இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்ப தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து, ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடாத்திய அலி சப்றி

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், இம்முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் விசேட ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றன.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை தென்னாபிரிக்காவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான ஒத்துழைப்புக்களை சுவிற்ஸர்லாந்தும், இதற்குரிய நிதி உதவியை ஜப்பானும் வழங்குவதாக அறியமுடிகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸுகொஷி ஹிடேகி, இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபக்ளெர் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கால்க் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இவ்வனைத்து தரப்புக்களும் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், இந்த இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முன்னிலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று புதன்கிழமை காலை கூடியது.

இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா ஆகியோர் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தமது அறிக்கைகளை முன்வைத்தனர்.

சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட புள்ளித் திட்டத்துக்கமைய ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் தனித் தனியாகப் புள்ளிகளை வழங்கினர். புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் முறையே பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில், பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

1978 ஆம் ஆண்டின்  16 ஆம் இலக்க பல்கலைக் கழகச் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் படி பல்கலைக்கழகப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி அறிவிப்பார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதால், மிக விரைவில் அடுத்த துணைவேந்தர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா தாமதிக்காமல் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐநாவும்  உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  உலக நாடுகளை ஒன்றுதிரட்ட மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள்.

உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல், கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (16, 17.05.2009),  உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர்.

இத்துயரத்தை எண்ணி கலங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், ஐ.நாவும் முன் வரவில்லை; வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை. ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள்; காணாமல் போனவர்கள் தமிழர்கள்.

இந்நிலையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’  தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை  ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இச்சூழலில்,  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும். உலக நாடுகளை திரட்ட  ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான  புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது.

ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது; ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள்; எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்

மண்டைதீவில் கடற்படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(12) காலை 7.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசினார்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதிக்குமாறு கோரி தாயார் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பணிமனை ஊடாக ஜனாதிபதிக்கான கடிதத்தையும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சருக்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உள்ளிட்டவர்களை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் விடுதலை செய்தது.

இதில், இலங்கையர்களான சாந்தன், முருகன், றொபேர்ட்ஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த சாந்தன்,  தன்னை இலங்கைக்குள் வர அனுமதிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது.

மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக டெய்லிமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித புதைகுழி தொடர்பில்  கருத்துக்களை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நீதியமைச்சர் ஆகியோரை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என மோர்னிங் தெரிவித்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மனித புதைகுழியை மீண்டும் அகழ்வது குறித்து  ஆராய்வதற்கு தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்துள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளை அகழும் பணிகள் நீதவானின் உத்தரவின் பேரில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவைமீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை; பாரிய மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சமீபத்தில் இடம்பெற்றிருந்தவேளை அது சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தாh.

இது குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்  இதுமுன்கூட்டியே அவசரப்பட்டு வெளியிடப்பட்ட கருத்து புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச தராதரங்கள் மற்றும் உரிய தரப்பினரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் – சட்டத்தரணிகளுக்கான சர்வதேச அமைப்பு ஐ.நாவில் சுட்டிக்காட்டு

இலங்கையில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்கள், சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளன.

ஜெனீவாவில் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பில் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்களான சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிலையம் என்பன இணைந்து வாய்மொழிமூல அறிக்கையொன்றை வெளியிட்டன. இவ்வமைப்புக்களின் சார்பில் பேரவையில் உரையாற்றிய ஜுலியா ஸ்மக்மென் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதன் அவசியம் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோன்று, சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அதேவேளை, சுயாதீனமான சட்டத்தொழில்வாண்மையாளர் ஊடாக சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இயலுமை என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் செயற்திறனாக இயங்கும் நீதிப்பொறிமுறை ஆகியவற்றின் அடிப்படைக்கூறுகளாகும்.

அதன்படி, எவ்வித இடையூறுகளோ, அத்துமீறல்களோ, அடக்குமுறைகளோ அல்லது முறையற்ற தலையீடுகளோ இன்றி தமது தொழில்சார் கடமைகளை முன்னெடுப்பதற்கான இடைவெளி சட்டத்தரணிகளுக்கு இருக்கவேண்டும்.

இருப்பினும், இலங்கையைப் பொறுத்தமட்டில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக போராட்டக்காரர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையின உரிமைகள் போன்ற அரசியல் ரீதியில் உணர்திறன்வாய்ந்த வழக்குகளில் இயங்கும் சட்டத்தரணிகள் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.

அதேபோன்று, சட்டத்தரணி என்ற ரீதியில் தமது பணியை மேற்கொண்ட சட்டத்தரணிகள் அதனுடன் தொடர்புபட்ட வகையில் கைதுகளுக்கும் குற்றவியல் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வலுகட்டாயமாகக் கைதுசெய்யப்பட்டமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவரது வழக்கு விசாரணைகளின் சுயாதீனத்தன்மை குறித்து நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், தொடர் தாமதமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று, சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராக உரிய பாதுகாப்பை வழங்குமாறும் கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

காலாந்தர மீளாய்வுக்குழுவின்115 பரிந்துரைகளை இலங்கை ஏற்கவில்லை : மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை விசனம்

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மரண தண்டனையை ஒழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 115 பரிந்துரைகளை இலங்கை ஏற்காமை குறித்துக் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை, இம்மீளாய்வுக்குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த 4 ஆவது மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.

இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய 294 பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியாகியிருந்தது.

அதன்படி கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரின் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பான உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

இதன்போது பேரவையில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கையில் மொத்தமாக உள்ளடக்கப்பட்டுள்ள 294 பரிந்துரைகளில் 173 பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும், 115 பரிந்துரைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் (ஏற்றுக்கொள்ளவில்லை), 6 பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் அறிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவையும், இலங்கையிலுள்ள அதன் பங்காளி அமைப்பான மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய காலாந்தர மதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை வெளிக்காட்டியுள்ள துலங்கல் அதிருப்தியளிக்கின்றது.

குறிப்பாக இலங்கை ‘அவதானம் செலுத்துவதாகக்’ கூறியுள்ள அனைத்துப் பரிந்துரைகளும் பெரும்பாலும் மரண தண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டவையாக உள்ளன.

அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1, 46ஃ1 மற்றும் 51ஃ1 ஆகிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை நிராகரித்திருப்பது தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் அண்மையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திலும் கரிசனைக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் அவை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவில்லை.

அதுமாத்திரமன்றி பெரும்பாலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருமாறும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துமாறும் இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய காலாந்தர மீளாய்வைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, சர்வதேச சட்டத்துக்கு அமைவாக இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்கும் அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எப் மற்றும் ஜனநாயக போராளிகள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்கள் பிரித்தானியாவின் ஹரோ பிரதேசத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா) பங்கேற்றிருந்தார்.

இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டணியின் கள நிலவரங்கள்,யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை

வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

அலுவலகம் திறக்கப்பட்ட போது, அன்டன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், அரசியல்துறைத் தலைவர் சிவகுமார், ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

டெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized