிலும் மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உதாசீனம் செய்து விகாரை அமைத்து யாவருக்கும் தெரியும்.

13ஆவது திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக நாம் ஏற்கவில்லை சிலர் அரசியல் நீதியில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக பதின் மூன்றை ஏற்றுவிட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச இருப்புக்களையும் அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக 13திருத்தம் அவசியம்.

வடக்கில் தொல்லியல் திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளை வரலாற்று இடங்கள் என்ற போர்வையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன.

அதனை தடுப்பதற்கு மாவட்ட நீதிமன்றங்கள் தீர்ப்புக்களை வழங்கினாலும் நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணப் பொலிஸ் இல்லாத நிலையில் மத்திய பொலிஸ் உயர் அதிகார வர்க்கங்களின் உத்தரவில் தீர்ப்புக்களை உதாசீனம் செய்கிறது.

ஆகவே அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மாகாண பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் போதுமாவட்ட நீதிமன்றங்களின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் பண்பாட்டு அழிப்பிற்கு எதிராக வடக்கு, கிழக்கில் மாவட்டம் தோறும் போராட்டம்!

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட 7 கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்திற்கு வந்த போதும், பிறிதொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால் புறப்பட்டு சென்று விட்டார்.

அத்துடன், தென்னிந்திய திருச்சபையின் பேராயர், வேலன் சுவாமிகள், சைவமகாசபை செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட 22 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், க.சர்வேஸ்வரன், மற்றும் விதுசன்,  நிஷாந்தன், வேலன் சுவாமி, கலையமுதன் ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

தமிழரின் தொன்மை அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்- மக்களை அணி திரண்டு போராடவும் அழைப்பு

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டு பெளத்த சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் மக்களை அணிதிரண்டு போராடுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிங்கள பேரினவாத சக்திகளால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் இனத்தின் தொல்லியல் சான்றுகளை அழிப்பதோடு, பௌத்த சின்னங்களை நிறுவி குடியேற்றங்களை உருவாக்கி வரும் நிகழ்ச்சி நிரல்களுக்கு கடும் எதிர்ப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அண்மையில் வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக விஷமிகளால் சேதமாக்கப் பட்டுள்ளது. இதேபோன்று கீரிமலையில் அமைந்துள்ள சிவனாலயம் சித்தர் மடங்கள் என்பன நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. நெடுந்தீவு, கச்சதீவு, மற்றும் நிலாவரையில் புத்தர் சிலை, குருந்தூர் மலையில் பௌத்த ஆலய கட்டிடம், கன்னியா வென்னீரூற்று தொல்லியல் திணைக்களத்தால் கைப்பற்றல் என தொடரும் நடவடிக்கைகளை நாம் முற்றாக கண்டிப்பதோடு அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறோம்.

அதேபோன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய நீக்குவதாக கூறிக்கொண்டு அதைவிட கடுமையான மற்றும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முகமாக, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம். அதற்கு எமது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம். ஏற்கனவே இருந்த சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களுக்கும் மேலதிகமாக அவசர கால சேவைகளாக கருதப்படும் உணவு உற்பத்தி, விநியோக சேவைகள் என இன்னோரன்ன சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களோ அதைச் சார்ந்த ஊழியர்களோ எந்தவிதமான கருத்து தெரிவிப்பதையோ போராட்டங்களில் ஈடுபடுவதையும் இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துகிறது.

அவசரகால சட்டத்தின் கீழ் பிரகடனப் படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் செயலற்றவர்களாக ஆக்கப்படுகின்ற அபாயகரமான நிலையை இந்த சட்ட மூலம் தோற்றுவிக்கிறது.

இது அடிப்படை மனித உரிமை மீறலை முற்றும் முழுதாக மீறுவதோடு தனிமனித பேச்சு சுதந்திரத்தையும் குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையாக நாம் நோக்குகிறோம். இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நாம் சுவாசிப்பதற்கும் உணவு உண்பதற்கும் தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாதவர்களாக சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுவோம். எமது உரிமை சார்ந்த விடயங்களைப் பற்றி குரல் எழுப்பவோ அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளைப் பற்றி கருத்து தெரிவிக்கவோ முடியாதவர்களாக ஆக்கப்படுவோம்.

இவற்றை எதிர்த்து எமது கண்டனங்களை பதிவு செய்வதோடு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரட்டி இவற்றிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மக்களை அழைக்கிறோம். கட்சி பேதங்கள், அரசியல் கோட்பாடுகள், சின்னங்கள் என்பவற்றைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் மதத் தலைவர்கள் அனைவரையும் எம்மோடு கைகோர்த்து வலுவான போராட்டங்களை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.