13ஐ முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் – கடற்தொழில் அமைச்சர்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் உள்ளன. 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக அதனை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள போதிலும் , தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரா பிரச்சினைகளாவே காணப்பட வேண்டும் என்று எண்ணும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தினால் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது , ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ,

கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் விஜயத்தின் போது அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அதிகார பரவலாக்கம் குறித்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

பதில் : ஒரு கால கட்டத்தில் இலங்கையில் பிரச்சினைகள் காணப்பட்டன. அந்த பிரச்சிகளுக்கு தீர்வு கோரி ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் மக்கள் , அதன் ஊடாக தீர்வினைப் பெற முடியாது என ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதற்கமையவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானது.

எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஒப்பந்தத்தின் ஊடாக வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக அன்றிருந்த பெரும்பாலான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒரு முழுமையான யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் காணப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும். எனினும் இதற்காக ஜனாதிபதி மாத்திரம் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் போதாது. தமிழ் மக்கள் தரப்பில் அவர்களின் பிரதிநிதிகள் உண்மையுடன் முன்வர வேண்டும்.

கேள்வி : 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் , காணி அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. எனினும் மத்திய அரசாங்கம் அவற்றை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகத் தோன்றவில்லையே?

பதில் : இருப்பதிலிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே முன்னோக்கிச் செல்ல முடியும். தேசிய நல்லிணக்கத்துக்கு ஊடாகவும் , பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முரணான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கேள்வி : இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வடக்கு மக்கள் சாதகமான கோணத்தில் பார்க்கின்றனரா? இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் முரண்பாடான கருத்துக்களையல்லவா முன்வைத்துக் கொண்டிருக்கின்றன?

பதில் : எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். அந்த வகையில் சகல பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகின்றேன். இதற்கான சிறந்த அறிகுறிகளாக காணிப்பிரச்சினை , அரசியல் கைதிகள் எனக் கூறப்படுகின்றவர்களின் விடுதலை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாகவே வைத்திருக்க வேண்டும் என எண்ணும் அரசியல்வாதிகளே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி : வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனினும் தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் எந்த அடிப்படையில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : இந்த பிரச்சினைக்கு 1987 இல் தீர்வு வழங்கப்பட்டது. எனினும் அன்றிருந்தவர்கள் அதனை நிராகரித்ததோடு , மறுபுறம் அதனை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டனர். நாடு; எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் அதே வேளை , இந்த விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிருப்தி

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இலங்கையில் பொலிஸ் மா அதிபரின் வகிபாகம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், பொது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் போன்ற பொறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மிகவும் முக்கியமான பங்கு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26, 2023 அன்று முடிவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிதுந்த ஜயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் உள்ளனர் எனப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பணிப்பாளராக கடமையாற்றிய போதே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இத்தாக்குதலில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான அப்பாவி மக்கள் உயிர்களையும் அவயவங்களையும் இழந்தனர்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டுமென ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு கோப் குழு அனுமதி

அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை பரிசீலிப்பதற்காக கோப் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இரண்டு நாட்கள் கூடியது.

நீண்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்ற பின்னர், கோப் குழு இன்று இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த திட்டம் குறித்து விவாதம் செய்வதற்காக நாடாளுமன்றம் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கூடவுள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து தேரர்கள் புனிதப் பொருட்களுடன் வவுனியாவுக்கு பாதயாத்திரை

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த  தேரர்கள்  பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.

அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியைக் கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது.

குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த தேரர்கள்,  மறைந்த பௌத்த தேரர்களின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும், சர்வதேசத்திடம் நீதி கோரிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.

சீனா இலங்கையை கடன்பொறிக்குள் தள்ளவில்லை – அலி சப்ரி

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் சீனா அதிகளவான முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் இடமபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், சீனாவுடனான நாட்டின் உறவு மற்றும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு அது எவ்வாறு உதவியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியுள்ளது என்ற மேற்கத்திய ஊடக அறிக்கைகாலை முற்றாக நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் சீன முதலீடு மிகவும் முக்கியமானது எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் சீனாவின் முதலீடு மிகவும் முக்கியமானது என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தில் சீனா நம்பகமான நண்பராகவும், பங்காளியாகவும் இருந்து வருகிறது என்றும், தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தமை சிறப்பான விடயம் எங்களின் அபிவிருத்தி கூட்டாண்மை குறித்து ஆராய்ந்தோம்,எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை எங்கள் அயல்நாடுகளிற்கு முதலிடம் என்ற கொள்கையில் முக்கியமான இடத்தில் உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களில் யாழ். குடா கடல் சேற்றுக் கடலாக மாறும் – சமூக செயற்பாட்டாளர் எஸ். செல்வின்

யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என சமூக செயற்பாட்டாளர் எஸ். செல்வின் தெரிவித்தார்.

உலக வாங்கியால் வெளியிடப்பட்ட கடல் அட்ட பண்ணை தொடர்பில் கடத்தொழில் சங்கங்களுக்கு விழிப்புணர் கூட்டம் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள ஆழம் குறைந்த கடற்கரைகளில் எவ்வித பரந்துபட்ட  ஆய்வுகளும் திட்ட மிடல்களும் இன்றி கடல் அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடலட்டை பண்ணைகளால் கடல்வாழ் உணவுச் சங்கிலியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில்

இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிர்ப் பல்வகைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வடக்கு மக்கள் மட்டுமின்றி இலங்கையில் வாழும் மக்கள் கடல் அட்டையை உணவு தேவைக்காக பயன்படுத்தாத நிலையில் டொலரைப் பெறப் போகிறோம் எனக்கூறி வெளிநாடுகளுக்கு எமது  பாரம்பரிய கடல் வளத்தை விற்க முடியாது.

அதுமட்டுமல்லாது கடல் மேலாண்மைக்காக கட்டமைக்கப்பட்ட கடற்கரையோர மீனவ மக்களின் வாழ்க்கை முறையை அட்டைப் பண்ணை என்ற பெயரில் பல் தேசியக் கம்பெனிகளை வளர்ப்பதற்காக எமது மக்களையோ கடல் வளத்தையோ அழிக்க முடியாது.

எமக்கு பொருத்தமற்ற கடல் அட்டப் பண்ணைக்கான அட்டைக் குஞ்சுகளை யாரோ ஒரு வெளிநாடு சக்தியின் வழங்கிவரும் நிலையில் அறுவடை செய்யும் போது விலையையும் அவர்களை நிர்ணயம் செய்கிறார்கள்.

சில வேளை குஞ்சுகளை வழங்கியவர்கள் அறுவடை காலத்தில் அதனை ஏற்றுமதி செய்யாவிட்டால் பாதிக்கப்படுவது எமது மீனவர்கள்.

40 நாள் கோழி குஞ்சை வளர்த்து முட்டை பெறமுடியாத எமது அரசாங்கம் சீனாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நிலையில் பிளாஸ்டிக் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக பேசப்பட்டமை   யாவரும் அறிந்ததே.

ஆகவே எமது மக்கள் மரபுகளுக்கு உட்பட்டு அறங்களின்பால் மேற்கொள்ளும் கடற்தொழிலினை வெளிநாட்டு சக்திகளுக்கும் பினாமி நிறுவனங்களின் தேவைக்காக மாற்றம் முயற்சியை கைவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் மற்றுமொரு மனித புதைகுழி?

இலங்கையில் 20 புதைகுழிகளை இனங்கண்டு 5 அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டு சில நாட்களின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள், ஆடைகள் மீட்பு.

கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வங்கிகளில் வைப்பு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் வங்கி அமைப்பின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வங்கிகளில் வைப்பு செய்த 57 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் ஏற்கனவே 50 வீதத்திற்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்துள்ளதால் அவற்றின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர்சேமலாப நிதி மீது அரசாங்கம் கைவக்காது என உறுதியளித்துள்ள மத்திய வங்கி ஆளுநர்ஊழியர்சேமலாப நிதியத்திற்கு 9 வீத வட்டிக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பிற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும்வரை ஊகங்களை தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் வெள்ளிக்கிழமையை வங்கி விடுமுறையாக அறிவித்தது எனவும் தெரிவித்துள்ளார்.