இலங்கையில் ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் சக்தித் திட்டம் – சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி அணுமின் நிலையத்தை மிதக்க வைப்பதா அல்லது நிலத்தில் நிர்மாணிப்பதா? என்பது பற்றிய விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அணுமின் நிலையங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கான பயிற்சிகளை ரஷ்யாவின், ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான (Rosatom) வழங்கவுள்ளது.

இந்தநிலையில் குறித்த அணு மின்சார நிலையத்தின் உற்பத்தி நிலையத்தின் திறன் 300 மெகாவோட்டாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்ற சில குழுக்கள் முயல்வதாக ருவான் விஜயவர்தன குற்றச்சாட்டு

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த சில குழுக்கள் முயல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்திருந்தவேளையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் ஜே.வி.பியின் தலைவருக்கும் பிரதமர் பதவியை வழங்க முன்வந்தார்.

ஆனால் அனைவரும் அதனை ஏற்க மறுத்தனர் . ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் அதனை ஏற்றுக்கொண்டு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார்,

எனினும் எதிர்க்கட்சி உட்பட சில குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுக்களை இணையமூலம் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்வோரிடம் நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான தகவல்கள் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

இதனையடுத்தே, வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான குறித்த இலகு வழி வேலைத்திட்டத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் அமுலுக்கு வரும் இந்த நடைமுறையால், நிதி மோசடியைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதோடு, பொது மக்களுக்கும் இது பாரிய நன்மையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளில் நெரிசல் 259 % அதிகரிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய நிலையில், தற்போது 26,791 கைதிகள் உள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.

இதனால், சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கோபா குழு தெரிவித்துள்ளது.

17,502 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளடன், 9,289 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாட்டினது நெருக்கடி நிலைமைகளின்போது கட்சிகளின் பங்களிப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்த பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமான விடயமல்ல – அகிலவிராஜ் காரியவசம்

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமான விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தையை இன்று சில அரசியல்வாதிகள் விமர்சித்து வருகிறார்கள்.

2500 வருட வரலாறு கொண்ட எமது நாட்டில், எங்கு தோண்டினாலும் புராதனச் சின்னங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும்.
மலசலகூடத்திற்காக குழியொன்றை தோண்டினால்கூட, இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

தொல்பொருள் சின்னங்கள் காணப்படும் இடங்களை நாம் நிச்சயமாக பாதுகாக்க வேண்டும்.

அதேநேரம், தற்போது வாழும் மக்களையும் அது பாதிக்காத வகையில் எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

சிங்கள- பௌத்த தொல்பொருள் மட்டும் இங்கு தொல்பொருட்களாக கருதிவிட முடியாது.
அது இன, மதங்களுக்கு அப்பாற்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களை இந்நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் – எரான் விக்ரமரட்ண

இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ராஜபக்சக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மொட்டுக் கட்சியின் சிலர் கூறுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்குள் தாங்கள் செய்த அநியாயங்களை மக்களிடமிருந்து மறக்கடித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்நாட்டு மக்கள் ஒருபோதும் அவர்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள். ராஜபக்சக்கள் கொள்ளையடித்ததை நிரூபித்துக் காட்டுமாறு ஒரு அமைச்சர் கூறுகிறார்.

திருடியது ஒரு பக்கம் இருக்கட்டும். பிழையான தீர்மானங்களை எடுத்து நாட்டு மக்களை இந்த நிலைமைக்குள் தள்ளியது யார் என்று கேட்க விரும்புகிறேன்.

இன்று 27 வீதமான பெற்றோர் தங்களின் உணவுத் தேவையை குறைத்து, தங்களின் பிள்ளைகளுக்கு உணவு வழங்கி வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இதற்கெல்லாம் யார் காரணம்? இப்படியான நபர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டிற்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக சரத் பொன்சேகா தெரிவிப்பு

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டிற்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எவரால் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையான தலைவர் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடி நிலையில் இருந்து மீள இந்தியாவின் ஒத்துழைப்பு மிக அவசியம் – அமெரிக்க திறைசேரி செயலாளர்

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதுடன், கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல் பொருளாதாரத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதுடன், இலங்கை போன்ற நாடுகளுக்கு உரிய தருணத்தில் முழுமையான கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு மேலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.